Thursday, July 13, 2017

கம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - அவன் துணை மலர்த் தடக்கை பற்றினான்

கம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - அவன் துணை மலர்த் தடக்கை பற்றினான் 


தயரதன் சொல் கேட்டு கானகம் வந்த இராமனை மீண்டும் அரசை ஏற்றுக் கொள்ளும்படி பரதனும், பின் வசிட்டனும் வேண்டிய பின்னும், இராமன் மறுத்து விடுகிறான். பரதன் பிடிவாதம் பிடிக்கிறான்.

இறுதியில் வானவர் வந்து இராமன் கானகம் போவதும், பரதன் நாடாள்வதும் கடமை என்று சொல்லி விடுகிறார்கள்.

இராமன் பரதனிடம் சொல்கிறான்

"வானவர்கள் சொல்லி விட்டார்கள். அவர்கள் சொல்லை மீறக் கூடாது. நான் உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நீ இந்த நாட்டை ஆள்"

என்று பரதனின் இரு கைகளையும் பற்றிக் கொண்டு சொல்கிறான்

பாடல்

வானவர் உரைத்தலும்,
    ‘மறுக்கற்பாலது அன்று;
யான் உனை இரந்தனென்,
    இனி என் ஆணையால்
ஆனது ஓர் அமைதியின்
    அளித்தி பார் ‘எனா,
தான் அவன் துணை மலர்த் தடக்கை பற்றினான்.
  

பொருள்


வானவர் = தேவர்கள்

உரைத்தலும் = சொன்ன பின்னால்

‘மறுக்கற்பாலது அன்று = அதை மறுக்க முடியாது

யான் உனை இரந்தனென் = நான் உன்னை கேட்டுக் கொள்கிறேன்

இனி என் ஆணையால்  = இனி மேல் என் ஆணையால்

ஆனது ஓர் அமைதியின் = உனக்கென்று அமைந்து விட்ட

அளித்தி பார் ‘எனா, = இந்த உலகை ஆள் என்று

தான் = இராமன்

அவன் = பரதனின்

துணை  = இரண்டு

மலர்த் = மலர் போன்ற

தடக்கை = பெரிய கைகளை

பற்றினான் = பற்றிக் கொண்டான்


கண்ணில் நீர் வரவழைக்கும் பாடல்

நினைத்துக் கூட பார்க்க முடியாத இடம். கற்பனை கூட செய்ய முடியாத சூழ்நிலை.

எவ்வளவோ இருக்கிறது இந்தப் பாடலில் அறிந்து கொள்ள.

அண்ணன் சொல்லி விட்டான்.

குல குருவும் மௌனமாகி விட்டார் . அப்படி என்றால் அவரும் ஏற்றுக் கொண்டு விட்டார் என்று தான் அர்த்தம்.

இப்போது தேவர்களும் கூறி விட்டார்கள்.

பரதனுக்கு வேறு வழியில்லை.

இராமன் கை ஓங்கி இருக்கிறது. "நான் தான் அப்பவே சொன்னேனே ...பார் இப்போது தேவர்களும் சொல்லி விட்டார்கள். நீ போய் நாட்டை ஆள் " என்று சொல்லி இருக்கலாம்.

இராமன் அப்படி சொல்லவில்லை.

"நான் உன்னிடம் பிச்சை கேட்கிறேன்' என்று கூறுகிறான்.

"யான் உனை இரந்தனென்". இரத்தல் என்றால் பிச்சை கேட்டல், கெஞ்சி கேட்டல்.

அவ்வளவு தூரம் கீழே இறங்கி வருகிறான் இராமன்.

பல வீடுகளில் கணவன் மனைவி உறவுச் சிக்கல்கள் இருக்கலாம். கொஞ்சம் வாதம், பிரதி வாதம் செய்த பின், யாரோ ஒருவர் சொன்னது சரியாகவும் மற்றவர் சொன்னது தவறாகவும் இருக்கலாம்.

உடனே, வென்றவர் , "நான் தான் அப்பவே சொன்னேனே. நீ கேட்கவில்லை. பாத்தியா இப்ப..." என்று தோற்றவர் மனதை மேலும் குத்தி புண் படுத்துவதை கண்டிருக்கிறோம்.

அப்படி செய்யக் கூடாது .

வென்றவர் , தோல்வி அடைந்தவர் மனதுக்கு ஆறுதலாக பேசினால் , தோற்றவர் கூட  தோல்வியை பெரிதாக நினைக்காமல் அந்த அன்பை நினைத்து செயல்படுவார்கள்.

