Saturday, September 2, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - இவன் ஆவி கவர்க

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - இவன் ஆவி கவர்க 


முன் கதைச் சுருக்கம்:

ஒரு வேதியன்  தன்னுடைய மனைவி மற்றும் கைக் குழந்தையோடு மதுரை நோக்கி வனது கொண்டிருந்தான். நடுவில், மனைவி நீர் வேண்டும் என்று கேட்கவே, அவளை ஒரு மரத்தடியில் இருத்திவிட்டு, நீர் கொண்டு வரச் சென்றான். அப்போது அந்த மரத்தின் மேல் சிக்கியிருந்த ஒரு அம்பு காற்றில் கீழே விழுந்தது. விழுந்த அம்பு, அந்த வேதியனின் மனைவியின் வயிற்றில் பாய்ந்ததால் அவள் இறந்து போனாள். நீர் கொண்டுவந்த வேதியன் இறந்து கிடக்கும் மனைவியைப் பார்த்தான். இவளை யார் கொன்று இருப்பார்கள் என்று சுற்று முற்றும் பார்த்த போது , அங்கு ஒரு வேடன் இருப்பதைக் கண்டு, அவன்தான் கொன்றிருக்க வேண்டும் என்று நினைத்து அவனை பாண்டிய மன்னனிடம் கொண்டு சென்றான்.

வேடனை தண்டிக்க வேண்டும் என்று வேதியன் வேண்டுகிறான்.

தான் கொல்லவே இல்லை என்று வேடன் சாதிக்கிறான்.

அமைச்சர்களும், இதற்கு நூல்களில் ஒரு வழியும் இல்லை. இறைவன் தான் வழி காட்ட வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.

பாண்டியன் இறைவனிடம் முறையிட்டான். அப்போது, "இந்த ஊரில் உள்ள வணிகத் தெருவில் ஒரு திருமணம் நடக்கிறது. அங்கு நீ அந்த வேதியனோடு சென்று பார். உன் குழப்பத்தை தீர்த்து வைப்போம்" என்று அசரீரி சொல்லக் கேட்டு, மன்னனும் வேதியனும் அங்கு சென்றார்கள்.

அப்போது, இறை அருளால், இரண்டு எம தூதர்கள் பேசுவது அவர்களுக்குக் கேட்டது.

இரண்டு பேரில் ஒருவன் கேட்கிறான் "இந்த வீட்டில் உள்ள மணமகனின் வாழ் நாள் முடிந்து விட்டது. அவன் உயிரை கொண்டு வரும்படி நம் தலைவர் சொல்லி இருக்கிறார். இவனுக்கோ ஒரு நோயும் இல்லை. இவன் உயிரை எப்படி எடுப்பது" என்று கேட்கிறான்.

இது முன் கதைச் சுருக்கம்.

இப்போது

அதற்கு இன்னொரு தூதன் சொல்கிறான்,

"எப்படி ஆல மரத்தில் முன்பே சிக்கியிருந்த அம்பை காற்றால் வீழ்த்தி பார்பனியின் உயிரைக் கவர்ந்தோமோ அப்படி, இந்த திருமண ஆரவாரத்தில் வெளியே கட்டியிருக்கும் கன்றை ஈன்ற பசுவை வெருண்டு ஓடச் செய்து , இவனை குத்த வைத்து இவன் உயிரைக் கவர்வோம்"

என்றான்.

பாடல்


ஆற்று ஆல் ஏறு உண்ட கணை அருகு ஒதுங்கும் பார்ப்பனியைக் 
காற்றுஆல் வீழ்த்து எவ்வாறு கவர்ந்தோம் அப்படி  இந்தச் 
சாற்று ஆரவாரத்தில் தாம்பு அறுத்துப் புறம் நின்ற 
ஈற்று ஆவை வெருள விடுத்து இவன் ஆவி கவர்க  என்றான்.


பொருள்


ஆற்று = வழி , வழியில் உள்ள

ஆல் = ஆலமரத்தில்

ஏறு உண்ட = ஏறியிருந்த

கணை = அம்பை

அருகு = அருகில்

ஒதுங்கும் = ஒதுங்கி இருந்த

பார்ப்பனியைக் = பார்பனப் பெண்ணை

காற்றுஆல் = காற்றினால்

வீழ்த்து = விழச் செய்து

எவ்வாறு கவர்ந்தோம் = எப்படி கவர்ந்தோமோ

அப்படி = அப்படி

இந்தச் = இந்த

சாற்று ஆரவாரத்தில் = பெரிய ஆரவாரத்தில்

தாம்பு அறுத்துப் = கட்டியிருக்கும் கயிற்றை அறுத்து

புறம் நின்ற = வெளியே நிற்கும்

ஈற்று ஆவை = கன்றை ஈன்ற பசுவை

வெருள = பயந்து ஓடும்படி

விடுத்து = செய்து

இவன் ஆவி  = இவனுடைய ஆவியை

கவர்க  என்றான் = கவர்ந்து கொள்வோம் என்றான்.


