Monday, November 6, 2017

இராமாயணம் - விராதன் வதை படலம் - அறிவு வந்து உதவ

இராமாயணம் - விராதன் வதை படலம் - அறிவு வந்து உதவ


இராமன், இலக்குவன், மற்றும் சீதை கானகத்தில் செல்லும் போது , விராதன் என்ற அரக்கன் சீதையை தூக்கிச் சென்று விடுகிறான். விராதனை தடுத்து இராமனும், இலக்குவனும் போர் புரிகிறார்கள். கடைசியில் இராமன் காலால் உதைக்க, விராதன் தோற்று கீழே விழுகிறான். விழுந்தவன், சாப விமோச்சனம் பெற்று மீண்டும் கந்தர்வனாகிறான்.


 வானுலகம் செல்வதன் முன் சிலச் சொல்லி விட்டு செல்லுகிறான்.

பாடல்

பொறியின் ஒன்றி, அயல்சென்று
     திரி புந்தி உணரா,
நெறியின் ஒன்றி நிலை நின்ற
     நினைவு உண்டதனினும்,
பிறிவு இல் அன்பு நனி பண்டு
     உடைய பெற்றிதனினும்,
அறிவு வந்து உதவ, நம்பனை
     அறிந்து, பகர்வான்.

பொருள்


பொறியின் ஒன்றி = பொறி என்றால் கருவி. பொறி வைத்து பிடிப்பது என்று சொல்லுவார்கள் அல்லவா. நாம் அறிவை இந்த பொறிகளால் பெறுகிறோம். பொறி என்றால் புலன்கள். கண், காது , மூக்கு போன்ற புலன்கள். இந்த புலன்களில் அறிவு ஒன்றி.


அயல்சென்று = வெளியில் சென்று

திரி = திரிந்து

புந்தி உணரா = புத்தி உணராமல்


நெறியின் ஒன்றி = நல்ல வழியில் ஒன்று பட்டு

நிலை நின்ற = நிலை பெற்ற

நினைவு உண்டதனினும் = நினைவு இருந்தாலும்

பிறிவு இல் அன்பு = பிரிதல் இல்லாத அன்பு , பக்தி

நனி  = மிகுந்த

பண்டு  = பழைய

உடைய பெற்றிதனினும் = உடமையாக பெற்றிருந்ததாலும்

அறிவு வந்து உதவ = அறிவும் வந்து உதவ

நம்பனை = தலைவனான இராமனை

அறிந்து = அறிந்து

பகர்வான் = சொல்லுவான்

அவனுக்கு முன்பு செய்த அன்பினாலும் (பக்தியாலும்), பழைய ஒழுக்கத்தாலும்  (நெறியின் ஒன்றி நிலை நின்ற ) அவனுக்கு அறிவு உதவி செய்தததால்  இராமனை அவன் அறிந்தான் என்கிறான் கம்பன்.

இதில் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால் ....

முதலாவது, மிக மிக மோசமானவன் என்று நாம் நினைப்பவனுக்கு பின்னால் மிக உயர்ந்த  குணமுள்ளவன் ஒருவன் இருக்கிறான். சாப விமோசனம் அடைவதற்கு முன்னால் பெரிய கொடூர அரக்கனாக இருந்தவன் பின்னால் உயர்ந்த தேவனாக மாறுகிறான்.  யாருக்குத் தெரியும் , யாருக்கு பின்னால் யார் இருக்கிறார் என்று ? இது விராதனுக்கு மட்டும் அல்ல , எல்லா கொடியவனுக்கு பின்னாலும் ஏதோ நல்லவன் மறைந்து கிடக்கிறான்.


இரண்டாவது, கெட்டவர்கள், கொடியவர்கள் "இனி நமக்கு விதித்தது இதுதான் போலும் என்று எண்ணி மேலும் மேலும் தவறுகளை செய்து கொண்டே போகக் கூடாது. எந்த கொடியவனுக்கும் ஒரு சாப விமோச்சனம் இருக்கும். அந்த நம்பிக்கை வேண்டும். சாப விமோசனத்தை தேடி செல்ல வேண்டுமே அல்லால், மேலும் மேலும் தவறுகளை செய்து கொண்டே போகக் கூடாது. எந்த பாவிக்கும் ஒரு கடைந்தேற்றுதல் உண்டு .

மூன்றாவது, கெட்டவர்களுக்கும் சில சமயம் நல்லவர்கள் சாவகாசம் கிடைக்கும். அப்படி கிடைக்கும் போது அதை பெற்றுக் கொண்டு , பாவங்களில் இருந்து விடு பட முயற்சி செய்ய வேண்டும் . அதை விட்டு விட்டு அந்த  நல்லவர்களுக்கும் தீமை செய்ய முயற்சி செய்யக் கூடாது.

நான்காவது, மிக முக்கியமானது, இராமன் திருவடி பட்டதால் அவனுக்கு அறிவு உதவி  செய்ய அவன் சாப விமோச்சனம் பெற்றான். அதற்கு முக்கிய காரணம்  முன்பு செய்த இடையறாத அன்பும், நல்ல ஒழுக்கமும். யாருக்குத் தெரியும் பின்னாளில் நாம் என்னவாக ஆவோம் என்று. இப்போதே நல்ல ஒழுக்கத்தை கடை பிடித்தால் , பின்னாளில் ஏதோ ஒரு சமயத்தில் இது கை கொடுக்கும்.

ஐந்தாவது, அரக்கன் என்பவன் யார் ? புலன்கள் பின்னால் அறிவை செலுத்துபவன்.

