Tuesday, July 7, 2015

திருக்குறள் - தீயவையும் நிழலும்

திருக்குறள் - தீயவையும் நிழலும் 


கெடுதல் செய்பவன், அயோக்கியத்தனம் செய்வபன், பொய், புரட்டு, பித்தலாட்டம் செய்பவன் எல்லாம் நல்லா இருக்கான்.

நீதிக்கும், நேர்மைக்கும் பயந்து ஒழுக்கமாக வாழ்பவன் துன்பப்படுகிறான். அவனுக்குத்தான் ஆயிரம் சோதனைகள் வருகின்றன.

பேசாமல், நாமும் கெட்ட வழியில் போகலாமா என்று நல்லவனும் சிந்திக்கத் தலைப் படுகிறான்.

இந்த சிக்கல், இன்று நேற்று அல்ல, வள்ளுவர் காலம் தொட்டே இருந்திருக்கிறது.

வள்ளுவர் சொல்கிறார், தீமை செய்பவன் கெட்டுப் போவான் என்பது எவ்வளவு உறுதியானது என்றால் எப்படி நிழல் ஒருவனை விட்டு விலகாதோ அது போல உறுதியானது.

பாடல்

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்து அற்று

பொருள் 

தீயவை = தீமையானவைகளை

செய்தார் = செய்தவர்கள்

கெடுதல் = அழிதல்

நிழல் தன்னை = நிழலானது

வீயாது = விடாமல் , அழியாமல்

அடி உறைந்து அற்று = காலைப் பற்றிக் கொண்டு வருவது போன்றது

சரி, அது என்ன நிழல் உவமை ?

நிழலை நாம் உருவாக்குவது இல்லை. அதுவே உண்டாகிறது.

தீயவை செய்தவனின் அழிவு தானே வரும். யாரும் ஒன்றும் செய்ய வேண்டாம்.

இராவணனை அழிக்கவா இராமன் கானகம் போனான் ? தன் மகனுக்கு முடி சூட்ட வேண்டும் என்று சின்னம்மா நினைத்து செய்த சதி, அவன் கானகம் போனான். எங்கேயோ இருந்த இராவணன், சீதையை தூக்கிக் கொண்டு போக, இராமன்  கையால் அழிந்தான்.  இராவணனை அழித்தது எது ? அவன் செய்த  தீவினை.

தீங்கு இழை இராவணன்
     செய்த தீமைதான்
ஆங்கு ஒரு நரையது
     ஆய் அணுகிற்றாம் என,
பாங்கில் வந்திடு நரை
     படிமக் கண்ணடி
ஆங்கு அதில் கண்டனன் -

     அவனி காவலன்.

தசரதனுக்கு, கன்ன ஓரத்தில் ஒரு நரை முடி வந்தது. அதன் காரணம், இராவணன் செய்த தீவினை என்கிறார் கம்பர்.  அவன் செய்த தீவினை, தசரதனுக்கு  ஒரு நரைமுடியாக வந்தது.

இரணியனைக் கொல்ல நரசிம்மம் தூணுக்குள் ஒளிந்து இருக்கவில்லை. இங்கே இருக்கிறதா, இங்கே இருக்கிறதா என்று தேடித்  தேடி போய் , தூணை பிளந்து அழிவைக் தேடிக் கொண்டான் இரணியன்.

அது மட்டுமல்ல, 

இரவில் நிழல் இருக்காது. தவறு செய்யும் போது, பாவத்தின் வீரியம் தெரியாது. 

விடியும் போது நிழலின் நீளம்  தெரியும். 

முதலில் மிக நீளமாக இருக்கும். சூரியன் மேலே ஏற ஏற, நிழலின் நீளம் குறையும்.  தீமை செய்பவன் நினைப்பான், இத்தனை செய்தோம், யாரும் கண்டு பிடிக்கவில்லை,  இனிமேலா கண்டு பிடிக்கப் போகிறார்கள் என்று.  மாலை வரும்போது  நிழல் நீளும். பாவத்தின் வீரியம் கூடும். 

அது மட்டும் அல்ல, 

நிழல் நம்மை விட்டு ஒரு வினாடி கூட பிரிந்து இருக்காது. எப்போதும் நம்மை தொட்டுக் கொண்டே  தொடரும். எங்கு போனாலும் விடாது. காவி உடுத்து துறவறம் செல்லலாம், நாடு நாடு விட்டு நாடு போகலாம், நம் நிழல் நம்மை விடாது. 