"ஆற்று ஆல் ஏறு உண்ட கணை" என்ற வரியில், ஆற்று என்ற சொல் வருகிறது. 

ஆறு என்றால் வழி. 


ஆற்றுப் படை என்று ஒரு பாடல் வகை உண்டு.  அதாவது, ஒரு தலைவனிடம் நன்மையைப் பெற்ற ஒருவன், மற்றவனை அதே வழியில் சென்று நன்மை அடைய வழி காட்டுவது. 

ஒரு புலவன் அரசனை பாடி பரிசு பெற்றால், மற்ற புலவர்களுக்கும் அதை எடுத்துச் சொல்லி அவர்களை  ஆற்றுப் படுத்துவது.

நக்கீரர் முருகன் அருள் பெற்றார். மற்றவர்களும் முருகன் அருள் பெற வழி சொல்லித் தந்த பாடல்களுக்கு  திருமுருகாற்றுப் படை என்று பொருள். 

சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை என்று பாடல்கள் உண்டு. 


கதை எப்படி போகிறது என்று பாருங்கள். 


திருமண வீடு. மணமகன் சாகப் போகிறான். எப்படி இருக்கும் ? ஒரு படபடப்பு  நமக்குள் வருகிறது அல்லவா ? 

வாசிக்கும் நமக்குத் தெரியும்.  அங்குள்ள யாருக்கும் தெரியாது. 

அடுத்து என்ன ஆகிறது என்று பார்ப்போம் 

Wednesday, August 30, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - என் செய்தும் ?

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - என் செய்தும் ?


இதற்கு முந்தைய கதை சுருக்கங்களை முந்திய ப்ளாகுகளில் காணவும்.

இறைவன் ஆணைப்படி மன்னனும், வேதியனும் அந்த திருமண வீட்டில் மறைந்து இருந்து அங்கு நடப்பவற்றை கவனித்து வந்தார்கள். அப்போது எம தூதர்கள் இவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"இன்றே இந்த மணமகனின் உயிரை கொண்டு வரும்படி நம் தலைவர் சொல்லி இருக்கிறார். இவன் உடலிலோ ஒரு நோயும் இல்லை. எப்படி இவன் உயிரை கொண்டு செல்வது ? " என்று ஒரு எம தூதன் இன்னொருவனிடம் கேட்டான்.

பாடல்

இன்றே இங்கு இவன் உயிரைத் தருதிர் எனும் இரும்   பகட்டுக் 
குன்று ஏறும் கோன் உரையால் கொள்வது எவன் பிணி உடம்பின் 
ஒன்றேன் உமிலன் ஒரு காரணம் இன்றி உயிர்  கொள்வது 
அன்றே என் செய்தும் என மற்றவன் ஈது  அறைகிற்பான்.

பொருள்

இன்றே = இன்றே

இங்கு = இங்கு

இவன் = இவன்

உயிரைத் தருதிர் = உயிரை எடுத்து வாருங்கள்

எனும் = என்று

இரும்  = பெரிய

பகட்டுக் = எருமை

குன்று = மலை போன்ற

ஏறும் கோன் = (மலை போன்ற பெரிய எருமையின் மேல் ) ஏறும் அரசன், நம் தலைவன் = எமன்

உரையால் = ஆணையால்

கொள்வது எவன் = எப்படி இவன் உயிரை கொள்வது ?

பிணி உடம்பின் ஒன்றேன் உமிலன் = உடம்பில் ஒரு நோயும் இல்லை

ஒரு காரணம் இன்றி = ஒரு காரணமும் இல்லாமல்

உயிர்  கொள்வது = உயிரை எப்படி கொண்டு செல்வது ?

அன்றே என் செய்தும் = இப்போது என்ன செய்வது ?

என = என்று சொன்ன போது

மற்றவன் ஈது  அறைகிற்பான் = இன்னொரு தூதுவன் சொல்லுவான்

நமது இலக்கிய கர்தாக்கள் நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்று நம்பினார்கள். இறைவன், விதி, மேல் உலகம், பாவம் , புண்ணியம் என்பதெல்லாம் உண்டு என்று நம்பினார்கள். 

திருவள்ளுவர், கம்பர் தொட்டு பாரதி வரை அனைவரும் இதை நம்பினார்கள். 

