Friday, April 28, 2017

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - உன் உயிர்க்கும் கூற்றாய்

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - உன் உயிர்க்கும் கூற்றாய் 


நல்லது நடந்தால் அதற்கு சொந்தம் கொண்டாட எல்லாரும் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். அல்லது நடந்தால் தான் எப்படி அதற்கு காரணம் அல்ல என்று எல்லோரும் ஒதுங்கிக் கொள்வார்கள்.

அது உலக இயற்கை.

தன்னிடம் அரசை திருப்பித் தர வந்த பரதனிடம் , தயரதன் எவ்வாறு இருக்கிறான் என்று இராமன் கேட்டான். தயரதன் இறந்த செய்தியை பரதன் கூற கேட்ட இராமன் மயங்கி விழுகிறான்.

பின் மயக்கம் தெளிந்து எழுந்து , துக்கத்தில் புலம்புகிறான்.

"அரசை எனக்கு தந்துவிட்டு நீ ஓய்வு எடுக்கப் போகிறேன் என்று சொன்னது இது தானா ? உனது உயிருக்கு நானே எமனாகி விட்டேனே " என்று புலம்புகிறான்.

பாடல்


‘மன் உயிர்க்கு நல்கு உரிமை
    மண் பாரம் நான் சுமக்கப்
பொன் உயிர்க்கும் தாரோய்!
    பொறை உயிர்த்த ஆறு இதுவோ?
உன் உயிர்க்கும் கூற்றாய்
    உலகு ஆள உற்றேனோ?
மின் உயிர்க்கும் தீவாய் வெயில்
    உயிர்க்கும் வெள் வேலோய்! ‘


பொருள்


‘மன் உயிர்க்கு = நிலைத்து வாழும் உயிர்களுக்கு

நல்கு உரிமை = நல்லது செய்யும் உரிமையை

மண் பாரம் = அரச பொறுப்பை

நான் சுமக்கப் = நான் ஏற்றுக் கொள்ள

பொன் = பொன் போன்ற நிறமுடைய மலர்களை

உயிர்க்கும் = உதிர்க்கும்

தாரோய்! = மாலை அணிந்தவனே (தார் = மாலை )

பொறை = பொறுமை. இங்கே இளைப்பாறுதல்

உயிர்த்த ஆறு இதுவோ? = அடையும் வழி இதுவோ ?

உன் உயிர்க்கும் = உன்னுடைய உயிர்க்கும்

 கூற்றாய் = எமனாய் (உடலையும், உயிரையும் கூறு படுத்துவதால் கூற்றுவன்)

உலகு ஆள உற்றேனோ? = உலகை ஆள பிறந்தேனோ

மின் உயிர்க்கும் =மின்னல் போல் ஒளி வீசும்

தீவாய் = அனல் கக்கும்

வெயில் = வெயில் போல பிரகாசமாக உள்ள

உயிர்க்கும் வெள் வேலோய்! = வெண்மையான வேலை கொண்டவனே

தயரதன் இறந்ததற்கு இராமன் எந்த விதத்திலும் காரணம் அல்ல. கானகம் போ என்று சொன்னவுடன்  மறு பேச்சு சொல்லாமல் கிளம்பி விட்டான். இருந்தும், தயரதன் இறந்ததற்கு தான் காரணம் என்று இராமன் நினைக்கிறான்.

கைகேயி காரணம், பரதன் காரணம், கூனி காரணம் என்று சொல்லவில்லை. அறிவின் உச்சம் உலகில் உள்ள அனைத்து தவறுகளுக்கும் தானும் ஏதோ ஒரு விதத்தில்  காரணம் என்று அறிவது.

மதத்தின் அடிப்படையில்  ஏதோ ஒரு தீவிரவாதி எங்கோ ஒரு கொடிய செயலை  செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். மதப் பற்று உள்ள எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அந்த கொடுமைக்கு காரணம் என்று அறிய வேண்டும். "நான் செய்ய வில்லை" என்பது சரியான காரணம் அல்ல. அந்த கொடுமைக்கு  மதம் தான் காரணம் என்றால் , மத கோட்பாடுகளை பின் பற்றும், அது சரி என்று நினைக்கும் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அதற்கு காரணம்.


இரண்டு நாடுகள் எங்கோ சண்டை போடுகின்றன என்று வைத்துக் கொள்வோம். தேசப் பற்று கொண்ட எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அதற்கு காரணம். பொறுப்பு. நான் என் நாட்டின் மேல் கொண்ட அபிமானத்துக்கும் ஏதோ  வேறு இரண்டு நாடுகள் சண்டை போட்டுக் கொள்வதற்கும் என்ன சம்பந்தம்  என்று கேட்டால், ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். தேசத்தின் மேல் கொண்ட பற்று , மற்ற தேசத்தின் மேல் வெறுப்பாக, பகையாக மாறுகிறது.

அது முதலாவது செய்தி.

