Sunday, January 31, 2016

பிரபந்தம் - ஐந்தலைய பை நாகத்தலைப் பாய்ந்தவனே

பிரபந்தம் - ஐந்தலைய பை நாகத்தலைப் பாய்ந்தவனே


எந்நாள் எம்பெருமான் உன்றனுக் கடியோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்றுய்ந்தது காண்
சென்னாள் தோற்றித் திருமதுரையுட் சிலைகுனிந்து ஐந்தலைய
பை நாகத்தலைப் பாய்ந்தவனே ! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

நாம் யாருக்குமே அடிமையாக, அடியவனாக இருக்க விரும்புவதில்லை. எப்போதுமே தலைவனாக, மற்றவர்களுக்கு வழி நடத்துபவர்களாக, எல்லாவற்றையும் கட்டுபாட்டுக்குள் வைத்து இருப்பவர்களாவே இருக்க விரும்புகிறோம்.

ஆனால், நடப்பது என்ன. எவ்வளவுகெவ்வளவு நாம் இந்த உலகை, அதில் உள்ள மக்களை நம் கட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நாம் அவற்றிற்கு அடிமையாக மாறிப் போகிறோம்.

எதன் மேல் பற்று இருக்கிறதோ, அதற்கு நாம் அடிமையாகிப் போகிறோம்.

அது எப்படி ?

என் வீட்டு வேலையாள், அலுவகலத்தில் எனக்கு கீழே வேலை பார்பவர்கள், தோட்டக்காரன், வண்டி ஓட்டுபவன், இவர்களுக்கெல்லாம் நான் எப்படி அடிமையாவேன் ?

எந்தத் தலைவனும், தொண்டனுக்கு அடிமைதான்.

தொண்டனுக்கு வேண்டியதை, விரும்பியதை செய்யும் வரை தான் தொண்டன் தலைவன் பின்னால் நிற்பான்.

தொண்டன் தான் சொல்வதை கேட்க வேண்டும் என்று தலைவன் நினைத்தால், தொண்டனுக்கு எது பிடிக்கும், எது தேவை என்று பார்த்து பார்த்து செய்ய வேண்டும்.

குடும்பத்திலும் அப்படித்தான். குடும்பத் தலைவன் சம்பாதித்து கொண்டு வரும்வரை, குடும்பத்திற்கு வேண்டியதை கொடுத்துக் கொண்டிருக்கும்வரை மற்றவர்கள் அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

 இப்படி ஆயிரம் இடத்தில் அடிமைகளாகத்தான் இருக்கிறோம்.

என்ன ஒரு ஆறுதல் என்றால், நாம் விரும்பியே அடிமைகளாக இருக்கிறோம்.

இப்படி யார் யாருக்கோ அடிமைகளாக இருப்பதை விட, ஏன் இறைவனுக்கே அடியவனாக இருக்கக் கூடாது ?


 பெரியாழ்வார் சொல்கிறார்

"உனக்கு என்று ஆட்பட்டோமோ அன்றில் இருந்து நான் மட்டும் அல்ல, என் குடும்பமே வீடு பேற்றை அடைந்து விட்டோம் "

இறைவனுக்கு ஆட்படுவதில்தான் பெரியவர்களுக்கு எவ்வளவு சந்தோஷம்....

"நான் உன் அடிமை. நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள். நான் உன்னுடைய பொருள். நீ என்னை ஆண்டு கொள், விற்க வேண்டும் என்றால் விற்றுக் கொள், அடமானம் வைக்க வேண்டும் என்றால் அடமானம் வைத்துக் கொள். ஆனா ல், என்ன செய்தாலும், என்னை விட்டு விடாதே" என்று உருகுகிறார் மணிவாசகர்.

இருந்து என்னை ஆண்டுகொள்; விற்றுக்கொள்; ஒற்றி வை;' என்னின் அல்லால்,
விருந்தினனேனை, விடுதி கண்டாய்? மிக்க நஞ்சு அமுதா
அருந்தினனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,

மருந்தினனே, பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே.

நான் என்றைக்கு உனக்கு அடியவனானேனோ, அன்றே நானும் என் குலமும் வீடு பேற்றினை அடைந்து விட்டோம்.

அப்படி என்று யாரிடம் சொல்கிறார் ?

"ஐந்தலைய பை நாகத்தலைப் பாய்ந்தவனே "

ஐந்து தலையுடன் படம் எடுத்து ஆடும் நாகப் பாம்பின் மேல் பாய்ந்தவனே என்று கண்ணனாக வந்த திருமாலிடம் கூறுகிறார்.

அது என்ன ஐந்து தலை நாகம் ?

புலன்கள் ஐந்தையும் அடக்கி அதன் மேல் நடனம் ஆடியவன். மற்றவர்கள் இந்த ஐந்து புலன்களையும் கண்டு பயப்படுவார்கள். கண்ணன் , அந்த பாம்பை அடக்கி அதன் மேல் நடனம் ஆடினான். புலன்களை அடக்கி விட்டால், பின் அவை நாம் சொல்வதை  கேட்கும். இல்லை என்றால் , அது நம்மை பாடாய் படுத்தும்.

