Wednesday, February 7, 2018

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - தன்னையே கொல்லும் சினம்

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - தன்னையே கொல்லும் சினம் 


நாம் மற்றவர்கள் மேல் சினம் கொண்டால், அது மற்றவர்களை அழிக்கிறதோ இல்லையோ, நம்மை கட்டாயம் அழிக்கும்.

தன்னை தான் காக்க, சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்

என்பார் வள்ளுவர். சினம், தன்னை கொண்டவனை அழிக்கும். அவனை மட்டும் அல்ல, அவன் குலத்தையே அழிக்கும். சந்தேகம் இல்லை.

கோபம் கொண்டவன் என்ன செய்கிறோம் என்ற அறிவை இழக்கிறான். அவன் படித்த புத்தகங்கள், கேட்ட அறிவுரைகள், அறவுரைகள் எல்லாம் காற்றில் போகும். மூர்க்கத்தனமாக எதையேனும் செய்து தனக்கும், தன் குடும்பத்துக்கும், குலத்துக்கும் நாசம் தேடிக் கொள்வான்.

மாரீசன் எவ்வளவோ தடுத்து பார்க்கிறான். இராவணன் கேட்டான் இல்லை. மாரீசனிடம் கோபம் கொள்கிறான்.

இராவணனின் கோபம் கண்டு மாரீசன் பயம் கொள்ளவில்லை. மாறாக , மேலும் அறிவுரை கூறுகிறான்.

"நீ என் மேல் கோபம் கொள்ளவில்லை. உன் மேல் கோபம் கொண்டாய். உன் குலத்தின் மேல் கோபம் கொண்டாய்"

என்று மேலும் சொல்லத் தலைப்படுகிறான்.

பாடல்

தன்னை முனிவுற்ற 
     தறுகண் தகவிலோனை, 
பின்னை முனிவுற்றிடும் எனத் 
     தவிர்தல் பேணான் 
'உன்னை முனிவுற்று உன் 
     குலத்தை முனிவுற்றாய்; 
என்னை முனிவுற்றிலை; இது 
     என்?' என இசைத்தான்.


பொருள்


தன்னை முனிவுற்ற  = தன் மேல் (மாரீசன் மேல்) கோபம் கொண்ட

தறுகண் = வீரம் நிறைந்த

தகவிலோனை = பெருமை இல்லாதவனை

பின்னை =   பின்னால்

முனிவுற்றிடும் = கோபம் கொள்ளுவான்

எனத் = என்று

தவிர்தல்  = அவனை தவிர்த்து விட்டு போக

பேணான் = நினைக்க மாட்டான்

'உன்னை முனிவுற்று = உன்னுடனேயே நீ சினம் கொண்டு

உன் குலத்தை முனிவுற்றாய் = உன் குலத்தின் மேல் கோபம் கொண்டாய்

என்னை முனிவுற்றிலை = நீ என் மேல் கோபம் கொள்ளவில்லை

இது என்?' = இது எப்படி

 என இசைத்தான். = என்று நினைத்தான்

நம் பிள்ளைகளோ, நண்பர்களோ, கணவனோ/மனைவியோ ஒரு தவறு செய்தால், செய்ய முற்பட்டால், நாம் தடுத்துக் கூறுவோம். கேட்க்காவிட்டால்  , "நான் சொல்றதை சொல்லிட்டேன்...அப்புறம் உன் இஷ்டம் " என்று விட்டு விடுவோம்.

அப்படி விடக் கூடாது. அவர்கள் செய்ய நினைப்பது தவறு என்றால் , இறுதிவரை போராட வேண்டும்.

"ஆமா...ரொம்ப சொன்னா அவளுக்கு (அவருக்கு) கோபம் வரும். மூணு நாளா மூஞ்சிய தூக்கி வச்சிட்டு இருப்பா (இருப்பார்) ..எக்கேடும் கெட்டு போகட்டும் "

என்று விடக் கூடாது.

இராவணன் தன் மேல் கோபம் கொள்வான் என்று மாரீசனுக்குத் தெரியும்.

இருந்தும் சொல்கிறான்.

நமக்கு யார் மேலாவது கோபம் வந்தால், நாம் யார் மேல் கோபம் கொண்டோமோ அவர்களுக்கு ஒரு பாதிப்பு இல்லை. இன்னும் சொல்லப் போனால், அவர்களுக்கு நாம் அவர்கள் மேல் கோபமாய் இருக்கிறோம் என்று கூடத் தெரியாது. ஆனால், கோபம் கொண்டவனின் இரத்த அழுத்தம் ஏறும்,    படபப்பு வரும்.

எனவே, கோபம் நமக்குத்தான் அதிகம் தீங்கு செய்யும்.

கோபம் கொண்டவன், மற்றவர்கள் மேல் கோபம் கொள்வது இல்லை. தன் மேலும் தன் குலத்தின் மேலும் கோபம் கொள்ளுகிறான்.


சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி, இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்

என்பார் வள்ளுவர்.

கோபத்தின் மூலம் நமக்கு நாமே அழிவைத் தேடிகே கொள்கிறோம்.

அதை தவிர்த்தல் நலம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_7.html






Tuesday, February 6, 2018

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - காமமும் கோபமும்

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - காமமும் கோபமும்


சீதையை சூழ்ச்சியால் கவர்வோம் என்ற இராவணன் சொல்ல, அது தவறு என்று மாரீசன் எவ்வளவோ எடுத்துச் சொல்கிறான். இதுவரை அதைப் பார்த்தோம்.

