Thursday, April 28, 2016

பிரபந்தம் - வினையாட்டியேன் காதன்மையே.

பிரபந்தம் - வினையாட்டியேன் காதன்மையே.


பாடல் 

வைகல்பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்,
செய்கொள் செந்நெ லுயர்திருவண்வண் டூருறையும்,
கைகொள் சக்கரத் தென்கனி வாய்பெரு மானைக்கண்டு,
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.

நம்மாழ்வாரின் அருமையான பாசுரம்.

அது ஒரு அமைதியான கடற்கரை. எங்கு பார்த்தாலும் வெண் மணல். காதோரம் கவிதை பாடும் கடல் காற்று. சற்று தூரத்தில் , ஒரு அந்த கடலில் வந்து சேருகிறது. அங்கே நிறைய நாணல்களும், கோரை புற்களும் வளர்ந்து இருக்கின்றன. அவற்றில் சில குருகுகள் வாழ்கின்றன. அவை தினமும் இரை தேடி அங்கும் இங்கும் அலையும்.

அங்கே வருகிறாள் தலைவி. அவளுக்கோ அவன் நினைப்பு. அவனை பார்க்க வேண்டும், அவனோடு பேச வேண்டும் , அவனோடு இருக்க வேண்டும் என்று ஆசை. அவன் இருக்கும் இடமோ வேறு இடம். எப்படி போவது. வீட்டில் விட மாட்டார்கள். நிறைய வேலை வேறு இருக்கிறது.

தவிக்கிறாள்.

அங்கே வந்த குருகை தூது விட நினைக்கிறாள்.

ஏய் குருகே, என்னால் தான் அவன் இருக்கும் இடத்துக்கு வர முடியவில்லை. அவனால் இங்கே வர முடியும் அல்லவா. எனவே, நீ போய் என் காதலை அவனுக்குச் சொல்லிவிட்டு வா என்று குருகை தூது அனுப்புகிறாள்.


காதலனுக்கு குருகை தூது விடுவதாக அமைந்த பாசுரம்.

பொருள்


வைகல் = தினமும்.

இந்த வைகல் என்ற வார்த்தையை வைத்து நாலடியாரில் ஒரு இனிமையான பாடல் உண்டு.

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.


பூங் கழிவாய் = ஆறும் கடலும் சேரும் இடத்திற்கு கழிவாய் என்று பெயர். பூக்கள் நிறைந்த அந்த இடம். ஆறு வரும் வழியில் உள்ள மரங்களில் இருந்து உதிர்ந்த பூக்களை சுமது வருவதால் அது பூக்கள் நிறைந்த கழிவாய் .

வந்து மேயும் = இங்கேயே இருப்பது இல்ல. இங்கே வந்து மேயும்

குருகினங்காள் = குருகு இனத்தை சேர்ந்த பறவையே

செய்கொள் செந் நெல் உயர் =  செய்த, உற்பத்தி செய்த , கொள் கலங்கள் நிறைந்த நெல் உள்ள

திருவண் வண்டூர் = திருவண்  வண்டூர் என்ற திருத் தலத்தில்

உறையும் = வசிக்கும்

கைகொள் = கையில் கொண்ட

சக்கரத் = சக்கரம்

என் = என்னுடைய

கனி வாய் = கனிந்த வாய். ஆகு பெயராக புன் முறுவலைக் குறிக்கும்

பெருமானைக் கண்டு = பெருமானைக் கண்டு
,
கைகள் கூப்பிச் = கைகளை கூப்பி

சொல்லீர் = சொல்வீர்களாக

வினையாட்டியேன் = வினையால் ஆட்படுத்தப் பட்ட என்

காதன்மையே = காதல் தன்மையை

ஏதோ காதலனுக்கு காதலி அனுப்பிய தூது மாதிரி தான் இருக்கிறது.

நம்மாழ்வார் போன்ற பெரியவர்கள் ஏதோ சினிமாவுக்கு பாட்டு எழுதுவது மாதிரி எழுதிப் போபவர்கள் அல்ல.

என்ன சொல்ல வருகிறார் என்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

காலம் காலமாய் மனிதன் இறைவனை தேடிக் கொண்டிருக்கிறான். இறைவன் இருக்கிறானா இல்லையா என்று கூட இன்னும் அறிந்த பாடில்லை. சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.

நிராகரிக்கவும் முடியவில்லை.

நமக்குத்தான் அவனைத் தெரியவில்லை. அவனுக்கு நம்மைத் தெரியும்தானே. அவன் விரும்பினால் தன்னை நமக்கு காட்டலாம்தானே ?

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார் மணிவாசகர்.

அவன் நமக்கு அருள் தரலாம் அல்லவா ?

சில மகான்கள், பெரியவர்கள் தோன்றி இறைவனைப் பற்றி சொல்கிறார்கள். அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. அவர்களுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. அவர்களிடம் கேட்டால் , அவர்கள் நினைத்தால் இறைவனை காண வேண்டும் என்ற நம் ஆர்வத்தை இறைவனிடம் போய் சொல்ல முடியும் அல்லவா ?

அதைத்தான் ஆழ்வார் இந்தப் பாசுரத்தில் கூறுகிறார்.


இறைவனைப் பற்றி ஏதோ கொஞ்சம் அங்கும் இங்கும் படித்து தெரிந்து வைத்து இருக்கிறோம். (சக்கரம், செங்கனி வாய்). அது முழுமையான வடிவம் இல்ல. யார் நேர்ல பார்த்தது.