இது கணவன் மனைவி உறவில் மட்டும் அல்ல, பெற்றோர் பிள்ளைகள் , அதிகாரி ஊழியர் உறவு என்று எல்லா இடத்திலும் வெற்றி பெற்றவர் ஆணவம் கொள்ளாமல் , தோற்றவர் மனதுக்கு மருந்து போடுவது போல பேச வேண்டும்.

அடுத்தது, பரதனின் இரண்டு கைகளையும் பற்றிக் கொண்டு கேட்கிறான். அவ்வளவு பாசம் தம்பி மேல்.

தான் காட்டுக்குப் போகவும், தம்பிக்கு நாட்டைத் தரவும் இந்த கெஞ்சல்.

உதவி என்று கேட்கும் போது , எவ்வளவு இனிமையாக கேட்கிறான் இராமன்.

ஏதோ, அரண்மனையில் , சுகமாக இருந்து கொண்டு இவ்வளவு அன்பாக பேசவில்லை.

இருக்கும் இடம் கானகம். சற்று முன் தான் தந்தை இறந்த செய்தியை கேள்விப் படுகிறான் இராமன். தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி கடன்களை செய்கிறான். இன்னும் பதினாலு வருடம் காட்டில் இருக்க வேண்டும்.

சோகமான இடம். இறுக்கமான சூழ்நிலை. கடினமான காலம்.

இருந்தும் இராமனின் சொல்லிலும், செயலிலும் அவ்வளவு கனிவு.

"நாட்டைப் பார்த்துக் கொள் " என்று பரதனின் கைகளை பிடித்துக் கொண்டு கெஞ்சுகிறான்.

முடியுமா ?

முடிந்த வரை முயற்சி செய்வோம். உறவுகளோடு அன்போடு பழகுவோம். இனிமையாக பேசுவோம். பேச்சிலும், செயலிலும் இனிமையை வெளிப் படுத்துவோம்.

வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_13.html

Wednesday, July 12, 2017

கம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - ஏத்த அரும் பெருங் குணத்து இராமன்

கம்ப இராமாயணம் -  திருவடி சூட்டுப் படலம் - ஏத்த அரும் பெருங் குணத்து இராமன்


தயரதன் ஆணை ஏற்று கானகம் வந்த இராமனை மீண்டும் நாட்டுக்கு வந்து ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி பரதன் வேண்ட, அதை இராமன் மறுக்க, வசிட்டனும் பரதன் சொன்னதை சொல்ல, அதற்கும் இராமன் மறுக்க...யார் வேண்டுமானாலும் நாட்டை ஆண்டு கொள்ளுங்கள், நான் காட்டிலேயே இருக்கப் போகிறேன் என்று பரதன் இருந்து  விடுகிறான்.

இக்கட்டான சூழ்நிலை.

அப்போது தேவர்கள் அங்கே வருகிறார்கள்.

வந்தவர்கள் ....

"போற்றுதலுக்குரிய பெரிய குணங்களை உடைய இராமன் அவனுடைய தந்தையின் சொல் கேட்டு நடக்கவும், பரதா நீ அந்த நாட்டை 14 ஆண்டுகள் ஆளவும், இது உங்கள் இருவரது கடமையும் ஆகும் "

என்றனர்.

பாடல்


ஏத்த அரும் பெருங் குணத்து இராமன் இவ் வழிப்
போத்து அரும் தாதை சொல் புரக்கும் பூட்சியான்;
ஆத்த ஆண்டு ஏழினொடு ஏழும் அந் நிலம்
காத்தல் உன் கடன்; இவை கடமை’ என்றனர்.


பொருள்

ஏத்த = போற்றுதலுக்குரிய

அரும் = அருமையான

பெருங்  = பெருமை நிறைந்த

குணத்து = குணங்களை கொண்ட

இராமன் = இராமன்

இவ் வழிப் = இந்த வழி

போத்து = போய்

அரும் = அரிய அல்லது அருமையான

தாதை சொல்  = தந்தையின் சொல்லை

புரக்கும் = காக்கும்

பூட்சியான் = மேற்கொண்டுள்ளான் ;

ஆத்த = அந்த

ஆண்டு  = ஆண்டுகள்

ஏழினொடு ஏழும் = பதினான்கு ஆண்டுகளும்

அந் நிலம் = அயோத்தியை

காத்தல் உன் கடன்; = காப்பது உன் கடைமை

இவை கடமை’ = இவை உங்களது கடமைகள்

என்றனர் = என்றனர்.