அதைக் கேட்ட இராவணன் என்ன செய்தான் ?

அறிவுரை கேட்டு, மனம் மாறினானா ?

இல்லை. அரக்க குணம். தான் கொண்டதே சரி என்ற மூர்க்க குணம். எத்தனை நீதி நூல்களைப் படித்தாலும், எத்தனை சொற் பொழிவுகள் கேட்டாலும், எருமை மாட்டின் மேல் மழை பொழிந்தாற் போல தன் போக்கிலே போகும் தமோ குணம்.

இராவணனும் அவ்வாறே செய்கிறான்.

அவன் மனதில் கோபமும் , சீதை மேல் கொண்ட காமமும் நிறைந்து கிடக்கிறது.

முதலில் கோபம்.

மாரீசன் மேல் கோபம் கொள்கிறான்.

"நான் யார். என் பெருமை என்ன. என் வலிமை என்ன. கங்கையை சடையில் வைத்த சிவன் வாழும் கையிலை மலையை என் கையால் எடுத்த என் தோள் வலிமையை ஒரு மனிதர்களின் வலிமைக்கு முன்னால் குறைவானது என்றா நினைத்தாய்" என்று கண்ணில் தீ எழ பார்க்கிறான்.

பாடல்

‘கங்கை சடை வைத்தவனொடும்
    கயிலைவெற்பு ஓர்
அங்கையின் எடுத்த எனது
    ஆடு எழில் மணித் தோள்,
இங்கு ஒர் மனிதற்கு எளிய
    என்றனை ‘எனத் தன்
வெம் கண் எரியப் புருவம்
    மீது உற விடைத்தான்.


பொருள்


‘கங்கை  = கங்கையை

சடை = சடையில்

வைத்தவனொடும் = வைத்த சிவனோடும்

கயிலைவெற்பு = கயிலை மலையை

ஓர் = ஒரு

அங்கையின்  = உள்ளங்ககையில்

எடுத்த எனது = எடுத்த எனது

ஆடு எழில் மணித் தோள் = ஆர்ப்பரித்து ஆடுகின்ற என் மணித் தோள்களை

இங்கு ஒர் மனிதற்கு = இங்கு ஒரு மனிதர்க்கு

எளிய என்றனை = எளிமையாக வெல்லப் படக்கூடியவை என்று நினைத்து விட்டாய்

‘எனத் = என்று

தன் = தன்

வெம் கண் = சிவந்த கண்கள்

எரியப் = தீ எழ

புருவம் மீது உற = புருவம் மேலே செல்ல

விடைத்தான் = கோபம் கொண்டான்


கோபம் கண்ணை மறைக்கிறது.

கோபம் வரும்போது உண்மை கண்ணுக்குத் தெரிவதில்லை.

கண்ணனை , இடையன் இடையன் என்று சொல்லிக் கெட்டான் துரியோதனன் .

முருகனை சிறு பிள்ளை , சிறு பிள்ளை என்று சொல்லிக் கெட்டான்  சூர பத்மன்.

இராமனை மனிதன் , மனிதன் என்று சொல்லிக் கெட்டான் இராவணன்.

ஆணவமும், கோபமும் உண்மையை மறைக்கும்.


உண்மையின்  தரிசனம் கிடைக்க வேண்டும் என்றால் , முதலில் கோபத்தை விட வேண்டும்.

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்பார் வள்ளுவர்.

ஒரு பக்கம் ஆணவம் - கையிலை மலையை மட்டும் அவன் தூக்கவில்லையாம். அந்த மலையோடு, சிவனையும் சேர்த்து தூக்கினேன் என்கிறான்.

"கங்கை சடை வைத்தவனொடும்
    கயிலைவெற்பு"

கங்கை, தலையில் கொண்ட சிவன், அவன் இருக்கும் கைலை மலை எல்லாவற்றையும் சேர்த்து  தூக்கினேன் என்கிறான்.

என்னைப் பார்த்தா மனிதர்களிடம் தோற்றுப் போவேன் என்று சொல்கிறாய் என்று சினப்படுகிறான்.

அந்த ஆணவமும், கோபமும் இல்லாமல் இருந்திருந்தால் அழிவு வந்திருக்காது.

இராவணனுக்கே அந்தக் கதி என்றால்......


இந்த பிளாக்கை படிப்பது எதற்கு ? ஏதேனும் நல்லது இருக்குமா என்ற ஆர்வம் தானே ?

எத்தனை நல்லது , எவ்வளவு வாசித்தாலும், கேட்டாலும் ஆணவமும், கோபமும், காமும் இருந்தால் அந்த வாசிப்பும், கேள்வியும் ஒரு பலனும் தராது.

நல்ல பாலை கழுவாத பாத்திரத்தில் இட்டு வைத்தால் பாலும் கெட்டு போகும் அல்லவா ?

பாத்திரத்தை சுத்தப் படுத்தி வையுங்கள். அப்புறம் அதில் பாலை இட்டு நிரப்பலாம்.

என்ன சரி தானே ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_6.html






Monday, February 5, 2018

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - மெய்ம்மை உணர்ந்தாய்

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - மெய்ம்மை உணர்ந்தாய் 


சமீபத்தில் ஒரு பெரிய கல்வித் துறையின் தலைவர் கையூட்டு பெற்றதற்காக கைது செய்யப்பட்டதை செய்தித் தாள்களில் படித்து அறிகிறோம்.