நமது வாழ்வில் நடக்கும் பல விஷயங்களுக்கு நமக்கு காரணம் தெரிவதில்லை. ஏன், இப்படி நிகழ்கிறது. நேத்து வரை நல்லாத்தானே இருந்தார், எப்படி திடீரென்று இப்படி ஆகி விட்டது என்று கேட்கும்படி ஆகி விடுகிறது.

நல்லவர்களுக்கு தீமை நிகழ்வதும், தீயவர்களுக்கு நன்மை நிகழ்வதும் புரிந்து கொள்ள முடிவதில்லை. 

நமது சக்திக்கு அப்பாற்பட்ட சில விஷயங்கள் இருக்கிறது என்று அவர்கள் நம்பினார்கள். 

இறையருள் இருந்தால் அவற்றை அறிந்து கொள்ள முடியும் என்று இந்தப் பாடல் காட்டிச் செல்கிறது. 

"இரும்   பகட்டுக்  குன்று ஏறும் கோன்"

பகடு என்ற சொல்லுக்கு எருமை, யானை, எருது என்ற பல பொருள் இருக்கிறது. இந்தப் பாடலில் எருமை கடா என்ற பொருள் பொருந்தி வருகிறது. 

பகடு நடந்த கூழ் என்று சொல்லும் நாலடியார். அதாவது எருது உழுத நிலத்தில் இருந்து வந்த உணவு என்ற பொருளில்....

துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க ;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.


அபிராமியை தொழுதால் , "வெண் பகடு ஊறும் பதம்" கிடைக்கும் என்கிறார் அபிராமி பட்டர். வெண் பகடு என்றால் வெள்ளை யானை, ஐராவதம், அதாவது இந்திரப் பதவி கிடைக்கும் என்கிறார். 


மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன் 
புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை 
சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு, 
பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே.

என்பது அபிராமி அந்தாதி. 


Tuesday, August 29, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - கொடும் பாசக் கையினர்

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - கொடும் பாசக் கையினர் 


தன் மனைவியை வேடன் தான் கொன்று விட்டான் என்று ஒரு வேதியன் பாண்டிய மன்னனிடம் முறையிட்டான். வேடனோ, தான் கொல்லவில்லை என்கிறான். அமைச்சர்களும் , தங்களுக்கு ஒன்றும் புலப்படவில்லை என்று சொல்லி விட்டார்கள். அப்போது, அரசன், இறைவனிடம் முறையிட்டான்.  அப்போது, ïஇந்த ஊரில் , வணிகர் தெருவில் ஒரு திருமணம் நடக்கிறது. அங்கு , அந்த மறையவனையும் அழைத்துக் கொண்டு வா, உன் சந்தேகத்தை போக்குவோமென்று" அசரீரி கேட்டது.

அரசனும், அந்த வேதியனை அழைத்துக் கொண்டு, இரவில் அந்தத் திருமண வீட்டுக்குச் சென்றான். இருவரும் இருளில் மறைந்து இருந்து அங்கு நடப்பவற்றை கண்டனர்.

அப்போது, அங்கு இரண்டு எம தூதர்கள் வந்தார்கள். இறைவன் அருளால், அவர்கள் பேசுவது எல்லாம் அரசனுக்கும், அந்த மறையவனுக்கும் கேட்டது.

பாடல்

அன்று இறைவன் அருளால் அங்கவர் கேட்க அம்மனையின்
மன்றல் மகன் தனக்கு அளந்த நாள் உலப்ப மறலி  இருள்
குன்றம் இரண்டு என விடுத்த கொடும் பாசக் கையினர்  வாய்
மென்று வரும் சினத்தவரில் ஒருவன் இது வினவும்  ஆல்.


பொருள்

அன்று  = அன்று

இறைவன் அருளால் = இறைவன் அருளால்

அங்கவர் = அங்கு அவர்கள்

கேட்க  = கேட்கும்படி

அம்மனையின் = அந்த திருமண வீட்டில்

மன்றல் மகன் தனக்கு = மணமகன் தனக்கு

அளந்த நாள் = கொடுத்த நாட்கள்

 உலப்ப = முடிவதால்

மறலி = எமன்

இருள் = கரிய

குன்றம்  = குன்றுகள்

இரண்டு = இரண்டு

என = போல

விடுத்த = அனுப்பிய

கொடும் பாசக் கையினர் = கொடிய பாசக் கயிற்றினை கொண்டவர்கள்

வாய் மென்று  = வாயை மென்று கொண்டு (அதாவது உதட்டை கடித்துக் கொண்டு)

வரும் சினத்தவரில் = வருகின்ற சினத்தால்

ஒருவன் இது வினவும்  ஆல் = ஒருவன் இப்படி கேட்டான்


"மறலி  இருள் குன்றம் இரண்டு என விடுத்த"

மறலி என்றால் எமன்.

