Friday, March 6, 2015

திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை

திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை 


எவ்வளவு செல்வம் நமக்கு வேண்டும் ?

நாம் எதற்கு செல்வம்  சேர்கிறோம்.முதலில் தேவைக்கு சேர்கிறோம். பின் எதிர்காலத்திற்கு வேண்டும் என்று சேர்கிறோம்.

எவ்வளவு வேண்டும் எதிர் காலத்திற்கு ? சேர்த்துக் கொண்டே  போகிறோம்.

எவ்வளவு பணம் சேர்த்து வைத்தால் நம் எதிர் காலம் கவலை இன்றி கழியும் ?

நம் செல்வத்தை விடுங்கள்....ஒரு அரசனின் செல்வம் ஒன்றும் இல்லாமல் போகும் என்றால் நம் செல்வம் எந்த மூலை ?

சேர்த்த பொருளை அனுபவிக்கிறோமா என்றால் இல்லை. யார் யாருக்கோ கொடுத்து விட்டுப் போகிறோம்.  கொஞ்சம்  பிள்ளைகளுக்கு,கொஞ்சம் அரசாங்கத்திற்கு, கொஞ்சம் தான தர்மம் என்று யார் யாருக்கோ கொடுத்து விட்டுப் போகிறோம்.

இதற்கா இந்தப்  பாடு ? இதற்கா இத்தனை காலம் செலவழித்தோம் ?

திருமந்திரத்தில், திருமூலர் செல்வத்தின் நிலையாமை பற்றி  சொல்லுகிறார்.


அரச  பதவியும்,அதிகாரமும், ஆனையும் தேரும் பொருளும், பிறர் கொள்ளப் போவதற்கு முன், உயிரைத் தொடும் செல்வனை (இறைவனை ) அடையாமல் போனால் அது நல்ல தவமாகாது


பாடல்

அருளும் அரசனும் ஆனையுந் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னந்1
தெருளும் உயிதொடுஞ் செல்வனைச் சேரின்
மருளும் பினையவன் மாதவ மன்றே.

பொருள்

அருளும் = அரச ஆணையும்

அரசனும் = அரசனும்

ஆனையுந் தேரும் = யானையும் தேரும்

பொருளும் = செல்வமும்

பிறர்கொள்ளப் போவதன் முன்னந் = பிறர் கொண்டு போவதன் முன்

தெருளும் = அறிவின் தெளிவோடு

உயிதொடுஞ்  = உயிரைத் தொடும்

செல்வனைச் சேரின் = செல்வனாகிய இறைவனை சேர்ந்தால்

மருளும் = மயங்கி 

பினையவன் = பிணைந்தால்

மாதவ மன்றே.= மாதவமாகாது


 

Thursday, March 5, 2015

இராமாயணம் - எது முன்னால் சென்றது

இராமாயணம் - எது முன்னால் சென்றது 


இராமனுக்கு முடி சூட்டுவது என்று முடிவு ஆகி  விட்டது.

தசரதன், வசிட்டனிடம் இரமானுக்கு வேண்டிய அறிவுரைகளை சொல்லச் சொன்னான். அது ஒரு பண்பாடு.

வசிட்டனும் மகிழ்வுடன் அந்தக் காரியத்தை செய்து முடிக்க விரைவாக இராமன் இருக்கும் இடம் தேடி செல்கிறான்.

வசிட்டன் முந்திப் போனானா அல்லது அவன் உவகை முந்திப் போனதா என்று யார் முன்னால் போனது என்று தெரியவில்லையாம்...

அவ்வளவு மகிழ்வு. நல்ல மாணவனுக்கு சொல்லித் தர வேண்டும் என்றால் ஆசிரியருக்கு அவ்வளவு ஆர்வம் இருக்கும்.

இராமனை விட நல்ல மாணவன் எங்கு கிடைக்கப் போகிறான் வசிட்டனுக்கு...

பாடல்

முனிவனும் உவகையும் தானும் முந்துவான்
மனுகுல நாயகன் வாயில் முன்னினான்;
அனையவன் வரவு கேட்டு அலங்கல் வீரனும்
இனிது எதிர்கொண்டு தன் இருக்கை எய்தினான்.