சிந்தித்துப் பார்ப்போம்.



Sunday, July 5, 2015

இராமானுசர் நூற்றந்தாதி - இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே

இராமானுசர் நூற்றந்தாதி - இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே



திருவரங்கத்து அமுதனார் அருளிச் செய்தது இராமனுசர் நூற்றந்தாதி.

குருவின், ஆசாரியன் மூலமாகத்தான் இறைவனை அடைய முடியும் என்பது நம் முன்னவர்களின் முடிந்த முடிபு.

இறைவனைப் பற்றி நமக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் யாராவது சொன்னால்தானே புரியும்.

தந்தையையே தாய் சொல்லித்தானே தெரிந்து கொள்கிறோம்.

இறைவனை குரு தான் அடையாளம் காட்ட வேண்டும்.

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என்றார் அருணகிரிநாதர்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.



அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் என்பார் மணிவாசகர். மணிவாசகருக்கு இறைவனே குரு வடிவாக வந்து உபதேசம் செய்தான். 

முந்திய முதல், நடு, இறுதியும், ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றுஅறிவார்?
பந்து அணை விரலியும், நீயும், நின் அடியார் பழம் குடில்தொறும் எழுந்தருளியபரனே!
செம் தழல் புரை திருமேனியும் காட்டி, திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி,
அந்தணன் ஆவதும் காட்டி, வந்து ஆண்டாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே!

திருவரங்கத்து அமுதனார், இராமானுசரை குருவாகக் கொண்டு, விண்ணப்பம் செய்கிறார்.....

"என் மனம் என்ற வண்டு உன் திருவடித் தாமரைகளை அடைந்தது, தேன் உண்ணும் பொருட்டு. அந்தத் தேனை நீ அந்த வண்டுக்கு அருளிட வேண்டும். அது அல்லாமல் வேறு எதையாவது தந்து என் மனதை மயக்கிடாதே "

என்று  வேண்டுகிறார்.

பாடல்

போந்ததென் னெஞ்சென்னும் பொன்வண்டு உனதடிப் போதில் ஒண்சீர்
ஆம்தெளி தேனுண் டமர்ந்திட வேண்டி,நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமா னுச! இது அன்றி யொன்றும்
மாந்தகில் லாது, இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.

சீர் பிரித்த பின்

போந்தது என் நெஞ்சு என்னும்  பொன் வண்டு உனது அடிப் போதில் ஒண் சீர்
ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி, நின் பால் அதுவே 
ஈந்திட வேண்டும் இராமானுச! இது அன்றி ஒன்றும் 
மாந்த இல்லாது , இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.


பொருள் 

போந்தது = சென்று அடைந்தது

என் நெஞ்சு = என் மனம்

என்னும் = என்ற

பொன் வண்டு = பொன் வண்டு

 உனது அடிப் = உனது திருவடி என்ற

போதில் = மலரில். போது என்றால் மலர். போதொடு நீர் சுமந்து போவார் என்பார் திருநாவுக்கரசர்

மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.


ஒண் சீர் = சிறந்த

ஆம் தெளி தேன் உண்டு = தெளிந்த தேனை உண்டு

அமர்ந்திட வேண்டி = அமர்ந்திட வேண்டி

நின் பால் அதுவே = உன்னிடம் அதுவே

ஈந்திட வேண்டும் = அளித்திட வேண்டும்.  உயர்ந்தவர்கள் , தாழ்ந்தவர்களுக்குத் தருவதற்கு ஈதல் என்று பெயர்.

இராமனுக்கு பெயர் சூட்டும் போது, "இராமன் என்ற பெயர் ஈந்தான்" என்பார் கம்பர்.  அது எப்படி,  வசிட்டர் இராமனை விட உயர்ந்தவர் ? (இது பற்றி பின்னொரு நாளில் சிந்திப்போம் )

இராமானுச!  = இராமானுச

இது அன்றி ஒன்றும் =  இதைத் தவிர வேறு ஒன்றும்

மாந்த இல்லாது  = அருந்த  முடியாது

இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே = இனி வேறொன்றைக் காட்டி என்னை மயக்கி விடாதே.


இராமானுசா ! உன் திருவடி மட்டுமே வேண்டும். வேறு எதுவும் வேண்டாம் என்று  உருகுகிறார். 