பாடல்

எந்நாள் எம்பெருமான் உன்றனுக் கடியோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்றுய்ந்தது காண்
சென்னாள் தோற்றித் திருமதுரையுட் சிலைகுனிந்து ஐந்தலைய
பை நாகத்தலைப் பாய்ந்தவனே ! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

பொருள் 

எந்நாள் =எந்த நாளில்

எம்பெருமான் = என்னுடைய பெருமானே

உன்றனுக்கு = உனக்கு

அ டியோமென்று = அடியவன் என்று

எழுத்துப் பட்ட = எழுதி தந்து விட்டோமோ

அந்நாளே = அந்த நாளே

அடியோங்கள் = அடியவர்களாகிய நாங்கள்

அடிக்குடில் = குலம் முழுவதும்

வீடு பெற்றுய்ந்தது காண் = வீடு பேற்றினை அடைந்தோம்

சென்னாள்  = செம்மையான நாளில் . சிறந்த நாளில்

தோற்றித் = தோன்றி

திருமதுரையுட் = மதுராபுரியில்

சிலைகுனிந்து = வில்லை வளைத்து

ஐந்தலைய = ஐந்து தலையை கொண்ட

பை = படம் எடுத்து ஆடும்

நாகத்தலைப் பாய்ந்தவனே ! = நாகத்தின் தலையின் மேல் பாய்ந்தவனே

உன்னைப் பல்லாண்டு கூறுதுமே = உனக்கு பல்லாண்டு என்று வாழ்த்து கூறுகிறோம்















Saturday, January 30, 2016

பிரபந்தம் -உடுத்து களைந்த ஆடை

பிரபந்தம் -உடுத்து களைந்த ஆடை 




உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை
      உடுத்து கலத்தது உண்டு
தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன
      சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திரு
      வோணத் திருவிழவில்
படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப்
      பல்லாண்டு கூறுதுமே 

எப்போதாவது அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்தது உண்டா ? அம்மாவின் சேலைக்கு ஒரு மணம் உண்டு. அம்மாவின் மணம் அந்த சேலையில் இருக்கும்.

எப்போதாவது அப்பாவின் மடியில் தலைவைத்து படுத்தது உண்டா ? அப்பாவின் வேட்டியிலும் அப்பாவின் மணம் தெரியும்.

குழந்தையை தோளில் போட்டு தூங்க வைக்கும் போது குழந்தையின் மணம் தெரியும்.

அன்யோன்யமாய் இருப்பவர்களுக்கு இந்த வாசம் தெரியும்.

உடுத்த உடையில், உடுத்தியவரின் வாசம் இருக்கும்.

இந்த உலகை யார் படைத்தார் ? படைத்தவன் பெயர் என்ன ? ஊர், விலாசம் என்ன ? உலகம் படைக்கப் பட்டதா அல்லது தன்னைத் தானே படைபித்துக் கொண்டதா ?

விடை தெரியாத கேள்விகள்.

எது எப்படியோ, ஒன்று மட்டும் நிச்சயம், நீங்களோ, நானோ இந்த உலகைப் படைக்கவில்லை.

யாராலோ, எப்படியோ படைக்கப் பட்டது. அது யார் என்று தெரிய வேண்டும் என்றால், உலகை அன்யோன்யமாக, ஆழ்ந்து அனுபவித்தால் இது யாரிடம் இருந்து  வந்தது என்று தெரியும்.

புடவையின் மணத்தைக் கொண்டு அம்மாவை அறிவதைப் போல, உலகினை அறிந்தால், உலகைப் படைத்தவனை அறிய முடியும்.

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை
      உடுத்து கலத்தது உண்டு
தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன
      சூடும் இத்தொண்டர்களோம்

அவன் உடுத்த ஆடை, அவன் உண்ட உணவு, அவன் சூடிய மாலை இவற்றை உடுத்து, உண்டு, சூடி அவனை அறியலாம்.

உண்ணும் உணவு, உடுக்கும் உடை, சூடும் மாலை என்பன குறியீடுகள். இந்த உலகில் எல்லாம்   எங்கிருந்தோ வந்தது. உலகில் உள்ளவற்றை ஆழ்ந்து அறிவதன் மூலம்   இதைப் படைத்தவனை அறியலாம்.

ஆடை - கண்டு அறிவது. பார்த்தால் அதன் நிறம் தெரியும். கனம் தெரியும். பார்த்து அறிவது.  புறத் தோற்றம். பீதக ஆடை என்றார். பீதகம் என்றால் மஞ்சள். மஞ்சள் நிற ஆடை. மஞ்சள் அல்ல எங்கே முக்கியம். ஆடை என்பது பார்த்து அறியக் கூடியது. ஒரு புறத் தோற்றம் உள்ளது. 

உணவு - உணர்வது. உணவை பார்த்து அறிய முடியாது. சுவைத்துத் தான் உணர முடியும்.  எப்படி இருக்கிறது என்று சொல்ல முடியாது. இனிப்பு எப்படி இருக்கும் என்று சொல்ல முடியுமா ? வெளியில் சொல்ல முடியாது. அனுபவிக்க முடியும். 

மணம்  -  துளசியின் மணம் .  மணம் காற்றில் இருக்கும். உருவம் அற்றது. எங்கும் பரந்து விரிந்து கிடக்கும். 

ஆடையை நான் மட்டும்தான் அணிய முடியும்.

உணவை கொஞ்ச பேருடன் பகிர்ந்து உண்ணலாம். 

மணம் என்பதை நான் பிடித்து வைக்க முடியாது. ஒரு சமயம் இருக்கும், அதை உணர்வதற்குள் மறைந்து விடும். அது எல்லோருக்கும் பொது. 

முதலில்  இறைவன் என்பவன் எனக்கு மட்டும் தான் என்ற எண்ணம் இருக்கும். எனக்கு அருள் புரிய வேண்டும், எனக்கு உதவி செய்ய வேண்டும், எனக்கு பரம பதம் அருள வேண்டும்,  என்ற  சுயநலம் சார்ந்தே பக்தி ஆரம்பிக்கிறது. 