இரண்டாவது,  துக்கம் வந்தால் அதை வெளிக் கொட்ட வேண்டும். மனதுக்குள் வைத்து புளுங்க கூடாது. அழுது, புலம்பி அதை வெளிப்படுத்த வேண்டும்.

இராமன் புலம்பிய செய்தி இராமாயணம் என்ற பெரிய காப்பியத்தில் ஒரு முக்கியம் இல்லாத செய்தி. கம்பர் அதை சொல்லாமல் விட்டு விட்டுப் போயிருக்கலாம். யாருக்குத் தெரிய போகிறது ? இருந்தும் வேலை மெனக்கெட்டு  இராமனின் புலம்பலை எழுதுகிறார் கம்பர்.

ஏன் ?

மகிழ்ச்சியைப் போல துக்கத்தையும் வெளிப் படுத்த வேண்டும். மனம் ஒரு நல்ல நிலையில் இருக்க உணர்ச்சிகளின் வெளிப்பாடு முக்கியம். அமுக்கி வைத்துக் கொண்டிருந்தால் அது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும்.

உணர்ச்சிகளை , பகிர்ந்து கொள்ளுங்கள்.

வாழ்வு சிறக்கும்.




Tuesday, April 25, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - மண் இடை விழுந்தான்

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - மண் இடை விழுந்தான் 


தன்னிடம் அரசை மீண்டும் தர கானகம் வந்த பரதனிடம் , தந்தை தயரதன் எப்படி இருக்கிறான் என்று இராமன் கேட்டான்.

"உன்னைப் பிரிந்த பிரிவு என்ற நோயாலும், என் தாய் கைகேயி கேட்ட வரம் என்ற எமனாலும் தந்தை இறந்து விண்ணகம் போனான் "  என்று பரதன் இராமனிடம் கூறினான்.

அப்படி சொன்னதுதான் தாமதம், அந்த சொல் முழுவதுமாகக் கூட காதில் நுழையவில்லை, அதற்குள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினால் போல துன்பம் அடைந்து கண்ணும் மனமும் காற்றாடி போல சுழன்று மயங்கி மண்ணில் விழுந்தான்.

பாடல்

‘விண் இடை அடைந்தனன் ‘
    என்ற வெய்ய சொல்,
புண் இடை அயில் எனச்
    செவி புகாமுனம்,
கண்ணொடு மனம் சுழல்
    கறங்கு போல ஆய்,
மண் இடை விழுந்தனன்
    வானின் உம்பரான்.

பொருள்

‘விண் இடை = வானகம்

அடைந்தனன் = அடைந்தான் (தயரதன்)

என்ற= என்ற

வெய்ய சொல் = கொடிய சொல்

புண் இடை = புண்ணில்

அயில் எனச் = வேல் புகுந்தார் போல

செவி புகாமுனம் = காதில் விழு முன்

கண்ணொடு = கண்ணோடு

மனம் சுழல் = மனமும் , சுழலும்

கறங்கு போல ஆய் = பட்டம் போல ஆகி

மண் இடை விழுந்தனன் = மண்ணில் விழுந்தான்

வானின் உம்பரான் = வானத்திற்கும் அப்பாற்பட்ட இடத்தை சேர்ந்தவன்


ஆண் என்பவன் வலிமையானவன்.. முரடன்.  மென்மையான உணர்வுகள் மிக குறைவாக உள்ளவன். சண்டையும், வேகமும், கோபமும், வலிமையும், இரத்தமும்  அவன் குறியீடுகள்.

அன்பு, காதல், நேசம், கண்ணீர், நெகிழ்வு அவனுக்கு அந்நியமான ஒன்று என்றே முத்திரை குத்தி வளர்க்கப் படுகிறான்.

அழும் ஆண்மகனை யாரும் விரும்புவதில்லை.

துன்பம் கண்டு துவளும் ஆண்மகன் பரிகசிக்கப் படுகிறான்.

எத்தனை துன்பம் வந்தாலும் , பாறை போல உறுதியாக நிற்க வேண்டும் என்பது அவனுக்கு  விதித்த விதி.

அது சரி அல்ல.

உணர்ச்சிகளை சரியான அளவில் கையாளத் தெரிய வேண்டும்.

அன்பு செலுத்த வேண்டிய இடத்தில் அன்பு செலுத்த வேண்டும்.

பணிந்து போக வேண்டிய இடத்தில் பணிந்து போக வேண்டும்.

தோற்க வேண்டிய இடத்தில் தோற்க வேண்டும்.  இராவணனை பற்றி சொல்ல வந்த கம்பர் , படுக்கை அறையில் கூட பணியாதவன் என்கிறார். படுக்கை அறையா வீரத்தைக் காட்டும் இடம் ? அன்பு காட்ட வேண்டிய இடத்தில் ஆணவத்தை காட்டுவது அரக்க குணம்.