பொறியின் ஒன்றி, அயல்சென்று
     திரி புந்தி உணரா,

அறிவின் பின்னால் புலன்கள் சென்றால் அவன் மனிதன், தேவன். புலன்கள் பின்னால் அறிவு சென்றால் அவன் அரக்கன். அவ்வளவுதான்.

பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் என்று நினைப்பது, சாப்பிட்டு விடுவது.

அழகான பெண்ணைக் கண்டால், உடனே தவறாக நினைப்பது, தவறான  செயல்களில் ஈடுபடுவது.

இதெல்லாம் அரக்க குணம்.

நாம் அரக்க குணங்களில் இருந்து மாறுபட வேண்டும்.

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்று ஆழ்வார் கூறிய மாதிரி, முடியும் போதெல்லாம் நல்லது செய்து வைப்போம் . என்றேனும் உதவும்.

விராதன் வதைப் படலத்தில் இப்படி பல ஆழ்ந்த கருத்துகள் உள்ள பாடல்கள் உள்ளன.

நேரம் இருப்பின், மூலத்தை படித்துப் பாருங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/11/blog-post.html

Tuesday, October 31, 2017

இராமாயணம் - விராதன் வதை - என்னையே நுகர்தி

இராமாயணம் - விராதன் வதை - என்னையே நுகர்தி 


இராமன், இலக்குவன் மற்றும் சீதை கானகத்தில் செல்லும் போது , விராதன் என்ற அரக்கன் சீதையை தூக்கிக் கொண்டு செல்கிறான். அவனைத் துரத்திக் கொண்டு இராமனும் இலக்குவனும் சென்று அவனோடு போர் புரிகிறார்கள்.

விராதனால் இராம இலக்குவனர்களுக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சுகிறாள்.

என்னால் தானே இந்த சண்டை என்று வருந்துகிறாள். தவிக்கிறாள். சொல்லி அழக்  கூட ஆள் யாரும் இல்லை. துணை இல்லை.

"தாயைப் போல கருணை உள்ள இராமனையும் இலக்குவனையும் விட்டு விடு, என்னை அனுபவித்துக் கொள் என்று அவன் காலில் விழுந்து கெஞ்சுகிறாள்"

பாடல்

பின்னை ஏதும் உதவும் துணை பெறாள்;
     உரை பெறாள்;
மின்னை ஏய் இடை நுடங்கிட
     விரைந்து தொடர்வாள்;
‘அன்னையே அனைய அன்பின்
     அறவோர்கள்தமை விட்டு
என்னையே நுகர்தி’ என்றனள்-
     எழுந்து விழுவாள்.

பொருள்


பின்னை = அப்புறம்

ஏதும் = வேறு எந்த

உதவும் = உதவி செய்யும்

துணை பெறாள் = துணை ஒன்றையும் பெறாதவள்

உரை பெறாள் = ஆறுதல் உரை சொல்லக் கூட யாரும் இல்லாதவள்

மின்னை ஏய் = மின்னல் போன்ற

இடை = இடுப்பு

நுடங்கிட = வாட

விரைந்து தொடர்வாள் = வேகமாக அரக்கன் பின்னால் சென்று

‘அன்னையே அனைய = தாயைப் போன்ற

அன்பின் = அன்பு கொண்ட

அறவோர்கள்தமை விட்டு = அறவழியில் நடக்கும் இராம இலக்குவர்களை விட்டு விட்டு

என்னையே நுகர்தி’  = என்னை நுகர்ந்து கொள் , அனுபவித்துக் கொள்

என்றனள் = என்றாள்

எழுந்து விழுவாள் = எழுந்து பின் விழுவாள்

கொடுமையில் பெரிய கொடுமை, தண்டனையில் பெரிய தண்டனை பேசக் கூட  ஆள் இல்லாமல், துன்பம் வந்த போது ஆறுதல் சொல்லக் கூட ஆள் இல்லாமல் தனித்துப்  போவதுதான். பெரிய தவறு செய்தவர்களை தனிமைச் சிறையில் ஏன் அடைக்கிறார்கள். யாருமில்லாத தனிமை பெரிய தண்டனை. துன்பம்.

சீதை அவ்வாறு ஆகிப் போனாள்.

நட்பும், உறவும் தேவை. நாம் நன்றாக இருக்கும் போது அதன் தேவை, முக்கியத்துவம் புரியாது. நாம் நன்றாக இருக்கும் போது நாம் நட்பையும், உறவையும் உதாசீனப் படுத்தி விடுகிறோம். நமக்குத் தேவையான போது அது  கிடைக்காது.

எனவே, நன்றாக இருக்கும் போது நட்புக்கும், உறவுக்கும் நேரம் செலவிட வேண்டும்.

அது மட்டும் அல்ல, நாம் சுகமாக இருக்கும் போது வேறு யாருக்காவது நமது உதவி தேவைப் படலாம். ஒரு ஆறுதல் வார்த்தை, ஒரு நம்பிக்கையான வார்த்தை தேவைப் படலாம். ஓடிச் சென்று உதவ வேண்டும். நேரம் இல்லை, எனக்கே ஆயிரம் பிரச்சனை இதில் ஊர் பிரச்சனையை நான் எங்கு போய் தீர்ப்பது  என்று ஒதுங்கி இருக்கக் கூடாது. ஆயிரம் பிரச்சனையில், ஆயிரத்து ஓராவது பிரச்சனையாக மற்றவர்களுக்கு உதவிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான், நமக்கு ஒரு தேவை வரும்போது யாராவது உதவுவார்கள்.

