Saturday, August 15, 2015

இராமாயணம் - ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ ? - பரதன் 3

இராமாயணம் - ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ ? - பரதன் 3 


நின்னும் நல்லன் என்று கோசலை , இராமனிடம், பரதனைப் பற்றிச் சொன்னதை முந்தைய ப்ளாகில் பார்த்தோம்.

கோசலை பரதனின் பெரியம்மா. அவள் அப்படி பாராட்டியது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை நாம் நினைக்கலாம்.

பரதனை முன் பின் பார்த்திராத குகன் சொல்லுகிறான் "தாயின் வரத்தினால் தந்தை வழங்கிய உலகை "தீ வினை" என்று விலக்கி , நீ இங்கு வந்த தன்மை நோக்கினால், ஆயிரம் இராமர்களை சேர்த்தாலும் உன்னோடு ஒப்பிட முடியாது "

பாடல்

‘தாய் உரைகொண்டு தாதை உதவிய
     தரணிதன்னை,
‘‘தீவினை” என்ன நீத்து,
     சிந்தனை முகத்தில் தேக்கி,
போயினை என்றபோழ்து, புகழினோய்!
     தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ,
     தெரியன் அம்மா!

பொருள்

‘தாய் உரைகொண்டு = தாயின் வரத்தினால்

தாதை உதவிய = தந்தை கொடுத்த

தரணி தன்னை,= இந்த உலகை

‘‘தீவினை” என்ன நீத்து = தீவினை என்று விலக்கி

சிந்தனை முகத்தில் தேக்கி = யோசனையை முகத்தில் தேக்கி

போயினை என்றபோழ்து, = சென்றாய் என்ற பொழுது

புகழினோய்! = புகழ் உடையவனே

தன்மை கண்டால், = உன் தன்மையைப் பார்த்தால்

ஆயிரம் இராமர்= ஆயிரம்  இராமர்கள்

நின் கேழ் ஆவரோ, = உனக்கு உவையாவரொ ?

 தெரியன் அம்மா! = எனக்குத் தெரியவில்லை

இதில் குகன் என்ன சிறப்பை கண்டு விட்டான் ? தனக்கு உரிமை இல்லாத ஒன்றை உரியவனிடம் ஒப்படைப்பது என்ன அவ்வளவு பெரிய நல்ல குணமா ?

அது பெரிய குணம், ஆயிரம் இராமர்கள் அந்த குணத்திற்கு ஈடாக மாட்டார்கள் என்று   சொன்னால், அது ஏதோ இராமனை குறைத்து மதிப்பீடு செய்வது போல உள்ளது அல்லவா ?

பரதனில் அப்படி என்ன சிறப்பு ?

பார்ப்போம்


Friday, August 14, 2015

இராமாயணம் - நின்னும் நல்லன் - பரதன் 2

இராமாயணம் - நின்னும் நல்லன் - பரதன் 2


கைகேயின் சூழ்ச்சியால், பரதனுக்கு பட்டம் என்றும் இராமனுக்கு கானகம் என்றும் தசரதன் வரம் தந்து விடுகிறான்.

இதை, தாய் கோசலையிடம் வந்து இராமன் சொல்கிறான்.

அதைக் கேட்ட கோசலை கூறுகிறாள்

"மூத்தவன் இருக்க இளையவனுக்கு முடி சூட்டுவது என்பது ஒரு சரியான முறை இல்லை. அதை விட்டு விட்டுப் பார்த்தால், பரதன்  நிறைந்த குண நலன்கள் உடையவன்.  இராமா, உன்னை விட நல்லவன் "


அப்படி கூறியவள் யார் ?

நான்கு பிள்ளைகளிடமும் குற்றம் இல்லாத அன்பை செலுத்தும் கோசலை.

அப்படி சொன்னதின் மூலம், அவர்களுக்குள் உள்ள வேற்றுமையை மாற்றினாள் என்கிறான் கம்பன்.

பாடல்

‘முறைமை அன்று என்பது ஒன்று
     உண்டு; மும்மையின்
நிறை குணத்தவன்;
     நின்னினும் நல்லனால்;
குறைவு இலன்’ எனக்
     கூறினள் - நால்வர்க்கும்
மறு இல் அன்பினில்,
     வேற்றுமை மாற்றினாள்.

