இராமாயணம் - துன்பத்தில் இருந்து விடுபட
துன்பத்தை யாரும் விரும்புவது இல்லை. துன்பமில்லா வாழ்வே எல்லோருக்கும் வேண்டும்.
இருந்தும் துன்பம் வாழ்வில் ஒரு பகுதியாகவே இருக்கிறது.
ஏன் ?
துன்பம் ஏன் வருகிறது ? நாம் துன்பம் வேண்டி போவது இல்லை. அதற்காக முயற்சியும் செய்வது இல்லை. இருந்தும் துன்பம் ஏன் வருகிறது ?
நாம் ஒழுக்கம் தவறினால் துன்பம் வரும்.
நமது ஒவ்வொரு துன்பத்திற்கும் காரணம் எங்கோ ஒழுக்கம் தவறியதுதான்.
சிந்தித்துப் பாருங்கள்.
உடல் நிலை சரி இல்லையா - உணவில் ஒழுக்கம் இல்லை.
வேலை சரி இல்லை, படிப்பு வரவில்லை, நல்ல மார்க் வரவில்லை என்றால் - கல்வி கற்கும் ஒழுக்கத்தில் பிழை.
எந்த ஒரு துன்பத்திற்கும் ஏதோ ஒரு ஒழுக்கக் குறைவு காரணமாக இருக்கும்.
அது சரி, உறவுகளினால் வரும் சிக்கலுக்கு , துன்பத்திற்கு என்ன காரணம் ?
மாமியார் மருமகள் உறவில் சிக்கல்,
கணவன் மனைவி உறவில் சிக்கல்,
பிள்ளைகளோடு உரசல்
இவற்றிற்கும் ஏதோ ஒழுக்கக் குறைவுதான் காரணம் என்று கொண்டால், அந்த ஒழுக்கம் எங்கே சொல்லப் பட்டு இருக்கிறது ? அப்படி இருந்தால் அதை படித்து அதன் படி வாழலாம்.
தமிழில் எங்கேனும் அந்த ஒழுக்க வரை முறை இருக்கிறதா ?
உதாரணமாக கணவன் மனைவி உறவில் வரும் சிக்கலை எப்படி போக்கிக் கொள்வது ?
தமிழில் இதற்கு வழி இருக்கிறது.
ஒழுக்கம் என்றால் என்ன ?
ஒழுகுவது ஒழுக்கம்.
வீடு ஒழுகிறது என்கிறோம் அல்லவா, அந்த ஒழுகுதல்.
ஒழுகுதல் என்பது எப்போதும் மேலிருந்து கீழாகத்தான் வரும்.
கூரையில் இருந்து தரை நோக்கி ஒழுகும்.
தரையில் இருந்து கூரை நோக்கி ஒழுகாது.
இரண்டாவது,ஒழுகுதல் என்பது தொடர்ச்சியாக நடப்பது. சொட்டு சொட்டாக விழுவது அல்ல.
எனவே ஒழுக்கம் என்பது மேலிருந்து கீழாக தொடர்ச்சியாக வருவது.
அது என்ன மேலிருந்து கீழ் ?
உயர்ந்தவர்கள், சான்றோர், நல்லவர்கள், பெரியவர்கள் செய்வதை கண்டு நாமும் அதையே வாழ்வில் விடாமல் கடை பிடிப்பது ஒழுக்கம்.
சரி, இப்போது பிரச்னைக்கு வருவோம்.
கணவன் மனைவி இடையே சிக்கல்.
பணம், வேலை, உறவு இவற்றில் ஏதோ ஒன்றினால் கணவனும் மனைவியும் ஒரு சுமுகமான சூழலில் இல்லை. என்ன செய்வது ?
முதலில் வழியைச் சொல்கிறேன். பின், அது எப்படி வந்தது என்பதைச் சொல்கிறேன்.
முதலாவது, மனைவி கணவன் மேல் வைத்துள்ள நமிபிக்கையை எந்த காலத்திலும் கை விடக் கூடாது.
இரண்டாவது, கணவனுக்கும் மனைவிக்கும் நடுவில் மூன்றாவது நபரை விடக் கூடாது. ஒரு பெண், துன்பத்தில் இருக்கிறாள் என்றால் யாரும் உதவி செய்ய வருவார்கள். மனைவி, தனக்கு உள்ள பிரச்சனையை மற்றவர்கள் மூலம் தீர்த்துக் கொள்ள முயலக் கூடாது. "என் கணவன் சரி இல்லை, அவரால் முடியவில்லை, நீங்கள் உதவி செய்வீர்களா " என்று மனைவி யாரையும் அண்டக் கூடாது. அப்படி செய்தால் , உதவி செய்தவன் பதிலுக்கு ஏதாவது எதிர்பார்பான். அது குடும்பத்தில் மேலும் சிக்கலை உருவாக்கும். அது மட்டும் அல்ல, கணவன் , அவனுடைய மனைவியின் பிரச்சனைகளை கண்டு கொள்ள மாட்டான் "அவள் யாரையாவது வைத்து சமாளித்துக் கொள்வாள்" என்று விட்டு விடுவான். இது உறவில் மேலும் விரிசலை உருவாக்கும்.