"நுகர்தி " என்ற சொல்லுக்கு அனுபவித்தல் என்பது நேரடியான பொருளாக இருக்கலாம். உரை எழுதிய பெரியவர்கள், "என்னை வேண்டுமானால் தின்று கொள் , அவர்களை விட்டு விடு " என்று கூறுவதாக உரை எழுதி இருக்கிறார்கள்.  உங்கள் மனதுக்குப் பட்டதை எடுத்துக் கொள்ளுங்கள்.


"‘அன்பின்அறவோர்கள் " என்கிறாள் இராம இலக்குவனர்களை.

ஏன் ?

அன்பிற்கும் இடத்தில் அறம் தானே இருக்கும்.


அறம் என்றால் என்ன என்று யாராலும் அறுதியிட்டு கூற முடியாது.

"ஈரில்  அறம்" என்பான் கம்பன். அறத்திற்கு இதுதான் எல்லை என்று யாரும் சொல்ல முடியாது.

"அறம் என்று ஒன்று உண்டு, அது அமரர்கும் அறிய ஒண்ணாதது "  என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார் , கந்த புராணத்தில்

தேவர்களாலும் அறிய முடியாதென்றால் நாம் எம் மாத்திரம் ? பின் அறியாத ஒன்றை எப்படி கடை பிடிப்பது ?

ரொம்ப சுலபம். அன்பிருந்தால் அறம் தானே வரும்.

"என்பிலதனை வெயில் போல் காயுமே அன்பிலதனை அறம் " என்பார் வள்ளுவர்.

எலும்பு இல்லாத புழுவை வெயில் எப்படி காய்ந்து கொல்கிறதோ அது போல அன்பில்லாதவனை அறம்  அழிக்கும் என்கிறார்.

அன்பிருந்தால் அறம் வரும்.


"அன்னையே அனைய அன்பின்"


அது என்ன அன்னை போன்ற அன்பு ?

நமக்கு தீமை செய்தவர்களுக்கு தீமை செய்ய வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு.

ஒரு பெண்ணுக்கு அவளின் அழகு மிகப் பெரிய சொத்து.

பிள்ளை பெறுவது என்றால் அழகு அழியும்.  உடலின் கட்டுக் கோப்பு தளரும். தூக்கம் போகும். எடை கூடும். உடல் பெருக்கும். அழகு கட்டாயம் குறையும். தன் அழகை குறைத்த தன் பிள்ளையின் மேல் அந்த தாய் கோபம் கொள்ள மாட்டாள். என் ராசா, என் ராசாத்தி என்று தன பிள்ளையை கொஞ்சுவாள். கொஞ்சுவது மட்டும் அல்ல, தன் உதிரத்தை பாலாக்கித் தருவாள்.

அது போல, தனக்கு துன்பம் செய்தவர்களையும் பொறுத்து அவர்களுக்கு நல்லது  செய்யும் அன்புள்ளம் கொண்டவர்கள் இராமனும் இலக்குவனும் என்று கூறுகிறார்கள்.

போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகும் பாடல் தான். இருந்தும் அதிலும் ஆயிரம்  அர்த்தங்கள் கம்பனில்.

நிறுத்தி நிதானமாக படிக்க வேண்டும்.

அத்தனையும் வாழ்க்கைக்கு நலம் செய்யும் பாடல்கள்.  பாடங்கள்.

Sunday, October 29, 2017

திருக்குறள் - நன்மையின் நீக்கும்

திருக்குறள் - நன்மையின் நீக்கும் 


நல்லது வேண்டாமென்று யார் தான் சொல்லுவார்கள். மேலும் மேலும் நல்லதே வேண்டும் என்றுதானே எல்லோரும் விரும்புவார்கள்.

அதற்காகத்தானே இத்தனை பாடு படுகிறார்கள்.

செல்வம் வேண்டும், புகழ் வேண்டும், அதிகாரம் வேண்டும், மகிழ்ச்சி வேண்டும் என்று எத்தனையோ நன்மைகளை வேண்டி பாடு படுகிறார்கள்.

இருந்தும், எல்லோருக்கும் நல்லவை கிடைத்து விடுவதில்லை. எவ்வளவு படித்திருந்தும், எவ்வளவு கடுமையாக உழைத்தும் நன்மை என்பது சிலருக்கு எட்டா கனியாகவே இருக்கிறது.

ஏன் ?

வள்ளுவர் சொல்கிறார், பயனற்ற பண்பில்லாத சொற்களை பேசுவதன் மூலம் ஒருவனை விட்டு நன்மைகள் நீங்கும் என்று.

பாடல்

நயன் சாரா நன்மையின் நீக்கும் - பயன்சாராப்
பண்பு இல் சொல் பல்லாரகத்து.


பொருள்

நயன் = நயமான, இனிமையான, அன்பான , அருளான

சாரா  = சார்பில்லாத

நன்மையின் = நன்மையில் இருந்து

நீக்கும்  = நீக்கிவிடும்

பயன்சாராப் = பயனொடு தொடர்பில்லாத

பண்பு இல் = பண்பில்லாத

சொல் =  சொற்களை

பல்லாரகத்து = பல்லார் + அகத்து = பலரிடத்தில்


விரிவாக பார்போம் .

"பயன் சாரா" என்றால் என்ன ?