ஒரு கல்வித் துறையின் தலைவர். அவருக்குத் தெரியாதா தான் செய்வது தவறு என்று. அவர் படிக்காத நூல்களா ? அவருக்குத் தெரியாததா ? பின் ஏன் இந்த தவறு நிகழ்ந்தது ? அவர் மட்டும் அல்ல. அவர் போல் வரலாறு எங்கும் பலரைக் காணலாம்.

ஏன் படித்தவர்கள் தவறு செய்கிறார்கள் ? அறியாதவன் தவறு செய்தால், அறியாமை என்று மன்னிக்கலாம்.

கற்றவர்கள், கற்றதன் வழி நிற்பதில்லை. "இதெல்லாம் கவைக்கு உதவாது , நடைமுறையில் சாத்தியம் இல்லை, இதெல்லாம் நமக்கு சொன்னது இல்லை " என்று படித்ததை புறம் தள்ளி விட்டு , மனம் போன படி வாழத் தலைப் படுகிறார்கள்.

எது சௌகரியமோ அதை மட்டும் வைத்துக் கொண்டு, அதற்கு ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு , தாங்களாகவே ஒரு வாழ்க்கை வாழத் தலைப் படுகிறார்கள்.

இதற்கு எதற்கு படிக்க வேண்டும்  ?

இராவணன் படிக்காத சாத்திரம் இல்லை. இருந்தும் அவன் புத்தி வேறு வழியில் போனது.

மாரீசன் தன் அறிவுரையை தொடர்கிறான்.

பாடல்

நின்றும் சென்றும் வாழ்வன யாவும்
    நிலையாவாய்ப்
பொன்றும் என்னும் மெய்ம்மை உணர்ந்தாய்!
    புலையாள் தற்கு
ஒன்றும் உன்னாய்; என் உரை கொள்ளாய்;
    உயர் செல்வத்து
‘என்றும் என்றும் வைகுதி; ஐயா!
    இனி ‘என்றான்.

பொருள்


நின்றும் = அசையாமல் ஒரே இடத்தில் நிற்கும் மரம், செடி , கொடிகளும்

சென்றும் = இடம் இடம் பெயரும் விலங்குகள், பறவைகள், மனிதர்கள் போன்றவைகளும்

வாழ்வன யாவும் = வாழ்கின்ற யாவும்

நிலையாவாய்ப் = நிலைத்து வாழ்வன அல்ல

பொன்றும் என்னும் = அழியும் ஏதேனும் ஒரு நாள்

மெய்ம்மை உணர்ந்தாய்! = என்ற உண்மையை அறிந்தாய்

புலையாள் தற்கு = தீமை செய்வதற்கு

ஒன்றும் உன்னாய் = எதையும் நினைக்கமாட்டாய்

என் உரை கொள்ளாய் = நான் சொல்வதை கேட்க மாட்டாய்

உயர் செல்வத்து = உயர்ந்த செல்வங்களுக்கு

‘என்றும் என்றும் வைகுதி; = என்றும், என்றும் வைத்து வாழ்வாய்

ஐயா! = ஐயனே

இனி ‘என்றான் = இனி என்றான்

இராவணன்  வேதங்களை கற்றறிந்தவன் . அவற்றிற்கு காவலாய் நின்றவன்.

இருந்தும், அவன் கற்ற நூல்கள் படி அவன் வாழவில்லை. அதனால் அழிந்தான்.

படித்தும், அதன் படி வாழாமல்  இருப்பது, அரக்க குணம்.

எத்தனை எத்தனை நூல்களை படித்து இருக்கிறீர்கள். எவ்வளவு அற உரை படித்து இருக்கிறீர்கள்.

அவற்றுள், எத்தனையை , "இதெல்லாம் நமக்கு ஒத்து வராது" என்று ஒதுக்கி  வைத்து இருக்கிறீர்கள்.


அப்படிச் செய்தவன் இராவணன். ஒரு அரக்கன்.


http://interestingtamilpoems.blogspot.com/2018/02/blog-post_5.html

Sunday, February 4, 2018

அகநானூறு - நீங்குதல் மறந்தே

அகநானூறு - நீங்குதல் மறந்தே 


பொருளாதாரம் வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருக்கிறது.

பல வீடுகளில் கணவன் காலையில் ஒரு ஏழு அல்லது எட்டு மணிக்கு வேலைக்குப் போனால் இரவு வரும் போது எட்டு அல்லது ஒன்பது ஆகி விடும். அலுவலக நேரம் போக நிறைய நேரம் போக்குவரத்தில் போய் விடுகிறது.

இரவு வந்த பின், களைப்புதான் இருக்கும். போதா குறைக்கு பல நேரங்களில் conference call என்று வீட்டுக்கு வந்த பின்னும் வேலை தொடரும்.

வேலை இல்லாவிட்டாலும், அலுவலக சிந்தனையில் இருப்பார்கள்.

கொடுமை என்ன என்றால், பெண்களும் இப்போது வேலைக்குப் போகிறார்கள். அலுவலக வேலைக்கு மேல் , வீட்டு வேலையும் அவர்களுக்கு சேர்ந்து கொள்கிறது.

கணவன் மனைவிக்கு இடையில் அன்பை பரிமாறிக் கொள்ள நேரம் இல்லை.

பெற்றோர்களுக்கு பிள்ளைகளிடம் செலவழிக்க நேரம் இல்லை.