இவை எல்லாம் கடமைகள்.

பெற்றோரின் சொல்லை கேட்பது என்பது பிள்ளைகளின் வசதிப்படி அல்ல. கேட்க வேண்டியது கடமை.

அது மட்டும் அல்ல, பெற்றோரின் பேச்சை ஒரு பிள்ளை கேட்டால், மற்ற உடன் பிறப்புகள்  அவனுக்கு உதவ வேண்டும் என்பதும் கடமை.

இலக்குவனை கானகம் போ என்று யாரும் சொல்லவில்லை.  அவன் தானே கிளம்பி விட்டான்.

பரதன் கொஞ்சம் முரண்பட்டான்.

தேவர்கள் வந்து அவனுக்கு எடுத்துச் சொல்கிறார்கள்.

இராமன் , தந்தையின் சொல்லை கேட்டு கானகம் போவதால், நீ நாட்டை ஆள வேண்டும் என்பது உன் கடமை என்று பரதனிடம் கூறுகிறார்கள்.

பெற்றோர் சொல்லை கேட்டு பிள்ளைகள் வாழ வேண்டும் என்று பாரம்பரியம் இருந்தது இந்த நாட்டில்.

இந்த தேவர்கள் ஏன் வருகிறார்கள், அதற்குப் பின் என்ன அர்த்தம் என்று இந்த படலத்தின் முடிவில்  சிந்திக்க இருக்கிறோம். அது மட்டும் அல்ல, ஏன் திருமால் இப்படி  அவதாரம் எடுத்து சங்கடப் படவேண்டும். பேசாமல், நேரடியாகவே வந்து  இராவணனிடம் சண்டையிட்டு ஒரு நொடியில் வேலையை தீர்த்து இருக்கலாம் அல்லவா ? இது என்ன கொக்கு தலையில் வெண்ணையை வைத்து  அதை பிடிப்பது போல உள்ளது ?


இதற்கெல்லாம் என்ன காரணம் ?

எவற்றையும் இந்த படல முடிவில் சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_12.html


Tuesday, July 11, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - செவ்வழித்து அன்று நம் செயல் - பாகம் 2

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - செவ்வழித்து அன்று நம் செயல் - பாகம் 2 


தயரதன் ஆணை ஏற்று கானகம் வந்த இராமனை மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் படி பரதன் வேண்டினான். இராமன் மறுத்தான். வசிட்டன் சொல்லிப் பார்த்தான். அப்போதும் இராமன் ஏற்கவில்லை. இறுதியில், "யாராவது நாட்டை ஆண்டு கொள்ளுங்கள். நான் இங்கேயே இருந்து விடுகிறேன் " என்று பரதன் அடம் பிடிக்கிறான்.

என்ன செய்வது என்று எல்லோரும் குழம்பி நிற்கிறார்கள்.

அப்போது, தேவர்கள் அங்கு கூடி யோசித்தார்கள்

"இப்போது பரதன் இராமனை கூட்டிக் கொண்டு போய் விட்டால், நம் காரியம் ஒழுங்காக நடக்காது என்று எண்ணினர்"

பாடல்

அவ் வழி, இமையவர் அறிந்து கூடினார்,
‘இவ் வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல்,
செவ் வழித்து அன்று நம் செயல்’ என்று எண்ணினார்.
கவ்வையர், விசும்பிடைக் கழறல் மேயினார்;

பொருள்

அவ் வழி =  அந்த இடத்தில் ,

இமையவர் = கண்களை இமைக்காத தேவர்கள்

அறிந்து கூடினார் = நடப்பதை அறிந்து கூடினார்கள்

‘இவ் வழி = இந்த வழியில்

இராமனை = இராமனை

இவன் = பரதன்

கொண்டு ஏகுமேல் = அயோத்திக்கு கொண்டு சென்று விட்டால்
,
செவ் வழித்து அன்று  = நல்ல வழி அன்று

நம் செயல்’ = நம்முடைய செயல் (இராவணனை கொல்லும் செயல்)

என்று எண்ணினார் = என்று நினைத்தார்கள்

கவ்வையர் =  கவலை உள்ளவர் ,

விசும்பிடைக் = வானத்திடை

கழறல் மேயினார் = பேசத் தொடங்கினார்கள்

தேவர்கள் வந்து என்ன சொன்னார்கள் ?