குருகு என்பது ஆச்சாரியனுக்கு உவமை.

குருவைப் பற்றினால் இறைவனை அடையலாம்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்றார் அருணகிரி.

அந்த குருவருள் உங்களுக்கும் சித்திக்கட்டும் .

(மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/04/blog-post.html )

Thursday, April 21, 2016

இராமாயணம் - வாலி வதம்

இராமாயணம் - வாலி வதம்


வாலி வதம்   முடிந்து விட்டது. வாலி இறந்து கிடக்கிறான். அங்கே , வாலியின் மகன் அங்கதன் வருகிறான். அங்கதனை இராமனிடம் அடைக்கலமாக கொடுத்த பின், வாலி விண்ணுலகுக்கு அப்பால் ஏகினான்.

வாலியை இராமன் மறைந்து இருந்து கொன்றான். அது சரியா தவறா என்ற வாதம் இன்று வரை நீண்டு கொண்டே இருக்கிறது. 

அந்த வாதத்திற்கு ஒரு வதம் இன்று !

மற்றவர்கள் எப்படியோ நினைத்து விட்டுப் போகட்டும்...இராமன் என்ன நினைத்தான் ? மறைந்து இருந்து கொன்றது தவறு என்று இராமன் நினைத்தானா ? அது பற்றி அவனுக்கு ஒரு குற்ற உணர்ச்சி இருந்ததா ? அல்லது தான் செய்தது சரி என்று அவன் நினைத்தானா ? 

இராமனுக்கு அவன் செய்ததில் ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லை. தான் , தன் கடமையை செய்ததாகவே அவன் நினைக்கிறான். 

எப்படி ?

வாலி அடிபட்டுக் கிடக்கிறான், உயிர் எந்த நிமிடமும் பிரியலாம், அந்த நிலையில் வாலியின் மகனை தனது மெய் காப்பாளனாக இராமன் நியமிக்கிறான். தான் வாலியை கொன்றது சரி இல்லை என்று இராமன் நினைத்திருந்தால், அங்கதனை தன் மெய் காப்பாளனாக நியமித்து இருப்பானா ? ஒரு வேளை , அங்கதன் தன்னை சரியான சமயத்தில் பழி வாங்கிவிட்டால் என்ற என்ன பய உணர்ச்சி இராமனிடம் இல்லை. தான் செய்தது சரி இல்லை என்று இராமன் நினைத்து இருந்தால், அங்கதனை தன் அருகிலேயே வர விட்டிருக்க மாட்டான் அல்லவா ? 



தன்னுடைய பொன்னாலான  வாளை அங்கதனிடம் தந்து, இந்த துக்கத்தை நீ பொறுத்துக் கொள் என்று சொல்கிறான். 


பாடல் 

தன் அடி தாழ்தலோடும்
    தாமரைத் தடங்கணானும்,
பொன் உடை வாளை நீட்டி,
    ‘நீ இது பொறுத்திஎன்றான்;
என்னலும், உலகம் ஏழும்
    ஏத்தின; இறந்து, வாலி,
அந் நிலை துறந்து, வானுக்கு
    அப்புறத்து உலகன் ஆனான்.

பொருள் 

தன் அடி தாழ்தலோடும் = தன் அடியில் வீழ்ந்து வணங்கிய அங்கதனை 

தாமரைத் தடங்கணானும், = தாமரை போன்ற பெரிய கண்களை கொண்ட இராமனும் 

பொன் உடை வாளை நீட்டி, = தன்னுடைய பொன்னாலான வாளை தந்து 

‘நீ இது பொறுத்தி ‘என்றான் = நீ இந்த துக்கத்தை பொறுத்துக் கொள் என்றான் 

என்னலும் = அப்படி சொன்ன பின் 

உலகம் ஏழும் ஏத்தின; = இராமனை உலகம் எழும் போற்றியது 

இறந்து, வாலி, = வாலி இறந்து 

அந் நிலை துறந்து, = அந்த நிலையை துறந்து 

வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான். = வானுக்கு அப்புறம் உள்ள உலகத்துக்குச் சென்றான் 


அரசர்கள் தங்கள் வாளை அவர்களுடைய மெய் காப்பாளர்களுக்குத்தான் தருவார்கள். அது மிக மிக நம்பிக்கைக்கு உரிய பதவி. இராமன், தன் உடைவாளை இலக்குவனிடம் கூட தரவில்லை. அதற்கு இலக்குவனிடம் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் அல்ல. இலக்குவனுக்கு இணையாக, இன்னும் சொல்லப் போனால் அதை விட ஒரு படி மேலான இடத்தை, நெருக்கமான இடத்தை அங்கதனுக்குத் தருகிறான் இராமன்.

அதுவும் எப்போது ? 

யுத்தம் முடிந்து, பொது குழு, செயற் குழு எல்லாம் கூட்டி, ஆலோசனை செய்து முடிவு எடுக்கவில்லை. போர் முடிந்த அந்தக் கணமே முடிவு எடுக்கிறான். யாரையும் கேட்கவில்லை. 

தான் செய்தது தவறு என்று இராமன் நினைத்து இருந்தால், அப்படி ஒரு முடிவை எடுத்திருப்பானா ?