பொருள்

முனிவனும் = வசிட்ட முனிவனும்

உவகையும் = அவனுடைய உவகையும்

தானும் = அவனும்

முந்துவான் =  முந்திச் சென்றான். எது முந்தியது ?

மனுகுல நாயகன்  = மனு வம்சத்தின் நாயகன், தலைவன்

வாயில் முன்னினான்; = வாசலை அடைந்தான்

அனையவன் வரவு கேட்டு = வசிட்டனின் வரவு கேட்டு

அலங்கல் வீரனும் = மாலை அணிந்த வீரனான இராமனும்

இனிது எதிர்கொண்டு = இன்பத்தோடு எதிரில் சென்று

தன் இருக்கை எய்தினான்.= தன் ஆசனத்தில்  அமர்ந்தான்.

தான் ஒரு சக்ரவத்தி ஆகப் போகிறேன் என்ற ஆணவம் இல்லை இராமனிடம்.

ஆசிரியர் வருகிறார் என்றால் எழுந்து , எதிர் சென்று வரவேற்று அமரப்
பண்ணுகிறான். அந்த அடக்கம் வேண்டும். ஆசிரியர் மேல் மரியாதை.

நேரமோ இரவு  பின்னேரம்.

சொல்லித் தர ஆசிரியனுக்கு ஆவல்.

கற்றுக் கொள்ள மாணவனுக்கு ஆவல். வேண்டாம், நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று  இருவரும் சொல்லவில்லை.

சொல்லி இருந்தால் ஒன்றும் பண்ணி இருக்க முடியாது. இருந்தும் சொல்லவில்லை. எந்த ஒரு பண்பாட்டின் உச்சத்தில் நாம் இருந்திருக்கிறோம்.

இன்று எங்கிருக்கிறோம்....





பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பழங் குப்பை

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பழங் குப்பை 


பாரதியார் திண்ணையில் அமர்ந்து இருக்கும் போது , அந்தப் பக்கம் குள்ளச் சாமி ஒரு பழங் கந்தை மூட்டையை சுமந்து  வந்தான்.

பாரதியார் கேட்டார் "என்னய்யா இது, இப்படி குப்பை மூட்டையை தூக்கிக் கொண்டு திரிகிரிறே "

அதற்கு அந்த குள்ளச் சாமி சிரித்துக் கொண்டே சொன்னான்,

"நானாவது பரவாயில்லை, அழுக்கு மூட்டையை வெளியே சுமந்து கொண்டு செல்கிறேன் ...நீயோ குப்பைகளை உள்ளே சுமந்து கொண்டு திரிகிறாயே "

யோசித்து பாப்போம்....

நமக்குள் தான் எவ்வளவு குப்பை மூட்டைகள்...அதுவும் மிக மிக பழைய குப்பைகள். மக்கிப் போனவை. துர் நாற்றம் அடிப்பவை.

ஒவ்வொருவனும் ஒரு ஒரு புத்தகத்தை தூக்கிக் கொண்டு  அலைகிறான்....நான் இந்த புத்தகத்தில் கூறியுள்ளபடி வாழ்கிறேன் என்கிறான்.

அந்தப் புத்தகம் எவ்வளவு பழமையானதோ, அவ்வளவு பெருமை கொள்கிறான்.

என் புத்தகம் 1000 ஆண்டுகள் பழமையானது என்று ஒருவன் பெருமை கொள்கிறான். இன்னொருவன், தன்னுடைய புத்தகம் 2000 ஆண்டு பழமையானது என்று பெருமை கொள்கிறான்.

பழங் குப்பைகளை தூக்கிக் கொண்டு அலைகிறார்கள்.

இவற்றை விட்டு விட்டு வாருங்கள் என்கிறார் பாரதி.

இந்தப் புத்தகங்கள் உங்களை சிறைப்  படுத்துகின்றன.உங்கள் சிந்தனைகளை தடைப் படுத்துக்கின்றன. உங்களை மூளைச் சலவை  செய்கின்றன.இவற்றில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்கிறார் பாரதியார்.