மறல் + இ = மறலி . மறத்தல் இல்லாதவன். யாரை எப்போது கொண்டு போக வேண்டும் என்று மறக்காமல்  அந்த நேரத்தில் கொண்டு போய் விடுவான். அந்த வேதியனின் மனைவியின் வாழ் நாள் முடிந்து விட்டது. எனவே, மறக்காமல் கொண்டு போய் விட்டான் என்ற உள் குறிப்பு.

மறலி என்றால் மாறுதல் இல்லாதவன். நல்லவர், கெட்டவர் , உயர்ந்தவர் , தாழ்ந்தவர், படித்தவர், படிக்காதவர் என்று எந்த மாறுதலும் இல்லாதவன். எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பவன்.

மறலி வந்து நம் உயிரை எடுத்துக் கொண்டு போவான் அல்லவா ? அவன் வரும் வழியை அடைத்து விட்டால் ? எப்படி வருவான் ?

அவன் வரும் வழியை அடைக்கும் வழியை அபிராமி பட்டர் கூறுகிறார்.

அபிராமியை மனதில் நினைத்துக் கொண்டால் போதும்.  அவன் வரும் வழி அடைந்து விடும்.

"மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி" என்பார் அபிராமி பட்டர்.

குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டி
வெறித் தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை மெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே

என்பது அபிராமி அந்தாதி.

அந்த எம தூதர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் ?

கேட்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_29.html

Sunday, August 27, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - உளம் தேறா மாற்றம் எலாம் தேற்றுதும்

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - உளம் தேறா மாற்றம் எலாம் தேற்றுதும் 

தன் மனைவியை வேடன் தான் கொன்றான் என்று வேதியன் குற்றம் சுமத்தி வேடனை அரசன் முன் கொண்டு வந்து நிறுத்துகிறான். வேடனோ தான் கொலை செய்யவில்லை என்று சாதிக்கிறான். அமைச்சர்களோ , "இது அற நூல்களை படித்து தீர்க்க முடியாது. இறைவன் தான் வழி காட்ட வேண்டும் " என்று கை விரித்து விட்டார்கள்.

பாண்டியன் நேரே கோவிலுக்குப் போனான். அங்கிருந்த சிவனிடம் முறையிட்டான்.

அப்போது

"இந்த ஊரின் வெளியில் ஒரு வணிகத் தெரு இருக்கிறது. அந்தத் தெருவில் ஒரு திருமணம் நடக்கவிருக்கிறது. அந்தத் திருமண வீட்டுக்கு நீ அந்த மறையவனை அழைத்துக் கொண்டு வா. உன் மனதில் உள்ள குழப்பங்களை எல்லாம் தீர்த்து வைப்போம் "

என்று அசரீரி வானத்தில் இருந்து வந்தது.


பாடல்

திரு நகரின் புறம்பு ஒரு சார் குலவணிகத் தெருவின் கண் 
ஒரு மனையின் மணம் உளது அங்கு அந்தணனோடு ஒருங்கு நீ 
வருதி உனது உளம் தேறா மாற்றம் எலாம் தேற்றுதும் என்று 
இரு விசும்பின் அகடு கிழித்து எழுந்தது ஆல் ஒருவாக்கு.


பொருள்


திரு நகரின் = இந்த ஊரின்

புறம்பு = வெளியே

ஒரு சார்  = ஒரு பக்கத்தில்

குலவணிகத் = வணிக குலத்தவர்கள் வாழும்

தெருவின் கண் = தெருவில்

ஒரு மனையின் = ஒரு வீட்டில்

மணம் உளது = திருமணம் நடக்க இருக்கிறது

அங்கு  = அந்த வீட்டுக்கு

அந்தணனோடு = மறையவனோடு

ஒருங்கு நீ = ஒன்றாக நீ

வருதி = வா

உனது = உன்

உளம் = உள்ளம்

தேறா = தேற்றம் அடையாத

மாற்றம் எலாம் = மாறுதலான என்=எல்லாம்

தேற்றுதும் = தெளிவாக்குவோம்

என்று = என்று

இரு விசும்பின் = பெரிய வானத்தில் இருந்து

அகடு =  உள்ளிருந்து

கிழித்து = வெளிப்பட்டு

எழுந்தது = எழுந்தது

ஆல் = அசைச் சொல்

ஒருவாக்கு = ஒரு ஒலி (அசரீரி)

இறைவன் , உடனே இது தான் உண்மை. இப்படிச் செய் என்று சொல்லவில்லை. நீ அந்த கல்யாண வீட்டுக்கு வா. உன் மனதில் உள்ள குழப்பங்களை தீர்க்கிறேன் என்றான் .