சரி. இராமன் மனதில் களங்கம் இல்லை. அங்கதனுக்காவது இராமன் செய்தது தவறு என்று  எப்போதாவது தெரிந்ததா ? இராமனுக்கு அருகில் எந்நேரமும் இருக்கிறான். உடை வாளோடு. இராமன் , தன்னுடைய தந்தையை அநியாயமாகக் கொன்று விட்டான் என்று அங்கதன் நினைத்திருந்தால் , இராமன் தனியாக இருக்கும் நேரத்தில் ஏதேனும் செய்து இருக்கலாம். குறைந்த பட்சம் , அந்த மெய் காப்பாளன் பதவியையாவது வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். 

இல்லை. அங்கதன் அதை ஏற்றுக் கொள்கிறான். 

சரி, இது ஏதோ இராமன் அங்கதனை சமாதனம் செய்ய எடுத்த ஒரு இராஜதந்திர முடிவு என்று  நினைக்கலாமா என்றால், முடியாது. 

ஏன் முடியாது ?

வெறும் அலங்கார பதவி இல்லை இராமன் கொடுத்தது. 

இராவணனிடம் தூது போக அங்கதனை அனுப்புகிறான். 

இலக்குவனை அனுப்பி இருக்கலாம். அனுமனை அனுப்பி இருக்கலாம். அனுமன் இலங்கை பற்றி நன்கு அறிந்தவன். அங்கதனை விட அறிவில், ஆற்றலில் , அனுபவத்தில் உயர்ந்தவன். அனுமனை அனுப்பவில்லை. அங்கதனை அனுப்புகிறான். 


அங்கதனை அவன் எவ்வளவு தூரம் நம்பி இருந்தால் அந்த வேலையை அவனிடம் ஒப்படைத்து இருப்பான்  !

சரி அதோடு முடிந்ததா என்றால்  இல்லை. 

இராவண வதம் முடிந்தது. எல்லோரும் அயோத்தி வந்து விட்டார்கள். இராமனுக்கு முடி சூட்டப் போகிறார்கள். 

அங்கும் அங்கதன் உடை வாளை ஏந்திக் கொண்டு வந்து நிற்கிறான். 

பாடல் 

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடை வாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரை செறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி

பொருள் 

அரியணை அனுமன் தாங்க, = அரியணையை அனுமன் தாங்க 

அங்கதன் உடை வாள் ஏந்த = அங்கதன் உடை வாளை ஏந்த 

பரதன் வெண் குடை கவிக்க = பரதன் வெண்கொற்றக் குடை பிடிக்க 

 இருவரும் கவரி பற்ற = இலக்குவனும் சத்ருக்கணும் கவரி வீச 

விரை செறி குழலி ஓங்க = சீதை சிறப்புடன் நிற்க 

வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் = சடையப்ப வள்ளலின் 

மரபுளோர் கொடுக்க = மரபில் வந்தவர்கள் கொடுக்க 

வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி = வசிட்டனே இரமானுக்கு முடி சூட்டினான் 

இராவண யுத்தம் முடிந்தவுடன் அங்கதனை இராமன் விட்டு விடவில்லை. தன்னோடு அயோத்திக்கு அழைத்து வந்து விடுகிறான். குகன் வருகிறேன் என்று சொன்ன போது   வேண்டாம் என்று மறுத்தான். வீடணனை இலங்கையில்  தங்க வைத்து விட்டான். ஆனால், அங்கதனை மட்டும் தன்னோடு கொண்டு நடக்கிறான் இராமன். 

வாலியை கொன்றதில் ஒரு  குற்ற உணர்வு இருந்திருந்தால், அங்கதனை தவிர்த்து இருப்பான்  இராமன். இராமன் செய்தது தவறு என்று நினைத்து இருந்தால் அந்தப் பதவியை ஏற்று இருக்க மாட்டான் அங்கதன். 

இது இரண்டுமே நடக்கவில்லை. 

தன்னிடம் அடைக்கலம் என்று வாலி தந்த பின், அங்கதனை தன் பிள்ளை போலவே நடத்தி இருக்கிறான் இராமன். 

தன் உயிருக்கு பாதுகாவலனாக அவனை நம்பி இருக்கிறான் இராமன்.

இராமன் தவறு செய்தான் என்று வாலி நினைக்கவில்லை.

அவன் மகன் அங்கதன் நினைக்கவில்லை. 

இராமனும் நினைக்கவில்லை. 

நாம் மட்டும் ஏன் நினைக்க வேண்டும் ?


Sunday, April 17, 2016

இராமாயணம் - வினையின் வழி

இராமாயணம் - வினையின் வழி 


இராமன் பிறக்கப் போகும் அயோத்தி நகரைப் பற்றி கம்பன் வர்ணித்துக் கொண்டே செல்கிறான். முதலில் மழை வளம் பற்றிப் பாடுகிறான். அந்த மேகம் எப்படி சிவனைப் போல சென்று திருமாலைப் போல கறுத்து வந்தது என்று கூறியதைப் பார்த்தோம்.

அந்த மழை மலையின் மேல் பொழிந்து ஆறாக பெருகி வருகிறது.

எப்படி வருகிறது என்று சொல்கிறான் கம்பன் இந்தப் பாடலில்.

அதற்கு முன்.....