பொருள்

‘முறைமை அன்று = சரியான அரச தர்மம் இல்லை

என்பது = என்ற

ஒன்று உண்டு = ஒரு சிக்கல் இருக்கிறது

மும்மையின் நிறை குணத்தவன் = மூன்று மடங்கு உயர்ந்த குணம் உள்ளவன்; அல்லது மூன்று பேரை விட உயர்ந்த குணம் உள்ளவன்

நின்னினும் நல்லனால் = உன்னை விட நல்லவன்

குறைவு இலன்’ = ஒரு குறையும் இல்லாதவன்

எனக்      கூறினள் = என்று கூறினாள்

நால்வர்க்கும் =நான்கு பிள்ளைகளிடமும்

மறு இல் அன்பினில்  = குற்றம் இல்லாத அன்பினால்

வேற்றுமை மாற்றினாள். = அவர்களுக்குள் இருந்த வேற்றுமையை மாற்றினாள்

இதில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன.

நம் வீட்டில் சில சமயம், நம் பிள்ளைகள் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று சோர்ந்து வரலாம், விளையாட்டில் அல்லது வேறு ஏதாவது போட்டியில் பங்கெடுத்து பரிசு எதுவும் பெறாமல் வரலாம், நமக்கு மிகுந்த எதிர்பார்ப்பு  இருந்திருக்கும். அவர்களும் ஆசையோடு இருந்திருப்பார்கள். ஆனால், நினைத்தது நடக்கவில்லை.

மதிப்பெண் cut off வை விட குறைவாக வந்திருக்கும்.

பொதுவாக என்ன நடக்கும் "நான் அப்பவே சொன்னேன், எங்க ஒழுங்கா படிக்கிற? எந்நேரமும் tv , இல்லேனா cell phone" என்று பிள்ளைகளை குறை கூறுவோம்.

"நீ ஒண்ணுக்கும் லாயக்கு இல்லை, மாடு மேய்க்கத் தான் லாயக்கு " என்று திட்டுவதும் சில வீடுகளில் நிகழ்வது உண்டு.

நினைத்தது நடக்காமல் பிள்ளை சோர்ந்து வரும்போது, ஒரு தாய் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கோசலை பாடம் நடத்துகிறாள் ....

இந்த பாடல் நிகழ்ந்த சூழ்நிலையை நினைத்துப் பாருங்கள்.

சகரவர்தியாக முடி சூட்டப் போனவன், அது இல்லை என்று வந்து நிற்கிறான். அது மட்டும் அல்ல, 14 ஆண்டுகள் கானகம் வேறு போக வேண்டும் என்று கட்டளை வேறு.

கோசலை என்ன சொல்லுகிறாள்...

"பரவாயில்லடா....அரச முறை என்று ஒன்று உள்ளது, அதைத் தவிர்த்துப் பார்த்தாள் பரதன் உன்னை விட நல்லவன் அரசை அவனுக்கே தரலாம் " என்று இராமனை தேறுதல் செய்கிறாள்.

பிள்ளைகள் தோல்வி அடைந்து வந்தால் திட்டாதீர்கள்.அவர்களுக்கு தேறுதல் சொல்லுங்கள். வாழ்கை மிக நீண்டது. ஒரு தோல்வி வாழ்வை தீர்மானித்து விடாது.

அடுத்தது,

பரதன் இதுவரை சாதித்தது என்ன  ? ஒன்றும் இல்லை.

இருந்தும் கோசலை சொல்கிறாள் "நின்னினும் நல்லன்" என்று. பரதன்  இராமனை விட   உயர்ந்து நிற்கிறான்.

எப்படி அவன் உயர்ந்தான் ?

பார்ப்போம்...



Wednesday, August 12, 2015

இராமாயணம் - பரதன் பிறந்த போது

இராமாயணம் - பரதன் பிறந்த போது 


இராமன், இலக்குவன் , பரதன் மற்றும் சத்ருகன் பிறந்த போது அவர்களுக்கு பெயர் வைத்தவன் வசிட்டன்.

மற்றவர்களுக்கு அவன் பெயர்  வைத்ததை விட்டு விடுவோம்.

பரதனுக்கு அவன் பெயர்  இட்டதை பாப்போம்.

