Wednesday, September 30, 2015

இராமாயணம் - இராமன் அறம் பிறழ்ந்தவனா ?

இராமாயணம்  - இராமன் அறம் பிறழ்ந்தவனா ? 



விஸ்வாமித்திரன், பலப் பல காரணங்களைச் சொல்லி , தாடகையை "கொல் " என்றான் இராமனிடம்.

என்னதான் கொடுமைக் காரியாக இருந்தாலும் அவள் ஒரு பெண். பெண்ணைக் கொல்வது என்பது வில் அறத்திற்கு ஏற்றது அன்று என்று இராமன் நினைக்கிறான்.

பெண்ணைக் கொல்வது சரியல்ல என்று இராமனுக்குத் தெரியும். அப்படித்தான் வசிட்டர் அவனுக்குச் சொல்லித் தந்திருக்கிறார்.

ஆனால், விச்வாமிதரனோ பெண்ணைக் கொல் என்கிறார்.

செய்தாலும் பிழை. செய்யாவிட்டாலும் பிழை. எப்படியும் அறத்தினின்று பிறழத்தான் போகிறான் இராமன்.

பாடல்

அண்ணல் முனிவற்கு அது
   கருத்துஎனினும். ‘ஆவி
உண்’ என. வடிக் கணை
   தொடுக்கிலன்; உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில்
   தொடங்கியுளளேனும்.
‘பெண்’ என மனத்திடை
   பெருந்தகை நினைந்தான்.

பொருள்

அண்ணல் முனிவற்கு = முனிவனான விச்வாமித்திரனுக்கு

அது கருத்துஎனினும் = தாடைகையை கொல்வது தான் கருத்து என்றாலும்

‘ஆவி உண்’  = அவள் உயிரை உண்டு வா

என.  = என்று

வடிக் கணை = வடிவான அம்பை

தொடுக்கிலன்; = அவள் மேல் விடவில்லை

உயிர்க்கே = உயிருக்கு

துண்ணெனும் = துன்பம் தரும், நடுக்கம் தரும்

வினைத்தொழில் = தொழிலை

தொடங்கியுளளேனும். = அவள் தொடங்கி இருந்தாலும்

‘பெண்’ என = அவள் ஒரு பெண் என்று

மனத்திடை பெருந்தகை நினைந்தான்.= மனதில் பெருந்தகையான இராமன் நினைத்தான்

பள்ளிக் கூடத்தில் பாடம் படித்து விட்டு வெளி வருகிறோம்.

படித்ததை எல்லாம் அப்படியே நடை முறையில் செயல் படுத்த முடியாது என்பதைக் காட்டும் இடங்கள் இவை.

இராமன் செயல் படமால் பேசாமல் நிற்கிறான்.

அடுத்து என்ன நடந்தது என்று பார்பதற்கு முன்னால் , தாடகை போன்ற ஒரு அரக்கியிடம் கூட  கருணையோடு நடந்து கொண்ட இராமன் சீதையை துன்பப் படுத்தியது  ஏன் என்ற கேள்வியும் சிலர் மனதில் எழலாம்.

சீதையை தீ குளிக்க சொன்னது. அவளை காட்டில் கொண்டு போய் விட்டது எல்லாம்  சரியா போன்ற கேள்விகளும் மனதில் எழலாம்.

அவற்றையும் சிந்திப்போம்.



Sunday, September 27, 2015

திருக்கடைகாப்பு - இறைவன் எங்கு இருக்கிறான் ?

திருக்கடைகாப்பு - இறைவன் எங்கு இருக்கிறான் ?


வயிற்று வலி, பல் வலி என்று உடலுக்கு ஏதாவது ஒரு வலி வந்து விட்டால்,  "கடவுளே, இந்த வலி தாங்க முடியவில்லையே, இந்த வலியில் இருந்து என்னை காப்பாற்று, உன் கோவிலுக்கு வருகிறேன், மொட்டை போடுகிறேன், அபிஷேகம் பண்ணுகிறேன்..."என்று எல்லா தெய்வத்தையும் வேண்டுவோம்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கூட தாங்க முடியாத வலி வரும்போது இறைவனை நினைக்கிறான்.