நம் வாழ்க்கை ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால் எப்படி இருந்தது ? இப்போது எப்படி இருக்கிறது. இப்படி இருக்கும் என்று நாம் நினைத்துப் பார்த்தோமா ?

நினைக்காததை எல்லாம் விதி நடத்திவிட்டுப் போய் விடுகிறது.

நல்லதும் நடந்திருக்கும், அல்லாததும் நடந்திருக்கும்.

இன்னும் பத்து பதினைந்து வருடத்தில் நம் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியுமா ? விதி எதை எப்படி மாத்துமோ யாருக்குத் தெரியும் ?

விதியை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், சரயு நதி போகும் வழியில் உள்ள இடத்தை எல்லாம் தலை கீழாக மாற்றி போட்டுவிட்டுப் போய் விடுகிறது.

விதி, வாழ்கையை மாற்றுவதைப் போல.

பாடல்

முல்லையைக் குறிஞ்சி ஆக்கி,
    மருதத்தை முல்லை ஆக்கிப்
புல்லிய நெய்தல் தன்னைப்
    பொரு அரு மருதம் ஆக்கி,
எல்லை இல் பொருள்கள்
    எல்லாம் இடை தடுமாறும் நீரால்
செல் உறு கதியில் செல்லும்
    வினை எனச் சென்றது அன்றே.

பொருள்

முல்லையைக் குறிஞ்சி ஆக்கி = முல்லை நிலத்தை குறிஞ்சி நிலமாக்கி
மருதத்தை முல்லை ஆக்கிப் = மருத நிலத்தை முல்லை நிலமாக்கி
புல்லிய நெய்தல் தன்னைப் = மென்மையான நெய்தல் நிலத்தை
பொரு அரு மருதம் ஆக்கி = உயர்ந்த மருத நிலமாகச் செய்து
எல்லை இல் பொருள்கள் = எல்லை இல்லாத பொருள்கள்
எல்லாம் = எல்லாம்
இடை தடுமாறும் நீரால் =  இடத்தை விட்டு தடுமாறி நீரால்
செல் உறு கதியில் செல்லும் = செல்கின்றன கதியில் செல்லும்
வினை எனச் சென்றது அன்றே = வினையைப் போலச் சென்றது


முல்லையை குறிஞ்சி ஆக்குகிறது. மருத நிலத்தை முல்லை நிலமாக்குகிறது. நெய்தல் நிலத்தை மருதமாக்குகிறது. 


வேலை கிடைக்காது என்று நினைத்திருப்போம். கிடைத்து விடும். கிடைத்த வேலை  நிலைக்கும் என்று நினைத்திருப்போம், ஏதோ காரணத்தால் கை விட்டுப் போய் விடும். திருமணம், குழந்தைகள், அவர்களின் படிப்பு, துணையின் உடல் நலம், உடன் பிறப்புகளின் நிறம் மாற்றம் என்று விதி எப்படியெல்லாம்  வாழ்கையை மாற்றிப் போடுகிறது. 

பாடலின் உள் அர்த்தத்தை பார்பதற்கு முன்னால் , அது என்ன முல்லை, குறிஞ்சி, நெய்தல், மருதம்....என்று பார்ப்போம்.

தமிழர்கள் தாங்கள் வாழும் நிலத்தை பிரித்தார்கள். 

எப்படி பிரித்தார்கள் தெரியுமா ?

ஆற்றின் கரையில் தான் நாகரிகம் பிறக்கிறது. 

ஆறு எங்க தொடங்குகிறதோ அங்கிருந்து தொடங்கி அதன் போக்கிலேயே போய்  நிலத்தை பிரித்தார்கள். 

ஆறுகள் பொதுவாக மலையில் தான் பிறக்கும் - எனவே முதல் நிலம் குறிஞ்சி. மலையும் மலை சார்ந்த இடமும்.

பின் ஆறு மலையில் இருந்து இறங்கி கரடு முரடான  காட்டின் வழி வரும். எனவே அடுத்த இடம்  முல்லை - காடும் காடு சார்ந்த இடமும். 

பின் அது வேகம் குறைந்து நிதானமாக நிலத்தில் ஓடத் தொடங்கும்.  அது மருதம். வயலும் வயல் சார்ந்த இடமும். 

பின் ஓடிப் போய் கடலில் சேரும். அது நெய்தல். கடலும், கடல் சார்ந்த இடமும். 

இப்படி ஆற்றின் ஓட்டத்தின் கூடவே தாங்கள் வாழும் நிலத்தைப் பிரித்தார்கள். 

சரி, பாலை ஒன்று ஒரு நிலம் உண்டே, அது எங்கே ?

பாலை என்பது ஒரு தனி  இடம் இல்லை. 

குறிஞ்சியும் முல்லையும்  தம்முள் திரிந்து  பாலை என்றோர் படிவம் கொள்ளும்  என்றார்கள். 

அது ஏன் குறிஞ்சியும் முல்லையும் மட்டும் பாழ் பட்டு பாலை என்றோர் படிவம் கொள்ள வேண்டும் ?  ஏன் மருதமும் நெய்தலும் பாழ் பட்டு பாலையாகக் கூடாதா என்றால் .....

மருத நிலத்தில் விவசாயிகள் தங்களுக்கு வேண்டிய நீரை ஏரி , குளம் என்று தேக்கி வைப்பார்கள்.  எனவே அது பாலையாக மாறாது. 