பாடல்

கரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரத மறைப் பொருள் மெய்ந்நெறி கண்ட
வரதன். உதித்திடு மற்றைய ஒளியை.
‘பரதன்’ எனப் பெயர் பன்னினன் அன்றே.

பொருள் 

கரதலம் உற்று = கரம் என்ற தலத்தில் (கையில்) உள்ள

ஒளிர் நெல்லி கடுப்ப = நெல்லிக் கனியைப் போல

விரத = விரதம் பூண்டு

மறைப் பொருள் = வேதங்களின் பொருள்

மெய்ந்நெறி = உண்மையான வழியை

கண்ட = கண்ட

வரதன் = வரதன் (வசிட்டன்)

உதித்திடு மற்றைய ஒளியை. = தோன்றிய இன்னொரு ஒளியை. முதல் ஒளி இராமன். இன்னொரு ஒளி பரதன்.

‘பரதன்’ எனப் பெயர் பன்னினன் அன்றே = பரதன் என்று பெயர் தந்தான்.

இது பரதன் பிறந்த போது உள்ள நிலை. எல்லா குழந்தைகளுக்கும் பெயர் தந்தாயிற்று.

இனி, பரதன் எப்படி உயர்கிறான் என்று பார்ப்போம்.


Monday, August 10, 2015

இராமாயணம் - வாழ்வில் முன்னேற

இராமாயணம் - வாழ்வில் முன்னேற 


வாழ்வில் முன்னேற வேண்டும் என்று விரும்பாதார் யார் ? எல்லோரும் முன்னேறுவதையே விரும்புவார்கள்.

ஆனால், எப்படி முன்னேறுவது ?

கடின உழைப்பு, இறைவன் அருள், ஆன்றோர் ஆசீர்வாதம், பெற்றவர் மற்றும் உற்றாரின் அரவணைப்பு, நண்பர்களின் அரவணைப்பு அப்புறம் கொஞ்சம் அதிர்ஷ்டம் அல்லது விதி  இதெல்லாம் வேண்டும் அல்லவா வாழ்வில் உயர ?

இல்லை. இது எதுவும் வேண்டாம் என்கிறார் வள்ளுவர்.

வாழ்வில் உயர இவை அல்ல வேண்டுவது.

என்னது ? உழைப்பும், நேர்மையும், கடவுள் கிருபையும், பெரியவர்களின் ஆசியும் இல்லாமல் வாழ்வில் முன்னேற முடியுமா ?

இதை எல்லாம் விட வேறு ஒன்று நாம் வாழ்வில் உயர வழி செய்யுமா ? அது என்ன ?

வெள்ளத்து அனையது மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு

என்கிறார் வள்ளுவர்.

நீர் நிலையின் மேல் தாமரை மிதக்கும். அந்த தாமரை மலரை கொஞ்சம் உயரச் செய்ய என்ன செய்ய வேண்டும் ?

கொஞ்சம் பிடித்து இழுக்கலாமா (உழைப்பு )
பூஜை செய்யலாமா (கடவுள் அருள் )

என்ன செய்தாலும் உயராது. அந்த நீர் நிலையில் உள்ள நீரின் மட்டம் உயர்ந்தால் தாமரை தானே உயரும்.

அது போல, நாம் வாழ்வில் உயர வேண்டும் என்றால், நம் மனம் உயர வேண்டும்.

மனம் உயராமல், வாழ்வில் உயரவே முடியாது. மனம் உயர்ந்தால் வாழ்வில் உயரலாம்.

அது எல்லாம் கேக்க நல்லா இருக்கு. அப்படி மனம் உயர்ந்ததால் வாழ்வில் உயர்ந்தவர்கள்  யாராவது இருக்கிறார்களா ? ஒரு உதாரணம் காட்ட முடியுமா ?

காட்ட முடியும்.

இராமாயணத்தில், இராமன் ரொம்ப கஷ்டப் பட்டான், சண்டை போட்டான், தந்தை பேச்சை கேட்டு நல்ல பிள்ளையாக கானகம் போனான், அரக்கர்களை அழித்தான்.

அவனுக்கு எப்போதும் துணையாக இருந்தான் இலக்குவன். இரவு பகல் பாராமல்   பணிவிடை செய்தான்.