நாம் ஒருவரிடம் பேசுகிறோம் என்றால் நம் பேச்சினால் அவருக்கு என்ன பயன்  விளையும் என்று யோசிக்க வேண்டும். பயன் என்பதை இரண்டு வகையாக பிரிக்கிறார் பரிமேலழகர். இம்மை பயன் , மறுமை பயன் என்று. இந்த வாழ்கைக்காகவாவது அல்லது இறந்த பின் கிடைக்கும் முக்தி, வீடு பேறு  போன்றவற்றுக்காக பயன் தர வேண்டும்.

இம்மைக்கும் மறுமைக்கும் பயன் இல்லாத சொற்களை பேசக் கூடாது.

பேசக் கூடாது என்று சொல்வதன் மூலம், அது போன்ற சொற்களை கேட்கவும் கூடாது என்று புரிகிறது அல்லவா ?

"பண்பு இல் " என்றால் என்ன ?

பயன் தரும் சொற்களைக் கூட பண்போடு சொல்ல வேண்டும்.

பிள்ளைகளிடம் "நல்லா படிச்சா நல்ல வேலை கிடைக்கும், நாலு பேருக்கு நல்லது  செய்யலாம் . எனவே நல்லா படி" னு சொல்லலாம். "படிக்கலேனா பன்னி மேய்க்கத் தான் போற " என்றும் சொல்லலாம். இரண்டுமே நல்லா படி என்ற பயனுள்ள சொற்கள்தான். இருந்தும், இரண்டாவது கொஞ்சம் பண்பற்ற சொல்லாக இருக்கிறது அல்லவா  ? நல்லதே சொன்னாலும் , இனிமையாக , மற்றவர் மனம் புண் படாதபடி சொல்ல வேண்டும்.

"பல்லார் அகத்து" ...பலரிடம். இதே தொழிலாக அலைவது. யாரைப் பார்த்தாலும் லொட லொட என்று தேவையில்லாத சொற்களை பேசிக் கொண்டிருத்தல் .


"நீக்கும்" ...வேறு யாரும் வந்து கெடுதல் செய்ய வேண்டாம். இப்படி நயன் இல்லாத, பண்பில்லாத சொற்களை பேசிக் கொண்டிருந்தால், அதுவே நமக்குச் சேர  வேண்டிய நன்மைகளில் இருந்து நீக்கிவிடும்.

என் மனைவி/கணவன் என்னிடம் அன்பாக இல்லை, மேலதிகாரி எனக்கு பதவி உயர்வு  தரவில்லை, பிள்ளைகள் நான் சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறார்கள், மாமியார் / மருமகள் உறவு சரியாக இல்லை என்று வரும் பிரச்சனைகளுக்கு  மற்றவர் காரணம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் அல்ல காரணம். நமது பயன் இல்லாத பண்பற்ற  சொற்கள்தான் காரணம். நமக்கு வர வேண்டிய நன்மைகளை அவை நம்மிடம் இருந்து  நீக்கி விடுகின்றன.

நீக்குதல் என்றால் முதலில் இருக்க வேண்டும். அதை நீக்க வேண்டும். நம்மிடம்  ஏற்கனவே உள்ள நன்மைகளை, செல்வங்களை, செல்வாக்கை பயனற்ற  பண்பில்லாத சொற்கள் நீக்கி விடும். நம்மை விட்டுப் போகச் செய்து விடும்.

உழைத்து சம்பாதித்த பணம், பேர், புகழ், உறவுகள் என்று அனைத்தையும் நீக்கி விடும்.


எதை நீக்கும் ?

நயன் சாரா நன்மையின் நீக்கும்

இனிமையான, அன்பான, அருள் நிறைந்த நன்மைகளை நீக்கிவிடும்.

பொருட் செல்வம் மட்டும் அல்ல. மற்ற அனைத்து நன்மைகளையும் நீக்கி விடும்.

"பல்லாரகத்து"  பலரிடம்.  இன்று whatsapp  , e mail போன்றவை வந்து விட்டன. ஒரே சமயத்தில்  பலரிடம் chat செய்ய முடியும். வள வள என்று தேவையில்லாத  chat களால் நமது நேரத்தை வீணடிப்பது மட்டும் அல்ல, மற்றவர்கள்  நேரத்தையும் நாம் வீணடிக்கிறோம். தேவை இல்லாத சொற்களால் பகை  வளரலாம். மனத்தாங்கல் வளரலாம்.

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

எல்லோரிடமும் தேவையற்ற பேச்சினால் நன்மை நீங்கி கெடுதலே விளையும்.

பேசும் முன், எழுதும் முன் யோசியுங்கள்.

இதனால் மற்றவர்களுக்கு என்ன பயன்.

பயன் இருந்தாலும், அதை அன்பாக, இனிமையாக எப்படி சொல்வது என்று  சிந்தித்துச்  சொல்லுங்கள்.

அபப்டி ஒன்றும் இல்லை என்றால், மௌனம் சிறந்தது.

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_29.html

Saturday, October 28, 2017

பழமொழி - தமக்கு மருத்துவர் தாம்

பழமொழி - தமக்கு மருத்துவர் தாம் 


நவீன மருத்துவத்தில் பல சிக்கல்கள் உள்ளன.

ஒரு நோய்க்கு ஒரு மருந்துதான். காய்ச்சல் உங்களுக்கு வந்தாலும் சரி, எனக்கு வந்தாலும் சரி, யாருக்கு வந்தாலும் ஒரே மருந்துதான். இன்ன நோய்க்கு இன்ன மருந்து என்று வைத்திருக்கிறார்கள்.  நீங்களும் நானும் ஒன்றா ? என் உடல், என் உணவு, என் சூழ்நிலை, என் வேலை,  என்று எல்லாமே உங்களில் இருந்து மாறுபட்டது. எப்படி இரண்டு பேருக்கும் ஒரே மருந்து சரி வரும்.