அதே போல நெய்தல் நிலத்தில் கடல் செடிகள் - நாணல், கடல் பாசி போன்ற தாவரங்கள் வளரும்  எனவே அவையும் பாலையாக மாறாது. 

எவ்வளவு நுணுக்கமாக  ஆராய்ந்து நிலத்தை பிரித்திருக்கிறார்கள் !

சரி, இந்த பாடலில் அப்படி என்ன அர்த்தம் இருக்கிறது ?

மழை பொழிந்தது. ஆற்றில் நீர் வந்தது என்று சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே.

இதை அதாக  மாற்றியது,இதை இதாக மாற்றியது என்று ஏன் இந்தப் பீடிகை ?


பின்னால் இராமனின் வாழ்க்கையில் இப்படி எல்லாம் சம்பவங்கள் நிகழப் போகின்றன.


இரவில், சும்மா இருந்தவனைக் கூப்பிட்டு , சகரவர்த்தி பட்டத்தை ஏற்றுக் கொள் என்று சொன்ன  தசரதன், மறு நாள் காலையில் மாண்டு போய் விட்டான். சக்ரவர்த்தியாக வேண்டிய இராமன் கானகம் போனான். எங்கோஇருந்த  பரதன், சக்ரவர்த்தியாக்கப்பட்டான்.  அவனும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இராமனின் பாதுகைகள் முடி சூட்டிக் கொண்டன. 

யார் நினைத்திருப்பார்கள் இப்படி எல்லாம் நடக்கும் என்று. 

விதி  விளையாடிப் விட்டுப் போய் விட்டது. 

வரும் வாழ்க்கைக்கு கட்டியம் கூறுகிறான் கம்பன். 

விதியை யாரே மாற்ற வல்லார் ?


( மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/04/blog-post_17.html )

Monday, March 28, 2016

இராமாயணம் - இராமவதாரம் - மழை பொழிந்த காரணம்

இராமாயணம் - இராமவதாரம் - மழை பொழிந்த காரணம் 


திருநீறு அணிந்த சிவனைப் போல வெளுத்த மேகங்கள் கடலில் நீரைக் கொண்டு திருமாலைப் போலக் கருத்து திரும்பி வந்தன என்று முந்தைய ப்ளாகில் பார்த்தோம்.

அந்த மேகங்கள் எங்கே போயின ?

நேரே மலைக்கு மேலே சென்றன , அங்கே சென்று மலையின் மேல் மழை பொழிந்தன.

ஏன் ?

ஆறுகள் எல்லாம் மலையின் மேல் உற்பத்தி ஆகின்றன. பின் அவை எல்லாம் போய் கடலில் கலக்கின்றன. கடல் ஆறுகளுக்கு கணவன் போல. மலை என்ற பிறந்த வீட்டில் இருந்து கடல் என்ற கணவன் வீட்டுக்கு இந்த ஆறுகள் போகின்றன. அப்படி பார்த்தால் இந்த மலை , கடலுக்கு மாமன் முறை வேண்டும். பெண்ணை கொடுத்தவன் என்ற முறையில்.

மலை உயர்ந்து நிற்கும். அதனால் அதன் மேல் வெயில் நன்றாகப் படும். வெயில் பட்டு  ரொம்ப சூடாகி இருக்கும். அவன் வெம்மையை தணிப்போம் என்று கடல் மேகத்தை அனுப்பி வைத்ததாம்.

பாடல்

பம்பி மேகம் பரந்தது, ‘பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்;
அம்பின் ஆற்றதும்’ என்று அகன்குன்றின்மேல்
இம்பர் வாரி எழுந்தது போன்றதே.

பொருள்

பம்பி = நெருங்கி

மேகம் = மேகங்கள்

பரந்தது =சூழ்ந்து

‘பானுவால் = சூரியனால்

நம்பன் மாதுலன் = நமது மாமன்

வெம்மையை நண்ணினான்; = சூட்டினை அடைந்தான்

அம்பின் ஆற்றதும்’ = நீரால் குளிப்பாட்டுவோம்

என்று = என்று

அகன் குன்றின்மேல் = அந்தக் குன்றின் மேல்

இம்பர் = இந்த உலகில் உள்ள

வாரி = கடல்

எழுந்தது போன்றதே = எழுந்து வந்தது போன்றதே

அந்த மேகம் எங்காவது மழை   பொழிந்து விட்டுப் போயிருக்கலாம். கம்பன் கஷ்டப்பட்டு ஒரு இடம் தேடுகிறான்.  வெயிலில் சூடேறி துன்பப்படும் மலையின்  சூட்டை ஆற்ற அந்த மேகம் வந்தது என்றான்.

எங்கெல்லாம் துஷ்டர்கள் தோன்றி அறத்திற்கு கேடு விளவிக்கிறார்களோ , எங்கெல்லாம் நல்லவர்கள் துன்பப் படுகிறார்களோ அவர்களை காக்க யுகம் தோறும் யுகம்  தோறும் நான் அவதரிப்பேன் என்று கண்ணன் சொன்ன மாதிரி துன்பம் வந்த இடத்தில் , அதை துடைக்க அந்த மேகம் சென்றதாம்.

அவதாரம் என்றாலே அது தான். உதவி செய்ய மேலிருந்து கீழே வருவதுதானே அவதாரம். அதை மறைமுகமாகச் சொல்கிறான் கம்பன்.