அடுத்த கட்டம், பக்தியை, இறை அனுபவத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வது. எல்லோரிடமும் என்றால் நமக்கு தெரிந்த, அருகில் உள்ள எல்லோரிடமும். 

அதற்கும் அடுத்த கட்டம், இறை உணர்வ, பக்தி என்பது எங்கும் பரவி நிற்பது. நான் யார்   அதை மற்றவர்களுக்குத் தர ? அது எல்லோருக்கும் பொது என்ற எண்ணம் வருவது. 

அவனை அறிவது. அறிந்த அவனை மற்றவர்களோடு  பகிர்ந்து கொள்வது. அறிவதும், உணர்வதும், பகிர்வதும் சுய முயற்சியால் நிகழ்வது. இவை அனைத்தையும் தாண்டி, என்றும் எப்போதும் இருக்கும் இறை தன்மையை உணர்வது  அடுத்த கட்டம். அது நம் சிந்தனைக்கும், அறிவுக்கும் சிக்காதது. ஒரு சமயம்  புரிந்த மாதிரி இருக்கும். மறு சமயம் நழுவி விடும்.  துளசியின் மணம் போல.

அறிவால் அறிவது. - "நீ உடுத்த பீதக ஆடை "

உணர்வால் புரிவது.- "கலந்தது உண்டு "

அறிவையும், உணர்வையும் தாண்டி நிற்பது  " தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன"

பாடல்

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை
      உடுத்து கலத்தது உண்டு
தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன
      சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திரு
      வோணத் திருவிழவில்
படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப்
      பல்லாண்டு கூறுதுமே 


பொருள்

உடுத்துக் களைந்த = உடுத்து களைந்த

நின் = உன்னுடைய

பீதக ஆடை = மஞ்சள் நிற ஆடை

உடுத்து = (அதை நாங்கள் ) உடுத்து

கலத்தது உண்டு = (நீ) உண்ட கலத்தில் உண்டு

தொடுத்த துழாய் மலர் = தொடுத்த துளசி மற்றும் மலர்  மாலையை

சூடிக் = நீ சூடி

களைந்தன சூடும் = நீ அதை களைந்த பிறகு அதை சூடும்

இத்தொண்டர்களோம் = தொண்டர்களாகிய நாங்கள்

விடுத்த = நீ சொல்லிய

திசைக் கருமம் = அன்றாட கருமங்களை

திருத்தித் = திருத்தமாகச் செய்து

திரு வோணத் திருவிழவில் = திருவோண நட்சத்திரத்தில் வரும்
திருவிழாவில்

படுத்த = பள்ளி கொண்ட

பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப் = படம் எடுத்து ஆடும் நாகத்தின் மீது பள்ளி கொண்டவனுக்கு

பல்லாண்டு கூறுதுமே = பல்லாண்டு கூறுவோம்


Thursday, January 28, 2016

திருக்குறள் - நினைத்ததை அடைய

திருக்குறள் - நினைத்ததை அடைய


உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்

மனதில் நினைத்ததை அடைய யாருக்குத்தான் ஆசை இருக்காது ? நினைப்பது எல்லாம் நடக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகிறார்கள்.

ஆனாலும், நடப்பதிலையே ...ஏன் ?

மனதில் நினைத்ததை சாதிக்க வள்ளுவர் ஒரு வழி சொல்லித் தருகிறார்.

நாம் நம் மனதில் நினைத்ததை அடையாமல் போவதற்கு காரணம் ...

"மறதி"

மறதிக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம் ? நல்ல ஞாபக சக்தி உள்ளவர்கள் தங்கள் மனதில் நினைத்ததை எல்லாம் அடைந்து விடுவார்களா ?

கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.

முதலில் சில உதாரணங்களைப் பாப்போம்.

நம்மில் பல பேருக்கு எடையை குறைக்க வேண்டும்,  நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும்,  கண்டதையும் தின்னக் கூடாது என்ற எண்ணம் உண்டல்லவா ?

ஏன் அது நடக்க மாட்டேன் என்கிறது ? ஏன் எடை குறைய மாட்டேன் என்கிறது ?

காரணம் - ஒரு எண்ணெய்  பலகாரத்தைக் கண்டவுடன், ஒரு இனிப்பு பலகாரத்தைக் கண்டவுடன், சாக்லேட், ஐஸ் கிரீம் இவற்றைப் பார்த்தவுடன் ஆரோக்கியமான  உணவை மட்டுமே உண்ண வேண்டும் என்பது "மறந்து" போகிறது. ஆரோக்கியம் இல்லாத உணவை உட்கொண்டு உடம்பை கெடுத்துக் கொள்கிறோம்.

ஒரு மாணவன், நன்றாகப் படித்து, நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்று மனதில்  நினைக்கிறான்.

தொலைக் காட்சியில் நல்ல படம் வந்தால்,  படிக்க வேண்டும் என்ற எண்ணம் "மறந்து" போகிறது. நண்பர்கள் வெளியே சுத்தலாம் என்று கூப்பிட்டால் , படிக்கும் எண்ணம் "மறந்து" போகிறது.

இந்த உதாரணத்தை நீட்டிக் கொண்டே போகலாம்

- பணம் சம்பாதிக்க, தொழிலில் முன்னேற, கணவன் மனைவி உறவு பலப்பட என்று எந்த எண்ணத்திற்கும் பொருத்தலாம்.

 நமக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியும். ஆனால் அதை தொடர்ந்து செய்வது இல்லை.