ஒரு வேளை இறைவன் , இது தான் உண்மை என்று சொல்லி இருந்தால், வேதியன் நம்பி இருக்க மாட்டான்.  இந்த அரசன் ஏதோ மாயம் பண்ணி இப்படி செகிறான்  என்று சந்தேகம் கொண்டிருப்பான்.

நீ நேரில் அங்கு வா. வரும்போது அந்த அந்தணனையும் அழைத்துக் கொண்டு வா என்று சொல்லி விட்டான்.

அங்கு என்ன நடந்தது என்று அங்கு போனால் தான் தெரியும்.

வாருங்கள் போவோம் .

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_27.html

Saturday, August 26, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - தெய்வத்தாலே தேறும் வழி

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - தெய்வத்தாலே தேறும் வழி



ஒரு புறம் தன் மனைவியை , கானகத்தில், ஆல மரத்தின் கீழ் இளைப்பாறும் போது கொன்றவன் இந்த வேடன் தான் என்று குற்றம் சுமத்தும் வேதியன்.

நான் கொல்லவில்லை , யார் கொன்றார்கள் என்றும் எனக்குத் தெரியாது என்று சாதிக்கும் வேடன் மறுபுறம்.

இதற்கு அற நூல்கள் என்ன சொல்கின்றன என்று அமைச்சர்களிடம் கேட்டான் பாண்டிய மன்னன்.

அவர்களும் அற நூல்களை ஆராய்ந்தபின், இதை புத்தகம் படித்து அறிந்து சரி செய்ய முடியாது. இது தெய்வத்தால்தான் ஆகும் என்று கூறினார்.

பாடல்

என்னா உன்னித் தென்னவன் இன்னம் இது முன்னூல் 
தன்னால் ஆயத்தக்கது அதை என்றன் தகவிற்று தன் 
அன்னார் அந்நூல் ஆய்ந்து இது நூலால் அமையாது                                                          ஆல் 
மன்னா தெய்வத் தாலே தேறும் வழி என்றார்.


பொருள்

என்னா உன்னித் = என்று எண்ணி

தென்னவன் = பாண்டிய மன்னன்

இன்னம்  இது = இனிமேல் இது

முன்னூல் = முன்பு சொல்லப் பட்ட அற நூல்கள்

தன்னால் = அவற்றின் மூல

ஆயத்தக்கது = ஆராயத் தக்கது

அதை = அதை

என்றன் = எனக்கு

தகவிற்று = உயர்ந்தவர்கள் (அமைச்சர்கள்)

தன் அன்னார் = தன்னைப் போன்றவர்கள்

அந்நூல் = அந்த நூல்களை

ஆய்ந்து   = ஆராய்ந்த பின்னால்

இது நூலால் அமையாது    = இதை நூல் அறிவின் மூலம் தீர்க்க முடியாது

மன்னா  = மன்னவனே

தெய்வத் தாலே = தெய்வத்தால் மட்டுமே

தேறும் வழி  = சரியாகும் வழி

என்றார். = என்று கூறினார்கள்


"தகவிற்று தன் அன்னார் அந்நூல் ஆய்ந்து"

தகவு என்றால் தகுதி உடையவர்.   

தக்கார் தகவிலர் என்பது அவரவர் 
எச்சத்தால் காணப் படும்.


என்பது வள்ளுவம். 

ஒருவன் தகுதி உடையவனா , அல்லது தகுதி இல்லாதவனா என்பது அவனுக்குப் பின் நிற்கும் அவனுடைய புகழோ , பழியோ அதைப் பொறுத்தே அமையும் என்கிறார் வள்ளுவர். 

அது பற்றி விரிவாக இன்னொரு பிளாகில் பார்ப்போம். 

தகுதி உடைய  உடையவர்களை  பாண்டிய மன்னன் அமைச்சர்களாக கொண்டிருந்தான். 

எப்போதும் நல்லவர்களை , நம்மை விட அறிவும் தகுதியும் உள்ளவர்களை நம்மோடு வைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டும் அல்ல, அவர்கள் சொல்வது எவ்வளவு கடினமாக இருந்தாலும் , அதை கேட்டு நடக்க வேண்டும். 

இடிப்பாரை இல்லா எமரா மன்னன் கெடுப்பார் இன்றியும் கெடும் என்பார் வள்ளுவர். 

நம்மை , நல்லது சொல்லி திருத்தும் நண்பர்கள் இல்லை என்றால், எதிரிகள் இல்லாமலேயே கூட நம் வாழ்வை கெட்டுப் போகும். 

அப்படிப்பட்ட நல்லவர்கள், அற நூல்களை ஆராய்ந்த பின், இந்த சிக்கலுக்கு அந்த நூல்களில் தீர்வு இல்லை. ஆண்டவனிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்கள். 