ஓடி ஓடி சம்பாதித்து, களைத்த பின், அந்த சம்பாதித்த பணத்தை மருத்துவரிடம் தந்துவிட்டு ....என்ன ஆயிற்று நம் வாழ்க்கைக்கு என்று ஏங்குவதே முடிவாக இருக்கும்.

இது ஏதோ இன்று நேற்று வந்த பிரச்சனை இல்லை.

சங்க காலம் தொட்டு நிகழ்வதுதான்.

அக நானூறில் ஒரு பாடல்.

அது ஒரு வறண்ட பாலை நிலம். மழை பெய்து ஆண்டு பல ஆகி விட்டன. பச்சை நிறமே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணோம்.

அந்த பொட்டை காட்டில் , ஒரு பெரிய மரம். அதுவும் பட்டுப் போய் இருக்கிறது. மரத்தின் அடி பாகத்தில் ஒரு பெரிய ஓட்டை. அதன் மூலம் வெப்பக் காற்று வீசும் போது ஊய்ய்ய் என்று சத்தம் வருகிறது.

மரத்தின் உச்சியில் ஒரு பருந்து கூடு. அதில் வாழும் இரண்டு பருந்துகள். அடிக்கடி தின்று விட்டு போட்ட மிச்ச மாமிச துண்டுகளில் இருந்து மாமிச வாடை அடித்துக் கொண்டிருக்கிறது அந்தக் கூண்டில்.

அடிக்கிற வெயிலிலும், உலர்ந்த காற்றிலும், அந்த பருந்துகளின் இறக்கையில் தீப் பிடித்தது போல  ஒரு தோற்றம்.

அந்தக் காட்டின் வழி சென்று, பொருள் தேடி வர நினைக்கிறான் கணவன்.

அவனுக்குள் ஒரு சஞ்சலம்.

மனைவியை விட்டு பிரிய வேண்டும். அவளின் அன்பு, அவளின் காதல், அவள் அணைப்பு தரும் சுகம் , இவற்றை எல்லாம் விட்டு விட்டுப் போகவும் மனம் இல்லை. பொருள் பெரிதா, மனைவியோடு இருந்து அவள் தரும் அன்பு பெரிதா என்ற கேள்வி அவன் முன் நிற்கிறது.

அவன் என்ன முடிவு செய்தான் ?

பாடல்

ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற,
நீள் எரி பரந்த நெடுந் தாள் யாத்து,
போழ் வளி முழங்கும், புல்லென் உயர்சினை,
2
முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி,
ஊன் பதித்தன்ன வெருவரு செஞ் செவி   5
எருவைச் சேவல் கரிபு சிறை தீய,
வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை,
3
நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட் பிணி
பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின்
பிரியின் புணர்வது ஆயின் பிரியாது,                 10
ஏந்து முலை முற்றம் வீங்க, பல் ஊழ்
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும்
மனைமுதல் வினையொடும் உவப்ப,
நினை மாண் நெஞ்சம்! நீங்குதல் மறந்தே.

பொருள் 

ஆள் வழக்கு அற்ற  = ஆள் அரவம் அற்ற


சுரத்திடைக் = காட்டு வழியில், காட்டின் இடையில்

கதிர் தெற = வெயில் மண்டைய பிளக்க

நீள் = நீண்ட, இங்கு அதிக

எரி பரந்த = அனல் பறக்கும்

நெடுந் = நெடிய, உயரமான

தாள் = அடி , அடி மரம்

யாத்து = 'யா ' என்ற மரத்தின்

போழ் வளி முழங்கும் = அடி மரத்தில் போகும் காற்று முழக்கம் செய்ய

புல்லென் = பொலிவற்ற (இலை , பூ இல்லாத)

உயர்சினை = சினை என்றால் உறுப்பு. இங்கே கிளை. உயர்ந்த கிளையில்


முடை நசை = மாமிச  நாற்றம் அடிக்கும்

இருக்கைப் = இருக்கும் இடம். கூடு

பெடை முகம் நோக்கி = பெண் பருந்தின் முகம் நோக்கி

ஊன் பதித்தன்ன = மாமிச துண்டை ஒட்டி வைத்தது போல

வெருவரு = அச்சம் தரும்

செஞ் செவி = சிவந்த காதுகளை கொண்ட

எருவைச் = பருந்து

சேவல் = சேவல்

கரிபு  = கரிந்து

சிறை  = சிறகு

தீய = தீய்ந்து போகும் படி

வேனில் நீடிய = உயர்ந்த மூங்கில்

வேய்  உயர் நனந்தலை = அகன்ற பெரிய காடுகளில்

நீ = நீ , தலைவன் தன் நெஞ்சுக்கு சொல்லுகிறான்

உழந்து எய்தும்  = கஷ்டப்பட்டு   அடையும்

செய்வினைப் = வேலை செய்ததால் கிடைக்கும்

பொருட் பிணி = ஈட்டிய பொருள்கள், செல்வங்கள்

பல் இதழ் = பல இதழ்கள் கொண்ட (மலர் போன்ற )

மழைக் கண்  = மழை போன்ற குளிர்ச்சியான கண்கள்

மாஅயோள்வயின் = மாநிறம் போன்ற அவளை

பிரியின் = பிரிந்த பின்

புணர்வது ஆயின் = அடைவது என்றால் (செல்வத்தை)