அடுத்த பிளாகில் பார்ப்போம்


============= பாகம் 2 =======================================


எடுத்த எந்த காரியத்தையும் வெற்றிகரமாக முடிக்க என்ன செய்ய வேண்டும் ?


காரியத்தை முடிக்க வேண்டும் என்ற உறுதி வேண்டும். 

பலருக்கு தோல்வி ஏன் வருகிறது என்றால், எடுத்த வேலையில் உறுதி கிடையாது. கொண்ட கொள்கையில் உறுதி கிடையாது. எதிலும் சந்தேகம். 

இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ, இது சரிதானா, இப்படி செய்யலாமா என்று ஆயிரம் சந்தேகங்கள். இப்படி சந்தேகப் பட்டுக் கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம் கிட்டாது. 

எண்ணித் துணிக கருமம் , துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு 

என்பார் வள்ளுவர். 

சரி, துணிந்து இறங்கி விட்டால் என்ன ஆகும் ?

இந்த உலகமே அப்படிப் பட்டவன் பின்  இந்த உலகமே நிற்கும். அவனுக்கு உதவி செய்யும். 

நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை சாதிக்கப் பிறந்திருக்கிறோம். அது நமக்குள் சதா சர்வ காலமும் ஒலித்துக் கொண்டே இருக்கும். நாம் என்ன வேலை செய்தாலும், நம் மனம் அந்த ஒன்றை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும். 

நாம் அதை தொடங்கும் வரை , நம் மனம் நம்மை தொடர்ந்து இழுத்துக் கொண்டே இருக்கும். 

கீதை அதை சுதர்மம் என்கிறது. 

நம் சுதர்மம் நமக்கு முன்னே பிறந்து நமக்காக காத்துக் கொண்டிருக்கும் என்பார் ஆச்சாரியா வினோபாபாவே. 

நாம் அதை தொடங்கியவுடன்,  அதன் பாதையில் செல்லத் தொடங்கியவுடன், இந்த உலகமே நமக்கு உதவி செய்ய பின் நிற்கும். 

இராமகிருஷ்ண இயக்கம் தொடங்கிய துறவிகளிடம் இருந்தது ஒரே ஒரு மாற்று உடைதான். அது மட்டும்தான் அவர்கள் சொத்து. ஆனால், அவர்கள் அந்த மிஷனை தொடங்கிய பின், எங்கிருந்தோ செல்வம் வந்து கொட்டியது. 

இராமனின் சுதர்மம், பெற்றோர் சொல் கேட்பது. 

அதற்கு பல தடங்கல்கள்.  அமைச்சர்கள், உடன் பிறந்த தம்பி, கல்வி கற்றுத்தந்த குரு  என்று பல தடைகள் வந்தாலும், தான் கொண்ட கொள்கையில் இராமன் தெளிவாக இருந்தான். 

அப்போது, தேவர்கள் வந்து அவனுக்கு உதவி செய்தார்கள்.

தேவர்கள் என்றால் ஏதோ தேவர்கள் வானில் இருந்து குதித்து வந்து உதவினார்கள் என்று எண்ணிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 

நீங்கள் உங்கள் நல்ல கொள்கையில் உறுதியாக இருந்தால், தெய்வமும் இறங்கி வந்து உங்களுக்கு உதவி செய்யும். 

நம்பிக்கை, உறுதி இரண்டும் வேண்டும். 

சந்தேகமே வேண்டாம். 

நமது புராண இதிகாசங்கள் மீண்டும் மீண்டும் இதைத்தான் பல்வேறு விதங்களில் சொல்கின்றன. 

அசரீரி வந்தது, கடவுள் நேரில் வந்து உதவினார் என்பதெல்லாம், கொண்ட செயலில் உறுதியாக இறங்கினால், தெய்வமும் உதவி செய்யும் என்பதை உணர்த்தவே. 


“Until one is committed, there is hesitancy, the chance to draw back, always ineffectiveness. Concerning all acts of initiative (and creation), there is one elementary truth, the ignorance of which kills countless ideas and splendid plans: that the moment one definitely commits oneself, then Providence moves too. All sorts of things occur to help one that would never otherwise have occurred. A whole stream of events issues from the decision, raising in one's favour all manner of unforeseen incidents and meetings and material assistance, which no man could have dreamt would have come his way. I have learned a deep respect for one of Goethe's couplets:
Whatever you can do, or dream you can, begin it.
Boldness has genius, power, and magic in it!”