அறிவின் எல்லையை அவர்கள் அறிந்து இருக்கிறார்கள். 

கல்வியின் பயன் இறைவனைத் தொழுதல் என்பார் வள்ளுவர். 

கற்றதனால் ஆய பயன் என் கொல் , வாலறிவன் நற்றாழ் தொழாஅர் எனின். 

அந்த அறிஞர்கள் மன்னனிடம் சொன்னார்கள் "இதற்கு தீர்வு இறைவனிடம் தான் இருக்கிறது " என்று. 

சட்ட புத்தங்களைத் தாண்டி, அற நூல்களைத் தாண்டி , நீதியை தேடி இருக்கிறார்கள். "சாட்சியங்களை வைத்துப் பார்க்கும் போது ..."என்று இந்தக் காலத்தில் நீதிபதிகள் செய்வது போல தீர்ப்பு சொல்லாமல்  இறை அருளை நாடி இருக்கிறார்கள். 

பாண்டியன் கோவிலுக்குப் போகிறான். சிவனிடம் முறையிடுகிறான். 

சிவன் என்ன சொன்னார் ? இந்த வழக்கு எப்படி தீர்ந்தது ?

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_26.html

Friday, August 25, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - கொன்று என் பெற வல்லான்

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - கொன்று என் பெற வல்லான் 


ஒரு புறம் மறையவன் தன்னுடைய மனைவியை வேடன் தான் கொன்றான் என்று குற்றம் சுமத்துகிறான்.

இன்னொரு புறம் , வேடனோ, தான் கொல்லவும் இல்லை, கொன்றவரை காணவும் இல்லை என்று சாதிக்கிறான்.

வேறு எந்த சாட்சியும் இல்லை.

பாண்டிய மன்னன் யோசிக்கிறான்.

"இந்த வேடனோ தண்டனைக்கு அஞ்சுபவனாய் தெரியவில்லை. அவனுடைய பேச்சு முன்னுக்கு பின் முரணாக இல்லாமல் சரியாக இருக்கிறது. ஆளைப் பார்த்தாலும் கொலை செய்தவனைப் போலத் தெரியவில்லை. எதிரியே, விலங்கோ, பறவையோ என்றால் இவன் வேட்டை ஆடியிருப்பான். இந்த அப்பாவி பெண்ணை கொன்று இவனுக்கு என்ன கிடைக்கப் போகிறது. கொல்ல ஒரு முகாந்திரமும் இல்லை"   என்று மன்னன் சிந்திக்கிறான்.

பாடல்

ஆற்ற ஒறுக்கும் தண்டமும் அஞ்சான் அறைகின்ற 
கூற்றமும் ஒன்றெ கொன்ற குறிப்பு முகம் தோற்றான் 
மாற்றவரேயோ மாவோ புள்ளோ வழி வந்த 
கோல் தொடியைக் கொன்று என் பெற வல்லான்                                               கொலை செய்வான்.


பொருள்


ஆற்ற = பொறுத்துக் கொள்ள முடியாத

ஒறுக்கும் = தண்டிக்கும்

தண்டமும் = தண்டனைக்கும்

அஞ்சான் = (இந்த வேடன்) அச்சப் படவில்லை

அறைகின்ற = (இவன்) சொல்கின்ற


கூற்றமும் = கூற்றுகள், செய்திகள்

ஒன்றெ = ஒன்றே. முரண் இல்லாமல் ஒரே சீராக இருக்கிறது

கொன்ற குறிப்பு = கொலை செய்ததைப் போல

முகம் தோற்றான் = முகத்தைப் பார்த்தால் தோன்றவில்லை

மாற்றவரேயோ = எதிரிகளோ

மாவோ = கொடிய விலங்குகளோ

புள்ளோ = பறவையோ

வழி வந்த = வழியில் வந்த

கோல் தொடியைக் = பெண்ணை (வளையல் அணிந்த பெண்)

கொன்று = கொலை செய்து

என் பெற வல்லான் = எதை அடையப் போகிறான் ?

கொலை செய்வான் = கொலை செய்வான் (என்று மற்றவர்களால் கூறப் பட்டவன்)

கொஞ்சம் இலக்கணம் படிக்கலாம்


"கோல் தொடியைக் கொன்று என் பெற வல்லான்"


தொடி என்றால் வளையல். கோல் தொடி என்றால் கோலை போல நன்கு பருத்த  வளையல். நல்ல கனமான வளையல் அணிந்து இருக்கும் பெண். 

நேரடியாக அர்த்தம் கொண்டால் "வளையலை கொன்று என்ன பெறப் போகிறான்" என்று வரும். 

வளையலை எப்படி கொல்ல முடியும் ?

அங்கு தான் இலக்கணம் வருகிறது. 

