Wednesday, June 10, 2015

பிரபந்தம் - குட்டி யானை போன்றவனே

பிரபந்தம் - குட்டி யானை போன்றவனே 



பிள்ளை இல்லை என்றால் அது ஒரு கவலை.

பெற்ற பிள்ளையை கையில் எடுத்து கொஞ்ச முடியவில்லை என்றால் அது எவ்வளவு துன்பமாக இருக்கும் ஒரு தாய்க்கு ?

தேவகி கண்ணனை பெற்றாள் .

பெற்ற அன்றே அவனை ஆயர்பாடிக்கு அனுப்பி விட்டாள் .

அவனை, கொஞ்சி கொஞ்சி வளர்த்தது எல்லாம் யசோதைதான்.

தேவகி, கண்ணனை தாலாட்டி , சீராட்டி , கொஞ்சி வளர்க்க முடியவில்லையே என்று உருகி வருந்திப் பாடுவதாக குலசேகர ஆழ்வார் பத்துப் பாடல்கள் பாடி இருக்கிறார்.

படித்துப் பாருங்கள். கண்ணில் நீர் வரும்.

பாடல்

ஆலை நீள்கரும் பன்னவன் தாலோ அம்பு யுத்தடங் கண்ணினன் தாலோ
வேலை நீர்நிறத் தன்னவன் தாலோ வேழப் போதக மன்னவன் தாலோ
ஏல வார்குழ லென்மகன் தாலோ என்றென் றுன்னைஎன் வாயிடை
நிறைய தாலொ லித்திடும் திருவினை யில்லாத் தாய ரில்கடை யாயின தாயே

சீர் பிரித்தபின்

ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ,  அம்புயத் தடங் கண்ணினன் தாலோ
வேலை நீர் நிறத்து அன்னவன் தாலோ வேழப் போதகம் அன்னவன் தாலோ
ஏலவார் குழல் என் மகன் தாலோ என்று உன்னை என் வாயிடை 
நிறைய தால் ஒலித்திடும் திருவினை  இல்லாத் தாயரில் கடையாயின தாயே

பொருள்

ஆலை = ஆலையில்

நீள் கரும்பு = நீண்ட கரும்பு

அன்னவன் = போன்றவனே

தாலோ = தாலேலோ

அம்புயத் = அன்புஜம், தாமரை போன்ற

தடங் = அகன்ற

கண்ணினன் தாலோ = கண்ணினைக் கொண்டவனே தாலேலோ

வேலை = கடல்

நீர் = நீர்

நிறத்து = நிறம்

அன்னவன் = போன்றவனே

தாலோ = தாலேலோ

வேழப் = யானை

போதகம் = குட்டி

அன்னவன் தாலோ = போன்றவனே தாலேலோ

ஏலவார் குழல் = மணம்மிக்க  முடியை உடைய 

என் மகன் தாலோ = என் மகனே தாலேலோ

என்று = என்று

உன்னை  = உன்னை

என் வாயிடை = என் வாயால்

நிறைய = நிறைய

தால் ஒலித்திடும் = தாலாட்டுப் பாடிடும்

திருவினை = திருவினை , புண்ணியம்

இல்லாத் தாயரில் = இல்லாத தாயரில்

கடையாயின தாயே = மிக கடைப் பட்டவள் நானே

கரும்பு போல இருப்பானாம்....கண்ணன் தலையில் மயில் பீலி செருகி இருப்பான். கருப்பாய் இருப்பான். அது போல கரும்பும் கருப்பாய் தலையில் தோகையோடு இருக்கும். பொருத்தமான உதாரணம்.

கண்ணன், பாலும், வெண்ணையும், நெய்யும் தின்று குண்டு குண்டாக கறுப்பாக இருப்பன் அல்லவா ...எனவே யானைக் குட்டி என்றாள்.

தால் என்றால் நாக்கு என்று பொருள்.

தால் + ஆட்டு = தாலாட்டு.

தாய்மார்கள், குழந்தையை தூங்கப் பண்ண "ரோ ரோ...",. "லா லா " என்று  நாக்கை அசைத்து  ஒலி எழுப்புவார்கள். குழந்தைக்கு மொழி தெரியாது. அந்த நாக்கு அசையும் சத்தத்தில் அது தூங்கிப் போய்விடும். எனவே அதற்கு தாலாட்டு என்று பெயர்.

எப்படி எல்லாம் யசோதை கண்ணனை கொஞ்சி, தாலாட்டி சீராட்டி இருப்பாள்....எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று வருந்துவதாக  குலசேகர ஆழ்வார் பாடுகிறார்.

தேவகியே கூட இவ்வளவு உருகி இருப்பாளா என்று தெரியாது. ஆழ்வார் அவ்வளவு உருகுகிறார்.

மனம் ஒன்றி வாசித்துப் பாருங்கள்....மனதுக்குள் என்னவோ செய்யும்.

 





Monday, June 8, 2015

பிரபந்தம் - எப்போது பக்தி செய்ய ஆரம்பிக்கலாம் ?

பிரபந்தம் - எப்போது பக்தி செய்ய ஆரம்பிக்கலாம் ?


பொதுவாக ஒரு அம்பது, அறுபதுகளில் பக்தி செய்யலாம் என்று ஒரு விதி வைத்து இருக்கிறோம்.