பாடல்

புன்னகைபூத்தாரியனும் புகலுகின்றான்
புறத்தே நான் சுமக்கின்றேன்
அகத்தினுள்ளே இன்னதொரு பழங்குப்பை சுமக்கிறாய் நீ
என்றுரைத்து விரைந்தவனுமேகிவிட்டான்
 மன்னவன் சொற்பொருளினை யான் கண்டுகொண்டேன்
 மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்பதாலே
 இன்னலுற்று மாந்தரெல்லாம மடிவார் வீணே
 இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும்


பொருள் 

புன்னகை பூத்து ஆரியனும் புகலுகின்றான்
புறத்தே நான் சுமக்கின்றேன்
அகத்தினுள்ளே இன்னதொரு பழங்குப்பை சுமக்கிறாய் நீ
என்றுரைத்து விரைந்து அவனும் ஏகி  விட்டான்
 மன்னவன் சொற்பொருளினை யான் கண்டுகொண்டேன்
 மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்பதாலே
 இன்னலுற்று மாந்தர் எல்லாம் மடிவார் வீணே
 இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும்

உங்கள் பழம் நம்பிக்கைகளை, பொய்களை, விட்டு விடுதலை  பெறுங்கள்.

அது எப்படி பழசை எல்லாம் விட முடியும்  ? நம் முன்னவர்கள் என்ன முட்டாள்களா  ? அவர்கள் சொன்னதில் ஏதோ அர்த்தம் இருக்கும் ? அர்த்தம் இல்லாமலா  சொல்லி இருப்பார்கள் ? இத்தனை வருடம் அவற்றை நம்பி காரியங்கள்  செய்து வந்து இருக்கிறோம் ...

பாரதியார் அவற்றிற்கும் விடை தருகிறார்....


Tuesday, March 3, 2015

ஆசாரக் கோவை - எப்படி உணவு உண்ண வேண்டும் ?

ஆசாரக் கோவை - எப்படி உணவு உண்ண வேண்டும் ?



எப்படி உணவு உண்ண வேண்டும் என்று ஆசாரக் கோவை மிக விரிவாகச் சொல்கிறது.

அதில் முதல் பாடல்

பாடல்

நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்
துண்டாரே யுண்டா ரெனப்படுவர் அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வ ரதுவெறுத்துக்
கொண்டா ரரக்கர் குறித்து.

பொருள்

நீராடிக் = குளித்து

கால்கழுவி = கால் கழுவி

வாய்பூசி = வாய் கொப்பளித்து

மண்டலஞ்செய்து = உண்ணுகின்ற இலையையோ, தட்டையா  சுற்றிலும் நீர் வலம் செய்து

உண்டாரே யுண்டா ரெனப்படுவர் = உண்டவர்களே, உண்டார் என்று சொல்லப் படுபவர்


அல்லாதார் = அப்படி இல்லாமல் உண்பவர்கள்

உண்டார்போல் = உணவு உண்டவர்களைப் போல

வாய்பூசிச் செல்வர் = வாய் கழுவி செல்வார்கள்

அவரதுவெறுத்துக் = அதை வெறுத்து

கொண்டா ரரக்கர் குறித்து. = கொண்டார் அரக்கர் குறித்து  (அவர்கள் உண்டதை அரக்கர்கள் குறித்து எடுத்துக் கொள்வார்கள் )

ஏன் இப்படி செய்ய வேண்டும் ?

நீராடி = புரிகிறது. உடலில் உள்ள அழுக்கு போன பின், புத்துணர்வோடு உண்பது ஒரு சுகம்.

கால் கழுவி = ஒவ்வொரு முறையும் உண்பதற்கு முன்னால் நீராட முடியாது. குறைந்த பட்சம் கால் கழுவ வேண்டும். கண்ட இடத்திலும் நடப்பதால், காலில் அசுத்தங்கள் ஒட்டி இருக்கலாம். அவை உணவோடு சேர்ந்து உள்ளே போகாமல்  இருக்க கால் கழுவி.

வாய் பூசி = உண்பதற்கு முன்னால் வேறு எதையாவது குடித்திருப்போம் (காப்பி, டீ ). அது நாவில் ஒட்டி இருக்கும். உணவின் சுவையை அறிய விடாது. வாய் கழவி விட்டால் , உணவின் சுவை நன்றாகத் தெரியும்.