உடல் வலி என்று இல்லை, எந்த நோவு வந்தாலும் ...பணக் கஷ்டம், நெருங்கிய உறவுகளுக்கு உடல் நிலை சரி இல்லை, காதலில் தோல்வி, பரிட்சையில் தோல்வி என்று எத்தனையோ நோவுகள் வருகின்றன.

அத்தனை நோவிலும் மனிதன் கடவுளை இரகசியமாகவேனும் நினைக்கிறான்.

ஞானசம்பந்தரிடம் கடவுள் எங்கு இருக்கிறான் என்று கேட்ட போது , வலி உள்ளவன் வாயில் கடவுள் இருக்கிறான் என்றார்.

பெருமாளே என்னை காப்பாற்று...

முருகா என் பிள்ளையை காப்பாற்று...

பிள்ளையாரப்பா என் கணவனை காப்பாற்று ...

என்று அவரவர் , தங்களுக்கு பிடித்த தெய்வத்தின் பெயரை சொல்லிச் வேண்டுகிறார்கள்.

சத்தியமாக அவர்கள் இறைவனை நம்புகிறார்கள்...எப்போதும் இல்லாவிட்டாலும் அந்த நோவு உள்ள பொழுதிலேனும் நம்புகிறார்கள்.

அவர்கள் வாயில் இறைவன் கண்டிப்பாக இருக்கிறான் என்றார் ஞான சம்பந்தர்.

பாடல்


நுண்ணியான் மிகப்பெரியான்
நோவுளார் வாயுளான்
தண்ணியான் வெய்யான்அந்
தலைமேலான் மனத்துளான்
திண்ணியான் செங்காட்டங்
குடியான்செஞ் சடைமதியக்
கண்ணியான் கண்ணுதலான்
கணபதீச் சரத்தானே.


பொருள்

நுண்ணியான் = மிக மிக நுட்பமானவன்

மிகப்பெரியான் = மிக மிக பெரியவன்

நோவுளார் வாயுளான் = அப்பேற்பட்ட இறைவன், வலி உள்ளவர்கள் வாயில் இருப்பவன்


தண்ணியான் = குளிர்ச்சியானவன்

வெய்யான் = வேப்பமானவன்

அந் தலைமேலான் = தலைக்கு மேலே உள்ளவன்

மனத்துளான் = மனதுக்கு உள்ளேயும் உள்ளவன்

திண்ணியான் = உறுதியானவன்

செங்காட்டங் குடியான் = செங்காட்டங்குடி என்ற ஊரில் உள்ளவன்

செஞ் சடை = சிறந்த சடை

மதியக் கண்ணியான் = நிலவை ஆபரணமாக  தலையில் அணிந்தவன்

கண்ணுதலான் = நெற்றியில் கண் உள்ளவன்  (நுதல் = நெற்றி)

கணபதீச் சரத்தானே. = கணபதிச்சீரம் என்ற ஊரில் உள்ளவனே

என்கிறார்.

அது என்ன தலைக்கு மேல் உள்ளவன், மனதுக்கு உள்ளே உள்ளவன் ?



இறைவன் இரண்டு இடத்தில் இருக்கிறான் என்று மணிவாசகர் சொல்கிறார்.

தலைக்கு மேலே சில அங்குல உயரத்தில். இதயத்தின் உள்ளே.


கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க

நெஞ்சுக்கு நேரே இரண்டு கையையும் சேர்த்து கூப்பி வணங்குவது ஒரு முறை. 

தலைக்கு மேலே இரண்டு கைகளையும் உயர்த்தி ஒன்றாகச் சேர்த்து வணங்குவது இன்னொரு  முறை.