இரண்டாவது, நவீன மருத்துவம் , நோய்களுக்குக் காரணம் நுண் கிருமிகள் (germs ) என்று நம்புகிறது. Germ Theory.  பாக்டீரியா, வைரஸ் போன்றவை நோய்களை உண்டாக்குகின்றன என்பது நவீன மருத்துவத்தின் கோட்பாடு. அப்படி என்றால், அந்த கிருமிகள் தாக்கும் எல்லோருக்கும் அந்த நோய் வர வேண்டுமே ? வருவது இல்லை. நோய்க்குக் காரணம் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதே.  இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நவீன மருத்துவத்தில் வழி இல்லை. அதாவது, நோய் எதிர்ப்பு இருந்தால் நோயே வராது. ஆரோக்கியமாக இருக்கலாம்.  நவீன மருத்துவம் என்பது நோயை சரிப் படுத்துமே தவிர, நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லாது.

மூன்றாவது, நோய் தடுப்பூசி என்று போடுகிறார்கள். அவை முதலில் நோயை உண்டுபண்ணும். அந்த நோயை நமது உடல் போராடி வென்றெடுக்கும். அப்படி நோய் எதிர்ப்பு தன்மையை உண்டாக்குகிறார்கள். நோய் தடுப்பு என்பது , நோயை உண்டாக்குவது. இந்த தடுப்பூசிகளால் பல சிக்கல்கள் வருகின்றன  என்று மேல் நாடுகளில் சொல்கிறார்கள்.

நான்காவது, நவீன மருத்துவத்தில் , நோய்க்கு தரும் ஒவ்வொரு மருந்தும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். Side effects என்று சொல்வார்கள். அதாவது , ஒரு நோயை குணப்படுத்த வேண்டும் என்றால், வேறு பல உபாதைகளுக்கு, நோய்களுக்கு உள்ளாக வேண்டும். பக்க விளைவுகள் இல்லாத மருந்தே கிடையாது.  தலை வலி போய் திருகு வலி வருவதுதான் மிச்சம்.

ஐந்தாவது, ஒரு நோய்க்கு ஒரு மருந்து உண்டு. ஒருவருக்கு , ஒன்றுக்கு மேற்பட்ட நோய்கள் இருந்தால் , அவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகள் தருவார்கள். இந்த மருந்துகள் உள்ளே சென்று அவை ஒன்றோடு ஒன்று கலந்து என்னென்ன செய்யும் என்று எளிதாக அறிய முடியாது. நோய் சரியாகவில்லை என்றால், மருந்தை மாத்தி கொடுப்பார்கள். அல்லது மருந்தின் அளவை கூட்டி  குறைத்து கொடுப்பார்கள். ஒரு ஊகம் தான்.

ஆறாவது , இன்று எல்லாமே இலாப நோக்கில் செல்வதால், தேவை இல்லாத சோதனைகள் (test ), தேவை இல்லாத அறுவை சிகிச்சை என்று நிகழ்கிறது. இவற்றினால் பணமும், உடல் நலக் குறைவும் உண்டாகிறது.


இப்படி , நவீன மருத்துவத்தில் பல குறைபாடுகள் உண்டு. நிறைகளும் உண்டு. இல்லை என்று சொல்வதற்கு இல்லை.

இருப்பினும், பல சமயங்களில் நாம் மருத்துவர்களை முழுவதுமாக நம்பிக் கொண்டிருக்காமல், நம் உடல் ஆரோக்கியத்தை பற்றி நாம் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். எது சரி, எது தவறு என்று சிந்திக்க வேண்டும். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது, எவ்வளவு சாப்பிடலாம், எப்போது சாப்பிடலாம்  என்று நம் உடல் நிலையை உன்னிப்பாக கவனித்து நமக்கு நாமே சரியான கட்டுப்பாடுகள், வரைமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.

நோய் வந்தால் இருக்கவே இருக்கிறார் டாக்டர், ஒரு ஊசி போட்டால் சரியாகி விடும் என்று இருக்கக் கூடாது.

நம் ஆரோக்கியத்திற்கு நாம் தான் பொறுப்பு.

சரியான உணவு, சரியான உடற் பயிற்சி, ஓய்வு, தூக்கம், நல்ல மன ஆரோக்கியம் என்று நம் உடலை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேறு யாரும் நமக்கு உதவி செய்வார்கள் என்று நினைக்கக் கூடாது.

பாடல்

‘எமக்குத் துணையாவார் யாவர்?’ என்று எண்ணி,
தமக்குத் துணையாவார்த் தாம் தெரிதல் வேண்டா;
பிறர்க்குப் பிறர் செய்வது ஒன்று உண்டோ? இல்லை;-
தமக்கு மருத்துவர் தாம்.

பொருள்

‘எமக்குத் = எனக்கு

துணையாவார் = துணை செய்பவர்

யாவர்?’  = யார்

என்று எண்ணி = என்று நினைத்துக் கொண்டு

தமக்குத்  = நமக்கு

துணையாவார்த் = துணை செய்பவர்களை

தாம் = நாம்

தெரிதல் வேண்டா = தேடிக் கொண்டிருக்கக் கூடாது

பிறர்க்குப் = மற்றவர்களுக்கு

பிறர் = ஒருவர்

செய்வது ஒன்று உண்டோ? = உதவி செய்வது என்று ஒன்று உண்டோ ?