திருக்குறள் - புணர்ந்து ஊடி நிற்போம் எனல்

திருக்குறள் - புணர்ந்து ஊடி நிற்போம் எனல் 


காதலனை பிரிந்து இருக்கும் போது, அவன் வந்தவுடன் என்ன பேசணும், எப்படி பேசணும், எப்படி ஊடுவது , எப்படி கூடுவது என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பாள்.

ஆனால், அவன் வந்தவுடன் பேசும் வராது, நினைத்தது எல்லாம் மறந்து போகும்.

அந்த காதலும், காமமும் அப்படியே அவளை ஆக்ரமித்துக் கொள்கிறது.

என்ன செய்கிறோம் என்று அவளுக்குத் தெரியவில்லை. அவள், தன் வசம் தான் இல்லை.

அப்படி காதலில், காமத்தில் கரையும் காதலிக்கு ஒரு உதாரணம் சொல்கிறார் வள்ளுவர்.

யாரும் எதிர்பார்க்க முடியாத உதாரணம்.

ஒரு முறை வள்ளுவர் சுடுகாட்டின் வழியே சென்றார். அங்கே ஒரு பிணம் எரிந்து கொண்டிருந்தது. தீ அந்த பிணத்தை எரிக்கிறது. பிணத்தின் சதையெல்லாம் தீயில்  எரிகிறது. பிணமோ அது பற்றி ஒரு  கவலையும் இல்லாமல்  இருக்கிறது. ஒரு சிந்தனையும் இல்லை.

அது  போல,காமம் என்ற தீ பிடித்து சதையை உருக்கும் போது , புணர்வதும், ஊடுவதும் , பின் நிற்பதும் ஒன்றும் அவளுக்குத் தெரியவில்லை. அந்த உணர்ச்சியில் அவள் எரிகிறாள்.

பாடல்

நிணந்தீயி லிட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ 

புணர்ந்தூடி நிற்போ மெனல்.


சீர் பிரித்த பின்

நிணம் தீயில் இட்டதன்ன நெஞ்சினார்க்கு உண்டோ 
புணர்ந்து ஊடி நிற்போம் எனல் ?


பொருள்

நிணம் = சதை

தீயில் = தீயில்

இட்டதன்ன = போட்டது போல (பிணம் எரிவது போல )

நெஞ்சினார்க்கு உண்டோ  = ,காதல்  காம வயபட்ட்வர்களுக்கு உண்டோ

புணர்ந்து = கூடி

ஊடி = ஊடி

நிற்போம் எனல் ? = பின்  அமைதி பெற்று நிற்போம் என்று நினைக்கும் நினைவு

முதலில் கூடல்
பின் ஊடல்
பின் ஒன்றும் அறியாமல் நிற்கும் , தன்னை மறந்து நிற்கும் நிலை

காமத்தை, காதலை இதை விட சிறப்பாகச் சொல்ல முடியுமா என்ன ?






Saturday, July 4, 2015

திருக்கடை காப்பு - தோடுடைய செவியன்

திருக்கடை காப்பு - தோடுடைய செவியன்


 சில பாடல்கள் எத்தனை முறை படித்தாலும், ஒவ்வொரு முறையும்   புதுப் புது அர்த்தங்களை தந்து கொண்டே இருக்கும்.

அப்படிப்பட்ட  ஒரு பாடல் தான் தோடுடைய செவியன் என்ற இந்தப் பாடல்.

பாடல் என்னமோ மிக எளிமையான ஒன்றுதான்

பாடியவர் திருஞான சம்பந்தர்.

சம்பந்தர் சிறு குழந்தையாக இருந்தபோது ஒரு நாள் அவருடைய தந்தையார் சம்பந்தரை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவிலுக்குள் நுழையும்முன் அங்குள்ள திருக்குளத்தில் நீராடிச்  செல்லலாம்  என்று குளத்திற்கு சென்றார். சம்பந்தரை குளக்கரையில் அமர்த்தி விட்டு  நீராடச்  சென்றார்.

அவர்   குளத்தில் மூழ்கியவுடன், தந்தையைக் காணோமே என்று குழந்தை அழுதது. குழந்தையின் அழுகை கேட்டு சிவனும் பார்வதியும் அங்கே  வந்தார்கள்.பார்வதி குழந்தைக்கு  பால் கொடுத்தாள். பின் அவர்கள் மறைந்து விட்டனர்.