தலைக்கு மேலே கையை உயர்த்தி வணங்குபவர்களை உயரச் செய்வான் அவன் என்கிறார்  மணிவாசகப் பெருந்தகை. 

செய்து பாருங்கள். 

நெஞ்சுக்கு நேரே கை கூப்புவதற்கும், தலைக்கு மேலே கை கூப்புவதற்கும் வித்தியாசம்  தெரிகிறதா என்று செய்து பாருங்கள். 

ஞான சம்பந்தரும், மாணிக்க வாசகரும் சொல்லுகிறார்கள். 


Saturday, September 26, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - நெஞ்சே உனக்கு நன்றி

இராமானுஜர் நூற்றந்தாதி - நெஞ்சே உனக்கு நன்றி 


நம் மனம் நம் கட்டுக்குள் இருப்பது இல்லை. ஒரு நிமிடம் அமைதியாக இரு என்றால் இருக்காது. குரங்கு போல அங்கும் இங்கும் தாவிக் கொண்டே இருக்கும்.

மனதை கட்டுப் படுத்துவது என்பது சாதாரண வேலை இல்லை.

மனம் இருப்பதால்தானே மனிதன் !

பெரிய பெரிய மகான்கள் எல்லாம் ரொம்ப பிரயத்தனப் பட்டிருக்கிறார்கள்.

மனம் , அது தன் பாட்டுக்கு  வேலை செய்கிறது. அதனால் தான்  நம்மாழ்வார் முதலிலேயே தன் மனதுக்கு சொல்லி விடுகிறார்...அவனை தொழுது எழு என்  மனமே என்று

உடனே மனம் கேட்கும்,  எதற்கு அவனை நான்  தொழ வேண்டும் என்று ? அவன் என்ன அப்படி என்ன பெரிய ஆளா என்று ?

மனதுக்கு சமாதனம் சொல்கிறார்....அவன் யார் தெரியுமா ...

அதற்கு மேல் வேறு இல்லை என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்த நலன்களை  கொண்டவன், மயக்கம் இல்லாத மதி நலம் தருபவன் அவன், அமரர்களுக்கு அவன் அதிபதி, நம்  துன்பங்களை எல்லாம் போக்குபவன் அவன்..எனவே அவனை தொழுது ஏழு என் மனமே "

என்று மனதுக்கு சொல்கிறார்.

" உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன் 
மயர்வற மதிநலம் அருளினன் எவனவன் 
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவனவன் 
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே "


இங்கே, திருவரங்கதமுதனார், இராமானுஜரைப் பற்றி கூறும் போது ,

"என் மனமே, உன்னை நான் அடி பணிகின்றேன். இறை நம்பிக்கை இல்லாதவர்களின் தொடர்பை விடுத்து, இராமானுசரிடம் அன்பு கொள்ளவோர் அடிக் கீழ் என்னை சேர்த்ததற்கு  "

பாடல்

பேரியல்நெஞ்சே! அடிபணிந் தேனுன்னைப் பேய்ப்பிறவிப்
பூரிய ரோடுள்ள சுற்றம் புலத்திப் பொருவருஞ்சீர்
ஆரியன் செம்மை இராமா னுசமுனிக் கன்புசெய்யும்
சீரிய பேறுடை யார் அடிக் கீழென்னைச் சேர்த்ததற்கே.

பொருள்

பேரியல்நெஞ்சே!  = பெரிய மனமே

அடி பணிந்தேனுன்னைப் = உன்னை அடி பணிந்தேன்

பேய்ப் பிறவிப் = பேய் போன்ற பிறவி கொண்ட

பூரிய ரோடுள்ள = மக்களோடு உள்ள

சுற்றம் புலத்திப்  = உறவை நீக்கி

பொருவருஞ்சீர் = ஒப்பற்ற குணங்கள் உடைய

ஆரியன்= ஆரியன்

செம்மை = சிறந்த

இராமானுச = இராமானுசன்

முனிக் கன்பு செய்யும் = முனிவனுக்கு அன்பு செய்யும்

சீரிய பேறுடை யார் = சீரிய பேறு உடையவர்கள்

அடிக் கீழென்னைச் சேர்த்ததற்கே = அடிக்கு கீழ் என்னை சேர்ததற்கே.