மனைவியிடம் சண்டை பிடிக்கக் கூடாது என்று மனதில் எண்ணம் இருக்கும்.   ஆனாலும், அதை "மறந்து" விட்டு, ஏதோ ஒரு காரணத்துக்காக சண்டை பிடித்துவிடுவோம்.

எடையை குறைக்க வேண்டுமா, ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா ...ஒவ்வொரு முறை உணவு உண்ணும் போதும் இது சரியான உணவுதானா, என் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுதானா என்ற நினைப்போடு இருக்க வேண்டும். மறந்து விடக் கூடாது.



பாடல்

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்

பொருள் 

உள்ளியது = மனதில் நினைத்தது

எய்தல் =அடைதல்

எளிது = எளிது

மன் = அசைச் சொல் அல்லது மன்னன்/தலைவன் என்று கொள்ளலாம்

மற்றுந்தான்  = மற்றபடி அவன்

உள்ளியது = மனதில் நினைத்ததை

உள்ளப் பெறின் = (எப்போதும் ) நினைப்பான் ஆனால்

எந்நேரமும் அதே சிந்தனையோடு இருக்க வேண்டும்.

"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்பார் மணிவாசகர்.

அவருக்கு பக்தி ஒன்றே குறிக்கோள். இறைவனின் திருவடிகள் ஒரு கண் இமைக்கும் நேரம்  கூட  அவர் மனதில் இருந்து நீங்கவில்லை.

அது போல, நாம் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதை ஒரு போதும் மறக்கக் கூடாது. மறந்து, அதற்கு எதிரான ஒன்றைச் செய்யக் கூடாது.


மனம்தான் செயலை நடத்திச் செல்லும். நாம் எதை எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கிறோமோ, நம் செயலும் அந்தத் திசையிலேயே போகத் தொடங்கும்.


சரி, சிந்தித்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதுமா ? நினைத்தது நடந்து விடுமா ?

நடக்காது.

அந்த சிந்தனை எப்படி இருக்க வேண்டும், சிந்தனையைத் தொடர்ந்த செயல் எப்படி இருக்க வேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.

ஆனால் , முதல் படி மறக்காத சிந்தனை.

இதை, மறக்காதீர்கள். 















Wednesday, January 27, 2016

பிரபந்தம் - வெள்ளுயிர் ஆக்க வல்ல

பிரபந்தம் - வெள்ளுயிர் ஆக்க வல்ல


நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே

நெய்யோடு கூடிய சோறு, தினமும், அரசாங்கத்தில் பெரிய வேலையும், தாம்பூலமும், கழுத்துக்கும், காதுக்கும்  அணியும் ஆபரணங்களும், உடம்பில் பூசிக் கொள்ள நல்ல சந்தனமும் தந்து என்னை நல்லவானாக்கிய, படம் எடுத்து ஆடும் பாம்பின் எதிரியான கருடனைக் கொடியாகக் கொண்டவனை பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோம்.

இதில் என்ன இருக்கிறது ? பெருமாள் எனக்கு எல்லா சௌகரியங்களும் செய்து தந்து இருக்கிறார், நான் அவரை அவரை வாழ்த்துகிறேன் என்று சொல்கிறார்.

சரி. இதில் நமக்கு என்ன செய்தி இருக்கிறது ? இதன் ஆழ்ந்த அர்த்தம் என்ன ?

நாம் இறைவனை எப்போது சிந்திப்போம் ?

நமக்கு ஏதாவது துன்பம் வந்தால், ஆபத்து வந்தால், சிக்கல் வந்தால் , துக்கம் வந்தால் இறைவனை  நினைப்போம். அவனிடம் வேண்டிக் கொள்வோம்.

சந்தோஷம் வந்தால் எப்போவாவது இறைவனை நினைப்போமா ? ஏதோ எல்லாம் நாமே சாதித்து முடித்தது போல நாம் நினைப்போம். என் உழைப்பு, என் திறமையால் எனக்கு இந்த செல்வங்கள் கிடைத்தது, இந்த வாழ்வு கிடைத்தது, இந்த சந்தோஷம் கிடைத்தது என்று நினைப்போம்.

அப்படி அல்ல.

நமக்கு கிடைக்கும் எல்லாம் அவன் தந்தது என்று நினைத்தால், வரும்போது அளவு கடந்த சந்தோஷம் வராது. போகும் போது நெஞ்சை அடைக்கும் துக்கம் வராது.

அவன் தந்தது, அவன் எடுத்துக் கொண்டான். இதில் என் வேலை என்ன என்ற சம நிலை வரும்.

எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்குத் தெரியும். எனக்கு எவ்வளவு தர வேண்டும் என்றும் உனக்குத் தெரியும். எனக்கு ஏதாவது வேண்டும் என்று நான் நினைத்தால் , அதுவும் உன் விருப்பமே என்று மணிவாசகர் உருகுவார்.

வேண்டத் தக்கது அறிவை நீ
    வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாலுக்கு அரியோய் நீ
    வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
    யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டெனில்
    அதுவும் உன்றன் விருப்பன்றே.


எனவே, பெருமாளே, எனக்கு கிடைத்தது எல்லாம் நீ பார்த்து தந்தது என்று நன்றியோடு நினைக்கிறார்.

செல்வம் , பதவி, இன்பம் வரும்போது அவனை நினையுங்கள். எல்லாம் அவன் தந்தது என்று நினையுங்கள்.

அப்படி நினைத்தால் என்ன நிகழும் ?

இறைவன் தந்தது என்று நினைத்தால் அது பிரசாதமாகி விடுகிறது. அதை பக்தியோடு பெற்றுக் கொள்ள வேண்டும். பக்தியோடு அனுபவிக்க வேண்டும் என்று தோன்றும்.