எழுத்துகள் சேர்ந்து வார்த்தை வருகிறது.  சரிதானே. 

வார்த்தைகள் சேர்ந்து வாக்கியம் உருவாகிறது.  சரிதானே ?

இரண்டு வார்த்தைகளை எப்படி இணைப்பது என்பதில் இருக்கிறது  இலக்கணச் சுவை. 

இரண்டு வார்த்தைகளை இணைக்கும் போது , முதலில் வரும் வார்த்தைக்கு நிலை  மொழி என்று பெயர். அதனோடு வந்து சேரும் வார்த்தைக்கு வரு மொழி என்று பெயர். 

இராமன் வந்தான் 

என்பதில் இராமன் என்பது நிலை மொழி. வந்தான் என்பது வரு மொழி. 

புரிகிறது தானே. சிக்கல் இல்லையே ?

அடுத்த கட்டத்துக்கு போவோம். 

இப்படி நிலை மொழியும், வரு மொழியும் சேரும் போது நடுவில் சில வார்த்தைகளை  போடுவோம். இரண்டு பொருளை ஓட்ட வைக்க வேண்டும் என்றால் பசை வேண்டும் அல்லவா அது போல. 

அந்த பசைக்குப் பெயர் "வேற்றுமை உருபு"

உருபு என்றால் சொல் என்று வைத்துக் கொள்ளுங்கள். 

தமிழில் ஆறு வேற்றுமை உருபுகள் இருக்கிறது. அவை 

ஐ (இரண்டாம் வேற்றுமை உருபு)
ஆல் (மூன்றாம்)
கு (நான்காம்) 
இன் (ஐந்து)
அது (ஆறாம்)
கண் (ஏழாம்)

முதலாம் வேற்றுமை கிடையாது. அதற்கு விளி வேற்றுமை என்று பெயர். அதை விட்டு விடுவோம். 

பால் குடித்தான் என்பது பாலைக் குடித்தான் (ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு  வந்துள்ளது) 

அணுக் குண்டு என்பது அணுவால் ஆன குண்டு (ஆல் என்பது மூன்றாம் வேற்றுமை உருபு) 

இப்படி வேற்றுமை உருபு வந்து நிலை மொழியையும் வரு மொழியையும் சேர்த்து வைக்கும். 

இந்த வேற்றுமை உருபு சில சமயம் வெளிப்படையாக வரும்.  சில சமயம் மறைந்து இருக்கும். 

வெளிப்படையாக வந்தால் அது தொகா நிலைத் தொடர் என்று பெயர். 

மறைந்து (தொக்கி) வந்தால் அதற்கு தொகை நிலைத் தொடர் என்று பெயர். 

பாலக் குடித்தான் என்பதில் ஐ என்ற வேற்றுமை உருபு வெளிப்ப்டையாக வந்து உள்ளது. எது தொகா நிலைத் தொடர். 

பால் குடித்தான் என்பதில் ஐ என்ற வேற்றுமை உருபு தொக்கி (மறைந்து) வந்துள்ளது. 

சில சமயம் , இந்த வேற்றுமை உருபுகள் நிலை மொழியையும் வரு மொழியையும் சேர்ப்பதோடு அல்லாமல் , சேர்த்த பிறகு அந்த இரண்டு சொற்களையும் கடந்து இன்னொரு சொல்லை சுட்டிக் காட்டும். அதற்கு அன்மொழித் தொகை என்று பெயர். 

அல் + மொழி = அல்லாத மொழி.

வீட்டில் அம்மா , "தம்பி , யாரோ அழைப்பு மணி அடித்திருக்கிறார்கள். யாருனு கொஞ்சம் பாரு " என்று மகனிடம் சொல்வாள். 

மகன் கதவை திறந்து பார்த்து விட்டு "அம்மா பால் வந்திருக்கு" என்பான். 

வந்தது பால் அல்ல. பாலை கொண்டு வரும் ஆள் வந்திருப்பார். 

பால் + வந்திருக்கு   = பாலை கொண்டு வரும் ஆள் 

இங்கே நடுவில் வந்த ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு , பாலைக் குறிக்கவில்லை, வந்த செயலை குறிக்கவில்லை. அந்த பாலைக் கொண்டு வந்த ஆளை குறிக்கிறது அல்லவா . அதற்கு

"வேற்றுமைத் தொகை புறத்து பிறந்த அன்மொழித் தொகை " என்று பெயர். 

ரொம்ப பெரிய வாக்கியம்தான்...:)

இங்கே 

கோல் தொடி என்றால் , கோலைப் போன்ற தடித்த வளையலை அணிந்த பெண் என்று பொருள். 

அது கோலையும் குறிக்கவில்லை. 
வளையலையும் குறிக்கவில்லை.