கோவில், கதா கலாட்சேபம் என்று பார்த்தால் வயதானவர்கள்தான் பொதுவாக இருப்பார்கள்.

படிக்கணும், வேலை தேடணும் , கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும், பின் பிள்ளைகள், பின் பிள்ளைகளை வளர்க்க வேண்டும், அதுகளுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும், அதுகளுக்கு ஒரு வாரிசு வேண்டும், இதற்கிடையில் வயதான பெற்றோர், அவர்களை வேறு பார்த்துக் கொள்ள வேண்டும். இது எல்லாம் முடிந்து, இவற்றில் இருந்து விடுதலை அடைந்த பின், இறைவன் மேல் பக்தி செலுத்த நேரம் இருக்கும் என்று நினைக்கிறோம். அது வரை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்.

இராமலிங்க அடிகள் கூறினார்...பக்தியில் தோய்ந்து இறைவனை வழிபட முதலில் தாய் தடை என்றேன், பின் தாரம் தடை என்றேன், பின் பிள்ளைகள் தடை என்றேன், இப்படி ஒவ்வொரு தடையாக வந்து கொண்டே இருந்தால் நான் எப்போதுதான் உன் அருளை பெறுவது என்று...

தாய்தடை என்றேன் பின்னர்த் 
          தாரமே தடைஎன் றேன்நான் 
     சேய்தடை என்றேன் இந்தச் 
          சிறுதடை எல்லாந் தீர்ந்தும் 
     தோய்தடைச் சிறியேன் இன்னுந் 
          துறந்திலேன் எனைத் தடுக்க 
     ஏய்தடை யாதோ எந்தாய் 
          என்செய்கேன் என்செய் கேனே. 

என் செய்வேன், என் செய்வேன் என்று புலம்புகிறார்.


அப்புறம், நாளை, அடுத்த வருடம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்.

சரி, ஒத்துக் கொள்கிறேன்...அம்பது அறுபது கொஞ்சம் தாமதமான வருடம் தான்...ஒரு நாப்பது ? முப்பது சரியாக இருக்குமா என்று பொய்கை ஆழ்வாரிடம் கேட்போம்....

இல்லை, அதுவும் ரொம்ப தாமதமான காலம் என்கிறார்.

சரி, ஒரு இருபது , முப்பது ?

இல்லவே இல்லை என்று சாதிக்கிறார்.

சரி, ஒரு அஞ்சு பத்து வயசு சரியாக இருக்குமா என்று கேட்டால், இல்லை அதுவும் late என்கிறார்.

பின் எப்ப ஆரம்பிப்பது ? பிறந்த உடனேயா என்றால் , இல்லை அதுவும் காலம் கடந்தது என்கிறார்.

கருவிலேயே பக்தி செய்யத் தொடங்கி விட்டாராம்....

பாடல்

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்,
இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று
கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை.

சீர் பிரித்த பின்

ஒன்றும்  மறந்து அறியேன் ஓத நீர் வண்ணனை நான்,
இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று
கரு அரங்கத்துள் கிடந்து  கை தொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை.

பொருள்

ஒன்றும்  மறந்து அறியேன் = எதையும் நான் மறக்க வில்லை

ஓத நீர் = பொங்கும் நீர் (கடல் )

வண்ணனை நான் = போன்ற வண்ணம் கொண்ட (கடல் போன்ற நிறம் கொண்ட அவனை )

இன்று மறப்பனோ ஏழைகாள் = இன்று மறப்பேனா ?

அன்று = அன்று

கரு அரங்கத்துள் கிடந்து = கருவில் இருக்கும் போதே

கை தொழுதேன் = கை தொழுதேன்

கண்டேன் = கண்டேன்

திருவரங்க மேயான் திசை = திருவரங்கத்தில் உள்ள அவன் திசை

இது ஆழ்வார் மட்டும் சொல்லவில்லை.

திருநாவுகரசரும் இதையே சொல்கிறார்.

கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுனதருளால்
திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே.

சீர் பிரிப்போம்.

கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும்  கருத்து உடையேன்
உருவாய்த் தெரிந்து உந்தன் நாமம் பயின்றேன் உனதருளால் 
திருவாய்ப் பொலியச் "சிவாய நம" என்று  நீறு அணிந்தேன் 
தருவாய் சிவ கதி நீ பாதிரிப் புலியூர் அரனே.

நம்மால் கருவில் இருந்து இப்போது தொடங்க முடியாது.

நாம் இரண்டு செய்யலாம்...

ஒன்று, பக்தி பற்றி இன்றிலிருந்து சிந்திக்கத் தொடங்கலாம்.

இரண்டு, பிள்ளைகளுக்கு, இளையவர்களுக்கு அது பற்றி சிந்திக்கக் கற்றுத் தரலாம்.

பெரியவர்கள் சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார்கள்...இளமையிலேயே பக்தி என்ற உணர்வைப் பெறுவதில் ஏதோ நன்மை இருக்கலாம்.

சிந்திப்போம்.

Sunday, June 7, 2015

பிரபந்தம் - உன் வழிகளை நான் அறியேன்

பிரபந்தம் - உன் வழிகளை நான் அறியேன் 


நமக்கு நெருங்கியவர்களிடம் நாம் செலுத்தும் அன்புக்கு ஏதாவது விதி வைத்து இருக்கிறோமா ?