அதில் குறை நிறை பார்க்கத் தோன்றாது. கொஞ்சம் கிடைத்தாலும் திருப்தி அடையத் தோன்றும்.

மேலும் வேண்டும், மேலும் வேண்டும் என்ற ஆசை தோன்றாது. ஒரு துளசி இலை கிடைத்தாலும் சந்தோஷம்தான். ஒரு மூட்டை துளசி இலை பிரசாதம் வேண்டும்  என்று மனம் நினைக்காது. ஒரு தேக்கரண்டி தீர்த்தம் கிடைத்தாலும்  சந்தோஷமாக பெற்றுக் கொள்ளத் தோன்றும். ஒரு அண்டா நிறைய தீர்த்தம் வேண்டும் என்று நினைக்கத் தோன்றாது.

கிடைத்தது எல்லாம் பிரசாதம் என்று நினையுங்கள். கிடைத்ததில் திருப்தி தோன்றும். பேராசை தோன்றாது. கிடைக்கவில்லை என்றால் துக்கம் வராது.

இது ஒரு அர்த்தம்.

இன்னொரு அர்த்தம், மனிதனுக்கு தேவைகள் இருக்கும் வரை, அவற்றை அடையும் ஆசை இருக்கும் வரை இறை நினைவு வராது.

இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டும், பதவி உயர்வு வேண்டும், சம்பள உயர்வு வேண்டும் , ஊக்கத் தொகை (bonus ) வேண்டும், அதை வாங்க வேண்டும், இதை வாங்க வேண்டும் என்று மனிதன் உலக சுகங்களின் பின்னால் அலைந்து கொண்டே இருப்பான்.

அதற்கு ஒரு முடிவே இல்லை. இதில் இறை நினைப்பு எங்கே வரப்போகிறது ?

நம்மாழ்வார் சொல்கிறார்...உண்ணும் உணவு, மெல்லும் வெற்றிலை, (அடைக் காய்), அன்றாடம் செய்யும் வேலை, உடம்பில் பூசும் சந்தனம் எல்லாம் அவன் தந்தது என்று நினைத்தால், அல்லும் பகலும் அனவரதமும் அவன் நினைப்பு இருக்கும். அது மட்டும் அல்ல, அப்படி நினைக்கும் போது மனம் தூய்மை ஆகிறது. "வெள்ளுயிர் ஆக்க வல்ல "

வெள்ளுயிர் என்றால் வெண்மையான உயிர். தூய்மையான உயிர்.

அவன் தந்தான், நான் பெற்றுக் கொண்டேன் என்று நினைப்பு வரும்போது மனம் தூய்மை அடைகிறது.

என் வாழ்வும் வசதியும் என் மேல் அதிகாரி எனக்குத் தந்தது இல்லை, என் சக ஊழியனிடம் இருந்து நான் தட்டிப் பறித்தது இல்லை, மற்றவனுக்கு கிடைக்க நான் தடையாய்...அவரவர்களுக்கு களுக்கு வேண்டியதை அவன் தருகிறான்.

யாருக்கு எவ்வளவு , எப்போது தரவேண்டுமோ அப்போது பங்கிட்டுக் கொடுக்கிறான்.

பகுத்து கொடுப்பதால் அவன் பகவன்.

அகர முதல் எழுத்து எல்லாம், ஆதி பகவன் முதற்றே உலகு.

என் மேலதிகாரி எனக்கு ஊதிய உயர்வு தருவானோ, மாட்டானோ ?

எனக்குத் தராமல் மற்றவர்களுக்குத் தந்து விடுவானோ ?

என்றெல்லாம் நமக்கு ஒரு பயமும், பதற்றமும் இருக்கும். இந்த பயத்தில், பதற்றத்தில் மேலதிகாரி சொல்வதெல்லாம் கேட்க வேண்டும், தேவை இல்லாமல் அவனைப் புகழ வேண்டும்...

இவர்கள் யார் எனக்குத் தருவதற்கு. பெருமாள் தருகிறார். நான் பெறுகிறேன். இடையில் இவர்கள் யார் என்ற நிமிர்வு வருகிற போது வாழ்க்கையில் பயமும், பதற்றமும் போய் மிதக்கும் மேகம் போல மனம் இலேசாகிப் போகிறது.


பாடல்

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே

பொருள் 

நெய்யிடை =நெய் இடை இடையே இட்ட

நல்லதோர் சோறும் = நல்ல உணவும்

நியதமும் = தினமும்

அத்தாணிச் சேவகமும் = அத்தாணி என்றால் அரச மண்டபம். அரசவை. பெரிய வேலை என்று வைத்துக் கொள்ளலாம்.

கையடைக் காயும் = அடைக் காய் என்றால் பாக்கு. வெற்றிலை பாக்கும்.

கழுத்துக்குப்  பூணொடு = கழுத்தில் அணியும் சங்கிலியோடு

காதுக்குக் குண்டலமும் = காதில் அணியும் குண்டலமும்

மெய்யிட = மெய்யில் இட. உடம்பில் பூசிக் கொள்ள

நல்லதோர் சாந்தமும் = நல்ல மணமுள்ள சந்தனமும்

தந்து = தந்து

என்னை = என்னை

வெள்ளுயி ராக்கவல்ல = தூய்மையானவனாக ஆக்கும் வல்லமை படைத்த



பையுடை = படம் எடுத்து ஆடும் 

நாகப் = நாகப் பாம்புக்கு 

பகைக் = பகையான கருடனை 

கொடி யானுக்குப் = கொடியாகக் கொண்டவனுக்கு 

பல்லாண்டு கூறுவனே = பல்லாண்டு கூறுவேன் 

அவன் தராமல் வராது.