மூன்றாவது, மனைவி , கணவனின் பெருமையை ஒரு போதும் விட்டு கொடுக்கக் கூடாது. அது கணவனுக்கு பலம் சேர்க்கும். என் மனைவி என்னை மதிக்கிறாள் என்ற எண்ணம் கணவனுக்கு ஆயிரம் யானை பலம் தரும்.
இப்போது கதைக்குப் போவோம்.
பெரிய சக்ரவர்த்தி ஆவான் என்று எண்ணி இராமனை மணந்து கொண்டாள் சீதை. பெரிய பலசாலி. சிவ தனுஷை வளைத்தவன். தசரதனின் மூத்த குமாரன். வசிட்டனிடம் கல்வி பயின்றவன். என்னென்ன qualification வேண்டுமோ , எல்லாம் இருந்தது அவனிடம்.
என்ன ஆயிற்று ?
இராஜியத்தை இழந்து, நடுத் தெருவுக்கு வந்து விட்டான். அது மட்டும் அல்ல, கட்டிய மனைவியை மாற்றான் கவர்ந்து செல்ல விட்டு விட்டான்.
சீதை அசோக வனத்தில் சிறை இருக்கிறாள்.
அங்கே அனுமன் வருகிறான்.
அவள் துன்பத்தைக் கேட்டு, "பேசாமல், என் தோளில் ஏறிக் கொள்..இப்பவே உன்னை இராமனிடம் சேர்த்து விடுகிறேன்....மத்தது எல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறுகிறான்.
'வேறு இனி விளம்ப உளதன்று; விதியால், இப்
பேறு பெற, என்கண் அருள் தந்தருளு; பின் போய்
ஆறு துயர்; அம் சொல் இள வஞ்சி! அடியன் தோள்
ஏறு, கடிது' என்று, தொழுது இன் அடி பணிந்தான்.
எங்கே ஒரு நிமிடம் நிறுத்தி, நீங்கள் சீதையாக இருந்தால் என்ன செய்வீர்கள் என்று யோசித்துப் பாருங்கள் .
கணவன் சரி இல்லை. வேலை இல்லை. பதவி இல்லை. வருமானம் இல்லை. கட்டிய மனைவியை காக்கத் தெரியவில்லை. இங்கே , அனுமன் என்ற மிக வலிமையானவன், கடலைத் தாண்டி வந்து இருக்கிறான். மகன் போன்றவன். அவன் தோளில் ஏறி அமர்ந்து கொண்டால் நேரே இராமனிடம் போய் சேர்ந்து விடலாம்.
இதில் தவறு என்ன இருக்கிறது ? என்று தானே நினைப்போம்.
சீதை அப்படி நினைக்கவில்லை.
அந்த சூழ்நிலையிலும் தனக்கும் இராமனுக்கும் நடுவில் இன்னொரு மனிதன் (அனுமன்) வருவதை அவள் அனுமதிக்க வில்லை.
அது மட்டும் அல்ல, "இந்த பிரச்சனையை நானே தீர்த்துக் கொள்வேன். அப்படி செய்தால் அது இராமனின் வில்லின் ஆற்றலுக்கு மாசு " என்று செய்யாமல் இருக்கிறேன் என்று கூறுகிறாள்.
அதாவது, கணவனின் திறமையில் அசைக்க முடியாத நம்பிக்கை. அவன் இது வரை அவளுக்கு தந்தது எல்லாம் துன்பம் தான் என்றாலும் அவன் திறமையை அவள் குறைத்து மதிப்பிடவில்லை. மேலும், அவன் திறமையை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்கிறாள்.
அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும், என்
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன்.
எனக்கு இந்த பிரச்சனையை தீர்க்கத் தெரியும். அதற்கான ஆற்றலும் உண்டு. ஆனால், நான் செய்ய மாட்டேன். என் கணவன் தான் செய்ய வேண்டும் என்கிறாள்.
தன் ஆற்றலை அடக்கிக் கொண்டு, கணவனை முன்னிலைப் படுத்துகிறாள்.
இராமனுக்கு மாசு என்று சொல்லவில்லை.
இராமனின் வில்லுக்கு மாசு என்று சொல்லவில்லை.
இராமனின் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று நினைக்கிறாள்.
அதாவது, கணவனின் திறமையை தான் மதிப்பது மட்டும் அல்ல, மற்றவர்களும் அறியச் சொல்லுகிறாள்.
ஒரு வேளை , சீதை அனுமன் கூடப் போய் இருந்தால் என்ன ஆகி இருக்கும் ? மனைவியை காக்கத் தெரியாதவன் என்று இராமனுக்கு தீராப் பழி வந்து சேர்ந்து இருக்கும்.
பிரச்னை என்று வரும்போது, நம்பிக்கை இழக்காதீர்கள். மூன்றாவது மனிதனை , அது யாராக இருந்தாலும் , உங்களுக்கும் உங்கள் கணவனுக்கும் இடையில் வர விடாதீர்கள். கணவனை முன் நிலைப் படுத்துங்கள்....
இது சீதை செய்தது.
இராமாயணம் கிடைத்தது நமக்கு.
சிந்தியுங்கள்.