படித்தால் தான் உன் மேல் அன்பு செலுத்துவேன் என்று பிள்ளைகளிடம் சொல்கிறோமா ?

பணம் சம்பாதித்துக் கொண்டு வந்தால் தான் உன் மேல் அன்பு செலுத்துவேன் என்று கணவனிடம் சொல்கிறோமா ?

நம் பிள்ளை, நம் கணவன், நம் மனைவி, என்று எல்லோரிடமும் அன்பு செலுத்த நாம் காரணம் கேட்பது இல்லை. நம் பிள்ளைகள், என் மனைவி, என் கணவன் என்பது மட்டும் போதும்.

அது போல, இறைவனிடம் அன்பு செலுத்தவும், காரணம் ஒன்றும் வேண்டாம்.

அவன் நமக்காக அற்புதங்கள் செய்து காட்ட வேண்டாம், மலையை தூக்கினால் தான் உன் மேல் அன்பு செலுத்துவேன் என்று சொல்ல வேண்டாம்.




பொய்கை ஆழ்வார் சொல்கிறார்....நீ ஓரடியால் இந்த உலகம் அனைத்தையும் நீ அளந்தாய் என்று சொல்கிறார்கள். இன்னோர் அடியால் மேல் உலகத்தை அளந்தாய் என்று சொல்கிறார்கள். நீ சிறு பிள்ளையாக இருக்கும் போது பேய் உருவில் வந்த பூதகியை கொன்றாய் என்று சொல்கிறார்கள். நீ எப்படி செய்தாயோ எனக்குத் தெரியாது. ....என்று சொல்லும் போதே , உன் மேல் எனக்குள்ள அன்பு  இந்த வித்தைகளுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லுவது நமக்குப் புரியும்.

பாடல்

பாரளவு மோரடிவைத் தோரடியும் பாருடுத்த,
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே – சூருருவில்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்,
நீயளவு கண்ட நெறி.

சீர் பிரித்தபின்

பார் அளவு ஓர் அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த 
நீர் அளவும்  செல்ல நிமிர்ந்ததே –  சூர் உருவில் 
பேய் அளவு  கண்ட பெருமான் அறிகிலேன்,
நீயளவு கண்ட நெறி.

பொருள்

பார் அளவு = இந்த உலகின் அளவை

ஓர் அடி வைத்து = ஓர் அடி வைத்து அளந்தாய்

ஓர் அடியும் = இன்னோர் அடியாள்

பார் உடுத்த = இந்த உலகை சூழ்ந்த

நீர் அளவும்  =  ஆவரண நீர் என்று சொல்வார்களே

செல்ல நிமிர்ந்ததே –  அது வரை சென்றது

சூர் உருவில் = தெய்வப் பெண் வடிவில் வந்த

பேய் = பூதகியின்

அளவு  கண்ட = ஆயுளின் எல்லை கண்ட (அவளை கொன்ற )

பெருமான் = பெருமானே

அறிகிலேன்,= நான் அறிய மாட்டேன்

நீயளவு கண்ட நெறி = நீ எப்படி, யாரை அளக்கிறாய் என்பதை

குணங்களைத் தாண்டி, அவனை , அவனுக்காகவே நேசித்தார் பொய்கை ஆழ்வார்.

காரணம் இல்லாத அன்பு.

எதிர் பார்ப்பு எதுவும் இல்லாத அன்பு.

ஒரு தாய் , தன் பிள்ளையின் மேல் செலுத்தும் அன்பைப் போல.

பக்தியின் புதிய எல்லை.

மீண்டும் ஒரு முறை பாசுரத்தை வாசித்துப்  பாருங்கள்.

Saturday, June 6, 2015

பிரபந்தம் - ஒன்றும் உணரேன் நான்

பிரபந்தம் - ஒன்றும் உணரேன் நான் 



பாடல்

என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது,
ஒன்று மதனை யுணரேன் நான், - அன்று
தடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ
படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்.

கொஞ்சம் சீர்  பிரிப்போம் 

என்று கடல்கடைந்தது ? எவ்வுலகம் நீர் ஏற்றது,
ஒன்றும் அதனை உணரேன்  நான், - அன்று
தடைத்து உ டைத்துக் கண்படுத்த ஆழி, இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார்.

பொருள்

என்று கடல்கடைந்தது ? = கடலை கடைந்தது எப்போது ?

எவ்வுலகம் நீர் ஏற்றது = எந்த உலகத்துக்காக மாவலியிடம் நீர் ஏற்றது (தானம் பெற்றது)

ஒன்றும் அதனை உணரேன்  நான் = அதெல்லாம் எனக்குத் தெரியாது

அன்று = அன்றொரு நாள்

தடைத்து  உ டைத்துக் = தடைகளை உடைத்து (இலங்கை செல்ல)

கண்படுத்த = நீ துயில் கொள்ளும்

ஆழி இது = கடல் இது ,

நீ = நீ

படைத்து = படைத்து

இடந்து = இகழ்ந்து (தோண்டி எடுத்து )

உண்டு =பிரளய காலத்தில் உண்டு 

உமிழ்ந்த பார் = பின் உமிழ்ந்த பார்

மேலோட்டமாக பார்த்தால் இது தான் பொருள்.  பெரியவர்களின் வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தம் இருக்கும்.
 