இல்லை;- = இல்லை

தமக்கு மருத்துவர் தாம் = நமக்கு மருத்துவர் நாம் தான்

நீங்கள் மட்டுமே உங்களுக்கு உதவி செய்யக் கூடியவர். வேறு யாரையும் நம்பாதீர்கள் என்கிறது இந்தப் பாடல்.





Monday, October 23, 2017

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - சிறை அன்னம் அனையாள்

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - சிறை அன்னம் அனையாள் 


இராமனும், இலக்குவனும் , சீதையும் கானகத்தில் செல்கின்ற போது , விராதன் என்ற அரக்கன் சீதையை தூக்கிக் கொண்டு சென்று விட்டான். இராமனும் இலக்குவனும் , அந்த அரக்கனை மறித்து அவனோடு போர் புரியத் தொடங்கினர்.

விராதன் , மாயம் செய்து, அவர்களை தூக்கிக் கொண்டு வானத்தில் சென்றான்.

சீதை பரிதவிக்கிறாள். சீதையின் அவலத்தை கம்பன் காட்டுகிறான்.

ஒரு குளத்தில் ஆண் அன்னமும், பெண் அன்னமும் இணையாக இன்பமாக இருந்து வந்தன. ஒரு நாள் வேடர்கள் வந்து வலை வைத்து பிடித்ததில் ஆண் அன்னம் சிக்கிக் கொண்டது. ஆண் அன்னத்தை அந்த வேடர்கள் தூக்கிக் கொண்டு போகிறார்கள். அதைக் கண்டு அந்தப் பெண் அன்னம் எப்படி துடிக்குமோ, அப்படி துடித்தாள் சீதை.

பாடல்

மா தயா உடைய தன் கணவன்,
     வஞ்சன் வலியின்
போதலோடும் அலமந் தனள்;
     புலர்ந்து, பொடியில்,
கோதையோடும் ஓசி கொம்பு என,
     விழுந்தனள் குலச்
சீதை, சேவல் பிடியுண்ட சிறை
     அன்னம் அனையாள்.

பொருள்

மா = பெரிய

தயா = தயை, கருணை

உடைய = உடைய

தன் கணவன் = தன் கணவன், இராமன்

வஞ்சன் = வஞ்சகனான விராதன்

வலியின் = வலிமையால்

போதலோடும் = போனதால்

அலமந் தனள் = வருந்தினாள், கவலைப்பட்டாள்

புலர்ந்து = வாடிய

பொடியில் = புழுதியில்

கோதையோடும் =  மலர் மாலையோடும் அல்லது மலர் மாலை போன்ற

ஓசி கொம்பு என = ஒடிந்து விழுந்த கொம்பு போல

விழுந்தனள் = விழுந்தால்

குலச் சீதை = உயர் குலத்தில் பிறந்த சீதை

சேவல் பிடியுண்ட  = ஆண் அன்னம் பிடிபட்ட பின்

சிறை  = மென்மையான சிறகுகள் உடையாய்  (பெண் அன்னம்)

அன்னம் = அன்னம்

அனையாள் = போன்ற (சீதை)


ஜனகனின் மகள். தயரதனின் மருமகள், இராமனின் மனைவி - பட்ட துன்பம் இது.

கணவனையும், கணவனின் தம்பியையும் அரக்கன் தூக்கிக் கொண்டு போகிறான்.

நம்மை காக்க வந்ததால் தானே அவர்களுக்கு இந்த கதி என்று நினைத்து  வருந்துகிறாள்.

கணவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், மனைவிக்கு பயம் போகாது. அவனுக்கு  ஏதாவது துன்பம் வந்து விடுமோ என்று.


இராமனின் மனைவியின் நிலை இது என்றால்.....

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_23.html

Friday, October 20, 2017

திருவாசகம் - சிவமாக்கி என்னை ஆண்ட

திருவாசகம் - சிவமாக்கி என்னை ஆண்ட 


நாம் யார் ?

நம் உண்மை நிலையை பலப் பல போர்வைகள் போத்தி மூடி மறைத்து இருக்கின்றன.

பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள்,டிவி, செய்தித் தாள்கள், நாம் வாசிக்கும் புத்தகங்கள், என்று ஒன்றின் மேல் ஒன்றாக சேர்ந்து நமது உண்மையான நிலையை அறிய விடாமல் தடுக்கின்றன.

இதை புரிந்து கொள்வது சற்று கடினம்.

என்னை நான் அறிய மாட்டேனா ? என்னைப் பற்றி எனக்குத் தெரியாவிட்டால் வேறு யாருக்குத் தெரியும் என்று நாம் நினைப்போம்.

சிந்திப்போம்.

நாம் சிலவற்றை சரி என்று , மற்றவற்றை தவறென்றும் நினைக்கிறோம். இந்த நினைப்பை எங்கிருந்து வந்தது ? யாரோ சொன்னது, எங்கேயோ படித்தது....

நாம் சிலவற்றை நம்புகிறோம், சிலவற்றை நம்புவதில்லை. ஏன் ?

சில விஷயங்கள் நமக்கு பிடிக்கிறது. சில பிடிப்பதில்லை. ஏன் ?

நாம் சிலவற்றை நியாயம் என்று நினைக்கிறோம். சிலவற்றை அநியாயம்  என்று  நினைக்கிறோம். ஏன் ?

எப்போதோ யாரோ சொன்னது. எங்கேயோ படித்தது. அது தான் உண்மை என்று நினைக்கிறோம்.