Friday, September 25, 2015

இராமாயணம் - இராமன் அறம் பிரழ்ந்தவனா ? - பாகம் 2

இராமாயணம் - இராமன் அறம் பிரழ்ந்தவனா ? - பாகம் 2


கல்வி கற்கும் முறை.

நாம் எவ்வாறு கல்வி கற்கிறோம் ?

முதலில் நமக்கு சிலவற்றை சொல்லித் தருகிறார்கள். பின் சிறிது நாள் கழித்து, முதலில் சொன்னவை அவ்வளவு சரியில்லை, என்று திருத்திச் சொல்கிறார்கள்.

முதலில் சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்று சொல்லித் தருகிறார்கள். பின்னாளில், சூரியன் உதிப்பது இல்லை. அது ஒரே இடத்தில் தான் இருக்கிறது.  பூமிதான் சுற்றி வருகிறது என்கிறார்கள். இன்னும் கொஞ்சம் உயர் வகுப்புகளுக்குப் போனால், சூரியன் நிலையாக இல்லை, அதுவும் பால்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

ஏன், முதலிலேயே இதை சொல்லித் தரக்கூடாதா ?

பொருள்கள் மூன்று நிலையில் இருக்கின்றன. திட, திரவ, வாயு நிலையில் இருக்கின்றன என்கிறார்கள். பின், அதெல்லாம் சரி இல்லை....பொருள்கள் எல்லாம் அணுவால் ஆனது என்கிறார்கள். பின், அணு கூட இல்லை, அவை எலேக்டரோன் , ப்ரோடான், நியுட்ரான் என்ற துகள்களால் ஆனது என்கிறார்கள்.

ஏன் , மூன்றாம் வகுப்பிலேயே இதை சொல்லித் தரக் கூடாதா என்றால் சொல்லித் தரக் கூடாது. சொல்லித் தந்தால் புரியாது.

படிப்படியாகத் தான் சொல்லித் தர முடியும். படிக்க படிக்க , முன்னால் படித்தது மாறும்.

இராமன், முதலில் வசிஷ்டரிடம் பாடம் பயின்றான். அது ஒரு உயர் நிலை பள்ளி மாதிரி.

அடுத்து விச்வாமித்ரரிடம் பாடம் பயிலப் போகிறான். அது கல்லூரி படிப்பு மாதிரி.

வசிட்டர் சொல்லித் தந்த அறங்களை இன்னும் கூர்மை படுத்தி, அவற்றின் நெளிவு சுளிவுகளை விஸ்வாமித்ரர் சொல்லித் தருகிறார்.

பொய் சொல்லக் கூடாது என்பது ஒரு அறம் .

புரை தீர்ந்த நன்மை பயக்கும் என்றால் , பொய்யும் சொல்லலாம் என்பது இன்னொரு அறம்.

முரண்பட்ட அறங்களை எதிர் கொள்ள நேரும்போது என்ன செய்ய வேண்டும்.

எப்படியும் ஒரு அறத்தை விட்டு விலகித்தான் போக வேண்டி இருக்கும்.

அப்படி என்றால், எந்த அறத்தை விடுவது, எதை கைகொள்வது ?

இந்த சிக்கலுக்கு இராமன் வழி காட்டுகிறான்.

இந்த மாதிரி சிக்கல் வரும்போது, பற்றற்ற ஞானிகளின், உலக நன்மையில் நாட்டம் கொண்ட சான்றோர் சொல்வதை கேட்டு நடப்பது என்பது இராமன் காட்டிய வழி.