― William Hutchison Murray


உங்கள் மனதுக்குள் நீண்ட காலமாக ஓடிக் கொண்டிருக்கும் அந்த எண்ணத்தை செயல்படுத்த உறுதியாக இறங்குங்கள்.

இராமன் உறுதியாக நின்றான். வான் உலகம் இறங்கி வந்தது.

நீங்களும் இறங்குங்கள்.

வையமும், வானமும் உங்கள் பின்னால் நிற்கும்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/2.html

Monday, July 10, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - செவ்வழித்து அன்று நம் செயல்

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - செவ்வழித்து அன்று நம் செயல் 


தயரதன் ஆணை ஏற்று கானகம் வந்த இராமனை மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் படி பரதன் வேண்டினான். இராமன் மறுத்தான். வசிட்டன் சொல்லிப் பார்த்தான். அப்போதும் இராமன் ஏற்கவில்லை. இறுதியில், "யாராவது நாட்டை ஆண்டு கொள்ளுங்கள். நான் இங்கேயே இருந்து விடுகிறேன் " என்று பரதன் அடம் பிடிக்கிறான்.

என்ன செய்வது என்று எல்லோரும் குழம்பி நிற்கிறார்கள்.

அப்போது, தேவர்கள் அங்கு கூடி யோசித்தார்கள்

"இப்போது பரதன் இராமனை கூட்டிக் கொண்டு போய் விட்டால், நம் காரியம் ஒழுங்காக நடக்காது என்று எண்ணினர்"

பாடல்

அவ் வழி, இமையவர் அறிந்து கூடினார்,
‘இவ் வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல்,
செவ் வழித்து அன்று நம் செயல்’ என்று எண்ணினார்.
கவ்வையர், விசும்பிடைக் கழறல் மேயினார்;

பொருள்

அவ் வழி =  அந்த இடத்தில் ,

இமையவர் = கண்களை இமைக்காத தேவர்கள்

அறிந்து கூடினார் = நடப்பதை அறிந்து கூடினார்கள்

‘இவ் வழி = இந்த வழியில்

இராமனை = இராமனை

இவன் = பரதன்

கொண்டு ஏகுமேல் = அயோத்திக்கு கொண்டு சென்று விட்டால்
,
செவ் வழித்து அன்று  = நல்ல வழி அன்று

நம் செயல்’ = நம்முடைய செயல் (இராவணனை கொல்லும் செயல்)

என்று எண்ணினார் = என்று நினைத்தார்கள்

கவ்வையர் =  கவலை உள்ளவர் ,

விசும்பிடைக் = வானத்திடை

கழறல் மேயினார் = பேசத் தொடங்கினார்கள்

தேவர்கள் வந்து என்ன சொன்னார்கள் ?

அடுத்த பிளாகில் பார்ப்போம்

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_10.html

Saturday, July 8, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - ஆள்பவர் ஆள்க நாடு

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - ஆள்பவர் ஆள்க நாடு 


தந்தையின் உரை கேட்டு கானகம் சென்ற இராமனை பின் தொடர்ந்து வந்த பரதன், அரசை ஏற்றுக் கொள்ளும்படி இராமனிடம் வேண்டுகிறான். எவ்வளவோ சொல்லியும் இராமன் ஏற்றுக்  கொள்ளவில்லை. வசிட்டன் இடையிட்டு , "இராமா , நீ அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும் . இது என் ஆணை " என்று கூறுகிறான்.

"நான் என் பெற்றோர் சொல்வதை கேட்பதா, குரு சொல்வதை கேட்பதா " என்று கேள்வியை வசிட்டனிடமே விடுகிறான் இராமன்.

வசிட்டன் பாடு சங்கடமாகிவிட்டது. பெற்றோர் சொல் கேளாதே என்று குரு சொல்ல முடியாது. பின்  என்ன செய்வது.

"நான் சொன்னது தவறுதான், நான் அப்படி சொல்லி இருக்கக் கூடாது. நீ பெற்றோர் சொல்லையே கேள் " என்று வசிட்டன் சொல்லி இருக்க வேண்டும்.

 அவன் படித்த கல்வி அவனை அவ்வாறு சொல்ல விடாமல் தடுக்கிறது.