அது தான் உண்மையா ?

நாம் பின்பற்றும் மதம் மட்டும்தான் சரியா ? மற்ற மதங்கள் சொல்வதெல்லாம் தவறா ?

சரி, அதுவும் சரியான மதம் என்று ஒத்துக்கொண்டாலும் , இரண்டு மதங்களுக்கும் இடையில் வேறுபாடு இருந்தால் என்ன செய்வது ? இரண்டும் எப்படி  சரியாக இருக்க முடியும் ?

அதையெல்லாம் விட்டு விடுவோம்....

இறைவன் இருக்கிறானா ? இருந்தால் எப்படி இருப்பான் ?

இறைவனைப் பற்றி நமக்கு ஒரு அபிப்பிராயம் இருக்கிறது அல்லவா ? அந்த அபிப்ராயம்  எங்கிருந்து வந்தது ?

படித்தது, கேட்டது ...அவ்வளவுதானே ? வேறு விதமாக படித்து இருந்தால், வேறு விதமாக கேட்டிருந்தால் நம் அபிப்ராயம் மாறி இருக்கும் அல்லவா ? அப்படி என்றால் எதுதான் இறைவன் ?

நம் மனதை பல மாசுகள், குற்றங்கள், குழப்பங்கள் சூழ்ந்து நிற்கின்றன. அவற்றை நீக்கினால் உண்மை தெரியும்.

சிவன் என்பது வேறு எங்கோ இல்லை. ஏதோ இமய மலையில், பனியில் , உட்கார்ந்து இருக்கும் ஆள்  இல்லை. நீங்கள்தான் சிவன்.

"ஹா..நான் எப்படி சிவனாக முடியும் " என்று கேட்பீர்கள்.

நான் சொல்லவில்லை, மணிவாசகர் சொல்கிறார்.

"சித்த மலம் தெளிவித்து சிவமாக்கி" என்கிறார்.

என்னுடைய சித்தத்தில் உள்ள குழப்பங்களை எல்லாம் தெளியவைத்து என்னை சிவமாக்கி விட்டாய் என்கிறார்.

சித்தத்தில் உள்ள குழப்பங்கள் தெளிந்து விட்டால் சீவன் சிவமாகிவிடும்.

சீவன் வேறு சிவன் வேறு அல்ல. ஆனால் இந்த சீவன் தான் வேறு சீவன் வேறு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறது. காரணம், குப்பைகளை தனது சித்தத்தில் அது அடைத்து வைத்துக் கொண்டு இருக்கிறது.

அந்த குப்பைகளுக்கு உள்ளே எங்கோ ஒரு மாணிக்கம் இருக்கிறது. அந்த மாணிக்கம் , தான் ஒரு குப்பை என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. குப்பையை விலக்கினால் ,ஒளி விடும் மாணிக்கம் வெளிப்படும்.

பாடல்

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.


பாடல்

முத்தி நெறி = முக்தி அடையும் வழியை

 அறியாத = அறியாத

மூர்க்கரொடு = மூர்க்கர்களோடு

முயல்வேனைப் = சேர்ந்து இருப்பேனை

பத்திநெறி = பக்தி வழியை

அறிவித்துப் = அறியும்படி செய்து

பழவினைகள் = பழைய வினைகள்

பாறும்வண்ணஞ் = அற்றுப் போகும் படி செய்து

சித்தமலம் = சித்தத்தில் உள்ள குற்றங்களை, மாசுகளை, குறைகளை

அறுவித்துச் = விலக்கி

சிவமாக்கி  = என்னையும் சிவமாகச் செய்து

எனையாண்ட = என்னை ஆண்டு கொண்ட

அத்தனெனக் = அத்தனாகிய நீ எனக்கு

அருளியவாறு = அருள் செய்தவாறு

யார்  பெறுவார் = யாரால் அடைய முடியும்

அச்சோவே = அச்சோ (வியப்பு குறி )


சித்தமலம் தெளிவித்து சிவமாகச் செய்ய என்ன செய்ய வேண்டும் ?

இறைவன் நமக்கு ஏன் அந்த மாதிரி செய்ய மாட்டேன் என்கிறார் ? மணிவாசகருக்கு  மட்டும் அருள் செய்தாரே ?

மணிவாசகரே சொல்கிறார் - "யார் பெறுவார் ". யாரால் பெற முடியும் என்று கேட்கிறார். 

பெறுவதற்கு வழியும் சொல்கிறார். 

"முத்தி நெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனை "

முக்தி நெறி அறியாத மூர்கள் நட்பை விட வேண்டும். மூர்க்கர்கள் என்றால் யார் ?

பிடிவாதம் பிடிப்பவர்கள். அடம் பிடிப்பவர்கள். தான் சொல்வதே சரி என்று சாதிப்பவர்கள். அவர்களை மூர்க்கர்கள் என்று சொல்லுவார்கள். 

எதிலும் திறந்த மனம் வேண்டும். உண்மையை தேடுகின்ற தாகம் வேண்டும். ஆராய்கின்ற மன பக்குவம் வேண்டும். எனக்கு எல்லாம் தெரியும், நான் சொல்வதே உண்மை, நான் அறிந்ததே சத்யம் என்ற அடம் பிடிக்கக் கூடாது. 

"நெஞ்சக் கல்லு நெகிழ வேண்டும்"

"பக்தி நெறி அறிவித்து"

மூர்க்கர்களை விட்டு விலகிய பின், பக்தி நெறியில் செல்ல வேண்டும். 