அந்த இராமனை விட, அவ்வளவு தொண்டு செய்த இலக்குவனை விட ஒன்றுமே செய்யாத பரதன் உயர்ந்தான்.

எப்படி ?

பரதன் ஏதேனும் சண்டை போட்டானா ? இல்லை.

பெற்றோரை மதித்தானா ? இல்லை. பெற்ற தாயை பேய் என்று இகழ்ந்தான்.

இராமனுக்கு அல்லும் பகலும் பணிவிடை செய்தானா ? இல்லை.

பின் எப்படி அவன் உயர்ந்தான் ?

அவன் உயர்ந்தான் என்பதற்கு என்ன சான்று இருக்கிறது ?

பரதனைப் பற்றி நாம் விரிவாகப் பார்ப்போம்.

பரதன் பிறந்தவுடன் அவனுக்கு பெயர் இடுகிறார் வசிட்டர் ....



கரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரத மறைப் பொருள் மெய்ந்நெறி கண்ட
வரதன். உதித்திடு மற்றைய ஒளியை.
‘பரதன்’ எனப் பெயர் பன்னினன் அன்றே.

பொருள் - அடுத்த ப்ளாகில்


இராமாயணம் - உன் பிள்ளைக்கு வரும் நல்லததைத் தடுக்காதே

இராமாயணம் - உன் பிள்ளைக்கு வரும் நல்லததைத் தடுக்காதே 


என் வேள்வியைக் காக்க உன் மகன் இராமனை எனக்கு துணையாக அனுப்பு என்று விசுவாமித்திரன் தசரதனிடம் கேட்டான்.

"அவன் சின்னப் பிள்ளை, போர் தந்திரங்கள் அறியாதவன், நானே வருகிறேன்" என்றான் தசரதன்.

நம் வாழ்விலும் இந்த மாதிரி சந்தர்பங்கள் வரும். பிள்ளையை வெளி நாடு அனுப்பி படிக்க வைக்க வேண்டும், பெண்ணை அயல் நாட்டில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற சிக்கல்கள் வரும் போது நாம் பயப்படுவோம். என்னத்துக்கு risk என்று உள்ளூரிலேயே ஒரு கல்லூரியிலேயோ, அல்லது ஒரு வரனையோ பார்த்து முடித்து விடுவோம்.

மற்றவர்களிடம் யோசனை கேட்கலாம். ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்வார்கள். அதில் எவன் நல்லவன், எவன் , நாம் சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கட்டும் என்று நினைப்பவன் என்று தெரியாது.

எனவே தான்,  அந்தக் காலத்தில் மன்னர்கள் கற்ற துறவிகளை எப்போதும் அருகில் வைத்து இருந்தார்கள். மன்னர்கள் கேட்காத போதும் அவர்கள் நல்லதையே எடுத்துச் சொன்னார்கள்.

விச்வாமித்ரரை பார்த்து வசிட்டன் சொன்னான் "நீ இதை பொறுத்துக் கொள்" . தசரதன் பிள்ளைப் பாசத்தில் ஏதோ சொல்கிறான். நீ இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதே. கொஞ்சம் பொறுமையாக இரு என்று சொல்லி விட்டு.

தசரதனைப் பார்த்து , "உன் மகனுக்கு அளவிட முடியாத நன்மைகள் வரப் போகிறது. அதை ஏன் நீ தடுக்கிறாய் " என்று கூறினான்.


பாடல்


கறுத்த மா முனி கருத்தை உன்னி ‘நீ
பொறுத்தி’ என்று அவன் புகன்று ‘நின் மகற்கு
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்
மறுத்தியோ? ‘எனா வசிட்டன் கூறினான்.

பொருள்

கறுத்த மா முனி = கோபத்தால் முகம் கறுத்த விஸ்வாமித்திரனின்

கருத்தை உன்னி  = கருத்தை எண்ணி

‘நீ பொறுத்தி’ என்று அவன் புகன்று = நீ இதை பொறுத்துக் கொள்வாயாக என்று கூறி

‘நின் மகற்கு = உன் மகனுக்கு

உறுத்தல் ஆகலா = எல்லை அற்ற

உறுதி = நன்மைகள்

எய்தும் நாள் = அடையும் நாள்

மறுத்தியோ?  = மறுப்பாயா ?