இராமன் வரப் போகிறான். திருமால் அவதரிக்கப் போகிறார். தேவர்களின் துயர் துடைக்க  அவன் வரப் போகிறான் என்று கட்டியம் கூறுகிறான் கம்பன்.


மலை மேல் பொழிந்த மழை எப்படி கீழிறங்கி வந்தது  தெரியுமா ?

(மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_28.html )

Sunday, March 27, 2016

இராமாயணம் - இராமன் வரவு

இராமாயணம் - இராமன் வரவு 


நம் வீட்டுக்கு திருமணமாகி மருமகளோ, மருமகனோ முதன் முதலாக வருகிறார்கள் என்றால் வீட்டை எவ்வளவு அழகு படுத்துவோம் ? முடிந்தால் வெள்ளை அடித்து, திரைச் சீலைகள் எல்லாம் மாத்தி, படுக்கை விரிப்பு, தலையணை உறை எல்லாம் மாத்தி வீட்டையே புத்தம் புதிதாக மாற்றி விடுவோம் அல்லவா ?

மருமகன், மருமகளுக்கே எந்த பாடு என்றால்,  பரம் பொருளான இறைவனே வரப் போகிறான் என்றால் என்ன செய்ய மாட்டோம் ?

கம்பனுக்குத் தெரியும் இராமன் அயோத்தியில் பிறக்கப் போகிறான் என்று. அந்த ஊரை தன் கற்பனையில் அழகு படுத்துகிறான் கம்பன். இழைக்கிறான்.

நமது திரைப் படங்களில் கதாநாயகனை அறிமுகப் படுத்தும் போது அவன் காலைக் காட்டி, கையைக் காட்டி, கொஞ்சம் கொஞ்சமாக ஆவலைத் தூண்டி முடிவில் முகத்தைக் காட்டுவதைப் போல, இராமன் பிறந்து தொட்டிலில் கிடக்கிறான், அதைக் காட்டுவதற்கு முன்னால் , கம்பனின் காமிரா எங்கெல்லாம் போகிறது , எதையெல்லாம் படம் பிடிக்கிறது என்று பார்ப்போம்.

முதலில், காமிராவை மேகத்தை நோக்கி focus பண்ணுகிறான். Long Shot .

வெண்ணிற மேகங்கள் மிதந்து செல்கின்றன. கடல் நோக்கி சென்று, கடலில் உள்ள நீரை "மேய்ந்து" அயோத்திக்கு வந்து மழை பொழிகின்றன.


பாடல்

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில்
சேறு அணிந்த முலைத் திரு மங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே

பொருள் 

நீறு அணிந்த = திருநீறு அணிந்த

கடவுள் = சிவன்

 நிறத்த வான் = வெண்மையான நிறம் கொண்ட மேகங்கள்

ஆறு அணிந்து சென்று = வழியே என்று

ஆர்கலி = ஆரவாரிக்கும் கடலினை

மேய்ந்து = மேய்ந்து

அகில் சேறு = சந்தன குழம்பை

அணிந்த = அணிந்த

முலைத் = மார்பகங்களைக் கொண்ட

திரு மங்கை தன் = திருமகளின்

வீறு அணிந்தவன் = சிறப்பினைக் கொண்டவன் (விஷ்ணு)

மேனியின் மீண்டதே = கருத்த மேனி போல் மீண்டு வந்ததே

சிவனைப் போல சென்று திருமாலைப் போல வந்ததாம்.

திருமால் வரப் போகிறான் என்பதை சூசகமாக தெரிவிக்கிறான் கம்பன்.

இதற்கு இடையில் மத நல்லிணக்கம் வேறு.  ஒரே மேகம் தான் - சிவனைப் போலவும் இருக்கிறது, திருமாலைப் போலவும் இருக்கிறது.

பரம் பொருளுக்குள் வேறுபாடு ஒன்றும் கிடையாது.  வடிவங்கள்தான் வேறு வேறே தவிர  அடிப்படையில் எல்லாம் ஒன்றுதான் என்று சொல்கிறான்.

மேலும், பெண்ணின் சக்தியை போற்றுகிறான்.

திருமகளின் வீறு அணிந்தவன் - சிறப்புகளை, வீரியத்தை, சக்தியை கொண்டவன் என்று பெண்ணின் பெருமையை போற்றுகிறான்.

வெண் மேகம் கடலில் சென்று நீரைக் குடிக்கிறது. அதனால் அது கறுத்துப் போகிறது. அதைப் பார்க்கும் போது கம்பனுக்கு ஏதோ கருத்த எருமை மாடு புல் மேய்வது  போலத் தோன்றுகிறது. கடல் நீரை மேய்ந்து என்கிறான்.

அந்த மேகம் எங்கே போயிற்று தெரியுமா ?

(மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_27.html )

Wednesday, March 23, 2016

இராமாயணம் - அவை அடக்கம் - பிள்ளைகளின் கிறுக்கல்

இராமாயணம் - அவை அடக்கம்  - பிள்ளைகளின் கிறுக்கல்



சிறு பிள்ளைகள் தரையில் வீட்டின் படம் வரைந்து,  இது சமையல் அறை , இது பூஜை அறை , என்று விளையாடுவார்கள். அப்போது அந்தப் பக்கம் வந்த கட்டிடக் கலை வல்லுநர் ஒருவர், அந்தப் படத்தைப் பார்த்து விட்டு, அந்தப் படம் சரி இல்லை, நீள அகலங்கள் சரியான படி இல்லை என்று விமர்சினம் செய்ய மாட்டார். "ஆஹா , என்ன அழகான படம் " பிள்ளைகளை பாராட்டுவர். அவருக்குத் தெரியும் படம் சரி இல்லை என்று. இருந்தாலும், இது பிள்ளைகளின்  விளையாட்டுத் தானே. இதில் என்ன இருக்கிறது விமர்சினம் செய்ய என்று விட்டு விடுவார்.