சற்று ஆழ்ந்து சிந்திப்போம். 


அந்தக் காலத்தை விட இப்போது அநியாயங்களும், அநீதிகளும் அதிகமாகிக் கொண்டே போகிறது.

இருந்தும் ஆழ்வார்களும், நாயனமார்களும் இப்போது ஏன் வருவது இல்லை?

இன்று தான் அவர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இருந்தும் பெரியவர்கள் யாரும் உதிப்பாதாகக் காணோம்.

மக்கள் அறம் எது, நீதி எது, தர்மம் எது என்று அறியாமல் குழம்பிக் கிடக்கிறார்கள். அவர்களை வழி நடத்த ஏன் பெரியவர்கள் யாரும் தோன்ற மாட்டேன் என்கிறார்கள் ?

எப்போதோ சொல்லி விட்டுப் போய் விட்டார்கள். அது இன்றைக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுகிறது.  கீதையும், குறளும் , வேதங்களும், உபநிஷத்துக்களும் நடை முறைக்கு சாத்தியமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது.

தேவாரமும் , திருவாசகமும், நாலாயிர திவ்ய பிரபந்தமும் இன்று நம் வாழ்க்கைக்கு துணை செய்யுமா என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.

பொய்கை ஆழ்வார் விடை சொல்கிறார்.

பாற்கடலை எப்போது கடைந்தார்கள்  ?

மாவலியிடம் மூன்று அடியை எப்போது தானமாகப் பெற்றான் ?

இலங்கைக்கு எப்போது பாலம் கட்டியது ?

யாருக்குத் தெரியும் ?

ஆனால் , அது இன்றுபோல் இருக்கிறது.

இதோ இந்த கடல் இன்றும் யாரோ கடைவது போல அலை பொங்குகிறது. நுரை பொங்குகிறது.

அன்று மூவடியால் அளந்த உலகம் இதோ இந்த உலகம்தான்.

என்றோ உண்டு, அகழ்ந்து எடுத்து, உமிழ்ந்தது இந்த உலகம்தான்.

நீங்கள் நிற்கும், அமர்ந்து இருக்கும் இந்தத் தரைதான் உலகளந்த பெருமாள் அன்று அளந்தது.

அவை எல்லாம் முடிந்து போனது மாதிரி  இருந்தாலும்,இன்று வரை அவற்றுள்   ஏதோ ஒன்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பக்தியும், தெளிந்த அறிவும் இருந்தால் காலம் மறைந்து போகும். அன்று நடந்தது இன்று நடப்பது போல இருக்கும்.

அன்று சொன்ன கீதை இன்று சொல்வது போல இருக்கும்.

எதுவும் முடிந்து போகவில்லை. அன்று சொன்னது இன்றும் பொருந்தும்.

சிந்திப்போம்.





Friday, June 5, 2015

திருவாசகம் - நெறி அல்லா நெறி

திருவாசகம் - நெறி அல்லா நெறி 


நமக்கு கை கால்கள் நன்றாக இருக்கிறது, கண் தெரிகிறது, மற்ற உறுப்புகள் எல்லாம் சரியாக இயங்குகின்றன, அமைதியான இந்த நாட்டில் பிறந்திருக்கிறோம்,  பெற்றோர்கள், அன்பான உடன் பிறப்பு, தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் படித்திருக்கிறோம்...

இது எல்லாம்  சம்பாதித்துப் பெற்றதா ?

எப்படியோ நமக்கு கிடைத்தது. நாம் ஒன்றும் பெரிதாகச் செய்துவிடவில்லை இவை எல்லாம்  கிடைக்க.

பின் எப்படி இவை நமக்கு கிடைத்தது ? என்று ஆச்சரியப் படுகிறார் மணிவாசகர். "அச்சோவே" என்று அவருக்கு ஆச்சரியம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொன்றைப் பார்க்கும் போதும்....

வெளிய விட்ட மூச்சு மீண்டும் உள்ளே போகிறது...அட !

பசிக்கிறது, சாப்பிடுகிறோம்...அதுவே செரிமானமாகி விடுகிறது...அட !

வாழ்வில் எத்தனை ஆச்சரியங்கள் ....

இது போக இறை அருளும் கிடைத்து விட்டால் ? ஆச்சிரியதிற்கு அளவே இல்லை.

அச்சோவே என்று பத்து பாடல் பாடி இருக்கிறார் மணிவாசகப் பெருந்தகை...அத்தனையும்  ஆச்சரியம்தான்

அதில் இரண்டாவது பாடல்...

இந்த வாழ்வின் குறிக் கோள் என்ன ? எதற்காகப் பிறந்தோம் ? என்ன செய்யப் படித்தோம் ? இந்த  வேலை,  கல்யாணம், பிள்ளைகள், சொத்து, சம்பாத்தியம் எல்லாம் எதற்காக ? இந்த வாழ்வின் குறிக்கோள் (objective ) என்ன ?

எதற்காக இறைவன் அல்லது இயற்கை நம்மைப் படைத்தது ? நம் மூலம் அது என்ன  நினைக்கிறது ?

ஒன்றும் இல்லை.

இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று   கிடையாது. நீங்களாகவே கற்பித்துக் கொண்டால்தான் உண்டு. அப்படி நீங்கள் நினைக்கும் அர்த்தமும் மாறிக் கொண்டே இருக்கும்.
   
வாழ்கையை ரொம்ப தீவிரமாக (serious ) எடுத்துக் கொண்டு சிரமப் படாதீர்கள். இது ஒரு விளையாட்டு. அவ்வளவுதான்.

இறைவனுக்கு அல்லது  இயற்கைக்கு ஒரு  குறிகோளும் இல்லை. எல்லாம் ஒரு விளையாட்டுக்குத்தான்.

இதில் என்ன நான் பெரியவன், சிறியவன், உயர்ந்தவன் , தாழ்ந்தவன்,  உள்ளவன்,இல்லாதவன் என்று அடி தடி சண்டை.

விளையாட்டாக எடுத்துக் கொண்டு போங்கள் . வாழ்கை லேசாக இருக்கும்.

மணிவாசகர் .சொல்கிறார்..இறைவனுக்கே ஒரு குறிக்கோளும் கிடையாதாம். சும்மா  கூத்து அடித்துக் கொண்டிருக்கிறான்.  அவனுக்கே இல்லை  என்றால் நீங்கள் ஏன்  கவலைப் படுகிறீர்கள். ஆடிப் பாடி மகிழ்ச்சியாக இருங்கள்.

சாதிக்க வேண்டியது ஒன்றும் இல்லை.

பாடல்

நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்
கறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே.


பொருள்

நெறியல்லா நெறிதன்னை = நெறி  அல்லாத நெறி தன்னை. நெறி என்றால் வழி. வழி அல்லாத வழி என்றால் என்ன ? பெரியவர்கள் எது சொன்னாலும் நல்லதையே சொல்லுவார்கள். நினைப்பார்கள். அவர்கள் நெறி என்று சொன்னால் அது நல்ல நெறியையே குறிக்கும். எனவே "அல்லாத நெறி" என்றால்  தீய வழி. " நல்ல வழி அல்லாதவழியை " அதாவது தீய வழியை.  தீய வழி என்று  கூட தன் வாயால் சொல்ல மறுக்கிறார் மணிவாசகர்.  தீய வழி என்று சொன்னால்,  அது என்ன வழி என்று குதர்க்கம் பேசும் ஆட்கள் இருப்பார்கள். அது எப்படி தீய வழி ஆகும் என்று தர்க்கம் பண்ணுவார்கள். எனவே, நல்ல வழியை மட்டும் சொல்லி விட்டு, அது அல்லாதது தீய வழி என்று சொல்கிறார் அவர்.

தீமைகளை விவரித்துச் சொல்லக் கூடாது. ஏன் என்றால், அப்படி விவரித்துச் சொன்னால் , நாளடைவில் நமக்கு அதில் ஒரு ருசி வந்துவிடும். அப்படி செய்து பார்த்தால்  என்ன என்று  தோன்றும். ஒரே முறை செய்து பார்ப்போம் என்று மனம் நினைக்கும்.   எனவே தான் "நெறி அல்லாத நெறி தன்னை" என்றார். 

வழியே ஏகுக , வழியே மீளுக என்றாள் ஔவைப் பாட்டி.

நல்ல வழியில் போய் , நல்ல வழியில் திரும்பி வா என்று அர்த்தம்.

வழியே என்று தானே சொன்னாள் , நல்ல வழி என்று சொல்லவில்லையே என்று வாதம் பண்ணக் கூடாது. வழி என்று பெரியவர்கள் சொன்னால் அது நல்ல  வழிதான்.


நெறியாக நினைவேனைச் = அதையே நெறியாக நினைக்கும் என்னை. நெறி அல்லாத  நெறியை, நெறியாக நினைக்கும் என்னை. அதாவது, நல்ல வழி இல்லாத வழியை நல்ல வழி என்று நினைக்கும் என்னை.


சிறுநெறிகள் சேராமே = சிறு நெறிகள் சேராமே. சிற்றின்பத்தை அடையும் வழியில் செல்லாமல் 

திருவருளே சேரும்வண்ணம் =  திருவருளே சேரும் வண்ணம்

குறியொன்றும் இல்லாத கூத்தன் = ஒரு குறிக்கோளும் இல்லாத கூத்தன். ஒரு நோக்கமும் இல்லாமால் ஆடிக் கொண்டிருக்கிறான்.  ஆனந்தம்,ஆட்டம் வருகிறது. அவ்வளவுதான்.

தன் கூத்தையெனக் = அவனுடைய கூத்தை

அறியும் வண்ணம் = நான் அறிந்து கொள்ளும் படி

அருளியவா றார் பெறுவார்= அருளியவாறு யார் பெறுவார்

 அச்சோவே = அய்யோ  !

நான் அறிந்து கொண்டது மாதிரி யார்  அறிந்து கொள்வார் என்று ஆச்சரியப் படுகிறார்.

நல்ல வழியில் சென்றால் கூத்தனின் கூத்து  புரியும்.

சிற்றின்பத்தை நோக்கிப் போகாமல் இருக்கும் வழி சரியான வழி.

செல்லத் தொடங்குகள்...எல்லாம் புரிபடும்.