நீர் வலம் செய்து = நீர் சுற்றிலும் இருந்தால் எறும்பு போன்ற ஜந்துக்கள் உணவை நாடி வராது. அதை விட முக்கியமானது, பசி அவசரத்தில் பக்கத்தில் நீர்  எடுத்து வைக்காமல் உண்ண ஆரம்பித்து விட்டால், திடீரென்று விக்கல் வந்தால்  நீர் இல்லாமல் சிரமப் படுவோம். முதலிலேயே நீர் வலம் செய்தால், அந்த நீர் இருக்கும் அல்லவா.

அப்படி எல்லாம் செய்ய வில்லை என்றால் அரக்கன் வந்து உங்கள் உணவை கொண்டு போய் விடுவான்  என்று சும்மா பயமுருதுரதுதான்....:)





பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - மூட்டை சுமந்திடுவதென்னே?

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் -  மூட்டை சுமந்திடுவதென்னே?


 இன்னொரு நாள், அந்தக் குள்ளச் சாமி பழைய கந்தைகள் கொண்ட ஒரு அழுக்கு மூட்டையை சுமந்து பாரதியின் முன்னால் வந்தான்.

அவனைக் கண்டு நகைத்து, பாரதி கேட்டான்,


பாடல்


பொய்யறியா ஞானகுரு சிதம்பரேசன்
 பூமிவிநாயகன்குள்ளச்சாமியங்கே
மற்றொருநாள் பழங்கந்தையழுக்கு மூட்டை
 வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
 கற்றவர்கள் பணிந்தேத்துங்கமலபாதக்கருணைமுனி
சுமந்துகொண்டென்னெதிரே வந்தான்
 சற்றுநகை புரிந்தவன்பால் கேட்கலானேன்
தம்பிரானே இந்தத் தகைமையென்னே?
 முற்றுமிது பித்தருடைச் செய்கையன்றொ?
 மூட்டை சுமந்திடுவதென்னே?

மொழிவாய் என்றேன்


பொருள்


பொய் அறியாத ஞான குரு சிதம்பரேசன் பூமி விநாயகன் குள்ளச் சாமி அங்கே மற்றொரு நாள்  பழங்கந்தை அழுக்கு மூட்டை வளமுறவே கட்டி அவன் முதுகின்  மீது கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கமல பாதம் கருணை முனி சுமந்து கொண்டு  என் எதிரே வந்தான்.

சற்று நகை புரிந்து அவன் பால் கேட்காலானேன், தம்பிரானே இந்தத் தகைமை  என்னே ? முற்றுமிது பித்தருடைய செய்கை அன்றோ ? மூட்டை சுமந்திடுவது என்னே ? மொழிவாய் என்றேன் ...


 அதற்கு   அந்த குள்ளச் சாமி சொன்னான் ....


இராமாயணம் - நல்லது செய்யும் முன்

இராமாயணம் - நல்லது செய்யும் முன் 


ஒரு நல்ல காரியம் நடக்கப்  போகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், அதற்கு முன் என்ன செய்ய வேண்டும் ?

ஒரு திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறது, இன்னும் சிறிது நாளில் திருமணம் நடக்கப் போகிறது என்றால் நாம் என்ன செய்வோம் ?

மண்டபம் பாப்போம், பத்திரிகை அடிப்போம், சமையலுக்கு, பந்தலுக்கு என்று ஆள் தேடுவோம்.

வீடு வாங்க முன் பணம் கொடுத்து விட்டால் என்ன செய்வோம், வங்கியில் கடன் வாங்க விண்ணப்பம் செய்வோம்.

அந்தக் காலத்தில் , நம் முன்னவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா ?

யாருக்கு நல்லது நடக்கப் போகிறதோ அவர்களுக்கு பெரியவர்களைக் கொண்டு நாலு நல்ல வார்த்தை சொல்லச் சொல்வார்கள்.