நீராடி வந்த சம்பந்தரின் தந்தை , குழந்தையின் வாயில் பால் ஒழுகுவதைக் கண்டு, யார் பால் தந்தது என்று கேட்டார்.

குழந்தை பாடியது....



பாடல்

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

 பிரித்த பின்

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி
காடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முன்னை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமா புரம் மேவிய  பெம்மான் இவன் அன்றே


பொருள்

தோடு உடைய செவியன் = காதில் தோட்டினை அணிந்தவன்

விடை ஏறி = எருதின் மேல் ஏறி

ஓர் = ஒரு

தூ = தூய

வெண் = வெண்மையான

மதி = நிலவை

சூடி = தலையில் சூடி

காடு உடைய = சுடுகாட்டில் உள்ள

சுடலைப் பொடி = சாம்பலை

பூசி = உடலெங்கும் பூசி

என் உள்ளம் கவர் கள்வன் = என் உள்ளத்தை கவர்ந்த கள்வன்

ஏடு உடைய மலரான் = ஏடுகளைக் கொண்ட தாமரை மலரில் இருக்கும் பிரமன்

முன்னை நாள்  = முன்பு ஒரு நாள்

பணிந்து =  பணிந்து

ஏத்த = போற்ற

அருள் செய்த = அவனுக்கு அருள் செய்த

பீடு உடைய = பெருமை உடைய

பிரமா புரம் = பிரமாபுரம் (பிரமன் வழி பட்ட இடம் )

மேவிய = சென்று இருந்த

பெம்மான் = பெருமான்

இவன் அன்றே = இவன் அல்லவா

சரி, இந்த பாடலில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது ?

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:

1. ஏன் தோடுடைய செவியன் என்று சொல்ல வேண்டும் ? கழல் அணிந்த அடியன் என்ற, நிலவு சூடிய தலையன் என்று சொல்லி இருக்கலாம் தானே ? குழந்தை அழுத போது , அந்த அழு குரலை கேட்டுத்தானே இறைவனும் இறைவியும்  வந்தார்கள். எனவே, காதை சிறப்பித்து "தோடுடைய செவியன்" என்று  ஆரம்பித்தார்.

2. ஏன் தோடுடைய செவியன் என்று சொல்ல வேண்டும் ? தோடு என்பது பெண்கள் அணியும் அணிகலன். தோடுடைய செவியள் என்று இருந்திருக்க வேண்டும். அப்படிச் சொல்லி  இருந்தால் , அவள் யார் என்ற கேள்வி எழும்.  தோடுடைய  செவியன் என்றால் உலகிலேயே ஒருவன் தான் உண்டு....   அது மாதொரு பாகனான சிவனையே  குறிக்கும். எனவே, தோடுடைய செவியன் என்று கூறினார்.

3. விடை ஏறி ஓர் - விடை என்றால் எருது. எருதின் மேல் ஏறி என்பது ஒரு பொருள். தோன்றிய பொருள் எல்லாம் அழியும். உயிர்கள், பொருள்கள் எல்லாம் அழியும் ஒரு நாள்.  இந்த பூமி, சூரியன், நிலவு, கோள்கள், இந்த அண்டம் அனைத்தும் ஒரு நாள் அழியும். அதற்கு மகா மகா சங்காரம் என்று  பெயர்.அந்த, ஊழிக் காலத்தில், எல்லாம் அழிந்த பின்னும் , அழியாத ஒன்று இருக்கும். அது தான் அறம் . நீதி. உண்மை.  அந்த உண்மை ஒரு எருதின் வடிவம் கொண்டு வந்தது. அதன் மேல் ஏறினான் சிவன் என்கிறது சைவ சித்தாந்தம். விடை என்பதற்கு answer  என்றும் ஒரு பொருள் உண்டு. அனைத்து கேள்விகளுக்கும்  விடையாய் இருப்பவன் அவன் என்ற பொருள் பட, விடை ஏறி   என்றார்.

4. தூ வெண் மதி சூடி = தூய்மை அகத்தை குறிப்பது. வெண்மை புறத்தை குறிப்பது. வெண்மை கண்ணுக்குத் தெரியும். தூய்மை கண்ணுக்குத்  தெரியாது.உள்ளும் புறமும் தூய்மையாக இருக்க வேண்டும், கறை இன்றி இருப்பவர்களை தன்னோடு சேர்த்துக் கொள்வான் என்ற பொருள பட - தூ வெண் மதி சூடி என்றார்.