Thursday, June 4, 2015

பிரபந்தம் - வையம் தகளியாக - துன்பம் இல்லாத வாழ்வு வாழ - பாகம் 2

பிரபந்தம் - வையம் தகளியாக - துன்பம் இல்லாத வாழ்வு வாழ - பாகம் 2


துன்பங்கள் யாருக்கும் வேண்டாம். ஆனாலும், எல்லோருக்கும் துன்பம் வருகிறது.

துன்பம் ஏன் வருகிறது ? அந்த துன்பத்தை எப்படி வராமல் தடுத்துக் கொள்வது ? துன்பம் இல்லாத வாழ்வை எப்படி வாழ்வது ?

குறுகிய மனதால் துன்பம் வருகிறது. நான் , எனது என்ற எண்ணங்களால் துன்பம் வருகிறது.

எனக்கு வேண்டும், எனக்கு மட்டும் வேண்டும், அவனுக்குக் கிடைக்கக் கூடாது, என் வீடு, என் பிள்ளை, என் குடும்பம் , என் நாடு , என் மதம் என்று பல்வேறு பிரிவினைகளால் நமக்குத் துன்பம் வருகிறது.

நம் பாட முறைகள், அறிவியல் சார்ந்த சிந்தனைகள் இந்த எண்ணங்களை வலுப் படுத்துகிறது.

அறிவியல் என்ன செய்கிறது ?

அது பொருள்களை ஆராய முற்படுகிறது. ஆராயும் போது அது பொருள்களை பிரித்துக் கொண்டே போகிறது. முதலில் அணு, பின் அதற்குள் உள்ள ப்ரோடான், எலெக்ட்ரான், நியுட்ரான் என்று போகிறது. பின் அவற்றையும் உடைத்துப் பிரித்து உள்ளே செல்கிறது.

இப்படி எந்தத் துறையை எடுத்தாலும் நுணுக்கமாக ஆராய்வதே அறிவியலின் வேலை.

எத்தனை அறிவியல் துறைகள்? பிரிந்து பிரிந்து போய்க் கொண்டே இருக்கிறது.

இதில் சிக்கல் என்ன என்றால், அதிகமாக இவற்றைப் படித்து படித்து நம் மனமும் மூளையும் எதையும் இதே முறையில் ஆராய தொடங்குகிறது.

எதைக் கொடுத்தாலும் பியித்து பிரித்து போட்டு விடுகிறோம். மனமும் அறிவும் சுருங்கிப் போய் விடுகிறது.

எந்த பிரச்னை என்றாலும் அதை சரியாக பிரித்தால் தான் அதற்கு ஒரு தீர்வு காண முடியும்.

சரி.

ஆனால், வாழ்கை என்பது பிரச்சனையா ? வாழ்க்கையில் பிரச்னைகள் வரலாம். ஆனால், வாழ்கையே பிரச்னை அல்ல.

நமக்குத் தெரிந்ததெல்லாம் அறிவியல், கணிதம், தர்க சாஸ்திரம் (logic ). இதை வைத்துக் கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். வாழ்கையை எப்படி வாழ்வது ?

இங்குதான் ஆன்மீகமும் இலக்கியமும் வருகின்றன.

இவை இரண்டும் வாழ்கை என்பது ஒரு பிரமாண்டமான ஒன்று, அனைத்தையும் சேர்த்தது, ஒன்றோடு ஒன்று இணைந்தது என்று சொல்ல வருகிறது.

நம் அறிவையும், மனதையும் விசாலமாக்க வருகின்றன.

குறுகிய வட்டத்துக்குள் இருந்து நம்மை விடுவித்து மிகப் பெரிய ஒரு பிரமாண்டத்தை நமக்குக் காட்டுகின்றன.

இந்த பிரமாண்டம் , விஸ்வரூபம் புரியும்போது நான், எனது என்பவை மிக மிகச் சிறியது ஆகி மறைந்தே போகின்றன. நாமும் இந்த பிரமாண்டத்தின் ஒரு கூறு  என்று அறிகிறோம். பிரிவினைகள் மறைந்து எல்லாம் ஒன்றே என்ற  நிறைவான  எண்ணம் வருகிறது.

பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதி , முதல் திரு மொழி, முதல் பாசுரம் அப்படி ஒரு பிரமாண்டத்தை நமக்குத் தீட்டிக் காட்டுகிறது.

இந்த உலகமே அகல் விளக்காக, இந்த கடல்நீர் எல்லாம் அந்த விளக்கில் இடும் நெய்யாக, சூரியனே அந்த விளக்கின் சுடராக இருக்க , அப்படி ஒரு விளக்கை ஏற்றினேன், என் துயரமெல்லாம் நீங்க வேண்டி என்கிறார்.

பாடல்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
இடராழி நீங்குகவே என்று.

பொருள்

வையம் = உலகம், பூமி

தகளியா = விளக்காக

வார்கடலே = ஆர் + கடலே = ஆர்பரிக்கும் கடலே

நெய்யாக = நெய்யாக

வெய்ய கதிரோன் = வெம்மையான கதிரோனே

விளக்காக = அந்த விளக்கின் சுடராக

செய்ய சுடர் = சிவந்த சுடரைக் கொண்ட, ஒளி பொருந்திய

ஆழி யானடிக்கே  = ஆழியான் அடிக்கே, திருமாலின் திருவடிகளுக்கே

சூட்டினேஞ் = சூட்டினேன்

சொன் மாலை = சொற்களால் ஆன மாலை

இடராழி நீங்குகவே என்று = இடர் + ஆழி + நீங்குவே என்று. இடர் என்றால் துன்பம். துன்பம் என்ற கடல் நீங்க வேண்டி.