அவன் தடுக்காமல் நிற்காது.

வருவது வரட்டும் என்று இருங்கள். வாழ்கை இனிக்கும். 




Sunday, January 24, 2016

பிரபந்தம் - ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

பிரபந்தம் - ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே


பாடல்

தீயிற்பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச்சக்கரத்தின்*
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்*
மாயப் பொருபடைவாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி
பாய* சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

பொருள்

"நெருப்பை விட சுடர் விட்டு பிரகாசிக்கும் சங்கு மற்றும் சக்கரத்தை உடலில் சின்னமாகக் கொண்டு வழி வழியாக அவனுக்கு ஆட் செய்கின்றோம். மாயங்களில் வல்லவனான பாணனை அவனுடைய ஆயிரம் தோள்களும் இரத்தம் சிந்த சக்கரத்தை விடுத்த அவனுக்கு பல்லாண்டு கூறுவோம் "

தீயிற்பொலிகின்ற = நெருப்பை விட பொலிவுடன் விளங்கும்

செஞ்சுடராழி = சிவந்த சக்கரம்

திகழ் திருச்சக்கரத்தின் = கரத்தில் திகழும் சக்கரத்தின்

கோயிற் = உடலில்

பொறியாலே = சின்னமாகத் தரித்துக் கொண்டு

ஒற்றுண்டு = ஒன்றாகக் கூடி

 நின்று = நின்று

 குடிகுடி ஆட்செய்கின்றோம் = தலை முறை தலை முறையாக  ஆட் செய்கின்றோம்

மாயப் = மாயங்களில் வல்லவனான

பொருபடைவாணனை = சண்டையிடும் படைகளைக் கொண்ட வாணன் என்ற அசுரனை

ஆயிரந்தோளும்= அவனுடைய ஆயிரம் தோள்களும்

பொழிகுருதி பாய = இரத்தம் பொழிந்து பாய

சுழற்றிய ஆழிவல்லானுக்குப் = சக்கரத்தை சுழற்றிய வல்லவனான பெருமாளுக்கு

 பல்லாண்டு கூறுதுமே. = பல்லாண்டு கூறுவோமே

சரி. இதன் மூலம் பெரியாழ்வார் என்ன சொல்ல வருகிறார். நாங்கள் அவனுக்கு  தொண்டு செய்கிறோம். அவன் அரக்கனை கொன்றான்.

அதனால் என்ன ? இதை அறிந்து நாம் என்ன செய்யப் போகிறோம்.  இதை ஏன் வேலை மெனக்கெட்டு ஆழ்வார் சொல்கிறார் ? இதில் ஆழ்ந்த அர்த்தம் எதாவது இருக்குமா ?

தேடுவோம் .

உலகில் எவ்வளவோ பேர் கை, கால், கண் போன்ற அவயங்கள் இல்லாமல் துன்பப் படுகிறார்கள்.  சிலருக்கு அவை இருந்து சரி வர செயல் படாமல் துன்பப் படுகிறார்கள்.

நமக்கு எல்லா அவயங்களும் நான்றாக இருக்கின்றன. நம் உடலில் உள்ள அவயங்கள் எல்லாம் நல்லபடி இயங்க நாம் செய்தது என்ன ? ஒன்றும் இல்லை.  நமக்கு வழங்கப் பட்டது அவ்வளவுதான்.

ஆரோக்கியமான உடல், சிறந்த மனம் , நல்ல வகையில் செயல் படும் அறிவு இவற்றை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்கிறோம் ?

சில பேர் தனக்கு தனக்கு என்று சுய நலமாக தங்களுக்கு வேண்டியதை செய்து கொள்கிறார்கள்.

சிலர் மற்றவர்களுக்கு உதவுகிறார்கள்.

சிலர், இவற்றைக் கொண்டு மற்றவர்களுக்கு துன்பம் விளைவிக்கிறார்கள். அவனை எப்படி கெடுக்கலாம், அவன் முன்னேற்றத்தை எப்படி தடுக்கலாம், மற்றவனை எப்படி  அழிக்கலாம், என்று தீய வழியில் போகிறார்கள்.

அறிவை பெற்றதின் பயன் அவனை வணங்குவது.

வள்ளுவர் சொல்கிறார்

கற்றதனால் ஆய பயன் கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின் 

கல்வியினால் பயன் என்ன, அவன் திருவடிகளை தொழாவிட்டால் ?

வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும், 
தாழ்த்தச் சென்னியும், தந்த தலைவனைச் 
சூழ்த்த மா மலர் தூவித் துதியாதே 
வீழ்த்தவா, வினையேன் நெடுங் காலமே!

என்பார் திருநாவுக்கரசர்.

பெரியாழ்வார் சொல்கிறார் , சங்கையும் சக்கரத்தையும் தோளில் பொரித்துக் கொண்டு  அவனுக்கு தலை முறை தலை முறையாக தொண்டு செய்கிறோம் என்று.

பகவான் பானாசுரனுக்கு ஆயிரம் கைகள் கொடுத்தார். ஆயிரம் கைகளில் எவ்வளவு  நல்லது செய்து இருக்கலாம் ? செய்யவில்லை. மாறாக, அவற்றின் மூலம்  மற்றவர்களுக்கு துன்பம் செய்தான். பகவான் அவன் கரங்களை அறுத்து எறிந்தார்.  அவனைக் கொல்லவில்லை. பிறருக்குத் துன்பம் தந்த கைகளை  துண்டித்தார்.