5. காடுடைய சுடலை பொடி பூசி =   நாம் யாரையாவது பார்த்து அவர்களுக்கு நம் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் வர வேண்டும் என்றால், தலை  சீவி, பவுடர் எல்லாம் போட்டுக் கொண்டு போவோம் அல்லவா. இறைவனும், காட்டில் உள்ள சாம்பலை பூசிக் கொண்டு வருகிறான். எதற்கு எதற்கு ?

6. என் உள்ளம் கவர் கள்வன் = ஞான சம்பந்தரின் உள்ளத்தை கவர. கள்வன் என்றார் ஏன் என்றால், நம் அனுமதி இல்லாமலே நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்வான்.

இராமாயணத்தில், சீதை சொல்வாள், என்னையும் என் நாணத்தையும் கொண்டு செல்ல என் அனுமதி இல்லாமல் என் கண் வழி நுழைந்த கள்வன் அவன் என்று ராமனைப் பற்றி செல்லமாக கோபிக்கிறாள்.


பெண்வழி நலனொடும்,
    பிறந்த நாணொடும்,
எண் வழி உணர்வும் நான்
    எங்கும் காண்கிலேன்,
மண் வழி நடந்து, அடி
    வருந்தப் போனவன்,
கண் வழி நுழையும் ஓர்
    கள்வனே கொல் ஆம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார் மணிவாசகர். அவனே அருள் செய்தால் தான் உண்டு.

படிக்கப் படிக்க புது புது அர்த்தங்கள் ஊறும் பாடல்.



 








Thursday, July 2, 2015

சீவக சிந்தாமணி - கனை கடல் செல்வன்

சீவக சிந்தாமணி - கனை கடல் செல்வன் 


சிந்தாமணி என்பது ஒரு உயரிய மணி வகையைச் சார்ந்தது. காமதேனு, கற்பக விருட்சம், என்பதனோடு சேர்த்து கொள்ளத் தக்கது இது. சீவகன் இந்த காப்பியத்தின் பாட்டுடைத் தலைவன். அவன் பெயரையும் சேர்த்து சீவக சிந்தாமணி என்று குறிப்பிடப்படுகிறது.

எழுதியவர் திருத்தக்க தேவர். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை கொண்டது.

இன்பச்சுவை (காமச் சுவை) சற்று அதிகமாக உள்ள காப்பியம். பின்னாளில், அநபாய சோழன் இதைப் படித்து, அந்த நூலின் சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடந்த போது அவனை மாற்ற தெய்வப் புலவர் சேக்கிழார் பெரிய புராணம் பாடியதாக வரலாறு.

அதில் இருந்து சில சுவையான பாடல்கள்....

கடல் பார்த்திருப்போம்.

நீண்ட கடற்கரை. அங்கங்கே சிறு சிறு மணல் குன்றுகள். அலை அடிக்கும் கரை. இவ்வளவுதானே ?

திருத்தக்க தேவருக்கு வேறு என்னவெல்லாமோ தோன்றுகிறது.

கடல் ஒரு காதலன் போலத் தெரிகிறது.

நுரை கொண்ட அலைகள் அவன் கழுத்தில் உள்ள மாலை போலத் தெரிகிறது.

அந்த மாலையை யார் போட்டது ?

கரை என்ற மங்கை. அங்கங்கே காணும் சிறு சிறு மணற்குன்றுகள் அவள் உடலில் உள்ள மேடு பள்ளங்கள் போலத் தெரிகிறது அவருக்கு.

பாடல்

திரைபொரு கனைகடற் செல்வன் சென்னிமே
னுரையெனு மாலையை நுகரச் சூட்டுவான்
சரை1 யெனும் பெயருடைத் தடங்கொள் வெம்முலைக்
குரைபுனற் கன்னிகொண் டிழிந்த தென்பவே.

பொருள்

திரை பொரு = அலை பொருந்தும்

கனை கடற் = ஆராவாரம் மிக்க கடல்

செல்வன்  = என்னும் செல்வன்

சென்னிமேல் = தலையின் மேல்

நுரையெனு மாலையை = நுரை என்ற மாலையை

நுகரச் சூட்டுவான் = அவன் அனுபவிக்கும் படி சூட்டுவாள்

சரை1 யெனும் பெயருடைத் = சரை என்ற பெயருடைய

தடங்கொள் = மணல் மேடாகிய

வெம்முலைக் = அழகான மார்பு

குரை புனற் = ஒலிக்கும் நீராகிய

கன்னி = கன்னிப் பெண்

கொண் டிழிந்த தென்பவே. = கொண்டு வந்து சூட்டினாள்

என்ன ஒரு கற்பனை.