‘எனா வசிட்டன் கூறினான். = என்று வசிட்டன் கூறினான்

வசிட்டன் போல படித்த, உங்கள் நலனில் அக்கறை உள்ள எத்தனை பேர் உங்களுக்கு  அறிவுரை சொல்லும் இடத்தில் இருக்கிறார்கள் ?

அப்படி நீங்கள் எத்தனை பேருக்கு இருக்கிறீர்கள் ?


படித்த நல்லவர்களை எப்போதும் உடன் வைத்து இருங்கள். அதற்கு இணையான செல்வம்  எதுவும் கிடையாது. 

பின்னாளில் , இராமன் முடி சூட்டும் நாள் குறித்த பின், வசிட்டன் சில புத்திமதிகளை  இராமனுக்குச் சொல்வான். அதில் முதல் அறிவுரை "படித்த நல்லவர்களை  உடன் வைத்துக் கொள்" என்பதுதான். 

இன்று வரை இல்லாவிட்டாலும், இனியேனும் கண்டு பிடியுங்கள்.

அப்படி ஒருவராக நீங்களும் இருக்க முயற்சி செய்யுங்கள். 


Tuesday, August 4, 2015

கம்ப இராமாயணம் - இடையூருக்கு இடையூறு

கம்ப இராமாயணம் - இடையூருக்கு இடையூறு

நான் செய்யும் வேள்வியைக் காக்க இராமனை துணைக்கு அனுப்பு என்று விஸ்வாமித்திரன் தசரதனிடம் கேட்கிறான்.

இராமனை விட்டு பிரிய மனம் இல்லாமல் தசரதன் மிகுந்த துன்பப்பட்டு சொல்கிறான்

"முனிவரே, இராமன் சின்னப் பிள்ளை. அவனுக்குப் போர் பயிற்சி எல்லாம் கிடையாது. உங்களுக்கு என்ன நல்ல துணை வேண்டும் அவ்வளவு தானே ? நான் வருகிறேன். புறப்படுங்கள். உங்கள் வேள்விக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் யார் தடையாக வந்தாலும் நான் அவர்களுக்குத் தடையாக நின்று உங்கள் வேள்வியை காப்பேன் ...வாருங்கள் போவோம்"

பாடல்

தொடை ஊற்றில் தேன் துளிக்கும் நறும்
    தாரான் ஒரு வண்ணம் துயரம் நீங்கிப்
‘படையூற்றம் இலன்; சிறியன் இவன்; பெரியோய்!
    பணி இதுவேல், பனி நீர்க் கங்கை
புடை ஊற்றும் சடையானும் நான்முகனும்
    புரந்தரனும் புகுந்து செய்யும்
இடையூற்றுக்கு இடையூறு ஆ, யான் காப்பென்
    பெரு வேள்விக்கு எழுக ‘என்றான்.


பொருள் 

தொடை = தேன் அடை அல்லது தேன் கூடு

ஊற்றில் = ஊற்றுப் போல்

தேன் துளிக்கும் = தேன் சிதறும்

நறும் = நறுமணம் மிக்க

தாரான் = மாலை அணிந்தவன் (தார் என்றால் மாலை )

ஒரு வண்ணம் துயரம் நீங்கிப் = ஒரு வழியாக துயர் நீங்கி

‘படையூற்றம் இலன்;= படை நடத்தும் அனுபவம் இல்லாதவன்

சிறியன் இவன் = சின்னப் பையன்

 பெரியோய்! = பெரியவரே (விச்வாமித்ரரே)

பணி இதுவேல், = வேலை இதுதான் என்றால் (யாகத்தை காப்பது தான் பணி என்றால்)

பனி நீர்க் கங்கை = சில்லென்று நீரை கொண்ட கங்கை

புடை ஊற்றும் சடையானும்= நான்கு புறமும் தெறிக்கும் சடை கொண்ட சிவனும்

நான்முகனும் = பிரமாவும்

புரந்தரனும் = உலகைக் காக்கும் திருமாலும்

புகுந்து செய்யும் = இடையில் புகுந்து  செய்யும்

இடையூற்றுக்கு இடையூறு ஆ, = இடையூறுகளுக்கு இடையூறாக

யான் காப்பென் = நான் காவல் செய்வேன்

பெரு வேள்விக்கு எழுக ‘என்றான். = பெரிய வேள்வி செய்ய புறப்படுங்கள் என்றான்.