இராமன் அப்படி கேட்டவுடன் "இனிமேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை " என்று எண்ணி பேசாமல் அமர்ந்து விட்டான்.

பார்த்தான் பரதன், "சரி தான், வசிட்டனும் வாய் மூடி மௌனமாகி விட்டான். இனி மேல் இராமனை யாரும் மாற்ற முடியாது " என்ற எண்ணத்திற்கு வந்து வந்தான்.

" அப்படியா சங்கதி.   சரி.  யாராவது நாட்டை  ஆண்டு கொள்ளட்டும்.  நான் இராமனோடு கானகம் போகிறேன் " என்று கூறுகிறான்.

பாடல்

முனிவனும், 'உரைப்பது ஓர் முறைமை கண்டிலெம்
இனி' என இருந்தனன்; இளைய மைந்தனும்,
'அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடு; நான்
பனி படர் காடு உடன் படர்தல் மெய்' என்றான்

பொருள்

முனிவனும் = வசிட்ட முனிவனும்

 'உரைப்பது = இனி சொல்வதற்கு

ஓர் = ஒரு

முறைமை கண்டிலெம் = வழியும் இல்லை

இனி' = இனிமேல்

என இருந்தனன்; = என்று நினைத்து அமர்ந்து விட்டான்

இளைய மைந்தனும் = பரதனும்

அனையதேல் = அப்படியானால்

ஆள்பவர் ஆள்க நாடு; = யாரவது நாட்டை ஆண்டு கொள்ளட்டும்

நான் = நான்

பனி படர் = பனி விழும்

காடு = காட்டுக்கு

உடன் = இராமனுடன்

படர்தல் மெய்' = உடன்செல்வது உண்மை

என்றான் = என்றான்

காப்பியம் நின்று விட்டது. கதையை மேலே நகர்த்த வழி இல்லை.


இராமன் அரசை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறான்.

பரதன் நாட்டை ஆள மாட்டேன் என்கிறான்.

வசிட்டன் வாய் மூடி மௌனமாகிவிட்டான்.

அடுத்து என்ன செய்வது ?

இப்படி ஒன்றுக்கு ஒன்று முரணாக முட்டிக் கொண்டு நிற்கிறது. ஆங்கிலத்தில் grid lock என்று சொல்லுவார்களே ,   அது போல.


இந்த சிக்கலை யார் அவிழ்ப்பது ? எப்படி அவிழ்ப்பது ?

இராமனின்  அவதார நோக்கம் நிறைவேற வேண்டும். அதே சமயம் அயோத்தி மக்களும் மன்னன் இல்லாமல் தவிக்கக் கூடாது.

இராமனும் பரதனும் தங்கள் நிலையில் இருந்து இறங்கி வருவதாய் இல்லை.

என்ன செய்வது ? எப்படி கதையை நகர்த்துவது ? யார் வந்தால் இந்த சிக்கல் தீரும் ? எப்படித்தான் தீரும் ?

சிந்தித்துக் கொண்டு இருங்கள்.

நாளையும் சந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_81.html

பெரிய புராணம் - தீது அகன்று உலகம் உய்ய

பெரிய புராணம் - தீது அகன்று உலகம் உய்ய 


சடையனார் என்பவருக்கும், இசை ஞானியாருக்கும் பிள்ளையாக சுந்தர மூர்த்தி நாயனார் பிறந்தார்.

இது செய்தி.

இதைச் சொல்ல வருகிறார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

தமிழ் கொஞ்சுகிறது.

பாடல்

மாதொரு பாக னார்க்கு வழிவழி யடிமை செய்யும்  
  வேதியர் குலத்துட் டோன்றி மேம்படு சடைய னாருக்
கேதமில் கற்பின் வாழ்க்கை மனையிசை ஞானி 
                                யார்பாற்
றீதகன் றுலக முய்யத் திருவவ தாரஞ் செய்தார்.

பொருள்

மாதொரு பாக னார்க்கு = மாது + ஒரு + பாகனார்க்கு = பெண்ணை ஒரு உடம்பின் ஒரு பக்கத்தில் உடையவர்க்கு . அதாவது சிவ பெருமானுக்கு

வழிவழி யடிமை செய்யும்  = வழி வழி அடிமை செய்யும்.

அது என்ன வழி வழி ? ஒரு முறை சொன்னால் போதாதா ?

தாய் வழி, தந்தை வழி என்று இரண்டு வழியிலும் சிவத் தொண்டு செய்து வந்த குடும்பம்.  எனவே வழி வழி என்று கூறினார்.