நாம் படித்த பாடங்கள் நமக்கு சரியான ஒரு முடிவை எடுக்க உதவி செய்யாவிட்டால், கற்றறிந்த சான்றோரிடம் கேட்பதுதானே முறை.

இராமன் அதைத்தான் செய்தான்.

முதலில் தாடகை வதத்தை எடுத்துக் கொள்வோம்.

இராமனுக்கு தெரிகிறது  தாடகை ஒரு பெண், அவளைக் கொல்லக் கூடாது என்று. அப்படித்தான் வசிட்டர் சொல்லித் தந்திருக்கிறார்.

ஆனால் இப்போது தாடகையை கொல்லவில்லை என்றால் அவள் இராமனையும், இலக்குவனையும், விச்வாமித்ரரையும் கொன்று விடுவாள்.

என்ன செய்வது ?




இராமனுசர் நூற்றந்தாதி - இயல்பான பக்தி

 இராமனுசர் நூற்றந்தாதி - இயல்பான பக்தி 



பக்தி செய்யும் போது மனதில் உள்ள ஆணவம், அகத்தை அழிய வேண்டும். சில பேர் பக்தி செய்வதிலேயே கூட கர்வம் கொள்வது உண்டு ...

"திருமலை பெருமாளுக்கு இத்தனை இலட்சம் நன்கொடை தந்தேன் "

"தினப்படி இரண்டு நேரம் பூஜை பண்ணுகிறேன், சுலோகம் எல்லாம் எனக்கு அத்துப்படி "

என்று பக்தி செய்வதில் ஒரு அகந்தை வந்து விடுகிறது. நான் அவனை விட அதிகம் பக்தி செய்கிறேன், நான் அவனை விட அதிகம் கோவில்களுக்குச் செய்கிறேன் என்று.

இந்த பக்தியால் ஏதாவது பலன் உண்டா ?

பக்தி என்பது இயல்பாக , மூச்சு விடுவது போல, கண் இமைப்பதுபோல இயல்பாக இருக்க வேண்டும்..

அந்த பக்தி எப்படி இயல்பாக வரும் ?

பக்தி இல்லாதவர்களை விட்டு நீங்கி இருக்க வேண்டும். பக்தர்கள் மத்தியில் இருந்தால் பக்தி என்பது ஒரு இயல்பான ஒன்றாக ஆகி விடும்.

பாடல்

கள்ளார் பொழில்தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமா னுசன்மிக்க சீலமல்லால்
உள்ளாதென் னெஞ்சு ஒன் றறியேன் எனக்குற்ற பேரியல்வே.


பொருள்



கள் ஆர் மொழில் தென் அரங்கன்

கள்ளார் = தேன் நிறைந்த

பொழில் = பூங்காவனங்கள் சூழ்ந்த

தென் னரங்கன் = திருவரங்கத்தில் பள்ளி கொண்ட அரங்கனின்

கமலப் பதங்கள் = தாமரை போன்ற பாதங்களை

நெஞ்சிற் = மனதில்

கொள்ளா = வைக்காத

மனிசரை = மனிதர்களை

நீங்கிக் = விட்டு நீங்கி

குறையல் பிரானடி = திருமங்கை மன்னனுடைய திருவடிகள்

கீழ் = அடியில்

விள்ளாத அன்பன் = என்றும் நீங்காத அன்பன்

இராமா னுசன் = இராமானுசன்

மிக்க சீலமல்லால் = உயர்ந்த குண நலன்களைத் தவிர

உள்ளாதென் னெஞ்சு = உள்ளாது என் நெஞ்சு = நினைக்காது என் நெஞ்சு

ஒன்றறியேன் = இதைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது

எனக்குற்ற பேரியல்வே.= எனக்கு அமைந்த இயல்பு அது

இயல்பான பக்தி. இயல்பான ஒரு மரியாதை.