அழுவதும், துன்பத்தில் துவ;ளுவதும் தவறொன்றும் அல்ல.

தந்தை இறந்தான் என்ற செய்தியைக் கேட்ட இராமன் மயங்கி விழுந்தான்  என்கிறான்  கம்பன்.

ஒரு வேளை ,  அப்படி சொல்லாமல் , தயரதன் இறந்த செய்தியைக் கேட்ட இராமன் , சிறிதும் கலங்காமல் இருந்தான். அன்றலர்ந்த மலர் போல இருந்தது அவன்  முகம் என்று எழுதி இருந்தால், எல்லோரும் அதை இரசித்து இருப்பார்கள். "பார், இராமன் எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் கலங்காமல் இருக்கிறான் ..." என்று அவனை பாராட்டி இருப்பார்கள்.

கம்பர் அப்படி சொல்லவில்லை. மயங்கி விழுந்தான் என்று  சொன்னார்.அருகில் இருந்த சீதை மயங்கி விழுந்தாள் என்று சொல்லவில்லை.  இராமன் மயங்கினான்.

பாசத்தின் உச்சம். தந்தை இறந்த துக்கத்தை தாங்க முடியவில்லை. அவன் மயங்கி விழுந்ததால் அவன் மேல் உள்ள மதிப்பு ஒன்றும் குறைந்து விடவில்லை.

ஆண்களுக்கு ஒரு பாடம். எப்போதும் ஒரு முரட்டு தன்மையோடேயே இருக்க வேண்டும் என்ற  கட்டாயம் இல்லை.

அழ வேண்டும் என்றால் அழுங்கள்.

துக்கம் தாளவில்லை என்றால் மயங்குவது கூட சரிதான்.

இவை எல்லாம் உணர்வுகளின் வெளிப்பாடு. உணர்ச்சிகளை அடக்கி வைப்பது புத்திசாலித்தனம் இல்லை.

ஆங்கிலத்தில் emotional intelligence என்று சொல்லுவார்கள்.

உணர்ச்சிகளை சரியாக கையாள பழக வேண்டும்.


Monday, April 24, 2017

குறுந்தொகை - நல்லை அல்லை

குறுந்தொகை - நல்லை அல்லை 



காதல், அது காலங்களை கடந்து மட்டும் அல்ல, காலங்களுக்கு முன்னாலும் நின்றிருக்கிறது.

குறுந்தொகை காலம்.

இரவு நேரம். நிலவு பால் போல் பொழிகிறது. தலைவி , கானகத்தில் காத்து இருக்கிறாள். தலைவன் வர வேண்டும். வருவான், வருவான் என்று காத்து இருக்கிறாள். நிலவு , பகல் போல் எங்கும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

அவள் நினைத்துப் பார்க்கிறாள்.

தலைவன் வரும் வழியில் பெரிய வேங்கை மரங்கள் இருக்கும். அந்த மரத்தில் இருந்து பூக்கள் உதிர்ந்து கிடக்கும் . அந்த மரத்தின் அடியில் சில பல பாறைகள் இருக்கும். அந்த பாறைகளின் மேலும் ஒரு சில பூக்கள் உதிர்ந்து இருக்கும். தூரத்தில் இருந்து பார்த்தால், பாறையும், அதன் மேல் இருக்கும் பூக்களும் நிலவொளியில் ஏதோ ஒரு புலிக் குட்டி இருப்பது போலத் தெரியும். தலைவன் அதைக் கண்டு தயங்கலாம் . ஒரு வேளை புலியாக இருக்குமோ என்று நிறுத்தி நிதானித்து வரலாம். அதனால் கால தாமதம் ஆகிறதோ என்று நினைக்கிறாள்.

அது மட்டும் அல்ல, இந்த நிலவு இப்படி வெளிச்சம் போட்டு காண்பித்தால்  தங்கள் களவு ஒழுக்கம் வெளிப்பட்டு விடுமே என்று அஞ்சுகிறாள். யாருக்கும் தெரியாமல் , தலைவன் பதுங்கி பதுங்கி வர வேண்டும். அதனால் கால தாமதம் ஆகிறதோ என்றும் நினைக்கிறாள்.

நிலவே, நீ ஏன் இப்படி பிரகாசமாக ஒளி வீசுகிறாய். நீ ஒன்றும் நல்லவள் இல்லை என்கிறாள்.

பாடல்

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் 
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை 
எல்லி வருநர் களவிற்கு 
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே. 


பொருள்

கருங்கால் = கரிய கால்களைக் கொண்ட மரத்தின் அடி வேர்)

வேங்கை = புலி

வீயுகு = (மலர்கள் ) வீழ்ந்த

துறுகல் =உறு கல் = பெரிய கல்

இரும்புலிக் = கொடிய புலி

குருளையிற் = குட்டியைப் போல

றோன்றுங் = தோன்றும்

காட்டிடை  = காட்டில்

எல்லி = இரவில்

வருநர் = வரும் அவர்

களவிற்கு = களவு ஒழுக்கத்துக்கு

நல்லை யல்லை = நல்லது அல்லை . நல்லவள் அல்லை

நெடு = நீண்ட

வெண் ணிலவே = வெண் நிலவே


அது நிலவுக்குச் சொன்னாலும், தலைவனுக்கும் சொன்னது தான்.