பிரியாது = அவளை விட்டுப் பிரியாமல்

ஏந்து முலை  = எடுப்பான மார்பகங்கள்

முற்றம் வீங்க = அன்பினால் நிறைவடைய

பல் ஊழ் = பல முறை

சேயிழை  = சிவந்த அணிகலன்களை   அணிந்த பெண்

தெளிர்ப்பக் = ஒலிக்க ,  அவள்அ கட்டி அணைக்கும் போது கேட்கும் வளையல் சத்தமும், உன்னை கண்டவுடன் ஆர்வமாக ஓடி வரும் அவளின் கொலுசு சத்தமும்

கவைஇ, நாளும் = நாள் தோறும்

மனைமுதல் = வீட்டில் இருந்து (உள்ளூரிலேயே இருந்து )

வினையொடும் = வேலை செய்து

உவப்ப = மகிழ்ச்சியோடு இரு

நினை = அது பற்றி நினை

மாண் நெஞ்சம்! = சிறந்த நெஞ்சே

நீங்குதல் மறந்தே = அவளை விட்டு நீங்குதலை மறந்தே

பொருள் தேவைதான். பொருளை விட சிறந்தது மனைவியின் அன்பு.

அப்படி சிறப்பாக நினைக்க வேண்டும் - கணவன்.

அது சிறப்பாக இருக்கும் படி செய்ய வேண்டும் - மனைவி.

 அன்புக்கும் நேரம் ஒதுக்குங்கள். வாழ்வு இனிக்கும்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_4.html



Friday, February 2, 2018

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - அறம் நோனார் ஈண்டார்

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - அறம் நோனார் ஈண்டார் 


சீதையை சூழ்ச்சியால் கவர வேண்டும் என்று கூறிய இராவணனுக்கு  , மாரீசன் சில அறிவுரைகள் கூறுகிறான்.

ஒவ்வொருவனும் நினைக்கிறான்...தான் சிறந்தவன், பலசாலி, அறிவுள்ளவன், எந்த பிரச்சனை வந்தாலும் நான் சமாளித்துக் கொள்வேன் என்று.

இராவணன் பெரிய பலசாலி. அறிவுள்ளவன். பக்திமான். எல்லாம் தான். கம்பன் இராவணனை மிக உயர்வாகவே காட்டுகிறான்.

இப்பேற்பட்ட நான், ஒரு மானிட பெண் மேல் ஆசைப்பட்டது என்ன தவறு. நான் அவளை தூக்கி வந்து விட்டால், என்னை யார் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறான். அவன் பலம் அவனுக்கு அந்த ஆணவத்தைத் தந்தது.

மாரீசன் சொல்கிறான். அடேய் இராவணா , உன்னை விடவும் பலசாலிகள் இதற்கு முன்னால் இருந்திருக்கிறார்கள். நீ தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா ? அற வழியில் நில்லாதவர்கள் எவ்வளவோ பேர். அவர்கள் பேர் கூட வரலாற்றில் இல்லை. நீயும் அந்த வழியில் சென்று விடாதே என்று பதறுகிறான்.

இரணியனிடம் , பிரகலாதன் இதையே கூறினான். கேட்டார் யார் ?


"இறந்தவர்கள் இறந்தவர்களாக இருக்கட்டும். நீ அவர்கள் வழியில் செல்ல வேண்டாம். அந்தத் தவறை செய்தால் , நீ தப்பும் வழி இல்லை. உனக்கு முன் , உன்னை விட பெரிய பல சாலிகள் எவ்வளவோ பேர் இருந்தார்கள். அறத்தை பேணாதவர்கள் நிலைத்து நின்றவர் யாரும் இல்லை "

பாடல்

'மாண்டார், மாண்டார்; நீ இனி 
     மாள்வார் தொழில் செய்ய 
வேண்டா, வேண்டா; செய்திடின், 
     உய்வான் விதி உண்டோ? 
ஆண்டார் ஆண்டார் எத்தனை 
     என்கேன்? அறம் நோனார், 
ஈண்டார்; ஈண்டு ஆர் நின்றவர்? 
     எல்லாம் இலர் அன்றோ?

பொருள்

'மாண்டார், மாண்டார்; = இறந்தவர்கள்நீ இறந்தவர்கள்

இனி = இனி மேல்

மாள்வார் தொழில் = இறப்பவர்களின் தொழிலை

செய்ய வேண்டா, வேண்டா = செய்ய வேண்டாம், செய்ய வேண்டாம்

செய்திடின் = செய்தால்

உய்வான் = தப்பும்

விதி உண்டோ? = வழி இருக்கிறதா ?

ஆண்டார் ஆண்டார் எத்தனை = உனக்கு முன் ஆண்டவர்கள் எத்தனை பேர்

என்கேன்? = என்று கேட்கிறேன்

அறம் நோனார் = அறத்தை நோன்பாக கொள்ளாதவர்கள்

ஈண்டார்; ஈண்டு ஆர் = இங்கு யார், இங்கு யார்

நின்றவர்? = நிலைத்து நின்றவர்

எல்லாம் இலர் அன்றோ? = ஒருவரும் இல்லை அன்றோ ?

மாண்டார் , மாண்டார் : அதற்கு என்ன அர்த்தம். இறந்தவர்கள் இறந்தவர்கள் என்றால்  என்ன அர்த்தம் ?

என்ன செய்தாலும், இந்த உடல் ஒரு நாள் மாளத்தான் போகிறது. இறப்பு என்பது  உடம்புக்கு உண்டு. அற வழியில் நின்றாலும், நிற்கவிட்டாலும் உடல் இறந்தே தீரும்.