Thursday, September 24, 2015

இராமாயணம் - இராமன் அறம் பிறழ்ந்தவனா ? - பாகம் 1

இராமாயணம் - இராமன் அறம் பிறழ்ந்தவனா ? - பாகம் 1



தாடகை என்ற பெண்ணை இராமன் கொன்றது சரியா ?

வாலியை மறைந்து நின்று கொன்றது சரியா ?


அன்று தொட்டு இன்று வரை இந்த சர்ச்சை நடந்து கொண்டேதான் இருக்கிறது.  எத்தனை முறை முடிவுகளை எட்டினாலும், ஒரு திருப்தி இல்லை.

இராமன் ஏன் அப்படிச் செய்தான் ? இராமன் அப்படி செய்யலாமா ? இது ஒரு தவறு இல்லையா ? இராமன் செய்தான் என்பதால் அது சரியாகி விடுமா ? இராமன் வழியில் செல்ல நினைப்பவர்களுக்கு இது ஒரு தடை இல்லையா ?

தாடகை, அவள் எவ்வளவுதான் பெரிய அரக்கியாக இருந்தாலும், அவள் பெண் தானே. ஒரு பெண்ணைக் கொல்வது அறமாகுமா ?

வாலி, எல்லா விதத்திலும் சுக்ரீவனை விட உயர்ந்தவன். பின் எதற்காக அவனைப் பகைத்து சுக்ரீவன் கூட நட்பு பாராட்டினான். சரி, அது வேண்டுமானால் எப்படியோ போகட்டும், மறைந்து நின்று தாக்கலாமா ?

இவை இரண்டும் அறத்தின்பாற்பட்டு நில்லாத செயலாகவே தோன்றுகிறது.


தாடகையை கொன்றது, வாலியை மறைந்து நின்று கொன்றதற்கு முன்னால் இராமன் செய்த இன்னொரு தவறும் கூட இருக்கிறது.

அப்பா சொன்னார் என்பதற்காக கடமையை விட்டு விடுவதா ? நாட்டு மக்களை காக்கும் கடமை இராமனுக்கு இல்லையா ? தந்தை சொன்னார் என்பதற்காக கடமையில் இருந்து நழுவலாமா ?


அவை அப்படியே இருக்கட்டும். அதற்கு பின்னால் வருவோம்.

இப்போது, இன்னொரு கேள்வியை எடுப்போம்.

ஒன்றுக்கு ஒன்று முரணான அறங்கள் இருந்தால் எதை கையில் எடுப்பது. ஒன்றைச் செய்தால் மன்றொன்று அடிபட்டுப் போகும்.

உதாரணமாக,

ஒருவன் மது போதையில், ஒரு பெண்ணை துரத்தி வருகிறான். அவன் கையில் அவள் அகப்பட்டால் அவள் கற்பு பறிபோவது திண்ணம். அவளை கொலை கூட செய்து விடுவான். அந்தப் பெண் ஓடிவந்து உங்கள் கண் எதிரிலேயே ஒரு இடத்தில் மறைந்து கொள்கிறாள்.  போதையில் வந்த அந்த ஆள் , அந்தப் பெண் எங்கே என்று கேட்கிறான்.

நீங்கள் என்ன செய்வீர்கள் ?

பொய் சொல்வது அறத்தின் பாற்பட்ட செயல் அல்ல.

உண்மை சொன்னால், அந்த பெண்ணின் மானமும் உயிரும் போகும்.

என்ன செய்வீர்கள் ?

வள்ளுவர் சொன்னார் , பொய்மையும் வாய்மை இடத்து, புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்று.

ஒரு வேளை நீங்கள் உண்மை சொல்லி, அந்த மனிதன் அந்தப் பெண்ணை கெடுத்து கொலையும்  செய்து விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். நீதி அவனை  தூக்கில் போடும்.