வேதியர் குலத்துட் =  வேதியர் குலத்தில. வேதம் ஓதும் குடும்பத்தில்.  வேதம் என்பது வீட்டுப் புழக்கமாக இருந்திருக்கிறது.

டோன்றி = தோன்றி

மேம்படு சடைய னாருக் = மேன்மை மிகுந்த சடையனாருக்கு

கேதமில் கற்பின் = கேதம் என்றால் துக்கம்.

பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமில்லாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே. 

என்பார் மணிவாசகப் பெருந்தகை.

கேதமில் கற்பு என்றால் குற்றமற்ற கற்பு, தீமையற்ற கற்பு.

வாழ்க்கை = வாழ்க்கை

மனை = மனைவியான

யிசை ஞானியார்பாற் = இசை ஞானியார் பால். அவரிடம்

றீதகன் றுலக முய்யத் = தீது அகன்று உலகம் உய்ய

திருவவ தாரஞ் செய்தார்= திரு அவதாரம் செய்தார்.

நாம் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று அவர்கள் நினைக்கவில்லை.

என் வீடு, என் குடும்பம், என் சமயத்தில் உள்ளவர்கள், என் நாட்டில் உள்ளவர்கள் மட்டும் இன்பமாக வாழ்ந்தால் போதும் என்று சேக்கிழார் போன்ற பெரியவர்கள் நினைக்கவில்லை.

அவர்களிடம் உலகம் பற்றிய சிந்தனை  இருந்தது.

உலகம் நன்றாக இருக்க வேண்டும் விரும்பினார்கள். உலகம் என்றால் உலகில் உள்ள மக்கள். இடவாகு பெயர்.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்பார் சேக்கிழார்

உலகம் யாவையும் தாம் உள வாக்கிலும் என்பார் கம்பர்

உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை
மறுவில் கற்பின் வாணுதற் கணவன்
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித்
தலைப்பெயல் தலை இய தண்ணறுங் கானத்து

இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து . . .

என்று தொடங்குகிறார் நக்கீரர் திருமுருகாற்றுப் படையில்.

உலகம் உவப்ப என்றால் உலகம் மகிழ என்று அர்த்தம்.

நான் மகிழ, என் வீட்டில் உள்ளவர்கள் மகிழ, என் சாதிக்காரர்கள் மகிழ என்று வேண்டவில்லை. உலகில் உள்ள எல்லா உயிர்களும் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று  பாடினார் நக்கீரர்.

உலகளாவிய சிந்தனை இருந்திருக்குறது.

உலகிலே தீமை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

சுந்தரர் காலத்திலும் தீமைகள் இருந்திருக்கின்றன.

அந்தத் தீமைகள் எல்லாம் விலகி, உலகம் உய்ய திரு அவதாரம் செய்தார் என்கிறார்  சேக்கிழார் பெருமான்.


தீமைகள் நீங்காவிட்டால் உலகம் அழித்து போகும்.

நன்மைகள் பெருகி உலகம் உய்ய என்று சொல்லி இருக்கலாம்.

எவ்வளவுதான் நன்மைகள் இருந்தாலும், கொஞ்சம் தீமை இருந்தால் அது நல்லவைகளை சிறுமை படுத்தி விடும்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறம் என்பார் வள்ளுவர்.

மனத்துக்கண் நல்லவன் ஆதல் அறம் என்று சொல்லி இருக்கலாம்தானே ? சொல்லவில்லை. மாறாக, மாசிலன் ஆதல் என்று கூறுகிறார்.

தீமைகளை விலக்கி விட்டால், நன்மை தானே வரும்.

"அவதாரம் செய்தார் " அவதாரம் என்றால் மேலிருந்து கீழ்  வருவது. வந்த பின் கீழே உள்ளவர்களை மேலே தூக்கிவிடுவது.

இராமனை இருகை வேழத்து இராகவன் என்பார் கம்பர்.

ஏன் இராமனை யானையோடு ஒப்பிடுகிறார் ?

யானையின் காலைப்  பிடித்தால்,அது நம்மை தலைக்கு மேலே தூக்கி முதுகில் உட்கார வைத்துக் கொள்ளும்.

இராகவனும் , அவனுடைய பாதங்களை பிடித்தவர்களை மேலே தூக்கி விடுவான்.