அற வழியில் நின்றால், உடல் இறக்கும். புகழ் இறக்காது . நிலைத்து வாழும். அற வழியில் நில்லாதார் உடல் இறக்கும் போது , அவர்கள் புகழும் இறந்து போகும். உடனே இல்லாவிட்டாலும், சிறிது காலத்தில் மறைந்து போகும்.

வாழ்தல் என்பதே புகழோடு வாழ்தல் என்று தான் பெரியவர்கள் கொள்வார்கள்.

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்

இசை என்றால் புகழ். புகழ் இல்லாமால் வாழ்பவர்கள், வாழாதவர்களே என்கிறார் வள்ளுவர்.

அது ஒரு அர்த்தம்.

இன்னொரு அர்த்தம். பையனோ பெண்ணோ வீட்டில் பெரிய சுமையை தூக்க நினைக்கும் போது , அருகில் உள்ள பெற்றோர்கள் பதறுவார்கள்.

"பாத்து பாத்து ..மெல்லமா " என்று.

எதுக்கு இரண்டு தடவை சொல்ல வேண்டும். பதற்றம். ஒரு வேளை பிள்ளை அந்த சுமையை தூக்கி , அது கீழே விழுந்து பிள்ளைக்கு அடி கிடி பட்டுவிடுமோ என்ற பதற்றம்.

தவறு நடந்து விடக் கூடாதே என்ற பதற்றம், பயம்.

மாரீசனுக்குத் தெரிகிறது. இராவணன் செய்ய நினைப்பது தவறு என்று. மாண்டார், மாண்டார்....ஆண்டார், ஆண்டார் என்று சொன்னதையே திரும்பிச் சொல்லி தன் பதற்றத்தை காட்டுகிறான். செஞ்சு தொலைச்சுருவானோ என்ற பயத்தில்.

இராவணன் மேல் உள்ள பாசம், அவன் செய்ய நினைக்கும் செயலில் உள்ள பாவம்  அவனை புலம்ப வைக்கிறது.

"மாள்வார் தொழில்" ..புகழ் அடைய விரும்பாதவர் செயல். மாள்தல் என்றால் புகழ் அழிதல்.

நிறைய பேர் நினைக்கிறார்கள். பாவம் செய்து விட்டால், ஏதாவது பிரயாச்சித்தம் செய்து கொள்ளலாம் என்று. தான தர்மம் செய்து, கோவிலுக்குப் போய் , புனித நீர் ஆடி பாவத்தை தொலைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.

அறத்தை கொன்றவர்களுக்கு அதில் இருந்து தப்பும் வழியே இல்லை என்கிறான் மாரீசன்.

"செய்திடின்,  உய்வான் விதி உண்டோ? " என்று கேட்கிறான்.

தவம் செய்து, தான தர்மம் செய்து பாவத்தை போக்கிக் கொள்ள முடியாது என்கிறான்.


"அறம் நோனார்,  ஈண்டார்; ஈண்டு ஆர் நின்றவர்? "

அறத்தை, நோன்பு நோற்பது போல பக்தியோடு கடை பிடிக்க வேண்டும். ஏதோ , ஏனோ தானோ என்று கடை பிடிக்கக் கூடாது.

அறத்தை நோன்பாக நோற்கவில்லையென்றால் , புகழ் நிற்காது.

மாரீசன் இராவணனுக்குச் சொன்னதாக, கம்பர் நமக்குச் சொல்கிறார்.

கேட்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_2.html

Thursday, February 1, 2018

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - வைதால் அன்ன வாளிகள்

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - வைதால் அன்ன வாளிகள் 


சீதையை சூழ்ச்சியால் கவர்வோம் என்ற இராவணனின் எண்ணத்தை மறுத்து மாரீசன் சில அறிவுரைகள் கூறுகிறான்.

"நான் சொல்வதை மீறி வேறு ஏதாவது செய்தால், உனக்கு தீ வினையும், பழியும் வந்து சேரும். இராமனின் பாணங்கள் உன் சந்ததியையே அழித்து விடும் " என்கிறான்.

பாடல்

'செய்தாயேனும், தீவினையோடும் 
     பழி அல்லால் 
எய்தாது, எய்தாது; எய்தின், இராமன், 
     உலகு ஈன்றான், 
வைதால் அன்ன வாளிகள் கொண்டு, 
     உன் வழியோடும் 
கொய்தான் அன்றே, கொற்றம் 
     முடித்து, உன் குழு எல்லாம்?

பொருள்


'செய்தாயேனும்,  = நான்தீ சொல்வதற்கு மாறாக நீ செய்தால்

வினையோடும் = வினையுடன்

பழி அல்லால் = பழியைத் தவிர

எய்தாது எய்தாது = வேறு கிடைக்காது ;

எய்தின் = ஒரு வேளை நீ சீதையை தூக்கிக் கொண்டு வந்து விட்டால்

இராமன் = இராமன்

உலகு ஈன்றான் = உலகைப் படைத்தவன்
,
வைதால் அன்ன = சாபம் போன்ற வாளிகள் (அம்புகள்)

கொண்டு = அவற்றின் மூலம்

உன் வழியோடும் = உன் சந்ததிகளோடு

கொய்தான் அன்றே   = கொய்து எடுத்து விடுவான்

கொற்றம் முடித்து = உன் அரசாட்சியை முடித்து

உன் குழு எல்லாம் = உன் குழு எல்லாம்


அவன் பழி பாவத்துக்கு அஞ்ச மாட்டான் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம்.அது என்ன பழி, பாவம் ?