பலன் தராத மரங்கள் எல்லாம் வெட்டி தீயில் இடப்படும் என்றார் இயேசு கிறிஸ்து .

சிந்தித்துப் பார்ப்போம்.

நமக்கு கிடைத்தது எத்தனை ? அவற்றின் மூலம் எத்தனை பேருக்கு நல்லது செய்து இருக்கிறோம் ?  எத்தனை உள்ளகளை மகிழச் செய்து இருக்கிறோம் என்று.

இது வரை செய்யாவிட்டால் என்ன ...இன்றிலிருந்து செய்யலாமே.

என்ன சரிதானே ?




திருக்குறள் - இகல்

திருக்குறள் - இகல் 



இகல் என்ப-எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
பண்புஇன்மை பாரிக்கும் நோய்.

மனிதனுக்கு துன்பம் பெரும்பாலும் இரண்டு இடங்களில் இருந்து வருகிறது...ஒன்று உடலினால் ஏற்படும் துன்பம், இரண்டாவது மனிதனால் ஏற்படும் துன்பம்.

உடல் உபாதைகளை எளிதில் கண்டு கொள்ளலாம்...உடலுக்கு ஒரு வியாதி வரும் என்றால் அதன் விளைவுகள் அதைக் காட்டிக் கொடுத்து விடும்...உடல் சூடு அதிகம் ஆகும், தலை வலி, காய்ச்சல், பசி இன்மை, தூக்கம் இன்மை என்று பல விதங்களில் அந்த நோய் வெளிப்படும். அதைக் கொண்டு இது இன்ன நோய் என்று அறிந்து அதற்கு தகுந்த மருத்துவ சிகிச்சை செய்யலாம்.

மனதில் வரும் நோயை கண்டு கொள்வதும் கடினம். குணப் படுத்துவதும் கடினம்.

பொறாமை, பேராசை, களவு எண்ணம், கோபம், பொருந்தாக் காமம் போன்ற  மனதில் தோன்றும் நோய்களை கண்டு கொள்வதும் கடினம், நீக்குவதும் கடினம்.

மாற்றான் மனைவி மேல் காமம் கொண்ட இராவணனுக்கு தான் செய்வது தவறு என்றே தெரியவில்லை. தெரிந்தால் அல்லவா திருத்திக் கொள்ள.

மேலும், மன நோய்களுக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. நம்மைச் சுற்றி உள்ளவர்கள் இந்த நோயை வளர்த்து விட்டு அதில் ஆதாயம் பார்ப்பார்கள்.

அதில் முதலாவதாக வருவது, பிரிவினை.

மக்களை பிரித்து வைத்தால், அவர்களை ஆள முடியும். நாட்டின் பெயரால், மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், மொழியின் பெயரால் மக்களை பிரித்து ஒருவர் மேல் மற்றவருக்கு ஒரு வெறுப்பினை வளர்த்து விட்டு ஒவ்வொரு அரசியல் வாதியும், மத குருமார்களும் தங்கள் ஆதாயத்தை பார்த்துக் கொள்கிறார்கள். அப்பாவி மக்கள் அது தெரியாமல் வெறுப்பினை வளர்த்துக் கொண்டு நிம்மதி இழந்து தவிக்கிறார்கள்.

தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால், எப்படி எல்லாம் மக்களை பிரித்துப் போட்டிருக்கிறார்கள்..

மொழியின் பெயரால், ஜாதியின் பெயரால், வட இந்தியா, தென் இந்தியா என்ற நில பாகுபாடால்...இப்படி பல வழிகளில் மக்கள் மத்தியில் வெறுப்பினை தூவி அரசியல் வாதிகள் குளிர் காய்கிறார்கள்.

நாடு அளவுக்கு ஏன் போக வேண்டும்.

சொந்தத்தில், வீட்டில், நட்பில், அலுவலகத்தில் - மற்றவர் கொண்ட வெறுப்பால் எவ்வளவு சிக்கல்கள் வருகின்றன. வெறுப்பு என்ற குணம் வந்தவுடன், யார் மேல் வெறுப்பு கொண்டோமோ அவர்களை விட்டு விலகிப் போய் விடுகிறோம். பின், விலகியதற்கு காரணம் கண்டு பிடிக்கிறோம். மேலும் வெறுப்பை கூட்டுகிறோம்.

வெறுப்பு என்பது இல்லாவிட்டால், யார் மீதும் பகை இல்லை.

நட்பு இருக்கிறதோ இல்லையோ, பகை இருக்காது.

இந்த வெறுப்பைப் பற்றி வள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார்....

இகல் என்று பெயர்.

இகல் என்றால் வெறுப்பு.

பாடல்

இகல் என்ப-எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
பண்புஇன்மை பாரிக்கும் நோய்.

பொருள்

இகல் என்ப = இகல் என்பது என்ன என்றால்

எல்லா உயிர்க்கும் = அனைத்து உயிர்களுக்கும்

பகல் என்னும் = பிரிவினை என்னும் (பகுத்தல் என்பதில் இருந்து பகல்)

பண்புஇன்மை = பண்பற்ற செயல்

பாரிக்கும் நோய் = உலகில் நிலவும் நோய் (பார் = உலகம்)

வெறுப்பு வந்தால் பிரிவினை வரும். பிரிவினை வந்தால், சேர்ந்து வாழ்வதில் உள்ள சுகம் போகும். அதன் மூலம் வரும் வசதிகள், நன்மைகள் போகும்.

சிந்தித்துப் பாருங்கள்...யார் மேல் எல்லாம் உங்களுக்கு வெறுப்பு என்று. அந்த வெறுப்பு எங்கிருந்து வந்தது என்று. அந்த வெறுப்பினால் விளைந்தவைகள் என்ன என்ன என்று.