காடு  பயங்கரமான இடம். உண்மையிலேயே புலி இருந்தாலும் இருக்கும். யாரும் பார்த்து விடலாம். காலா காலத்தில் திருமணம் செய்து கொள்வோம் என்று சொல்லாமல்  சொன்னது.

அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.

எனக்கு இந்த பாடலை படிக்கும் போது ஒரு லேசான பதற்றமும், பரிதாப உணர்ச்சியும் வருகிறது.

காட்டில் ஒரு இளம் பெண்ணை வரச் சொல்லி விட்டு , கால தாமதம் செய்யும் தலைவன். நினைத்துப் பார்த்தால் , பதறத்தான் செய்கிறது மனம்.  கள்ளர் பயம், புலி பயம் அந்த பெண்ணுக்கு மட்டும் இருக்காதா ?

அவளுக்கு அவன் மேல் எவ்வளவு காதல் இருந்தால், இத்தனை ஆபத்தையும் பொருட்படுத்தாமல் இரவில் வந்து அவனுக்காக காத்திருப்பாள் ?

அது மட்டும் அல்ல, காலம் தாழ்த்தி வரும் அவன் மேல் அவளுக்கு கோபம் இல்லை. நல்லை இல்லை என்று நிலவை சாடுகிறாள்.

எந்தக்  காலத்தில் பெண்ணின் தவிப்பு ஆணுக்கு புரிந்திருக்கிறது ?

சங்க காலம் தொட்டு , இன்று வரை, பெண்ணை புரிந்து கொள்ளாமலே தான் ஆண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.




Sunday, April 23, 2017

திருக்குறள் - அறமும் அருளும்

திருக்குறள் - அறமும் அருளும் 


அருள் இல்லாதவன் செய்யும் அறம் என்பது தெளிவில்லாதவன் பெற்ற மெய் பொருள் போன்றது என்கிறார் வள்ளுவர்.

பாடல்

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்

பொருள்

தெருளாதான் = தெளிவு இல்லாதவன்

மெய்ப்பொருள் = உண்மையான ஞானத்தை

கண்டற்றால் = கண்டது

தேரின் = ஆராய்ந்தால்

அருளாதான் = அருள் இல்லாதவன்

செய்யும் அறம் = செய்யும் அறத்துக்கு ஒப்பானது

சில பேர் நிறைய தானம் தர்மம் செய்வார்கள். அந்த உதவிகளுக்குப் பின்னால் அருள்  மனம் இருக்காது. ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து தான் அந்த தானம் செய்வார்கள்.

 சரி, செய்து விட்டு போகட்டுமே. அருள் இல்லாவிட்டால் என்ன . உதவி செய்து விட்டுப் போகட்டுமே. எப்படி நினைத்து செய்தாலும் அறம் நல்லது தானே என்று நினைப்போம்.

அது சரி அல்ல.

ஒட்டு வாங்க பணம்  தருகிறார்கள். அந்த பணம் தானம் தான். இலவசம் தான். பணம் பெற்றுக் கொண்டவர்கள் , யார் பணம் தந்தார்களோ அவர்களுக்குத் தான்  ஓட்டு போடுவார்கள் என்று நிச்சயம் இல்லை.  எனவே,அந்த பணம் தானம் தான்.

அது சரியா ?

அப்படி தானமாக பணம் தந்தவன், ஆட்சிக்கு வந்தால் தகாதன  செய்வான்.

சரி, அது போகட்டும். அரசியலை விட்டு  விடுவோம்.

அருள் இல்லாமல் ஒருவன் உதவி செய்தால், மறு உதவி எதிர் பார்க்காவிட்டால் கூட, எப்போதாவது சொல்லி காண்பிப்பான். "உனக்கு அன்று  அப்படி உதவி செய்தேனே " என்று  பலர் முன்னிலையில் சொல்லுவான். நமக்கு தர்ம சங்கடமாக இருக்கும்.

அருள் இல்லாதவன் செய்யும் அறம் ஆபத்தானது.

எவ்வளவு ஆபத்தானது என்றால் ,

தெளிந்த அறிவு இல்லாதவன் பெற்ற மெய் அறிவு போன்றது.

அது என்ன உதாரணம்.

தெளிந்த அறிவு இல்லாதவன் பெற்ற மெய் ஞானத்தால் என்ன ஆபத்து ?

ஏதோ ஓரிரு புத்தகங்களை படித்து விட்டு எல்லாம் அறிந்த மேதாவி போல  சிலர்  எல்லா பிரச்சனைகளுக்கும் வழி சொல்வார்கள். அவர்கள் சொல்வதை கேட்டு  நடந்தால் , அது ஆபத்தில் தான் போய் முடியும்.