அது போல, முறையாக நூல் கற்றவர்கள் விமர்சினம் செய்யாமல் பாராட்டி விட்டுப் போங்கள் என்கிறார் கம்பர்.

தன் கவி சிறு பிள்ளைகளின் கிறுக்கல் போன்றது என்று அடக்கமாகச் சொல்கிறார்.

பாடல்

அறையும் ஆடரங்கும் மடப் பிள்ளைகள்
தறையில் கீறிடின், தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி,
முறையின் நூல் உணர்ந்தாரும், முனிவரோ? 

பொருள்

அறையும் = பல்வேறு அறைகளும் (பூஜை அறை , சமையல் அறை )

ஆடரங்கும் = ஆடும் இடமும்

மடப் பிள்ளைகள் = அறிவில் முதிர்ச்சி இல்லாத பிள்ளைகள்

தறையில் கீறிடின் = தரையில் படம் வரைந்தால்

தச்சரும் = மர  வேலைகளில் வல்ல தச்சரும்

காய்வரோ? = கோபம் கொள்வாரா ? (மாட்டார் )

இறையும் = கொஞ்சம் கூட

ஞானம் இலாத = ஞானம் இல்லாத

என் புன் கவி, = என்னுடைய பிழையான கவிதைகளை

முறையின் = முறைப்படி

நூல் உணர்ந்தாரும் = புத்தகங்களைப் படித்தவர்களும்

முனிவரோ? = கோபிப்பார்களோ ? (மாட்டார்கள் )

அவை அடக்கம் என்பது மேலோட்டமான செய்தி.

அதற்கு கீழே உள்ளது கம்பனின் ஆளுமை.

தன் நூலை யாரும் குறை சொல்லாதபடி ஒரு வேலி அமைக்கிறான் கம்பன்...மிக மிக சாமர்த்தியமாக.

பிள்ளைகளின் படத்தை ஒரு பெரிய பட வல்லுநர் (drawing master ) குறை சொன்னால்  பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்...இந்த வல்லுநர் கொஞ்சம் புத்தி  கழண்டவன் என்றுதானே  நினைப்பார்கள். "ஏதோ சின்ன பிள்ளை வரைஞ்சிருக்கு...அதை பாராட்டிடுப் போகாம பெரிய மேதாவி மாதிரி குறை சொல்ல வந்துட்டார் " அப்படின்னு அந்த வல்லுனரைத்தான் குறை சொல்லுவார்கள்.

அது போல, என் கவியை யாராவது குறை சொன்னால், குறை சொல்பவர்களைத்தன்  உலகம் தூற்றும் என்று சொல்கிறான் கம்பன்.

அதாவது, பேசாமல் பாராட்டி விட்டுப் போங்கள் என்பது அவனுடைய மறைமுகக் கட்டளை.

எப்படி, கம்பனின் அவை "அடக்கம்"  ?

கம்பனைப் படிக்கும் போது இந்த எழுத்துச் சாதுரியமும் நமக்குள் வரும்.

(மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_23.html )



Monday, March 21, 2016

இராமாயணம் - பித்தரும் பேதையரும் சொன்னது - அவை அடக்கம்

இராமாயணம் - பித்தரும் பேதையரும் சொன்னது - அவை அடக்கம் 



பாடல்


முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய
உத்தமக் கவிஞருக்கு ஒன்று உணர்ந்தவென்:-
‘பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும், 
பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ?’ 

பொருள்

முத்தமிழ்த் = இயல், இசை, நாடகம் என்ற மூன்று பகுதியான தமிழின்

துறையின் = ஒவ்வொரு துறையிலும்

முறை நோக்கிய = முறையாக பயின்ற

உத்தமக் கவிஞருக்கு = உயர்ந்த கவிஞர்களுக்கு

ஒன்று உணர்ந்தவென் = ஒன்று உணர்த்துவேன்

‘பித்தர் சொன்னவும் = பைத்தியம் பிடித்தவர்கள் சொன்னதும்

பேதையர் சொன்னவும் = பேதையர் சொன்னதும்

பத்தர் சொன்னவும் = பக்தர்கள் சொன்னதும்

பன்னப் பெறுபவோ? = ஆராயத் தக்கதோ ? (இல்லை)

பாடலையும், அதன் சொற்களுக்கு அர்த்தத்தையும் பார்த்தாச்சு. வேறு என்ன இருக்கிறது  இந்த பாடலில்.

பித்தர்கள், பக்தர்கள், பேதைகள் சொன்னதை பெரிய கவிஞர்கள் ஆராய்வார்களா என்று கேட்டு முடிக்கிறான் கம்பன்.

பாடலுக்கு பின்னால் வருவோம்.