அப்போதும் அந்த மனிதன் என்ன சொல்லுவான் "நான்தான் குடி வெறியில் இருந்தேன் என்று தெரியும் தானே உனக்கு...எதற்காக அந்தப் பெண்ணை காட்டிக் கொடுத்தாய் ...இப்போது பார் ...நீ சொன்ன உண்மையால் இரண்டு உயிர்கள் போகப் போகின்றன ..." என்று.

பொய் சொல்வது அறம் அல்லதான். இருந்தும் எல்லோரும் அந்த இடத்தில் பொய் தான் சொல்லி இருப்பார்கள்.

சரி, இது ஒரு வாதம்.

இன்னொன்றைப் பார்ப்போம்.

அறம் என்பது முடிந்த முடிவா ? இது தான் அறம் என்று யாராவது இறுதியாகக் கூற முடியுமா ?

கொல்வது பாவம் தான். ஆனால் ஊரில் பல பேரை கொன்றவனை நீதி தூக்கில் போடுகிறது. அது பாவம் இல்லையா ? நாடுகளுக்கு இடையே சண்டை வரும் போது  ஒரு நாட்டின் இராணுவம் இன்னொரு நாட்டின் இராணுவத்தில் உள்ளவர்களை கொல்கிறது . அது பாவம் இல்லையா ?

போதைப் பொருள்களை உட்கொள்ளுவது பாவம் தான். அறம் இல்லை தான். ஆனால், தாங்க முடியாத வலியில் ஒருவன் துடிக்கும் போது அவனுக்கு சிறிது போதைப் பொருளை மருந்து போல கொடுத்து அவன் வலியை தணிப்பது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சை முறை.

அறம் என்பது முழுவதுமாக வரையறுக்கப் பட்டது அல்ல. அது காலம், இடம், பொறுத்து மாறிக் கொண்டே இருக்கும்.

மீண்டும் இராமனிடம் வருவோம்....







Tuesday, September 22, 2015

தேவாரம் - என்னத்த கிளிச்சீங்க

தேவாரம் - என்னத்த கிளிச்சீங்க 


"இத்தனை நாள் வாழ்ந்து நீங்க என்ன கிளிச்சீங்க ? கொஞ்சம் கூட வெக்கம் இல்லை உங்களுக்கு. இப்படியே போனால் கொஞ்ச நாளில் இறந்து போவீர்கள். நீகள் இறந்த பின்,  இந்த உடல் இருக்கிறதே, ஊரில் உள்ளவர்கள் எல்லாம் வெறுத்து ஒதுக்கும் ஒரு பொருளாகப் போய் விடும்"

என்று வெறுத்து கோபித்து சொல்கிறார் திருநாவுகரசர்.

பாடல்

நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.


பொருள்

நடலை = துன்பமான

வாழ்வு = இந்த வாழ்வை

கொண்டு = வைத்துக் கொண்டு

என் செய்தீர் = என்ன செய்தீர்கள்

நாணிலீர் = நாணம் இல்லாதவர்களே

சுடலை = சுடு காடு

சேர்வது = போய்ச் சேர்வது

சொற் பிரமாணமே = சத்ய வாக்கே

கடலின் = திருபாற்கடலில்

நஞ்சமு துண்டவர் = நஞ்சை அமுதமாக உண்டவர்

கைவிட்டால் = கை விட்டு விட்டால்

உடலி னார்  = இந்த உடல்

கிடந்து = கிடந்து

ஊர் = ஊர்

முனி = கோபிக்கும்

பண்டமே. = பொருளே

என்னய்யா, இன்னுமா எடுக்கல, சீக்கிரம் எடுங்கள் என்று ஊர் கூடி கோபித்து  அனுப்பும்  இந்த உடலை வைத்துக் கொண்டு என்ன செய்து கொண்டிருகிறீர்கள் என்று  கேட்கிறார் நாவுக்கரசர் .

பதில் ?