துன்பம் என்ற கடல் நீங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்கிறார்  ஆழ்வார்.

பெரிதாக சிந்தியுங்கள். மிக மிகப்  பெரிதாக.

உலகமே விளக்காக. கடலே நெய்யாக. சூரியனே சுடராக

இப்படி ஒன்றை கற்பனை செய்து பாருங்கள். இதை மனதில் நிறுத்துங்கள்.

முடிந்த நேரம் எல்லாம் இந்த பாசுரத்தை உணர்ந்து சொல்லுங்கள்.

இந்த பிரமாண்டம் விளங்குகிராதா ? மனம் விரிகிறதா ?

இந்த பாசுரம் இன்னும் ஆழ்ந்த அர்த்தங்களைக் கொண்டது. அதை மேலும் சிந்திப்போம்.

==================== பாகம் 2 ============================================

உலகமே விளக்கு. 
கடல் நீரே அந்த விளக்கில் இட்ட நெய்.
சூரியனே அந்த விளக்கின் சுடர் 

இதை கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள்.

இந்த உவமைகளால என்ன சொல்ல வருகிறார் ஆழ்வார் ?

சூரியன் - நித்தம் நித்தம் எழுகிறது, வெளிச்சம் தருகிறது. மழை பொழிவிக்கிறது, மாலையில் மறைகிறது. அது பாட்டுக்கு தன் கடமையை செய்து கொண்டு  இருக்கிறது. யார் இருக்கிறார்கள், யார் இல்லை, யார் என்ன சொல்லுவார்கள் என்றெல்லாம் அது பார்ப்பது இல்லை. தன் கடமையைச் செய்கிறது. அதற்கு பிரதி பலனாக அது வேறு ஒன்றையும் எதிர்பார்ப்பது இல்லை. 

கடைமையைச் செய். பலனில் நாட்டம் வைக்காதே என்று கீதையில் கண்ணன் சொன்னது போல.

இது கர்ம யோகம். 

 கடல் - எத்தனை மழை பொழிந்தாலும் அது பொங்கி வழிவது இல்லை. மழையே பெய்யாவிட்டாலும் வற்றி  வறண்டு போவது இல்லை. இன்பத்தில் ஆடுவது இல்லை, துன்பத்தில் துவள்வது இல்லை. ஒரே திட சிந்தையுடன் அது இருக்கிறது. 

ஸ்தித பிரஞன் என்று கீதையில் கண்ணன் சொன்னது போல.

இது ஞான யோகம். 

இந்த விளக்கை ஏற்றியது 

செய்ய சுடராழி யானடிக்கே சூட்டினேன்

சிவந்த சுடர் விடும் சக்கரத்தைக் கொண்ட அவனின் திருவடிகளில் சூட்டினேன் என்றார்.

இது பக்தி யோகம்.

கடைமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே,
இன்பத்திலும் துன்பத்திலும் கலங்காமல் உறுதியாக இரு
அவன் மேல் பக்தி செய்

ஒரே பாடலில் கீதையின் சாரம்சத்தை கொண்டு தருகிறார் ஆழ்வார்.

மீண்டும் ஒரு முறை கற்பனை பண்ணிப் பாருங்கள்.

ஆழ்வார் தீட்டிய கோலம் புரியும். அதில் உள்ள ஆழ்ந்த அர்த்தம் புரியும்.

இதைப் புரிந்து கொண்டு வாழ்ந்தால், வாழ்வில் துன்பம் , இடராழி வருமா என்ன ?


இப்படி ஒவ்வொரு பாடலும் தன்னுள் ஆழ்ந்த கருத்துகளை சுமந்து கொண்டு இருக்கின்றன.

எப்போது அனைத்தையும் படிக்கப் போகிறீர்கள் ?

Wednesday, June 3, 2015

பிரபந்தம் - வையம் தகளியாக - துன்பம் இல்லாத வாழ்வு வாழ - பாகம் 1

பிரபந்தம் - வையம் தகளியாக - துன்பம் இல்லாத வாழ்வு வாழ - பாகம் 1


துன்பங்கள் யாருக்கும் வேண்டாம். ஆனாலும், எல்லோருக்கும் துன்பம் வருகிறது.

துன்பம் ஏன் வருகிறது ? அந்த துன்பத்தை எப்படி வராமல் தடுத்துக் கொள்வது ? துன்பம் இல்லாத வாழ்வை எப்படி வாழ்வது ?

குறுகிய மனதால் துன்பம் வருகிறது. நான் , எனது என்ற எண்ணங்களால் துன்பம் வருகிறது.

எனக்கு வேண்டும், எனக்கு மட்டும் வேண்டும், அவனுக்குக் கிடைக்கக் கூடாது, என் வீடு, என் பிள்ளை, என் குடும்பம் , என் நாடு , என் மதம் என்று பல்வேறு பிரிவினைகளால் நமக்குத் துன்பம் வருகிறது.