இது பாட்டும், அதன் அர்த்தமும்.

அதில் பொதிந்துள்ள செய்தி என்ன ?

நம் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல கல்லூரியில் இடம் கிடைத்து இருக்கும். ஆனால், அந்த கல்லூரி நாம் இருக்கும் இடத்தை விட்டு ரொம்ப தள்ளி இருக்கும் . ஏன், வெளி நாட்டிலே கூட இருக்கலாம்.

"இந்த சின்ன பிள்ளை அங்க போய் எப்படி சமாளிக்குமோ, பேசாம அக்கம் பக்கத்தில்  ஏதாவது நல்ல கல்லூரியில் சேர்ப்போம் " என்று நாம் நினைக்கலாம். அப்படி நினைத்து, பிள்ளைகளின் எதிர் காலத்தை நாம் பாழடித்து விடக் கூடாது.

அதே போல, பெண்ணுக்கு ஒரு நல்ல தரம் வந்திருக்கும். மாப்பிள்ளை அயல்நாட்டில் வேலை  பார்ப்பவராய் இருப்பார். எதுக்கு அவ்வளவு தூரத்தில் போய்  பெண்ணைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து உள்ளூரில் ஏதோ ஒரு வேலையில் உள்ள பையனுக்கு கட்டி கொடுத்து அந்த பெண்ணின் வாழ்வின்  முன்னேற்றத்திற்கு நாமே தடைக் கல்லாக இருந்து விடக் கூடாது.

Hostel இல் போய் என் பெண்ணோ பிள்ளையோ எப்படி இருப்பார்கள் ? அவர்களுக்கு பழக்கமே இல்லையே என்று நாம் பாசத்தில் தவிப்போம். "அப்படி ஒண்ணும் என் பிள்ளை கஷ்டப் பட வேண்டாம், ...இதோ உள்ளூரிலேயே நல்ல  கல்லூரி இருக்கிறது " என்று ஏதோ ஒரு கல்லூரியில் சேர்த்து  விடும் பெற்றோர்கள் நிறைய பேர் உண்டு.


பாசம் கண்ணை மறைக்கக் கூடாது.

அப்பேற்பட்ட இராமனை பற்றி தசரதன் என்ன நினைக்கிறான் ?

சின்னப் பையன், படை நடத்தும் அனுபவம் இல்லாதவன்....அவனை அனுப்பக் கூடாது என்று நினைக்கிறான்.

அப்படி அவன் அனுப்பாமல் இருந்திருந்தால், என்ன ஆகி இருக்கும் ? யோசித்துப் பாருங்கள்.

நாம் நம் பிள்ளைகளை குறைவாக மதிப்பிடுகிறோம். அவர்களின் திறமை, சாமர்த்தியம்  எல்லாவற்றையும் குறைத்து மதிப்பிட்டு நாமே அவர்களின் வளர்ச்சிக்கு  தடையாக இருந்து விடுகிறோம்.

அப்படி இருக்கக் கூடாது என்று சொல்கிறது இந்தப் பாடல்.

பிள்ளைகளை வேலை செய்ய விட வேண்டும். பாவம், அவனுக்கு என்ன தெரியும், சின்ன பிள்ளை என்று பொத்தி பொத்தி வளர்க்கக் கூடாது. தசரதன் சொல்கிறான், "அவன் விட்டு விடுங்கள்...நான் வருகிறேன் " என்று.

நாம் செய்வது இல்லையா.

கொஞ்சம் எச்சரிக்கை உணர்வை தளர்த்தி, கொஞ்சம் பாசத்தை குறைத்து, குழந்தைகளை, சவால்களை எதிர் கொள்ள அனுப்புங்கள். நீங்கள் நினைப்பதை விட  உங்கள் குழந்தைகள் அதிகமாகவே செய்வார்கள்.

சரி, இப்படி ஒரு குழப்பம் வரும்போது என்ன செய்யவேண்டும்.

அயல் நாட்டுக்கு பெண்ணையோ பிள்ளையையோ அனுப்ப முடியாமல் தவிக்கும் போது என்ன செய்ய வேண்டும் ?


தசரதன் என்ன செய்தான் ? 