அந்த வளையலை அணிந்த பெண்ணை குறிக்கும். 

அப்பாட , ஒரு வழியாக வந்து சேர்ந்து விட்டோம். 


இலக்கணம் படிக்க படிக்க , இலக்கணமும் சுவைக்கும், இலக்கியமும் சுவைக்கும். 

ரொம்ப bore அடித்தால் சொல்லுங்கள். குறைத்துக் கொள்கிறேன். 

Wednesday, August 23, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - மெய்யே, யான் அறியேன்

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - மெய்யே, யான் அறியேன் 


(முன்கதை சுருக்கத்திற்கு , இதற்கு முன்னால் உள்ள ப்ளாகுகளை வாசிக்கவும்).

மறையவன், என் மனைவியை கொன்ற வேடன் இவன் தான் என்று குற்றம் சுமத்தினான் . அரசன், அந்த வேடனைப் பார்த்து, "நீ என்ன சொல்கிறாய்" என்று கேட்டான்.

அதற்கு அவன், "ஐயா நான் கொல்லவும் இல்லை, கொன்றவரை காணவும் இல்லை, இது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது " என்றான்.

பாடல்

ஐயே நானும் கொன்றவன் அல்லேன் கொன்றாரைக் 
கையேன் வேறும் கண்டிலன் என்றான் இவள் ஆகத்து 
எய்யேறு உண்ட வாறு என் என்றார் எதிர் நின்றார் 
மெய்யே ஐயா யான் அறியேன் இவ் விளைவு என்றான்.

பொருள்

ஐயே = ஐயனே

நானும் கொன்றவன் அல்லேன் = நான் கொல்லவில்லை

கொன்றாரைக் = யார் இவளைக் கொன்றார்களளோ

கையேன் = கீழ்மையான நான்

வேறும் கண்டிலன் = வேறு யாரையும் காணவும் இல்லை

என்றான் = என்றான்

இவள் ஆகத்து  = இவள் அகத்தில் (உடம்பில்)

எய்யேறு = எய்யப்பட்ட அம்பு

உண்ட வாறு = உள் நுழைந்தது

என் = எப்படி

என்றார் = என்று கேட்டார்

எதிர் நின்றார் = எதிரில் உள்ள அமைச்சர்கள்

மெய்யே ஐயா = உண்மையைச் சொல்கிறேன்

யான் அறியேன் = எனக்குத் தெரியாது

இவ் விளைவு என்றான் = இது எப்படி நடந்தது என்று .

கொன்றவன் இவன் என்று வேதியன் குற்றம் சுமத்துகிறான்.

நான் கொல்லவில்லை . கொன்றாரையும் காணவில்லை என்று வேடன் சொல்கிறான்.

அரசனும் , அமைச்சர்களும் விசாரித்து விட்டார்கள்.

வேறு எந்த சாட்சியும் இல்லை.

காட்டுக்குள் நடந்த சம்பவம்.

கொலை நடந்திருக்கிறது. யாரோ தானே செய்திருக்க வேண்டும் ? யார் செய்தது ?

கதையை எப்படி கொண்டு செல்கிறார்கள் என்று பாருங்கள்.


நமக்குத் தெரியும் வேடன் கொல்லவில்லை என்று.  ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள்  அவனை குற்றவாளியாக்குகிறது.  வேறு எந்த சாட்சியும் இல்லை.

மன்னன் என்ன செய்யப் போகிறான் என்று நமக்கு ஒரே ஆவலாக இருக்கிறது.

ஒரு வேளை வேடனுக்கு தண்டனை கொடுத்து விடுவானோ ?  அப்படியே கொடுத்தாலும், அரசன் மேல் குறை சொல்ல முடியாது.

சரி, வேடன் செய்யவில்லை என்று அவனை விட்டு விட்டால், பின் கொலை யார் தான் செய்தது ? வேதியனுக்கு என்ன பதில் சொல்வது ?

தான் நிரபராதி என்று நிரூபிக்க வேடனுக்கு  வேறு வழி ஒன்றும் இல்லை

ஒரு அப்பாவி சிக்கிக் கொண்டானே என்று நம் மனம் பதறுகிறது. அவன் மேல் பச்சாதாபப் படுகிறது.

மனைவியை இழந்து, கை குழந்தையோடு  நிற்கும் வேதியன் மேலும் பரிதாபம் வருகிறது.

மன்னன் தவறு செய்து விடக் கூடாதே என்று தவிப்பும் இருக்கிறது.

கதை ஒரு புள்ளியில் நிற்கிறது.  கொஞ்சம் அசந்தாலும் பிரண்டு விடும்.

எப்படி மேலே கதையைக் கொண்டு செல்வது ?

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_23.html