Tuesday, May 29, 2018

திருக்குறள் - தீயும் தீயவையும்

திருக்குறள் - தீயும் தீயவையும் 


பாடல்

தீயவை தீய பயத்தலால் தீயவை 
தீயினும் அஞ்சப் படும் 

பொருள்

தீயவை = தீமையானவை

தீய பயத்தலால் = தீமை தருவதால்

தீயவை = தீயவை

தீயினும் = நெருப்பை விடவும்

அஞ்சப் படும் = பயப்படப்படும்

குறள் என்னவோ சின்னதுதான். பொருள் தெரியாத வார்த்தை ஒன்றும் இல்லை. இருந்தும், மிக மிக ஆழமான பொருள் பொதிந்தது.

தீயவை நமக்குத் தீமை தருவதால், அத்தகைய தீமைகள் தீயை விடவும் அஞ்சப் படும்.

இதில் இன்ன பெரிய ஆழமான அர்த்தம் இருக்கப் போகிறது?


"தீயினும்" = தீ நல்லது தானே. தீயை வைத்துத் தானே சமையல் செய்கிறோம். தீயினால் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது. பின் ஏன் தீயவற்றை தீயோடு ஒப்பிடுகிறார்?

தீ நல்லது தான். மிகவும் தேவையான ஒன்று தான். அதற்காக அதை தவறான முறையில்  கையாண்டால் வீட்டையும், நாட்டையும் எரித்து சாம்பலாகி விடும். சமையல் செய்யும் போது , தீ நல்லது தானே என்று அடுப்பை அதிகமாக எரிய விட்டால் , பாத்திரம் அடி பிடித்து , சமையல் புகை நாற்றம் பிடித்து வாயில் வைக்க முடியாது.

தீ நல்லதுதானே என்று நடு வீட்டில் அதை கொண்டு வந்து வைக்க முடியாது.

அளவோடு உபயோகிக்க வேண்டும்.

அது போலத்தான் தீயவைகளும்.

தீயவை என்றால் என்ன ?

கை பேசி நல்லது தான். அதற்காக சதா சர்வ காலமும் whatsap பார்த்துக் கொண்டு இருந்தால், அதே கை பேசி தீமையில் போய் முடியும்.

டிவி நல்லது தான். அதற்காக அதையே எந்நேரமும் பார்த்துக் கொண்டிருந்தால், அது நம் வாழ்வை சிதைத்து விடும்.

உணவு நல்லது தான். அதையே அளவுக்கு அதிகமாக உண்டால் இல்லாத பிரச்சினகைள் எல்லாம் வந்து சேரும். அதுவே நம் உயிர்க்கு உலை வைத்து விடும். அளவுக்கு அதிகமான தீயைப் போல.

நல்லது என்று தான் கைப் பேசி,  laptop எல்லாம் வாங்கித் தருகிறோம். அதுவே தீமையாக  மாறிப் போய் விடுகிறது.

பிள்ளைகளோடு பேச முடிவதில்லை. உறவினர்கள் வந்தால் பேசி சிரித்து மகிழ முடியவில்லை.

அது போகட்டும்.

அது என்ன "தீயினும்" என்ற சொல்லில் ஒரு 'ம்' .

தீயைவிட என்று ஏன் சொன்னார் ?

தீ தொட்டவுடன் சுடும். விலகினால் சுடாது.

ஆனால், தீயவையோ, தொடும் போதும் சுடும். விட்டு விலகிய பின்னும் சுடும், . வருத்தும். அதனால், தீயினும்.

தீ தொட்டவர்களை மட்டும் தான் சுடும். தீயவையோ, சுற்றுப் புறம், அக்கம் பக்கம், குடும்பம், நட்பு என்று எல்லோரையும் சுடும்.

என் வீட்டில் தீ பிடித்தால் அது என் வீட்டை மட்டும் எரிக்காது. மேல் வீடு, கீழ் வீடு என்று அந்த மொத்தம் அபார்ட்மெண்ட் ஏ எரிந்து சாம்பலாகும். அவர்களுக்கும் எனக்கும் ஒரு தொடர்பும்  கிடையாது. இருந்தும், என் வீட்டில் பிடித்த  தீ அவர்களையும் எரிக்கும். நம் தீமைகள் நம் அண்டை அயலாரை மட்டும் அல்ல, வெகு தூரத்தில் உள்ளவர்களையும் சுடும்.

தீ தொடுகின்ற நேரத்தில் சுடும். எரிக்கும். தீயவையோ , காலம் கடந்து வந்தும் சுடும். என்றோ செய்த பாவம், பின்னாளில் வந்து சுடும்.

தீயவை என்ற பட்டியலில் எதெல்லாம் வரும் என்று யோசித்துப் பார்போம்.

தீயவர்கள், தீய பழக்கங்கள் (பொறாமை, சோம்பேறித்தனம், மறதி போன்றவை) , தீய பொருள்கள் (மது, சிகரெட், போதைப் பொருள்கள்  போன்றவை)...இவை எல்லாம் தீயவையில் வரும்.

அது நமக்குத் தெளிவாகத் தெரியும்.

சிக்கல் என்ன என்றால், நல்லவை, ஒரு அளவைத் தாண்டும் போது தீயவையாக  மாறிவிடும். எந்த அளவு என்பதில் தான் சிக்கல். அளவைத் தாண்டி விட்டால் அவை தீயவை.

உணவு, ஓய்வு, டிவி, செல் போன், தூக்கம், நண்பர்களோடு அளவளாவுதல் போன்றவை ஒரு கட்டுக்குள் இருந்தால் நல்லவை, அளவு தாண்டினால் தீயவை.

நல்லவை , அவற்றின் அளவைத் தாண்டும் போது , அவற்றையும் தீயவை பட்டியலில் சேர்க்க வேண்டும்.

"அஞ்சப் படும்" என்றார். விலக்கப்படும் என்று சொல்லி இருக்கலாம்.

அஞ்ச வேண்டும்.

அளவுக்கு அதிகமாக உண்பதற்கு அச்சப் பட வேண்டும். பயப்பட வேண்டும். ஐஸ் கிரீம், காரட் அல்வா, என்றால் ஆசைப் படக் கூடாது. அச்சப் பட வேண்டும்.

Whatsapp ஐ கண்டு அஞ்ச வேண்டும். ஐயோ, என் பொன்னான நேரம் எல்லாம் வீணாக்கி விடுமே என்று அஞ்ச வேண்டும்.

வள்ளுவர் காலத்தில் டிவி யும், whatsapp ம் கிடையாது தான். இருந்தும், குறள் என்றும் நமக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறது. கலங்கரை விளக்காக.

ஆழ்ந்து சிந்தியுங்கள். அசைப் போட்டுப் பாருங்கள். தீயவற்றை விலக்குங்கள். வாழ்வு வசப்படும்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post_29.html

No comments:

Post a Comment