ஒன்றும் இல்லை, நீங்கள் இருக்கும் whatsapp group இல் , உங்களுக்கு உடலில் ஏதோ ஒரு  வலி என்று சொல்லிப் பாருங்கள். தலை வலி, கால் வலி என்று சொல்லிப் பாருங்கள். உடனே எத்தனை பேர் எத்தனை மருந்து சொல்கிறார்கள் என்று. மருத்துவம் சம்பந்தமாக ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக  படித்திருப்பார்கள், கேள்வி பட்டிருப்பார்கள். அவ்வளவு தான், எல்லாம் படித்த , அனுபவம் வாய்ந்த மருத்துவர் மாதிரி மருந்து சொல்ல ஆரம்பித்து  விடுவார்கள்.

மருத்துவம் என்று இல்லை. எந்த பிரச்சனை என்றாலும் அதுக்கு வழி சொல்ல கிளம்பி விடுவார்கள்.

தெளிவு இல்லாதவன் என்றால் அரை குறை அறிவு. அரை வேக்காட்டு அறிவு உள்ளவன் என்று அர்த்தம். அது ஆபத்தில் கொண்டு போய் முடியும்.

ஆன்மீகமாக இருக்கட்டும், அறிவியலாக இருக்கட்டும், எந்தத் துறையாக வேண்டுமானாலும்  இருக்கட்டும். அரைகுறை அறிவு ஆபத்துதான்.

அது போல அருள் இல்லாதவன் செய்யும் அறம் , அவனுடைய அருளற்ற தன்மையினால் , முன் செய்த அறம் அழிந்து போகும் அல்லது அழிக்கப்படும்.

கொடுக்கும் போது , இது என் பணம், என் செல்வம் என்று நினைத்துக் கொடுக்காதீர்கள். இந்த அளவுக்கு தானம் செய்ய செல்வத்தைத் தந்த இறைவனை வாழ்த்தி தானம் செய்யுங்கள் என்கிறார்  அருணகிரிநாதர்.

முருகன் எனக்கு  கொடுத்தான்,நான் எல்லா உயிர்களுக்கும் அதை  கொடுக்கிறேன் என்று நினைத்து, முருகனை வாழ்த்தி தானம்  செய்யச்  சொக்கிறார்.

  வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.


அருளை முதலில் மனதில் வையுங்கள், அப்புறம் தானம் செய்யுங்கள்.

தெளிவு பிறக்கும் வரை,  உங்கள்  வெளிப் படுத்தாதீர்கள்.


Saturday, April 22, 2017

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - அறமும் கருணையும்

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - அறமும் கருணையும் 


அரசை மீண்டும் தரவந்த பரதனை காண்கிறான் இராமன். பரதனின் தவ கோலமும், அவன் அழுத சிவந்த கண்களும் இராமனின் மனதை நெகிழ வைக்கிறது. பரதன் இராமனின் காலில் விழுகிறான். விழுந்த பரதனை தூக்கி தழுவிக் கொள்கிறான்.

"பெருமூச்சு விட்டு, கண்களில் இருந்து நீர் அருவியாக பாய்ந்து மார்பில் விழ, பரதனை கட்டிப் பிடித்துக் கொண்டான் இராமன். அறத்தின் இருப்பிடமான பரதனை , கருணையின் இருப்பிடமான இராமன் தழுவிக் கொண்டான் "

பாடல்

அயா உயிர்த்து, அழு கண் நீர்
    அருவி மார்பிடை
உயா உற திரு உளம்
    உருகப் புல்லினான்,
நியாயம் அத்தனைக்கும் ஓர்
    நிலயம் ஆயினான்,
தயா முதல் அறத்தினைத்
    தழீஇயது என்னவே.


பொருள்

அயா = தளர்ந்து

உயிர்த்து=  மீண்டும் உயிர் பெற்று

அழு கண் நீர் = அழுகின்ற கண் நீர்

அருவி = அருவி போல

மார்பிடை = மார்பில் விழ

உயா உற = வருத்தம் உற

திரு உளம் உருகப் = மனம்  உருக

புல்லினான் = அணைத்துக் கொண்டான்

நியாயம் = நியாயம்

அத்தனைக்கும் = அனைத்திற்கும்

ஓர் = ஒரு

நிலயம் ஆயினான் = இருப்பிடம் ஆயினான்

தயா முதல் = கருணையில் முதல்வனான

அறத்தினைத் = அறத்தினை

தழீஇயது = தழுவியது

என்னவே = போல

அரசை ஏற்றுக் கொள்ளவது அறம் அல்ல என்று உறுதியாக நம்பினான். பரதனுக்கு தெரிந்த   அறம் இராமனுக்குத் தெரியாதா ?