நம்மை உயர்த்த வந்த  யாருமே அவதாரம் தான்.

கீழிருப்பது மேலே செல்வதற்காக , மேலிருந்து ஒன்று கீழே வருவது அவதாரம் என்று பெயர்.

உலகம் தீமைகளில் இருந்து விடப்பட்டு உய்வடைய சுந்தர மூர்த்தி நாயனார்  அவதாரம் செய்தார்


பெரிய புராணத்து தமிழ் சொற்கள் ஆழம் மிகுந்தவை. பொருட்ச்செறிவு நிறைந்தவை.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_8.html


Friday, July 7, 2017

கம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - எனக்கு என் இனிச் செய்ய வகை ?

கம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - எனக்கு என் இனிச் செய்ய வகை ?


தந்தை சொல் கேட்டு இராமன் கானகம் வந்து விட்டான். அவனைத் தொடர்ந்து வந்த பரதன், இராமனிடம், அரசை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறான். இராமன் மறுக்கிறான். அப்போது இடை மறித்து , வசிட்டன் "இராமா நீ அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும் , இது என் ஆணை " என்று ஆணையிட்டு  விடுகிறான்.

குருவின் ஆணையை மீற முடியாது. இராமன் மீறினால், பின்னால் வரும் சந்ததி ஒன்றும் ஆசிரியர் பேச்சை கேட்கமாட்டார்கள். இராமனே கேட்கவில்லை, நான் ஏன் கேட்க வேண்டும் என்று ஆரம்பித்து விடுவார்கள்.

இராமன் இந்த தர்ம சங்கடத்தை மிகத் திறமையாக கையாளுகிறான்.

ஆணையிட்ட வசிட்டனை நோக்கி இராமன் கேட்கிறான்

"முன்னால் சொன்ன தாய் தந்தையரின் கட்டளையை ஏற்று, நான் இங்கு வந்திருக்கிறேன். இப்போது நீ ஆணையிடுகிறாய். நான் என்ன செய்ய வேண்டும் என்று நீயே சொல் " என்று.

பாடல்


முன் உறப் பணித்தவர்
     மொழியை யான் என
சென்னியில், கொண்டு, “அது
     செய்வேன்” என்றதன்
பின்னுறப் பணித்தனை;
     பெருமையோய்! எனக்கு
என் இனிச் செய்வகை?
     உரைசெய் ஈங்கு’ என்றான்


பொருள்


முன் உறப் = முன்பு தெளிவாக

 பணித்தவர் =  என்னை கானகம் போகும் படி பணித்தவர்கள் (என் தாய் தந்தையர்)

மொழியை = சொன்ன சொல்லை

யான் = நான்

என்எ = என்னுடைய

சென்னியில் கொண்டு, = தலைமேல் கொண்டு

 “அது செய்வேன்” = அதை செய்து முடிப்பேன்

என்றதன் = என்ற அந்த வாக்குக்குப்

பின்னுறப் பணித்தனை; = பின்னால் நீ என்னை பணிக்கிறாய்

பெருமையோய்! = பெருமை உடையவனே

எனக்கு = எனக்கு

என் இனிச் செய்வகை? = இனி எந்த வகையில் காரியம் செய்ய வேண்டும்

உரைசெய் ஈங்கு’ என்றான் = இங்கு நீ உரைப்பாய் என்றான்

நான் உன் மாணவன். நீ எனக்கு ஆசிரியன். என் தாய் தந்தையரின் சொல் கேட்டு நான் இங்கு வந்திருக்கிறேன். நீ திரும்பி நாட்டுக்கு வா என்கிறாய். நான் என்ன செய்யட்டும் என்று கேட்கிறான்.

இப்போது வசிட்டன் பாடு திண்டாட்டம்.

பெற்றோர் வார்த்தையை கேட்காதே என்று வசிட்டன் சொல்ல முடியாது.

இராமன் நினைத்து இருந்தால் , வசிட்டன் சொல் கேட்டு மீண்டும் அரசை ஏற்றுக் கொண்டிருக்கலாம்.

இராமனின் நோக்கம் அது அல்ல. பெற்றோரின் வார்த்தைக்கு மதிப்பு தர வேண்டும் என்று   வாழ்ந்து காட்டுவது அவன் நோக்கம்.

எனவே,கேள்வியை வசிட்டன் பால் திரும்புகிறான்.

வசிட்டன் என்ன செய்தான் என்பதை நாளை பார்ப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_7.html