பழி என்பது இந்த பிறவியில் நம்மை வருந்துவது.

பாவம் என்பது தொடர்ந்து மறு பிறப்பிலும் வருவது.

இராவணா, நீ செய்யப் போகும் காரியம்  "தீவினையோடும்
பழி " இரண்டையும் தரும் என்கிறான். தீவினையும் வரும், பழியும் வரும். என்பது பொருள்.

இராமனின் அம்புகள் உன்னையும், உன் அரசையும், உன் குலத்தையும் அழித்து விடும் என்று சொல்ல வந்த கம்பன் அதற்கு ஒரு உதாரணம் தேடுகிறான்.

"வைதால் அன்ன " . வைதல் என்றால் திட்டுதல். இங்கே சாபம் என்ற பொருளில் வருகிறது. முனிவர்களின் சாபம் எவ்வளவு கடுமையானதோ அவ்வளவு கடுமையானது இராமனின் அம்புகள். பற்றாமல் போகாது.

"கொய்தான் அன்றே " அன்றே கொய்து விட்டான். அது எப்படி , இனிமேல் தானே நடக்கப் போகிறது. கொய்தான் என்று இறந்த காலத்தில் சொல்லமுடியும் ?

கொய்வான் என்று அல்லவா சொல்ல வேண்டும்.

கொஞ்சம் இலக்கணம் படிப்போம்.

எதை எப்படி சொல்ல வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறது.  இலக்கணம் இப்படித்தான் சொல்ல வேண்டும் சொல்கிறது. சில சமயம், இலக்கணத்தை மீறி, பொருளின் சுவை கருதி, சிலவற்றை சொல்வது உண்டு. பெரிய கவிஞர்கள் , ஞானிகள் அவ்வாறு சொல்லும் போது , அதற்கு வழு அமைதி என்று பெயர்.

வழு என்றால் குற்றம். அமைதி என்றால் , அந்த வழுவை ஏற்றுக் கொள்ளுவது.

திருவாசகத்தில் "மெய்யா, விமலா விடைப்பாகா " என்று மணிவாசகர் கூறுவார். விடை (எருது)யை மேய்ப்பவன் இடையன். யானையை செலுத்துபவன் பாகன் என்று அழைக்கப்படுவான். ஆனால் , மணிவாசகர், விடை பாகா  என்கிறார்.

அது வழு, அமைதி.

பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து என்று சொல்லும் போது , அரையில் அசைத்து என்று சொல்ல வேண்டும்.  அரை என்றால் இடுப்பு. (உடம்பில் பாதியில் உள்ளது. அரை, பாதி). அரைக்கு அசைத்து என்று சொன்னது வழு அமைதி.

அது போல, கொய்தான் என்பது வழு அமைதி.

அது மட்டும் அல்ல. கொய்வான் என்று சொன்னால், கொய்வானா மாட்டானா என்ற சந்தேகம் வரலாம். கொய்தான் என்று இறந்த காலத்தில் கூறுவதால், அது ஏற்கனவே நடந்த மாதிரி அவ்வளவு உறுதியானது என்று பொருள்.

மாரீசன் சொல்கிறான், தவறான வழியில் சென்றால், அழியப் போவது நீ மட்டும் அல்ல, உன் குலமும் , முன் சந்ததியும், உன் அரசும், உன் நட்பும் உறவும் அழியும் என்கிறான்.

உனக்கு அழிவு இந்த பிறவியில் மட்டும் அல்ல, அடுத்து வரும் பிறவியிலும் தொடரும் என்கிறான்.

தவறு செய்பவன், அதன் விளைவு தனக்கு மட்டும் தான் வரும், வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பான். அது தவறு, தவறு செய்பவன் அந்த தவறின் மூலம் தன் பிள்ளைகள், மனைவி, பெற்றோர், உடன் பிறந்தோர், நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லோருக்கும் துன்பத்தை வரவழைப்பான்.

இராவணன் வாழ்வில் அப்படியே நடந்தது. பிள்ளையை இழந்தான். உடன் பிறந்த சகோதர்களை இழந்தான். மாமன், மைத்துனனை இழந்தான். அரசை இழந்தான்.

என்னை யார் என்ன செய்ய முடியும் என்று இராவணன் நினைத்திருப்பான்.

அறம் தவறியதால் , இராவணனுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்கள் நிலை  என்ன ஆகும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

சொல்லித் தாருங்கள் , தெரியாதவர்களுக்கு. பிள்ளைகளுக்கு. நல்ல செய்தியை  நாலு பேருக்கு தெரியும்படி சொல்லுங்கள்.

குற்றங்கள் குறையும். நாடு அமைதியுறும்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/02/blog-post.html

Wednesday, January 31, 2018

திருவருட்பா - வாலிருந்தால் வனத்தில் இருப்பேன்

திருவருட்பா - வாலிருந்தால் வனத்தில் இருப்பேன் 


பக்திக்கு தடையாக இருப்பது பல. அதில் முதலாவதாக இருப்பது உணவு.

சாப்பாட்டில் ஆர்வம் அதிகம் இருந்தால், வேறு எதிலும் மனம் ஓடாது.

தமிழிலே நோய் என்றும் பிணி என்றும் இரண்டு சொல் உண்டு.

நோய் என்றால் மருந்து உண்டால் போய் விடும்.

பிணி என்ன செய்தாலும் போகாது.

பிறவிப் பிணி என்பார்கள்.

பசி பிணி.