மூர்க்கர்களை விட்டு விட்டு, நல்லவர்களை பின் பற்ற வேண்டும். 

அப்படி செய்தால் , பழைய வினைகள் நம்மை விட்டு விலகும். 

அது விலகும் போது சித்த மலம் விலகும். 

சித்த மலம் விலகினால், சிவமாவோம். 

திருத் தொண்டர் தொகை பாடிய சுந்தரர் , அந்த பட்டியலில் மணி வாசகரை சேர்க்கவில்லை. 

ஏன் ? மணிவாசகர் திருத்தொண்டர் இல்லையா ?

இல்லை. 

அவர் சிவமாகவே மாறி விட்டார். அவர் தொண்டர் இல்லை. 

"சிவமாக்கி எனை ஆண்ட" என்கிறார் மணிவாசகர்.

உரையை விட்டு விடுங்கள். பாடலை இன்னொரு முறை படித்துப் பாருங்கள். 

நேரே உங்கள் மனதில் வந்து ஒட்டிக் கொள்ளும். 




Wednesday, October 18, 2017

திருக்குறள் - பயனில சொல்லாமை

திருக்குறள் - பயனில சொல்லாமை 


நல்ல பேர் வாங்குவது, செல்வம் சேர்ப்பது என்பதெல்லாம் மிக கடினமான செயல்.

ரொம்ப உழைக்க  வேண்டும்.  கடுமையாக உழைத்தால்தான் நல்ல பெயரும், புகழும், செல்வமும் கிடைக்கும். அதுவும் ஏதோ ஒரு சில நாளிலோ அல்லது மாதத்திலோ வந்து விடாது. ஆண்டு பல ஆகும்.

அப்படி சேர்த்த  பெயரையும்,புகழையும் கட்டி  காப்பது அதை விட கடினம்.

ஒரு நொடியில் புகழ் போய்விடும், ஒரு தவறான முடிவில் செல்வம் போய் விடும்.

நல்லவர்கள், பண்புள்ளவர்கள், இனியவர்கள் தாங்கள் சிரமப் பட்டு சேர்த்த பேரையும் , செல்வத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் ஒன்றே ஒன்று நிச்சயமாக செய்யக் கூடாது

அது என்ன ?

பயன் இல்லாத சொற்களை ஒரு போதும் பேசக் கூடாது

பயனில்லாத சொற்களை பேசினால் சீர்மையும் சிறப்பும் போய் விடும் என்கிறார்  வள்ளுவர் ...

பாடல்

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை உடையார் சொலின்


பொருள்

சீர்மை = புகழ், நல்ல பெயர்

சிறப்பொடு = பெற்ற சிறப்புகள் (பட்டம், பதவி, செல்வம், )

நீங்கும் = ஒருவனை விட்டு நீங்கும்

பயன்இல = பயன் இல்லாத

நீர்மை = நீர் போல

உடையார் = உயர்ந்த குணம் உடையவர்கள்

சொலின் = சொன்னால்

எனவே, நீங்க சேர்த்து வைத்த நல்ல பெயர், புகழ், செல்வம் , பட்டம் , பதவி , செல்வாக்கு இவற்றை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால், பயன் இல்லாத சொற்களை சொல்லாமல் இருங்கள்.

பயன் இல்லாத சொல் என்றால் என்ன ?

மற்றவர்களுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் பயன் இல்லாத சொல் என்று உரை எழுதுகிறார்  பரிமேலழகர்.


நாம் எதையாவது சொல்ல வேண்டும் என்றால், அது கேட்பவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில்   பயன் உள்ளதாக இருக்க வேண்டும். இல்லை என்றால் பேசாமல் இருப்பது நல்லது.

யோசித்துப் பார்ப்போம்.

நாம் பேசுவதில் எத்தனை மற்றவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது என்று ?

அரட்டை, chat , "சும்மா தான் கூப்பிட்டேன்", whatsapp , facebook comments இதெல்லாம் மற்றவர்களுக்கு எவ்வளவு தூரம் நன்மை பயக்கிறது என்று சிந்திப்போம்.

அதே போல, மற்றவர்கள் நம்மிடம் பேசும் போது , இந்த பேச்சை கேட்பதால் நமக்கு என்ன பலன் என்று யோசிக்க வேண்டும்.

டிவி சீரியல்கள், விவாத மேடைகள், பட்டி மன்றங்கள், போன்றவற்றை கேட்கும் போது , சிந்திக்க வேண்டும்  இதனால் பயன் உண்டா என்று.

பயனுள்ளவற்றை பேச வேண்டும் என்றால் அப்படிப்பட்ட விஷயங்களை நாம் முதலில்  அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா ? அதற்கு நிறைய படிக்க வேண்டும், படித்தவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். அவற்றை நம் அனுபவத்தோடு சேர்த்து பார்க்க வேண்டும்.

அப்போது நமது அறிவின் எல்லை விரியும். விரிந்த அறிவு பயன் உள்ள சொற்களை தரும்.

பேச்சை குறைப்போம்.

தேவை இல்லாதவற்றை கேட்பதை தவிர்ப்போம்.

நல்லதை படிப்போம், கேட்போம்.

நல்லவற்றை பேசுவோம்.

இது நண்பர்கள் மத்தியில் மட்டும் அல்ல. வீட்டில், மற்ற உறவுகளின் மத்தியில், அலுவலகத்தில், எல்லா இடத்திலும் கடை பிடிக்க வேண்டிய ஒன்று.

ஏழு வார்த்தையில் எவ்வளவு  விஷயம்.

சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_18.html