"பையனுக்கு / பெண்ணுக்கு நிச்சயம் பண்ணி இருக்கிறோம்....அவனுக்கு/அவளுக்கு  நல்லது எடுத்துச் சொல்லுங்கள் " என்று வீட்டுக்கு வரும் பெரியவர்களை  வேண்டிக் கொள்வார்கள். அவர்களும் அந்த பெண்ணையோ, பையனையோ அழைத்து திருமணம் என்றால் என்ன, அதில் உள்ள நெளிவு சுழிவுகள் என்ன, எப்படி வாழ வேண்டும், எங்கே தவறு வரும், அதை எப்படி தடுப்பது என்றெல்லாம் தங்களது அறிவில் இருந்து அனுபவத்தில் இருந்து சொல்லித் தருவார்கள்.

பெண்ணும் மாப்பிளையும் திருமணம், முதலிரவு என்று மகிழ்ச்சியில் இருக்கும் போது அதையும் தாண்டி வாழ்வில் உள்ள கடமைகள் , திருமண வாழ்வில் உள்ள   சிக்கல்கள் இவை அவர்களுக்குத் தெரியாது. அது தெரிந்த பெரியவர்களைக் கொண்டு சொல்லச் சொன்னால் "ஓ, இப்படியெல்லாம் இருக்கிறதா " என்று அவர்கள் மனதில் தோன்றும். அவர்களை திருமண வாழ்விற்கு தயார் செய்யும்.

வீடு வாங்கப் போகிறாயா, வீடு எப்படி இருக்க வேண்டும், பத்திரத்தில் எதுவெல்லாம் இருக்க வேண்டும், எப்படி சிக்கனமாக இருந்து கடனை அடைக்க வேண்டும்   என்றெல்லாம் சொல்லித் தருவார்கள்.

ஒரு பத்து பேர் சொல்லும் போது , அதில் பொதுவான சில கருத்துகள் மீண்டும் மீண்டும் வரும். அது அவர்கள் (பெண்ணோ, பிள்ளையோ, வீடு வாங்குபவர்களோ) மனதில் ஆழமாக  பதியும்.


இங்கே,

இராமனுக்கு முடி சூட்டுவதாக முடிவு செய்து விட்டது. தசரதன் என்ன செய்தான் தெரியுமா, வசிட்டனை அழைத்து இராமனுக்கு அறிவுரை சொல்லச் சொன்னான்.

 பாடல்

‘நல் இயல் மங்கல நாளும் நாளை; அவ்
வில் இயல் தோளவற்கு ஈண்டு வேண்டுவ
ஒல்லையின் இயற்றி நல் உறுதி வாய்மையும்
சொல்லுதி பெரிது ‘எனத் தொழுது சொல்லினான்.

பொருள் 

தசரதன், வசிட்டனிடம் சொல்லுகிறான்

‘நல் இயல் மங்கல நாளும் நாளை = நாளையே நல்ல நாள்


அவ் = அந்த
வில் இயல் = வில்லை தன் இயல்பாகக் கொண்ட

தோளவற்கு = தோளை உடைய இராமனுக்கு

ஈண்டு = இப்போது

வேண்டுவ = தேவையானவற்றை

ஒல்லையின் இயற்றி = சீக்கிரமாக , விரைந்து சொல்வாயாக

நல் உறுதி = நல்ல, உறுதி வாய்ந்த

வாய்மையும் = உண்மையும்

சொல்லுதி பெரிது ‘ = விரிவாக எடுத்துச் சொல்

எனத் தொழுது சொல்லினான்.= என்று வணங்கி வேண்டினான்

மற்ற அரசர்களுக்கு ஓலை அனுப்ப வேண்டும், மண்டபத்தை தயார் செய்ய வேண்டும், சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும், வருபவர்களை தங்க வைக்க  இடம் சரி செய்து தர வேண்டும்....சக்ரவர்த்தி திருமகனின் முடி சூட்டு விழா...எப்படி இருக்க வேண்டும் ?

இதெல்லாம் இருக்க, தசரதன், வசிட்டனிடம் இராமனுக்கு அறவுரை சொல்லச் சொல்கிறான்.

நமகெல்லாம் ஒரு பாடம்.

நாளை நம் வீட்டில் ஒரு நல்லது நடக்க இருக்கிறது என்றால், நாம் என்ன செய்ய வேண்டும்  என்று கம்பன் பாடம் நடத்திவிட்டு போகிறான்.