வெறுப்பை மாற்றுங்கள். வாழ்வு இனிக்கும்.

வள்ளுவர் சொல்கிறார்.



















Saturday, January 23, 2016

பிரபந்தம் - பந்தனை தீர பல்லாண்டு பாடுதமே

பிரபந்தம் - பந்தனை தீர பல்லாண்டு பாடுதமே 


எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே

ஒரு நாள் கொஞ்சம் அதிகமா வேலை செய்து விட்டால் உடம்பு அசந்து போகிறது. ஒரு நாள் கொஞ்சம் அதிகம் வெயிலில் நடந்து விட்டால் தலை வலி வந்து விடுகிறது. எங்காவது வரிசையில் கொஞ்ச நேரம் அதிகம் நின்று விட்டால் கால் வலிக்கிறது.

பெருமாள் எத்தனை காலம் அவன் பக்தர்களுக்காக எவ்வளவு வேலை செய்கிறான். அவனுக்கு அசதி வராதா ?

அதைப் பற்றி யோசிக்காமல் , பெருமாளே எனக்கு இதைச் செய்து கொடு, அதைச் செய்து கொடு என்று கேட்டுக் கொண்டே இருக்கிறோம். எப்போதாவது அவனுக்கு கொஞ்சம் ஓய்வு தரவேண்டும் என்று நமக்குத் தோன்றியது உண்டா ? 

பெருமாளுக்கு அசதி வருமோ வராதோ தெரியாது. ஆனால் வருமே என்று நினைத்து பெரியாழ்வார் உருகுகிறார். அவன் உடல் அசதி தீர்ந்து அவன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று பல்லாண்டு பாடுகிறார். 

அது, அவரின் பக்தியின் உச்சம்.

"பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே"

பந்தம் என்றால் கட்டுதல், பிணைத்தல். இங்கே கட்டப் பட்டதால் வரும் வலி அல்லது  அசதி என்று கொள்வது சரியாக இருக்கும்.

எங்கே கட்டப்பட்டு கிடந்தான் ?


"அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை"

அந்தி நேரத்தில் சிங்க உருவாகி அரக்கனை அழித்தவனை

அவன் பக்தனான பிரகலாதனுக்காக தூணுக்குள் அடங்கி இருந்தான். இரணியன் தூணைப் பிளந்தவுடன் அதில் இருந்து வெளிப் பட்டு அவனைக் கொன்றான்.

பக்தனுக்காக கல் தூணுக்குள் அடைந்து கிடந்தான். 

கல்லுக்குள் அடைந்து கிடந்தால் உடம்பு வலிகுமா இல்லையா ?

பெருமாள் எவ்வளவு பெரிய ஆள் என்று நினைத்து வியந்திருக்கிறோமே தவிர கல் தூணுக்குள் அடைந்து கிடந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தோமா ?

அடுத்த முறை நரசிங்க பெருமாளை பார்க்கும் போது , பாவம் நமக்காக எவ்வளவு எல்லாம்  கஷ்டப் பட்டு இருக்கிறார் என்று ஒரு நிமிடம் யோசியுங்கள். 

இந்த பக்தி , எந்த பேரன்பு, பெரியாழ்வாருக்கு மட்டும் எப்படி சாத்தியமாயிற்று ?

அவரே சொல்கிறார்.

இது இன்று நேற்று வந்தது அல்ல. "என் தந்தை, அவரின் தந்தை என்று போய்க் கொண்டே இருந்தால் எல்லோருக்கும் முதலாக ஒரு தந்தை இருப்பானே அவனில் இருந்து  தொடங்கி இன்று வரை அவனுக்காக நாங்கள் பக்தி செய்கிறோம் " என்கிறார். 

பெரியாழ்வார் என்ன சொல்கிறார் என்றால்...உங்கள் முன்னோர்கள் செய்த  புண்ணியம்  நீங்கள் இன்று அவன் மேல் பக்தி செய்யும் நிலை அடைந்து இருக்கிறீர்கள். அந்தத் தொடர்பை துண்டித்து விடாதீர்கள். அந்த பாரம்பரியத்தை  தொடர்ந்து கொண்டு செல்லுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் சொல்லித் தாருங்கள். 

அவர்களுக்கு பிரபந்தத்தையும், கீதையையும், இராமாயணத்தையும் சொல்லித் தாருங்கள். 

அது உங்கள் கடமை. உங்கள் முன்னோர்கள் , உங்கள் வரை இதை கொண்டு வந்து சேர்த்து  விட்டார்கள். இதை மேலே கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்கு  இருக்கிறது. 

பாடல் 

எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே

பொருள் 

எந்தை = என் தந்தை

தந்தை தந்தை = தந்தையின் தந்தை

தம் மூத்தப்பன் = இவர்களின் மூத்த தந்தை

ஏழ்படி கால்தொடங்கி = எழேழு தலை முறையாக

வந்து வழி வழி ஆட் செய்கின்றோம் = வழி வழியாக அவனுக்கு ஆட்பட்டு தொண்டு செய்கிறோம்

திரு வோணத் திருவிழவில் = திருவோணத் திருவிழாவில்

அந்தியம் போதில் = அந்தி நேரத்தில்

அரியுரு வாகி = சிம்ம உருவாகி

அரியை யழித்தவனை = அரக்கனை (இரணியனை) அழித்தவனை

பந்தனை தீரப் = அனுக்கம் , உடல் அசதி தீர 

பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு என்று பாடுதுமே = பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு என்று  பாடுவோமே