அதை அடுத்த ப்ளாகில் பார்ப்போம். 


Monday, August 3, 2015

கம்ப இராமாயணம் - மகனின் பிரிவு

கம்ப இராமாயணம் - மகனின் பிரிவு 


பிரிவு என்றுமே சோகத்தைத்தான் தருகிறது.

பிரிவு வரும் என்று தெரிந்தாலும், அது வரும்போது மனதை ஏனோ பிசையத்தான் செய்கிறது.

இராமனை தருவாய் என்று தசரதனிடம் கேட்கிறான் விஸ்வாமித்திரன்.

துடித்துப் போகிறான் தசரதன். அவன் வலியை கம்பன் பாட்டில் வடிக்கிறான்.

மார்பில் வேல் பாய்ந்து புண்ணாகி இருக்கிறது. அந்த புண்ணில் தீயை வைத்து சுட்டால் எப்படி இருக்குமோ அப்படி துன்பப் பட்டான் தசரதன்.

விச்வாமித்ரனின் அந்த சொல்லைக் கேட்டு தசரதனின் உயிர் அவன் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் போவதும் வருவதுமாக இருக்கிறது. உயிர் ஊசலாடியது.

கண் இல்லாதவன் , கண்ணைப் பெற்று பின் அதை இழந்தால் எப்படி இருக்குமோ அது போல பிள்ளை இல்லாமல் பின் இராமனைப் பெற்று இப்போது அவனை இழப்பது அப்படி இருந்தது தசரதனுக்கு.


பாடல்

எண் இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல்
   மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தா
   லெனச் செவியில் புகுதலோடும்.
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த.
   ஆர் உயிர் நின்று ஊசலாட.
‘கண் இலான் பெற்று இழந்தான்’ என உழந்தான்
   கடுந் துயரம் - கால வேலான்.


பொருள்

எண் இலா  = எண்ணிக்கை இல்லாத

அருந் தவத்தோன் = அரிய தவங்களைச் செய்த (விஸ்வாமித்திரன்)

இயம்பிய சொல் = "இராமனைத் தா"என்று சொல்லிய சொல்

மருமத்தின் = மார்பில்

எறி வேல் பாய்ந்த புண்ணில் ஆம் = எறிந்த வேல் பாய்ந்த புண்ணில்

பெரும் புழையில் = பெரிய துவாரத்தில்

கனல் நுழைந்தாலெனச் = தீயை வைத்து சுட்டதைப் போல


செவியில் புகுதலோடும். = காதில் நுழைந்தது. அது மட்டும் அல்ல

உள் நிலாவிய துயரம் = உள்ளத்தில் இருந்த துயரம்

பிடித்து உந்த.= பிடித்துத் தள்ள

ஆர் உயிர் நின்று ஊசலாட = அருமையான உயிர் நின்று ஊசலாட
.
‘கண் இலான் பெற்று இழந்தான்’ என உழந்தான் = கண் இல்லாதவன் , அதைப் பெற்று பின் இழந்தவனைப் போல துன்பப்பட்டான்

கடுந் துயரம் = கடுமையான துயரத்தில்

கால வேலான். = எதிரிகளுக்கு காலனைப் போல உள்ள அவன்.

மகனை , முனிவரோடு அனுப்ப இப்படி கிடந்து சங்கடப் படுகிறானே இவன் ஒரு  கோழையோ என்று தோன்றலாம். இல்லை, அவன் மிகப் பெரிய வீரன் என்று  கட்டுகிறான் கம்பன். எதிரிகளுக்கு காலனைப் போன்றவன் அவன்.

என்றோ ஒரு நாள் இராமன் தன்னை விட்டுப் போகப் போகிறான் என்று தசரந்தனுகுத் தெரியும் . சிரவணன் என்ற அந்தணச் சிறுவனை அறியாமல் கொன்று, அதன் மூலம் சிரவணனின் பெற்றோர் தசரதனுக்கு ஒரு சாபம் இட்டார்கள்   " நாங்கள் எப்படி புத்திர சோகத்தில் இறக்கிறோமோ , நீயும் அப்படியே இறப்பாய் " என்று சாபம் இட்டு விடுகிறார்கள்.

அந்த சோகம் தசரதனின் உள்ளத்தில் நின்று உலாவியது.