அடுத்த முறை கடற்கரையில் நிற்கும் போது , சீவக சிந்தாமணியை நினைக்க வேண்டும் !


அறநெறிச்சாரம் - யார் உறவினர் ?

அறநெறிச்சாரம் - யார் உறவினர் ?


யார் உறவினர் ?

பெற்றோர், பிள்ளைகள், கணவன், மனைவி, உடன்பிறப்புகள் எல்லாம் உறவுகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நமக்கு உண்மையான உறவு யார் தெரியுமா ?

நல்ல அறம் - தந்தை
நிறைந்த அறிவு - தாய்
நன்கு உணரும் கல்வி = தோழன்
துணிவு - தம்பி

இவை இல்லாத மற்றைய உறவுகள் பொய் உறவுகளே என்கிறது அறநெறிச்சாரம்.

பாடல்

நல்லறம் எந்தை நிறையெம்மை நன்குணரும்
கல்வியென் தோழன் துணிவெம்பி-அல்லாத
பொய்ச்சுற்றத் தாரும் பொருளோ பொருளாய
இச்சுற்றத் தாரில் எனக்கு.

சீர் பிரித்த பின்

நல்ல அறம் என் தந்தை நிறை என் அம்மை நன்கு உணரும்  
கல்வி என் தோழன் துணிவு என் தம்பி -அல்லாத
பொய்ச் சுற்றத்தாரும் பொருளோ?  பொருளாய
இச்சுற்றத் தாரில் எனக்கு.

பொருள்

நல்ல அறம் என் தந்தை = நல்ல அறம் எனக்குத் தந்தை

நிறை என் அம்மை = நிறைவு, திருப்தி, அமைதி - என் தாய் 

நன்கு உணரும்  கல்வி என் தோழன் = கல்வியே எனக்குத் தோழன்

துணிவு என் தம்பி = என்னுடைய துணிவே எனக்குத் தம்பி

 அல்லாத = இவை அல்லாத

பொய்ச் சுற்றத்தாரும் பொருளோ?  = பொய்யான சுற்றத்தாரும் ஒரு பொருளா ? (இல்லை).

பொருளாய இச்சுற்றத் தாரில் எனக்கு = உண்மையான பொருளான இந்தத் சுற்றத்தாரில் எனக்கு
.

நமக்கு உறவு நாம் தான். அறம்தான் நம்மை வழி நடத்தும் தந்தை. நிறைவான , அமைதியான, திருப்தியான மனமே நமக்குத் தாய். நம் கல்வியே நமக்குத் தோழன். நம் துணிவே நமக்குத் தம்பி (உடன் பிறப்பு)

இதை விட்டு வெளியே சொந்தங்களைத் தேடுவது துன்பத்தைத் தான் தரும்.

நமக்கு நாமே உறவு.







Wednesday, July 1, 2015

பிரபந்தம் - பற்று அற்றவர்கள் பற்றுபவன்

பிரபந்தம் - பற்று அற்றவர்கள் பற்றுபவன் 


இறைவன் நாமத்தை ஒரு நாளைக்கு எத்தனை முறை சொல்ல வேண்டும் ? காலையில் கொஞ்ச  நேரம், மாலையில் கொஞ்ச நேரம் சொல்லலாம்.  நாள்  கிழமை என்றால் இன்னும் கொஞ்சம் அதிக நேரம் சொல்லலாம்.

அவ்வளவுதானே ?

குலசேகர ஆழ்வார் சொல்கிறார் -  கோவிந்தா கோவிந்தா என்று சொல்லி நாக்கே தடித்துப் போக வேண்டுமாம். அத்தனை முறை சொல்ல வேண்டுமாம்.

நாக்கில் தழும்பு ஏற வேண்டுமாம்.