தமிழர்களின் மேல் பொதுவாக சொல்லப் படும் ஒரு குறை என்னவென்றால் நல்ல விஷயங்களை பாராட்டுவதே கிடையாது. என்ன செய்தாலும் ஒரு திருப்தி இல்லை. ஏதோ குழந்தைகளை பாராட்டி விட்டால் அவர்களுக்கு தலைக்கனம் வந்து விடும் என்று பிள்ளைகளை பாராட்டுவதே இல்லை.

அதே போல், தான் ஏதாவது பெரியதாக சாதித்தாலும், அதெல்லாம் ஒண்ணும் இல்லை..இது என்ன பெரிய சாதனை என்று நினைத்துக் கொள்வது.

14000 பாடல்களுக்கு மேலே பாடிய கம்பன், தன் பாடல்களை ஏனோ பைத்தியக்காரன் பாடியது, முட்டாள் பாடியது , என்று குறைத்து சொல்கிறான்.

இது என்ன ஒரு வித தாழ்வு மனப்பான்மையா ?

கம்பன் மட்டும் அல்ல, அனைத்துப் புலவர்களும் அவை அடக்கம் பாடுகிறார்கள். "நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்லை, என் பாட்டு ரொம்ப சுமாரு தான் " என்று தன்னைத் தானே தரம் தாழ்த்திக் கொள்கிறார்கள்.

ஏன் ?

காரணம், தாழ்வு மனப்பான்மை இல்லை.

கல்வியின் வீச்சு, கல்வியின் ஆழம் தெரிந்தமையால் வந்த அடக்கம்.

கல்வி கடல் போன்றது. அதில் எந்த கொம்பனும் கரை கண்டு விட முடியாது.

இது புரிந்ததால் தான், அடங்கி ஒடுங்கி அவை அடக்கம் வாசிக்கிறார்கள்.


ஒண்ணும் தெரியாதவன் தான், ஏதோ கொஞ்சம் வாசித்து விட்டு தனக்குத் தான்  எல்லாம் தெரியும் என்று தலைக் கனம் பிடித்துத் திரிவான்.

படிக்க படிக்க, பயம் வரும்.

நாம் என்ன புதிதாகச் சொல்லி விடப் போகிறோம் என்று. அவ்வளவு இருக்கிறது.

எனவே, அவை அடக்கம் பாடுகிறார்கள்.

ஆனாலும், கம்பன் ஒரு கொம்பன். அவனுக்குத் தெரியும் தான் ஒரு நல்ல கவிஞன் என்று.

தன் பாடல்களை குறை சொல்லவே கொஞ்சம் பேர் வருவார்கள் என்று அவனுக்குத் தெரியும்.

அவர்களின் வாயை அடைக்க வேண்டும்.

எப்படி ?

பார்த்தான் கம்பன் ...


பித்தர் சொன்னதும், பேதையர் சொன்னதையும் பெரிய கவிஞர்கள் ஆராய்வார்களா என்று கேட்பதன் மூலம், என் கவிதையை நீங்கள் ஆராய்ந்தால், நீங்கள் பெரிய கவிஞர்கள் இல்லை என்று நிரூபணம் ஆகிவிடும் என்றான்.

இனிமேல் அவன் ஏன் வாயைத் திறக்கப் போகிறான்.

இப்படி, பெரிய புலவர்களை ஒரே வரியில் ஓரங் கட்டிவிட்டான் கம்பன்.

அது மட்டும் அல்ல, வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல ஒரு விஷயம் சொல்கிறான்.


முத்தமிழ் துறையின் முறை போக்கிய

அப்படினா என்ன அர்த்தம்.

வெறும் தமிழ் பாடம் மட்டும் தெரிந்திருந்தால் போதாது. இசை ஞானமும் வேண்டும். நாடக ஞானமும் வேண்டும். ஒரு பாட்டு என்ன இராகம் என்று சொல்லத் தெரிய வேண்டும். அந்த இராகத்தில், சொன்ன தாளத்தில், பாவத்தோடு பாடத் தெரியவும் வேண்டும். அது மட்டும் அல்ல, நடிக்கவும் தெரிய வேண்டும்.

அப்போதுதான், ஒருவன் முழுமையான தமிழ் அறிஞன் என்று ஏற்றுக் கொள்ள முடியும்.


உங்களில் எத்தனை பேருக்கு இசையும் நடிப்பும் தெரியும் என்று கேட்கமால் கேட்கிறான் கம்பன்.

அவர்களுக்கு மட்டும் அல்ல, நமக்கும் சேர்த்துத்தான் கம்பன் சொல்கிறான்...தமிழ் படிக்க வேண்டுமா ? இசையும் நடிப்பும் சேர்ந்து படியுங்கள் என்று.

நாளை முதல் யாரவது தமிழ் தெரியுமா என்று கேட்டால், 1/3 -ல் கொஞ்சம் தெரியும் என்று தான்  சொல்ல வேண்டும்.

தமிழ் பாடல்களை இசையோடு படிக்கும் போது அதற்கு உள்ள அழகே வேறு. சில சமயம் அர்த்தமே கூட மாறிப் போகும்.

தமிழை இரசிக்க வேண்டுமா , கொஞ்சம் இசையும் தெரிந்திருக்க வேண்டும்.

அவை அடக்கத்துக்குள் இவ்வளவு அர்த்தங்களை அடக்கியவன் கம்பன்.

எப்பேர்பட்ட பரம்பரையில் பிறந்தவர்கள் நாம் !

(மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_21.html )