அறம் அல்லாத ஒன்றை இராமன் செய்வானா ?

பரதன் சொல்வது  சரி என்று படுகிறது. அப்படி என்றால் இராமன் செய்தது சரி அல்ல  என்று ஆகும்.

யார் வழியைப் பின் பற்றுவது என்ற குழப்பம் படிப்பவர்களுக்கு ஏற்படும்.

கம்பர் அதை சரி செய்கிறார்.

பரதன் அறத்தின் வழி நின்றான்.

ஆனால், இராமன் கருணையின் வழி நின்றான். கருணையே வடிவாக இருந்தான். கருணையின் பிறப்பிடம் இராமன் என்று கம்பன் காட்டுகிறான்.

பரதனும், இராமனும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு இருந்தது அறமும் கருணையும்  ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டிருந்தது போல இருந்ததாம்.

அறம் உயர்ந்ததுதான். கருணை அதையும் விட உயர்ந்தது.

கருணைக்கு அறம் , அறம் அல்லாதது என்றெல்லாம் தெரியாது. இவற்றை எல்லாம் கடந்தது கருணை.

ஒரு தாய் பிள்ளையை கடிந்து வைக்கிறாள் அல்லது அடிக்கிறாள். திட்டுவதும் அடிப்பதும் அறமா என்றால் இல்லைதான். ஆனால், அவள் செய்வது அளவு கடந்த காதலால். குழந்தையின் மேல் உள்ள கருணையால்.

 தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை 
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே 
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன் 
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே

என்பார் குலசேகர ஆழ்வார்.

தாய் அடித்தாலும் அவளின் அருளை நினைத்தே அழும் குழந்தை போல அழுதேன் என்கிறார்.

அறம் என்பது என்ன என்று படித்து அறிந்து கொள்ளலாம். அது பற்றி விவாதிக்கலாம். சரியா தவறா ஆராயலாம்.

கருணை என்பது விவாதத்துக்கு அப்பாற்பட்டது. விளக்க முடியாதது.

இராமனின் செயல்கள் கருணையில் இருந்தது பிறந்தவை என்று புரிந்து கொண்டால் , அவனின் பல செய்லகளை நாம் நீதி, நேர்மை, ஞாயம் என்ற பூத கண்ணாடி கொண்டு பார்க்காமல் இருப்போம். 

Wednesday, April 19, 2017

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - அழுத இராமன்

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - அழுத இராமன் 


குடும்பம் என்றால் எப்போதும் சந்தோஷம் மட்டும் தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. வருத்தம் இருக்கும், சோகம் இருக்கும், கவலை இருக்கும்.

அப்படி ஒரு வருத்தமான சூழ்நிலை வரும்போது என்ன செய்ய வேண்டும் ?

என்ன செய்கிறோம் ?

வருத்தம் பிள்ளைகளை தாக்கி விடக் கூடாது என்று அவர்களிடம் இருந்து மறைக்கிறோம். பிள்ளைகள் சந்தோஷமாக இருக்கட்டும் , நம்ம கஷ்டம் நம்மோடு போகட்டும் என்று நினைக்கிறோம்.

குடும்பத் தலைவன் அழலாமா ? அதுவும் மனைவியின் முன்னால் , பிள்ளைகள் முன்னால் ? அழுவது என்பது ஒரு பலவீனத்தின் வெளிப்பாடு அல்லவா ?

வருத்தத்தை விடுவோம். கணவன் செய்து விடுகிறான். அதனால் மனைவிக்கு வருத்தம். கணவன் அதை உணர்கிறான். அவளிடம் மன்னிப்பு கேட்க அவன் மனம் இடம் தர மறுக்கிறது. "என்னை மன்னித்துக் கொள் , நான் தவறு செய்து விட்டேன் ...உன்னை ரொம்ப கஷ்டப் படுத்தி விட்டேன் ..இனிமேல் இப்படி நடக்காது " என்று அவள் கையை பிடித்துக் கொண்டு கண் கலங்கி சொல்லும் கணவன்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் ?

ஆண் என்பவன் அழ கூடாது என்று சொல்லியே வளர்க்கிறோம். உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாமல் ஆண் குழம்புகிறான். தவிக்கிறான். அடக்கப்பட்ட உணர்ச்சிகள் வேறு வழியில் வெளிப்படுகிறது.


இராமனைக் காண வந்த பரதனின் மெலிந்த உருவைக் கண்ட இராமன் வருந்தி அழுகிறான். ஐயோ , என் தம்பி இப்படி மெலிந்து உரு குலைந்து போய் விட்டானே என்று உருகுகிறான்.

காப்பிய நாயகன். மிக வலிமையான இராமன் , அன்பில், காதலில் உருகுகிறான். கண்ணில் இருந்து கண்ணீர் வழிகிறது.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் என்பார் வள்ளுவர்.

அளவு கடந்த அன்பினால் , இராமன் கண்கள் நீரை வார்க்கின்றன.