குதிரை வடிவில் வந்த கேசிகன் என்ற அரக்கனின் வாயை பிளந்து மகிழ்ந்தவனை, கடல் போல நிறம் கொண்டவனை, என் கண்ணனை, மலையைக் குடையாகப் பிடித்து அன்று பசுக்களை காத்த இடையர் தலைவனை, தேவர்களின் தலைவனை, தமிழ் மற்றும் வட மொழியின் இனிய பாசுரங்கள் போன்றவனை, பற்று அற்றவர்கள் பயிலும் , திருவரங்கத்தில் பள்ளி கொள்ளும் கோவிந்தனை நாக்கு தடிப்பு ஏறும்வரை சொல்லி, கைகளால் மலர் தூவி சேவிக்கும் நாள் என்றோ

பாடல்

மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை வண்ணணைஎன் கண்ணணைவன் குன்ற மேந்தி
ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை அமரர்கள்தந் தலைவனைஅந் தமிழி னின்பப்
பாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
கோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள் கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே

சீர் பிரித்த பின்


மாவினை வாய் பிளந்து உகந்த மாலை 
வேலை வண்ணணை 
என் கண்ணணை 
அவன் குன்ற மேந்தி ஆவினை அன்று உயக் கொண்ட ஆயர் ஏற்றை  
அமரர்கள் தம்  தலைவனை 
அந்த தமிழ் இன்பப் பாவினை 
அவ் வடமொழியைப் 
பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து அரவணையில்  பள்ளி கொள்ளும்
கோவினை
நாவுற அழுந்தி என்றன் கைகள் கொய் மலர் தூய் என்று கொலோ கூப்பும் நாளே

பொருள் 

மாவினை = குதிரையினை

வாய் பிளந்து = வாயைப் பிளந்து

உகந்த = மகிழ்ந்த

மாலை = திருமாலை

வேலை = கடல் போன்ற

வண்ணணை  = வண்ணம் கொண்டவனை

என் கண்ணணை = என் கண்ணனை

அவன் = அவன்

குன்ற மேந்தி = மலையை தூக்கி

ஆவினை = பசுக் கூட்டங்களை

அன்று = அன்றொரு நாள்

 உயக் கொண்ட = காப்பாற்றிய

ஆயர் ஏற்றை = இடையர்களின் தலைவனை
 
அமரர்கள் தம்  தலைவனை = தேவர்களின் தலைவனை

அந்த தமிழ் இன்பப் பாவினை = தமிழின் இனிமையான பாடல்கள் போன்றவனை

அவ் வடமொழியைப் = வடமொழி போன்றவனை

பற்று அற்றார்கள்  = பற்று இல்லாதாவர்கள்

பயில் = நாளும் அறிந்து கொள்ளும்

அரங்கத்து = திருவரங்கத்து

அரவணையில் = பாம்பு படுக்கையில்

பள்ளி கொள்ளும் = கண் வளரும்

கோவினை = தலைவனை

நாவுற அழுந்தி = நாக்கு தழும்பு ஏறும்படி அழுந்தி

என்றன் கைகள் = என்னுடைய கைகள்

கொய் மலர் = மலர்களை கொய்து

 தூய் = தூவுவது

என்று கொலோ கூப்பும் நாளே = என்று நான் வணங்குவேனோ ?

திருப்பி திருப்பி சொல்லி நாக்கில் தழும்பு ஏற வேண்டும்.

தேவை இல்லாதவைகளை நாளும் எவ்வளவு பேசுகிறோம்.

நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறி என்பார் மாணிக்க வாசகர். கடவுள் இல்லை என்று சொல்லி சொல்லி  நாக்கில் தழும்பு ஏறிப் போய் இருக்குமாம்.

திரும்பச் திரும்பச் சொல்லுவதன் மூலம், நம்மை அறியாமலேயே நம் நாக்கு இறைவன் நாமத்தை  தானே சொல்லத் தொடங்கி விடும்  என்கிறார் சுந்தரர்.

நற்றவா உன்னை நான் மறக்கினும் என் நாக்கு மறக்காது, அது நமச்சிவாய என்றே சொல்லிக் கொண்டிருக்கும் என்கிறார். 

மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திரு பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன் 
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உன்னை  நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.


இறைவன் நாமத்தை சொல்லச் சொல்ல நமது வாய் அழகு அடையும் என்கிறார்  திருநாவுக்கரசு ஸ்வாமிகள்...

திருவாய் பொலியச்  சிவாயநம என்று நீறணிந்தேன் என்பார் ....

கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுனதருளால்
திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே.

இந்த பாடல் பாசுரம் பற்றி மேலும் சிந்திப்போம்....