நம் பாட முறைகள், அறிவியல் சார்ந்த சிந்தனைகள் இந்த எண்ணங்களை வலுப் படுத்துகிறது.

அறிவியல் என்ன செய்கிறது ?

அது பொருள்களை ஆராய முற்படுகிறது. ஆராயும் போது அது பொருள்களை பிரித்துக் கொண்டே போகிறது. முதலில் அணு, பின் அதற்குள் உள்ள ப்ரோடான், எலெக்ட்ரான், நியுட்ரான் என்று போகிறது. பின் அவற்றையும் உடைத்துப் பிரித்து உள்ளே செல்கிறது.

இப்படி எந்தத் துறையை எடுத்தாலும் நுணுக்கமாக ஆராய்வதே அறிவியலின் வேலை.

எத்தனை அறிவியல் துறைகள்? பிரிந்து பிரிந்து போய்க் கொண்டே இருக்கிறது.

இதில் சிக்கல் என்ன என்றால், அதிகமாக இவற்றைப் படித்து படித்து நம் மனமும் மூளையும் எதையும் இதே முறையில் ஆராய தொடங்குகிறது.

எதைக் கொடுத்தாலும் பியித்து பிரித்து போட்டு விடுகிறோம். மனமும் அறிவும் சுருங்கிப் போய் விடுகிறது.

எந்த பிரச்னை என்றாலும் அதை சரியாக பிரித்தால் தான் அதற்கு ஒரு தீர்வு காண முடியும்.

சரி.

ஆனால், வாழ்கை என்பது பிரச்சனையா ? வாழ்க்கையில் பிரச்னைகள் வரலாம். ஆனால், வாழ்கையே பிரச்னை அல்ல.

நமக்குத் தெரிந்ததெல்லாம் அறிவியல், கணிதம், தர்க சாஸ்திரம் (logic ). இதை வைத்துக் கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். வாழ்கையை எப்படி வாழ்வது ?

இங்குதான் ஆன்மீகமும் இலக்கியமும் வருகின்றன.

இவை இரண்டும் வாழ்கை என்பது ஒரு பிரமாண்டமான ஒன்று, அனைத்தையும் சேர்த்தது, ஒன்றோடு ஒன்று இணைந்தது என்று சொல்ல வருகிறது.

நம் அறிவையும், மனதையும் விசாலமாக்க வருகின்றன.

குறுகிய வட்டத்துக்குள் இருந்து நம்மை விடுவித்து மிகப் பெரிய ஒரு பிரமாண்டத்தை நமக்குக் காட்டுகின்றன.

இந்த பிரமாண்டம் , விஸ்வரூபம் புரியும்போது நான், எனது என்பவை மிக மிகச் சிறியது ஆகி மறைந்தே போகின்றன. நாமும் இந்த பிரமாண்டத்தின் ஒரு கூறு  என்று அறிகிறோம். பிரிவினைகள் மறைந்து எல்லாம் ஒன்றே என்ற  நிறைவான  எண்ணம் வருகிறது.

பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதி , முதல் திரு மொழி, முதல் பாசுரம் அப்படி ஒரு பிரமாண்டத்தை நமக்குத் தீட்டிக் காட்டுகிறது.

இந்த உலகமே அகல் விளக்காக, இந்த கடல்நீர் எல்லாம் அந்த விளக்கில் இடும் நெய்யாக, சூரியனே அந்த விளக்கின் சுடராக இருக்க , அப்படி ஒரு விளக்கை ஏற்றினேன், என் துயரமெல்லாம் நீங்க வேண்டி என்கிறார்.

பாடல்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
இடராழி நீங்குகவே என்று.

பொருள்

வையம் = உலகம், பூமி

தகளியா = விளக்காக

வார்கடலே = ஆர் + கடலே = ஆர்பரிக்கும் கடலே

நெய்யாக = நெய்யாக

வெய்ய கதிரோன் = வெம்மையான கதிரோனே

விளக்காக = அந்த விளக்கின் சுடராக

செய்ய சுடர் = சிவந்த சுடரைக் கொண்ட, ஒளி பொருந்திய

ஆழி யானடிக்கே  = ஆழியான் அடிக்கே, திருமாலின் திருவடிகளுக்கே

சூட்டினேஞ் = சூட்டினேன் 

சொன் மாலை = சொற்களால் ஆன மாலை

இடராழி நீங்குகவே என்று = இடர் + ஆழி + நீங்குவே என்று. இடர் என்றால் துன்பம். துன்பம் என்ற கடல் நீங்க வேண்டி.


துன்பம் என்ற கடல் நீங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்கிறார்  ஆழ்வார். 

பெரிதாக சிந்தியுங்கள். மிக மிகப்  பெரிதாக.

உலகமே விளக்காக. கடலே நெய்யாக. சூரியனே சுடராக

இப்படி ஒன்றை கற்பனை செய்து பாருங்கள். இதை மனதில் நிறுத்துங்கள்.

முடிந்த நேரம் எல்லாம் இந்த பாசுரத்தை உணர்ந்து சொல்லுங்கள். 

இந்த பிரமாண்டம் விளங்குகிராதா ? மனம் விரிகிறதா ? 

இந்த பாசுரம் இன்னும் ஆழ்ந்த அர்த்தங்களைக் கொண்டது. அதை மேலும் சிந்திப்போம்.