பாடல்

‘உண்டுகொல் உயிர்?’ என ஒடுங்கினான் உருக்
கண்டனன்; நின்றனன் - கண்ணன் கண்எனும்
புண்டரீகம் பொழி புனல், அவன் சடா
மண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே.


பொருள்

‘உண்டுகொல் உயிர்?’ = உயிர் இருக்கிறதா ? பரதனின் உடலில் உயிர் இருக்கிறதா ?

என ஒடுங்கினான் = என்று சந்தேகப் படும் அளவுக்கு மெலிந்த

உருக் = (பரதனின்) உருவத்தைக்

கண்டனன்; = (இராமன்) கண்டான்

நின்றனன் = திகைத்து நின்றான்

கண்ணன் = அழகிய கண்களைக் கொண்ட இராமன்

கண்எனும் = கண்கள் என்ற

புண்டரீகம் = தாமரை மலர்கள்

பொழி புனல் = அருவி போல பெருகிய நீர்

அவன் =  பரதனின்

சடா மண்டலம் = முடி நிறைந்த தலையின் மேல்

நிறைந்து போய் = நிறைந்து

வழிந்து சோரவே = வழிந்து விழுந்தது .


இராமன் கால்களில் பரதன் விழுந்தான் என்று முந்தைய பாடலில் பார்த்தோம். அப்படி விழுந்த பரதனின் தலையில் இராமனின் கண்ணில் இருந்து  வழிந்த நீர் விழுந்து நனைத்தது.

ஆண் அழுவது தவறு இல்லை. ஆண் அன்பை வெளிப்படுத்துவது தவறு இல்லை.

இராமன் அழுதான் என்பதால் அவன் வீரமோ, பெருமையோ குறைந்து விடவில்லை. அது இன்னும் பொலிவு பெறுகிறது.

பரதன் அழுகிறான். இராமன் அழுகிறான்.

ஆண் பிள்ளைகள் அழுவதை பரிகாசம் பண்ணி, அதை அடக்கி அடக்கி அவர்களை  முரட்டு பிள்ளைகளாக வளர்க்கிறோம். அவர்களுக்குள்ளும் அன்பு இருக்கிறது. அந்த அன்பு வெளிப்படும் போது கண்ணீர் வரும். கண்ணீர் விட பழக்கம் இல்லை என்றால் அன்பை வெளிப்படுத்துவதும் பழக்கும் இல்லாமல் முரடாக, கரடு முரடாக வளர்வார்கள்.

அதிகாரம் செய்வதும் , மிரட்டுவதும் மட்டும்தான் ஆண்மை என்று நினைத்துக்கொண்டு வளர்வார்கள். அது சரியா ?

சிந்திப்போம்.




Tuesday, April 18, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - அறம்தனை நினைத்திலை

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - அறம்தனை நினைத்திலை 


கானகத்தில் இராமனை கண்டு அவனிடம் அரசை மீண்டும் தர பரதன் வருகிறான். இராமனும் பரதனும் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.

அவர்கள் பேசியதை கம்பன் சொல்கிறான்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

அவர்கள்நீ என்ன பேசி இருப்பார்கள் என்று நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

"அண்ணா", "தம்பி" என்று ஒருவரை ஒருவர் விளித்து கட்டி பிடித்து இருக்கலாம்.  இலக்குவன் மற்றும் சீதையின் நலம் விசாரித்து இருக்கலாம். "என்ன இப்படி செய்து விட்டீர்கள் அண்ணா. நீங்கள் உடனே அயோத்திக்கு வர வேண்டும் " என்று பரதன் சொல்லி இருக்கலாம்.....என்றெல்லாம் நினைப்போம். நாமாக இருந்தால் அப்படித்தான் பேசி இருப்போம்.

பரதன் அப்படி பேசவில்லை.

இராமன் மேல் குற்றக் கணைகளை தொடுகிறான்.

"நீ அறத்தை நினைக்கவில்லை, அருள் என்பதை விட்டு விட்டாய் , அரச முறை என்ற ஒன்றை கை விட்டாய்" என்று இராமன் மேல் நேரடியாக குற்றம் சுமத்துகிறான்.

அன்பு, அண்ணன் மேல் கொண்ட பாசம் அடுத்து வருகிறது.

இதையெல்லம் சொல்லிவிட்டு, இராமன் திருவடிகளில் விழுகிறான். இறந்த தன் தந்தையே நேரில் வந்தது போல இராமனை நினைத்து , தன்னை மறந்து அவன் கால்களில் விழுகிறான்.

பாடல்

‘அறம்தனை நினைந்திலை; அருளை நீத்தனை;
துறந்தனை முறைமையை’ என்னும் சொல்லினான்,
மறந்தனன், மலர்அடி வந்து வீந்தனன் -
இறந்தனன் தாதையை எதிர்கண்டென்னவே.