பெரியவர்கள் அறவுரை சொல்லும் போது  இன்னொன்றும் நிகழும்.

நாளை அந்த பையனுக்கோ , பெண்ணுக்கோ ஒரு சிக்கல் வந்தால், "நாம் சொல்லி, வாழ்த்தி வந்த பையன்/பெண், அவர்களுக்கு ஒரு சிக்கல், நான் எப்படி  பார்த்துக் கொண்டு இருக்க முடியும் " என்று அந்த சிக்கலை சரி செய்ய உதவுவார்கள்.

பெரியாரைத் துணைகோடல் என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

வயதில் சிறியவர்கள், பெரியவர்களின் அறிவு மற்றும் அனுபவத்தின் ஆழத்தை  அறிய மாட்டார்கள். பெற்றோர்கள் தான் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

அது ஒரு புறம் இருக்க,

இராமன் பெரிய ஞானி. அவனுக்குத் தெரியாதது இல்லை.

அவனுக்கு வசிட்டன் என்ன சொல்லி இருப்பான் ?

பார்ப்போம் ..



Sunday, March 1, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - காதல் ஒன்றே வாழும் நெறி

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - காதல் ஒன்றே வாழும் நெறி 



கையிலொரு நூலிருந்தால் விரிக்கச் சொல்வேன்.
கருத்தையதில் காட்டுவான்;வானைக் காட்டி,
மையிலகு விழியாளின் காதலொன்றே
வையகத்தில் வாழுநெறியென்று காட்டி,
ஐயனெனக் குணர்த்தியன பலவாம் ஞானம்,
அதற்கவன்காட் டியகுறிப்போ அநந்த மாகும்,
பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன்

பூமிவிநா யகன்குள்ளச் சாமி யங்கே.



கையிலொரு நூலிருந்தால் விரிக்கச் சொல்வேன்.
கருத்தையதில் காட்டுவான்;



குள்ளச்சாமி சொன்னது எல்லாம் சரிதானா ? அவை உண்மைதானா ?

மூச்சை கட்டுப் படுத்தி, யோகம் பயின்றால், அழியாத (மணல் போல) உண்மையை அறிய முடியுமா ?

பாரதி சொல்கிறான் , கையில் (வேத) நூல் ஏதும் இருந்தால், அதைப் பிரித்து அதில் அந்த குள்ளச் சாமி சொன்ன உபதேசம் எங்கே  இருக்கிறது என்று காட்டச் சொல்வேன். அவனும் அதைக் காட்டி இருப்பான்.

அதாவது, குள்ளச் சாமி சொன்னது எல்லாம் நம் வேத புத்தகத்தில் உள்ளதுதான் என்கிறார்.

மேலும்....


வானைக் காட்டி, மையிலகு விழியாளின் காதலொன்றே
வையகத்தில் வாழுநெறியென்று காட்டி,


வானத்தைக் காட்டி, அந்த வானத்து இருளை கண்ணின் மையாகக் கொண்ட அவளின் காதல் ஒன்றே இந்த உலகில் வாழும் வழி என்று காட்டி.

அவள் யார் ?

தாயா  ? காதலியா ? மனைவியா ?

தெரியவில்லை. ஆனால், அவளின் காதல் மட்டும்தான் வையகத்தில் வாழும் நெறி என்கிறார் பாரதியார்.

அவள், உங்களுக்கு யாரோ, அவள் தான் பாரதி சொன்ன அவள்.

அது மட்டும் அல்ல,

குள்ளச்சாமி எனக்கு பல குறிப்புகளை காட்டி, ஞானத்தைத் தந்தான் என்கிறார்.


ஐயனெனக் குணர்த்தியன பலவாம் ஞானம்,
அதற்கவன்காட் டியகுறிப்போ அநந்த மாகும்,


அந்த குள்ளச் சாமி பொய் என்பதை அறியாதவன். சிதம்பரேசன், பூமியில் விநாயகன் அவனே (விநாயகன் = நாயகன் இல்லாதவன். தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன் விநாயகன் )

பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன்

பூமிவிநா யகன்குள்ளச் சாமி யங்கே.


அடுத்த நாள் பாரதி குள்ளச்சாமியை மீண்டும் சந்திக்கிறார் .....