காலையில் ஆறு மணிக்கு ஆறு இட்லி உள்ளே தள்ளினாலும், பனிரெண்டு மணிக்கு மீண்டும் பசிக்கும்.

பசிக்கு சாப்பிட்டால் பரவாயில்லை. ருசிக்கு சாப்பிட ஆரம்பித்ததால் வந்தது வினை. மேலும் மேலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது.

அதிகம் சாப்பிட சாப்பிட புத்தி மந்திக்கிறது. நோய் வந்து சேர்கிறது. பின் அதற்கு வைத்தியம் என்று வாழ் நாள் கழிகிறது.

சாப்பாட்டின் மேல் உள்ள ஆசையை விட முடியவில்லையே என் செய்வேன் என்று வருந்துகிறார் வள்ளலார்.

"பால் சோறு என்றால் வயிறு முட்ட சாப்பிடுவேன். அதற்கு மேல் ஒன்றிரண்டு வாழைப் பழம், பலா சுளைகளையும் உள்ளே தள்ளுவேன். பழத்தின் தோலைக் கூட மற்றவர்களுக்குத் தர மாட்டேன். வால் மட்டும் தான் எனக்கு எல்லை. இருந்தால் குரங்கு போல வனத்தில் இருந்திருப்பேன் " என்கிறார்.


பாடல்



பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே பத்தியால் ஒருபெரு வயிற்றுச் 
சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தகுபலா மாமுதற் பழத்தின் 
தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன் 
வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய். 


பொருள்


பாலிலே கலந்த சோறெனில் = எல்லாரும் சோற்றில் பாலை இட்டு பிசைவார்கள். இவர், பாலில் சோற்றை இடுகிறார். அவ்வளவு ஆர்வம், சாப்பாட்டில்.

விரைந்தே = வேகமாக சென்று. வேறு யாரும் நமக்கு முன்னால் சாப்பிட்டு விடுவார்களோ என்று  முந்திக் கொண்டு

பத்தியால் = ஆர்வத்தால்

ஒருபெரு வயிற்றுச் சாலிலே = சால் என்றால் அண்டா போன்ற பெரிய பாத்திரம். அண்டா போன்ற பெரிய வயிற்றிலே

அடைக்கத் தடைபடேன் = வயிறு நிறைய சாப்பிடுவேன் என்று சொல்லவில்லை. வயிற்றல் அடைக்க தடை சொல்ல மாட்டேன். எவ்வளவு போட்டாலும், அமுக்கி அமுக்கி அடைத்துக் கொள்வேன். போதும், வேண்டாம் என்று தடை சொல்ல மாட்டேன்.


வாழை தகுபலா மாமுதற் பழத்தின் = தகுதியான வாழை, மா, பலா முதலிய பழங்களை

தோலிலே எனினும் = அவற்றின் தோலாக இருந்தாலும்

கிள்ளிஓர் சிறிதும் = கிள்ளி ஒரு சிறிது கூட

சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன் = பக்கத்தில் இருப்பவருக்கு தரத் துணிய மாட்டேன்

வாலிலேன் = வால் இல்லை

இருக்கில் = இருந்திருந்தால்

வனத்திலே இருக்க வாய்ப்புளேன் = காட்டில் இருக்க வாய்ப்பு இருந்திருக்கும்

என்செய்வேன் எந்தாய் = என்செய்வேன், என் தந்தையே

சாப்பாட்டில் ஆர்வம் அதிகம் ஆனால், கொடுக்கும் குணம் குறையும். எல்லாம் எனக்கே வேண்டும் என்று பேராசை வரும்.

நிறைய பேர் தர்மம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் கருணை இல்லாததால் அல்ல. மனதில் துணிவு இல்லாததால்.

இருப்பதை எல்லாம் கொடுத்து விட்டால், நாளைக்கு நமக்கு என்ன இருக்கும் ? என்ற பயம். எதிர் காலம் குறித்த பயம், மக்களை தர்மம் செய்ய விடாமல் தடுக்கிறது.

ஒருத்தனுக்கு கொடுத்தால், பத்து பேர் வருவான். எல்லாருக்கும் நம்மால் கொடுக்க முடியுமா என்ற பயம்.

எனவே தான் ஒளவை , அறம் செய்ய விரும்பு என்றால். பயம் போக வேண்டும்.

வள்ளலார் கூறுகிறார், பழத்தின் தோலை கூட மற்றவர்களுக்குத் தர துணிய மாட்டேன் என்று.

எல்லோரிடமும் இரக்கம் இருக்கும். அன்பு இருக்கும். கருணை இருக்கும். ஆனால், ஆயிரம் ரூபாய் நன்கொடை தர மனம் வராது. அன்பு இல்லாமல் அல்ல. துணிவு இல்லாதாதால்.

பக்தி, இறை உணர்வு வர வேண்டும் என்றால் சாப்பாட்டின் மேல் உள்ள ஆர்வம் குறைய வேண்டும்.


உணவின் அளவை குறைத்துப் பாருங்கள்.

மனம் உறுதி பெறுவதை உணர்வீர்கள்.

உடல் உற்சாகம் அடைவதை உணர்வீர்கள்.

பசி என்றால் என்ன என்று அறிவீர்கள். மற்றவர்களின் பசியை உணர்வீர்கள். உதவும் எண்ணம் மேலோங்கும்.

கருணை பிறக்கும்.

அது உங்களை உயர் நிலைக்கு கொண்டு செல்லும்.

செல்லட்டும்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_53.html