பொருள்

‘அறம்தனை நினைந்திலை; = அறத்தை நீ நினைக்கவில்லை

அருளை நீத்தனை = அருளை விட்டு நீங்கி விட்டாய்

துறந்தனை முறைமையை = அரச முறை என்ற ஒன்றை துறந்து விட்டாய்

என்னும் சொல்லினான் = என்று சொல்லியவன்

மறந்தனன் = தன்னை மறந்து

மலர்அடி வந்து வீந்தனன் = இராமனிடம் வந்து அவன் திருவடிகளில் வீழ்ந்தான்

இறந்தனன் = இறந்த தன்

தாதையை = தந்தையை

எதிர்கண்டென்னவே = எதிரில் கண்டது போல .

அறம் ஒன்றே பரதனின் மனதில் எப்போதும் நின்றது. இராமன் மேல் கொண்ட அன்பையும்  காதலையும் தாண்டி முதலில் வந்து நிற்பது அறம் பற்றிய  எண்ணமே.

பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் தவறு எது என்றால் பிள்ளைகள் தவறு செய்யும் போது  கடிந்து சொல்வது கிடையாது. கண்டிப்பது கிடையாது. பாவம், சின்ன பிள்ளை தானே , போக போக சரியாகி விடும் என்று பிள்ளைகள் மேல் கொண்ட அன்பினால் செய்யும் தவறுகளை திருத்துவது இல்லை.

கணவன் மனைவி உறவிலும் அதே சிக்கல் தான். கணவனோ மனைவியோ தவறான  ஒன்றைச் செய்தால் உடனே அதை தடுத்து நிறுத்த வேண்டும். அவர்கள் மனம் புண்படுமே என்று தவறை சகிக்கக் கூடாது. எது செய்தாலும் அதற்கு  ஒத்துப் போவது என்பது அன்பை வெளிப்படுத்தும் ஒரு வழி அல்ல.  தவறு யார் செய்தாலும்  அது திருத்தப் பட வேண்டியதே.


பரதனுக்கு இராமன் மேல் அளவு கடந்த அன்பு உண்டு. இராமனை தன்னுடைய தந்தையாகவே நினைக்கிறான். இருந்தாலும் அவன் செய்த தவற்றினை தயங்காமல் சுட்டிக் காட்டுகிறான்.

மூன்று தவறுகளை சுட்டிக் காட்டுகிறான்.

அறம் தனை மறந்தனை = அறம் என்பது நீதி, ஒழுக்கம், உயர்ந்தோர் சொல்லியது...அவற்றை எல்லாம் மறந்து விட்டாய். அப்போது கூட இராமன் மேல் மென்மையாக   குற்றம் சொல்கிறான். அறம் பற்றி இராமன் அறியாதவன் அல்ல. தெரியும் , ஆனால் மறந்து விட்டாய் என்கிறான். அறம் தனை  வலுவினை என்று சொல்லி இருக்கலாம். சொல்ல வில்லை. குற்றம் சொல்ல வேண்டும் என்றால்  அதை கத்தி சொல்ல வேண்டும், கோபத்தோடு சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதை மென்மையாகவும் சொல்லலாம் என்று பரதன் சொல்லித் தருகிறான்.

அருளை நீங்கினை = என் மேலும், அயோத்தி மக்கள் மீதும் உள்ள அருளை விட்டு நீங்கி விட்டாய். தொடர்பு உடையவர்கள் மேல் செலுத்துவது அன்பு. தொடர்பு இல்லாதவர்கள் மேல் செலுத்துவது அருள். உன் குடி மக்கள் மேல் உள்ள அருளை விட்டு நீங்கி விட்டாய்.

துறந்தனை முறைமையை = சரி அறம் தான் மறந்து விட்டது. அருள் இல்லை என்றே வைத்துக் கொண்டாலும் அரச முறை என்று ஒன்று இருக்கிறதே. அதை  எப்படி நீ விட முடியும். மூத்த மகன் அரசு ஆள்வது என்பது ஒரு முறை. அதை எப்படி நீ துறக்க முடியும் என்று கேட்கிறான்.

சரி , இவ்வளவு கடுமையான குற்றங்களை சொல்கிறானே. அவனுக்கு இராமன் மேல் கோபம் இருக்குமோ ? வெறுப்பு இருக்குமோ ? என்று நாம் நினைப்போம்.

இல்லை. அளவு கடந்த காதல்.

தன்னை மறந்து அவன் கால்களில் விழுகிறான். தந்தை போல அவன் மேல் மரியாதை  வைக்கிறான்.

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. குற்றம் சொல்வதாக இருந்தாலும், மென்மையாகச் சொல்லலாம். அன்போடும், மரியாதையோடும் சொல்லலாம். குற்றம் சொல்வது என்றால் கோபத்தோடும், வெறுப்போடும், கடுமையான சொற்களோடும் தான் பேச வேண்டும் என்று இல்லை.

பேசிப் பழகுவோம்.